Tuesday, December 25, 2007

குற்றவாளிக்கு ஜாமீன் உண்டு! விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது! -உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள்.

சத்திஸ்கர் மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக் சென் (Dr. Binayak Sen) என்பவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? யாருடைய சிறுநீரகத்தையாவது திருடியிருப்பாரா? கவனக்குறைவாக சிகிச்சை அளித்து யாருடைய மரணத்திற்காவது காரணமாக இருந்திருப்பாரா? கொள்ளை லாப வெறியோடு தனியார் மருத்துவமனை நடத்தினாரா? தேவையற்ற பரிசோதனைகளை செய்யவைத்து மக்களை சுரண்டினாரா? மருந்து வியாபாரிகளோடு கள்ள உறவு வைத்து தேவையற்ற மருந்துகளை மக்களிடம் திணித்தாரா? அல்லது தன்னிடம் வரும் நோயாளிகளை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து இணைய தளம் மூலம் வணிகம் செய்தாரா? டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? அவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்?

யார் இந்த பினாயக் சென்?

தமிழ்நாட்டில் “வ”(VA) என்ற ஒலிக்கப்படும் எழுத்து மேற்கு வங்கத்தில் “ப”(BA) என்று ஒலிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் “டாக்டர் பினாயக் சென்”-ஐ தமிழ்ப்படுத்தினால் “விநாயக் சென்” ஆகிவிடும்.



இந்த டாக்டர் விநாயக் சென், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியில் MBBS மற்றும் MD ஆகிய படிப்புகளை மிகச்சிறப்பாக படித்துத் தேறியவர். பின்னர் 1976 முதல் 1978ம் ஆண்டுவரை புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவத்துறையில் ஆசிரியராக பணியாற்றியவர். பிறகு சமூக-பொருளாதார தளத்தில் பின் தங்கிய மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பணியை உதறிவிட்டு(பல தனியார் மருத்துவமனை அழைப்புகளையும் புறக்கணித்துவிட்டு) கூலித்தொழிலாளிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதியில் சென்று மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார்.

வறுமை நிலையில் உள்ள மக்களின் நோய் அகற்ற, அவர் படித்த நவீன மருத்துவம் முழுமையாக பயன்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமுறைகளையும் பயன்படுத்திய அவர், சுகாதாரமான வாழ்வும் - ஊட்டச்சத்துமே நோயற்ற வாழ்வுக்கு சரியான வழி என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மக்களின் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-மருந்து மற்றும் மருத்துவ சேவை வியாபாரிகளின் கூட்டணிக் கொள்ளை காரணமாக மக்களுக்கு பயன்படாமல் போவதைக் கண்டு மனம் கொதித்தார். மேலும், சமூகத்தில் நிலவும் சுரண்டல் அமைப்பில் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டு, அம்மக்கள் அகதிகளாக விரட்டப்படுவதை கண்டு கொதித்து எழுந்தார்.



ஆரோக்கியமும், நல்வாழ்வும் அடிப்படை மனித உரிமைகள் என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் வினாயக் சென், மக்கள் சிவில் உரிமைக் கழக(Peoples’ Union for Civil Liberties)த்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். (தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது) பின்னர் அந்த அமைப்பின் தேசியத்துணைத் தலைவராகவும், சத்திஸ்கர் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் நலன்களை அரசு அமைப்புகள் புறக்கணித்தபோது, அம்மக்கள் மாவோயிஸ இயக்கங்களில் சேர்ந்தனர். மாவோயிஸ இயக்கப்பணியாளர்களை அரசுப்படையினரும், அரசின் ஆதரவு பெற்ற சல்வா ஜுடும் என்ற ஆதிக்க சக்திகளின் கூலிப்படையினரும் வேட்டையாடுவதைக்கண்டு மனம் பொறுக்காத அவர், உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற கூலிப்படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினார்.

