Saturday, September 1, 2007

போலி மருத்துவர்களை உருவாக்க முனையும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு!

தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் ஒரே ஆண்டில் சித்தமருத்துவம், "சமையல் கலைக்கல்லூரிகள்" மூலமாக கற்றுத்தர இருப்பதாக வந்த செய்தி நம்மை திகைப்பில் ஆழ்த்தியது.

சித்தமருத்துவம் என்றாலே காட்டுவாசிகளின் மருத்துவமுறை என்று சிலர் கருதி புறக்கணிக்கும் நிலை பரவலாக உள்ளது. வேறு சிலரோ உரிய கல்வித்தகுதி இல்லாத நபர்களிடம் சிகிச்சை பெற்று பணத்தையும், உடல் நலத்தையும் இழக்கும் நிலையும் நிலவுகிறது.


இந்த நிலையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் இன்னும் அதிக போலி மருத்துவர்கள் உருவாகிவிடக்கூடும் என்று அஞ்சினோம். எனவே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பும், ஆரம்பிக்க உள்ள சித்தமருத்துவ பட்டய படிப்பும் சட்டவிரோதம் என்று பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பினோம்.

இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வராத நிலையில், அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நாளேடுகளிலும், தொலைபேசி குறுந்தகவல் சேவை (SMS) யிலும் விளம்பரங்கள் அதிகரித்தன.



இந்நிலையில் வேறு வழியின்றி, உரிய அனுமதியின்றி தொடங்க உள்ள அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பிற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தை நாடினோம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. தனபாலன், இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழு ஆகிய அமைப்புகளுக்கு இரு வாரங்களுக்குள் பதில் அனுப்புமாறு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


நன்றி: தினகரன், 01-09-2007.

நன்றி: தினமலர், 01-09-2007.

சித்தமருத்துவத்தை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் கடந்த பல வருடங்களாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல், நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படாமல் செயலற்று உள்ளது.

இதன் விளைவாகவே தொலைக்காட்சிகளிலும், செய்தி பத்திரிகைகள், நாளேடுகளிலும் உரிய கல்வித்தகுதி பெறாத பல போலி மருத்துவர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து வருகின்றனர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஊடகங்கள், பத்திரிகை சுதந்திரம் பற்றி உரிமையுடன் பேசும் பத்திரிகை ஆசிரியர்கள், சமூகப்பொறுப்போ - அடிப்படை சட்ட அறிவோ இன்றி இத்தகைய விளம்பரங்களை வெளியிட்டு கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.
அவற்றில் சில விளம்பரங்கள், சாமானியரின் சாதாரண அறிவால் கூட ஏற்க முடியாதவை. கீழே உள்ள விளம்பரத்தில் 7 தலைமுறைகளாக வைத்தியம் செய்து வருவதாக ஒரு குடும்பம் ஏழாவது தலைமுறை வைத்தியராக பச்சிளம் பாலகன் ஒருவன் படத்தை வெளியிட்டுள்ளது. இந்த சிறுவன் வைத்தியம் பார்ப்பது உண்மை என்றால் அது பகுத்தறிவுக்கும், மருத்துவ நெறிமுறைகளுக்கும், சட்டத்திற்கும் எதிரானது.


இந்த சின்ன விஷயத்தைக்கூட ஆராயாமல் ஏறக்குறைய அனைத்து பத்திரிகைகளும் இந்த விளம்பரத்தை வெளியிட்டு வருகின்றன.

கொள்ளை லாபமே குறிக்கோளாக உள்ள இந்த போலி மருத்துவர்களிடமோ, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அதிபர்/ஆசிரியர்களிடமோ இதை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இது போன்ற சமூக அவலங்களை அகற்ற உதவும்.



-மக்கள் சட்டம் குழு

7 comments:

மதுரை மச்சி said...

very good post. athuvum kalangathala intha siddha maruthuvargal tv la vanthu tamila naatula iruka 90% pasanga useless not fit for marriage, ellam avanga sakthi ilanthutanganu pesi pesi uyira vanguvanunga koodiya seekiram yarathu intha kanravikellam oru mutrupulli vaikanum.

Anonymous said...

சமூக அவலங்களைப்பற்றி எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் செயல்பாடுகளிலும் இறங்கும் உங்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

உங்கள் அமைப்பை வழக்கறிஞர்கள் அமைப்பு என்று கூறிவிட்டதால் சட்டத்துறை சாராத நாங்கள் இணையமுடியவில்லை. கணிணி தொழில்நுட்பத்துறை சார்ந்த எங்களுக்கும் சமூக ஆர்வமும், பொறுப்பும் உள்ளது. நாங்களும் உங்களுடன் இணைவதற்கு ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள்.

நன்றி.

கதிரவன்

Anonymous said...

So, the next PIL against the quacks who are advertising themselves in the televisions and magazines.?

Good move. Go ahead!

Best wishes*

வெங்கட்ராமன் said...

உங்களுடைய சமூக அக்கறை பதிவுகளில் மட்டும் அல்லாது செயலிலும் உள்ளதை நினைக்க மகிழ்ச்சியாக உள்ளது.

உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். . . .

Anonymous said...

ஏழு தலைமுறைகளாக சித்தவைத்தியம் செய்து வரும் இந்த குடும்பம் தற்போது மருத்துவக்கல்லூரி ஒன்று ஆரம்பித்துள்ளது. அதில் Bachelor of Naturopathy and Yogic Science என்ற பட்டப்படிப்பும் நடத்தப்படுவதாக விளம்பரப் படுத்தப்படுகிறது.

விரைவில் மற்ற மருத்துவதுறைகளிலும் பட்டப்படிப்புகள் நடத்த முயற்சி நடக்கிறது. மேலிட செல்வாக்கு அப்படி. சும்மா சுலபமாக நினைத்து மோதிவிட வேண்டாம்.

கவனம். கவனம்.

Anonymous said...

உங்கள் வழக்கு குறித்து எனக்கு தெரிந்த பரம்பரை வைத்தியர் ஒருவரிடம் உரையாடினேன்.

சித்த மருத்துவத்திற்கு முறையான கல்விமுறைகள் இல்லாத காலத்தில் பரம்பரையாக சித்த மருத்துவம் செய்ததை நியாயப்படுத்தும் அவர், முறையான கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகும் பரம்பரையாக சித்தமருத்துவம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார். அவரது மகன் சித்த மருத்துவத்தை முறையாக படித்துவிட்டே பயிற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.

ஆனால் ஆங்கில மருத்துவமோ, சித்தமருத்துவமோ கிராம மற்றும் ஏழை மக்களை சென்றடையாதவரை போலி மருத்துவர்களை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வைத்தியரின் மகன் வைத்தியர் என்பது நவீன மனுதர்மம் ஆகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

சிந்திக்க வேண்டிய கருத்தாக தோன்றியதால் இங்கே பதிவு செய்கிறேன்.

Anonymous said...

This is a human rights.Quakes eradication is not only for govt,well responsible for publics.
i appreciate your work.
Dr.Rajarajan.M.B.B.S.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!