அதேநேரத்தில் அடித்தள மக்களின் நல்வாழ்வைப்பேண சமூக மருத்துவத்துறையிலும் பல சாதனைகளைப் படைத்தார். இதைப் பாராட்டும்விதமாக வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, அதன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் “பால் ஹாரிசன்” என்ற பெருமை மிக்க விருதை கடந்த 2004ம் ஆண்டில் டாக்டர் வினாயக் சென்னுக்கு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில்தான், கடந்த 2007 மே மாதம் 17ம் தேதி சத்திஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டார். பணிநிமித்தமாக கொல்கத்தா சென்றிருந்த அவரை, தலைமறைவாகி விட்டார் என்று காவல்துறையினர் பிரச்சாரம் செய்ததால் தாமாகவே காவல் நிலையம் சென்ற அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக அவர் மீது, சத்திஸ்கர் சிறப்பு பொதுப்பாதுகாப்பு சட்டம் (Chhattisgarh Special Public Security Act, 2006) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 2004) ஆகிய சட்டங்களின்படி கைது செய்துள்ளதாக சத்திஸ்கர் மாநில அரசு கூறுகிறது.

ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயண் சன்யால் என்ற கைதி எழுதிய கடிதங்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பியூஷ் குஹா என்பவருக்கு டாக்டர் விநாயக் சென் சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் குஹா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றுள்ளதாகவும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தம்மை சித்ரவதை செய்து வெற்றுத்தாள்களில் காவல் மற்றும் சிறைத்துறையினர் கையொப்பம் பெற்றதாக பியூஷ் குஹா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறையில் உள்ள நாராயண் சன்யால், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் டாக்டர் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதத்தை அவருக்கு எதிரான சான்றாக காட்டுகிறது அம்மாநில அரசு. அந்த கடிதத்தில் டாக்டர் விநாயக் சென்-ஐ “தோழர்” என்று நாராயண் சன்யால் அழைத்துள்ளாராம். இது ஒன்றே போதுமாம், டாக்டர் விநாயக் சென்-னும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறுவதற்கு. ஆனால், நாராயண் சன்யாலை சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பலமுறை பார்த்துள்ள டாக்டர் விநாயக் சென், சிறையில் கைதிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் ஏதுமில்லை.

சத்திஸ்கர் மாநில அரசின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதுவரை பத்திரிகைகளில் வெளிவந்ததுதான். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவர் மீது நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலோ, அரசு அதிகாரிகள் வழக்கம் போல தாமதப்படுத்தும் தந்திரங்களை கையாண்டு வருகின்றனர்.

இதன் உச்சகட்டம் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 10ம் தேதி, நாட்டின் கடைசி நியாயஸ்தலமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்திலும் நடந்தேறியது. நீதியரசர்கள் அஷோக் பான், டி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் டாக்டர் விநாயக் சென் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடினார்.

அப்போது டாக்டர் விநாயக் சென் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், எனவே அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் விநாயக் சென்னின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் காவல்துறையினர் “கதை விட்டதை”ப்போல எந்த விவகாரமும் காணப்படவில்லை என்று ஆந்திர மாநில குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதம் அனைத்தையும் கேட்ட நீதியரசர்கள், “இந்த வாதங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் கூற வேண்டியது” என்று கூறினர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டே பதிவு செய்யாத நிலையில் இருப்பதால்தான் உச்சநீதிமன்றம் வர நேர்ந்தது” என்று எடுத்துரைத்தார்.

ஆனால் அவரது வாதத்தை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்த நீதியரசர்கள், டாக்டர் விநாயக் சென்-னை ஜாமீனில் விடமுடியாது என்று தீர்ப்பளித்தனர். டாக்டர் விநாயக் சென்னுக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நாள், டிசம்பர் 10, 2007. மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படும் ஒரு தினத்தில்தான் மனிதஉரிமைக்காக போராடிய ஒருவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.


இந்த நேரத்தில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்-துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையும் ஒப்பு நோக்கலாம்.

மும்பையில் கடந்த 1993 ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் தத் உட்பட சுமார் 100 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தண்டனையை வழங்கிய நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் 100 ஆண்டுகள் வாழ்ந்து பல திரைப்பட சாதனைகளை படைப்பார் என்றும், அவரது ஆயுளில் 6 வருடங்களை மட்டுமே தாம் பறிப்பதாகவும் மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட சிலருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பஞ்ச்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆக அரசியல் பின்புலமும், பிரபலமும் இருந்தால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்குக்கூட ஜாமீன் வழங்கும். ஆனால் இதுபோன்ற உயர்மட்ட தொடர்புகள் இல்லாத சாதாரண டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வழியில்லை.



சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். நம்புவோம்!

-சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

டாக்டர் விநாயக் சென்-ஐ விடுவிக்க கோரும் மனுவிற்கு:

http://www.freebinayaksen.org/

http://www.savebinayak.ukaid.org.uk/

http://www.binayaksensupport.blogspot.com/

Saturday, December 22, 2007

மனித உரிமைப் போராளி அசுரன் மறைந்தார்!

(முக்கிய அறிவிப்பு: இவர் போர்ப்பறை பிளாக் அசுரன் அல்ல. போர்ப்பறை அசுரன் நீண்டநாள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகள்)
...
சுற்றுச்சூழல் ஆர்வலரும், மனித உரிமைப் போராளியும், இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் அசுரன் 21-12-2007 (வெள்ளி) அன்று மாலை 5 மணி அளவில் மறைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த ராம்குமார் என்ற இயற்பெயருடைய இவர், கம்யூட்டர் துறையில் கல்வி கற்றிருந்தாலும் சமூகத்தின் மீதுள்ள அக்கறை காரணமாகவும், சுற்றுச்சூழல், மனித உரிமைகள் குறித்த விழி்ப்புணர்வை வளர்க்க வேண்டும் என்ற ஆவல் காரணமாகவும் எழுத்தாளராக உருவெடுத்தார்.
.

திண்டுக்கல்லில் இருந்து வெளியாகும் "புதிய கல்வி" என்ற சுற்றுச்சூழல் இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய இவருக்கு கடந்த சில ஆண்டுகள் முன்புதான் திருமணம் நடந்தது. இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அந்த நிலையிலும் திண்ணை இணைய இதழ், சமூக விழிப்புணர்வு போன்ற இதழ்களி்ல் எழுதி வந்தார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இடதுசாரி சிந்தனையாளர் என்ற அடிப்படையில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் அரவணைத்து செல்லும் இயல்புள்ள இவர், எதிர்க்கருத்துள்ளவர்களுடன் கூர்மையான விவாதங்களை மேற்கொண்டார். இவரது விவாதங்களில் சூடுபறந்தாலும் உரையாடல்கள் மிகவும் இனிமையாகவே இருந்தன.

.

பன்னாட்டு ஏகபோகங்களுக்கு எதிரான மாற்று அறிவியல், வேளாண்மை, மருத்துவம் ஆகியவற்றை பரிந்துரை செய்வதில் முனைந்து நின்ற இவர் அண்மையில் "புதிய தென்றல்" என்ற சிற்றிதழையும் கொண்டுவந்தார்.

.

உலக அளவில், மனித உரிமை - சுற்றுச்சூழல் குறித்த புதிய சட்டங்களையும், செய்திகளையும் தெரிந்து கொள்வதிலும் அதை மற்றவர்களுக்கு தெரிய செய்வதிலும் மட்டற்ற ஆர்வம் காட்டியவர். அதைபோல செல்ஃபோன் மூலமான எஸ்எம்எஸ் சேவையையும்கூட சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக மாற்றியவர்.

.

இடதுசாரி சிந்தனையாளர் என்றபோதிலும், நாடாளுமன்ற இடதுசாரிகளைப்போல அணுசக்தி விவகாரத்தில் அமைதியாக இராமல் அணுசக்தி எதிர்ப்பாளராக தம்மை அடையாளம் காட்டிக்கொண்டவர். குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளுக்கு எதிராக மருத்துவர்கள் ரமேஷ், புகழேந்தி ஆகியோரோடு இணைந்து செயல்பட்டவர்.

அவரது எழுத்தையும், செயல்பாடுகளையும் பார்ப்பவர்கள் யாரும், அவர் உயிருக்கு கடுமையாக போராடிக்கொண்டே இத்தகைய செயல்களில் ஈடுபட்டார் என்பதை உணர்ந்திருக்க முடியாது.

தவணை முறையில் மரணத்தை சந்தித்தாலும், உயிருடன் இருக்கப்போவது எத்தனை மணித்துளிகள் என்பது தெரியாத நிலையிலும், மனிதாபிமானம்-மனித குல விடுதலை என்பதையே இறுதி இலக்காக கொண்டு கடைசிவரை வாழ்ந்த தோழர் அசுரனின் குரல் இனி ஒலிக்காது.

அவரது குரலை தொடர்ந்து ஒலிக்கச்செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

-மக்கள் சட்டம் குழு

மறைந்த தோழர் அசுரன் அவர்களின் சமூக அக்கறை கொண்ட எழுத்தின் ஒரு சிறிய பகுதியை படிக்க:

http://www.keetru.com/puthiyathendral/index.php

http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன்


Monday, December 17, 2007

ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? உஷார்! உஷார்!!

பல்வேறு வங்கிகளும், தற்போது வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை வழங்குவதை தவிர்த்து வருகின்றன. HDFC உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை பணமாக திரும்ப செலுத்தினால், அவற்றை ஏற்க தனிக்கட்டணம் வசூலிக்கின்றனர். இணைய வழியிலோ, செக் மூலமாகவோ பணத்தை செலுத்த வேண்டுமாம்.

செக் மூலம் செலுத்தினால் அதற்கு ரசீது பெறும் வசதி பல இடங்களில் இருப்பதில்லை. இதைப்பயன்படுத்தி வங்கிகள், வேண்டுமென்றே தாமதமாக செக்கை கலெக்சனுக்கு அனுப்பி வாடிக்கையாளர்களிடம் தாமத கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் பெருகி வருகின்றன.

இதேபோல இணையவழி வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் PHISING அல்லது SPOOF என்ற பெயரிலான போலி இணையதளம் மூலமான மோசடிகள் பெருகி வருகின்றன. இத்தகைய போலி இணையதளங்களில் இருந்து குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளருக்கு மட்டும் மின்னஞ்சல் வருகிறதாக கூறப்படுகிறது.

அவற்றில் கீழ்க்கண்ட ஏதோ ஒரு வாக்கியமும் இடம்பெறுகிறது.

# Alerts !!! Upgrade And Secure Your Online Account Immediately.

# Urgent Security Warning

# ICICI Online Banking Account Security Upgrade



மிகவும் அவசரமாக பதில் அளிக்கவேண்டும் என்று கூறும் இந்த மெயிலில் உள்ள இணைப்பு வேறொரு போலி இணையதளத்திற்கு இட்டுச்செல்லும். அங்கு வாடிக்கையாளரின் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண், Login ID, Password போன்றவற்றை கேட்பார்கள்.


மேலே கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்துவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான். உங்கள் கணக்கில் உள்ள அனைத்து தொகையும் களவாடப்படும்.



சரி. பொய்யான இணையதளத்தை கண்டுபிடிப்பது எப்படி?



இணையதளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள டூல்பாரில் ஒரு பூட்டு சின்னம் இருக்கும். பெரும்பாலான போலி இணையதளங்களில் இந்த பூட்டு சின்னம் இருக்காது.
.

அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது இணையதளத்தின பாதுகாப்பு. வலைதளத்தினை பற்றி. [ secured website ]. சாதாரணமாக அனைத்து இணையதளங்களும் "http" என்று தொடங்கும். ஆனால் வங்கி போன்ற பாதுகாப்பான இணையதளங்களில் லாக் இன் செய்யும்போது அது, "https" என்று மாறிவிடும். (s=secured)


ஆனால் போலி இணையதளங்களில் லாக் இன் செய்தாலும் அது "http" என்று மட்டுமே இருக்கும். மேலும் இணையதளத்தின் கீழ்புறமுள்ள டூல்பாரில் பூட்டு சின்னமும் இருக்காது.

போலி இணையதளங்களை கண்டுபிடிக்க இவை தற்போதைய வழிமுறைகளே. இவற்றையும் மீறி போலி இணையதளங்கள் உருவாகலாம். இத்தகைய மோசடிகளிலிருந்து தப்பிக்க சந்தேகப்படும்படியான மின்னஞ்சல்களை குப்பைத்தொட்டி(Recycle bin)க்கு அனுப்புவதை சரியான வழியாகும். தேவை என்றால் நமது வங்கியின் இணையதளத்திற்கும் நாமாகவே சென்று லாக் இன் செய்யவேண்டும். மெயிலோடு வரும் இணைப்புகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
.
இத்தகைய போலி வங்கி இணையதளங்களை இணைக்கும் மெயில்கள், குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வருகின்றன. மற்றவர்களுக்கு வருவதில்லை. அப்படியானால் வங்கி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் எப்படி மோசடிப்பேர்வழிகளுக்கு கிடைத்தது என்று யோசிப்பது மிக முக்கியமான அம்சமாகும்.
-மக்கள் சட்டம் குழு

(இது போன்ற உங்கள் அனுபவங்களை, அறிந்த விவரங்களை பின்னூட்டத்திலோ, தனி அஞ்சலிலோ அனுப்பி வைத்தால் அவையும் பதிவாக இணைக்கப்பட்டு விழி்ப்புணர்வு ஏற்படுத்த பயன்படும்)

Tuesday, December 4, 2007

இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளை கட்டுப்படு்த்தும் அதிகாரம் எனக்கு இல்லை – ப. சிதம்பரம் (மறைமுக) ஒப்புதல்

வங்கிகளின் கடன் வசூல் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திடீர் கரிசனம் காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கடன்வசூல் செய்யும்போது சட்டப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சில தினங்களுக்கு முன் அவ்வங்கி உபதேசம் செய்துள்ளது. நன்றி: தினமலர் 30-11-07

இந்த உபதேசம் ஊடகங்களிலும் மிக உரத்து விவாதிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2006 நவம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Mode=0&Id=3148), இந்த விவகாரம் குறித்து மிகவிரிவான விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதேபோல “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” (http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/78385.pdf) யும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பட்டயமாக உள்ளது.

ஆனால் இந்த விதிமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியை மட்டும் ஏனோ இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் மேற்கூறப்பட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள விவரங்களையே மற்றுமொரு வடிவில் வழங்கியுள்ளது. “வங்கிகளின் கடன்வசூல் முகவர்கள் – வரைவு விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=3961&Mode=0) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில்,
1. கடன் வசூல் நடவடிக்கைகளில் உரிய கவனம்,
2. வசூல் முகவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் இருந்து மட்டுமே பேசவேண்டும்,
3. கடன் வசூல் நடைமுறையில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க உரிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும்,
4. கடன் வசூல் முகவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வரைவு விதிமுறைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை டிசம்பர் மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” மற்றும் “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” ஆகியவற்றை முறைப்படி செயல்படுத்தி இருந்தாலே கிரெடிட் கார்டு செயல்பாடுகளில் பல பிரசினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது இந்திய ரிசர்வ் வங்கி. பத்திரிகைகளும் இதை புரிந்து கொள்ளாமல் கிரெடிட் கார்டு பிரசினைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது போல பம்மாத்து செய்கின்றன.

இந்நிலையில் கடந்த 03-12-07 அன்று நாடாளுமன்றத்தில் பேமென்ட் செட்டில்மென்ட் சிஸ்டம் பில் 2007 குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கடன் வசூல் அராஜகத்தில் தனியார் வங்கிகளே பெருமளவில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி: தினத்தந்தி 04-12-07

மேலும் அரசுடைமை வங்கிகள் இத்தகைய நாகரிகமற்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வங்கியின் மேலாளர் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் வீரவசனம் பேசியுள்ளார். எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் வங்கிகள், நிதி அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறுதியாகிறது.

மாபெரும் பொருளாதார மேதையான சிதம்பரத்தின் பேச்சு நமக்கு சில கேள்விகளை எழுப்புகிறது.

1. தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? இல்லையா?

2.ஆம் எனில் இந்த வங்கிகளை கட்டு்ப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லையெனில் ரிசர்வ் வங்கி என்ற ஒரு அமைப்பு எதற்காக?

3. இந்திய ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய நிதி அமைச்சகத்திற்கு உள்ளதா? இல்லையா?

4. ஆம் எனில் இந்திய வங்கி நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சகம் என்ற அமைப்பு எதற்காக?

5. மத்திய நிதி அமைச்சகத்தையும், இந்திய ரிசர்வ் வங்கியையும், இந்தியாவில் வணிகம் செய்யும் தனியார் வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறதா?

6. ஆம் எனில் மேற்கண்ட விவகாரங்களுக்காக மத்திய நிதி அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சர் என்ற பதவி யாருடைய நலன்களுக்காக செயல்படுகிறது?

-சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

Saturday, December 1, 2007

பிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது!

கடவுளும் மதங்களும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகவே உலகின் பெரும் பகுதியில் உள்ளன. மதங்களின் பெயரால் பல்வேறு சமூக அவலங்கள் அரங்கேற்றப்பட்டாலும், அந்த அவலங்களால் பெரும்பான்மை பாதிக்கப்பட்டாலும், அந்த மதங்களையும், அவை சார்ந்த கடவுள்களையும் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியதாகவே கருதப்படுகிறது.
மூடத்தனங்களை தோலுரிக்கும் அனைவரும், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக புகார்கள் கூறப்படுகின்றன.

இதற்கு எந்த நாடும், எந்த மதமும் விதிவிலக்காக அமையவில்லை.

எகிப்து நாட்டில் கரீம் சுலைமான் அமீர் என்ற 23 வயதுடைய சட்ட மாணவர்,

இஸ்லாம் மதத்தையும், நாட்டின் அதிபரையும், அந்நாட்டின் அல்-அஸார் மதத்தலைவர்களையும் அவரது பிளாக்குகள் (http://karam903.blogspot.com/,
http://shiningwords.blogspot.com/) மூலமாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். (அவரது வீடியோ பேட்டி: http://www.youtube.com/watch?v=Y_tARm-SF64)

ஆனால் அவரது பிளாக்கின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தால், மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் தேவையற்ற போர்களுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் எழுதிய மனித உரிமை ஆர்வலராகவே அவர் செயல்பட்டு வந்துள்ளது தெரிகிறது.

சுமார் இரண்டு மாதங்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டிரியா மாகாணத்தில் உள்ள போர்க் அல்-அராப் சிறையில் அவர் அடைக்கப் பட்டுள்ளார்.

அவரது கருத்துகளுக்காக அவரை சிறையில் அடைக்கக்கூடாது என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே நடைபெறுவதாக ஒரு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழமை வாய்ந்த மதங்களுள் ஒன்றான கிறிஸ்தவ மதமும் பகுத்தறிவுக்கு எதிரானதாகவே விளங்கியுள்ளது. மதங்களை விமர்சித்தவர்களை அதிகார பலத்தால் மண்டியிட வைப்பதும், அதற்கு மறுப்பவர்களை விஷம் கொடுத்து கொல்வதுமே அம்மதத்தின் வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. வேதகால இந்தியாவில் சார்வாகம் மற்றும் லோகாயதவாதம் என்ற பெயரில் நாத்திகம் பேசப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன; அவ்வாறு பேசியவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோர் எழுதிய ராமாயணத்தில் “ஜாபாலி” என்ற நாத்திக அமைச்சர் ராமனின் பல தவறுகளை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்ப ராமாயணத்திலோ சூத்திரனான சம்பூகன் பெயர் மட்டுமல்ல; நாத்திகனான ஜாபாலியின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சித்தர்களின் சிந்தனை மரபென்பது மக்களின் மூடத்தனங்களை அகற்றும் பகுத்தறிவு மரபாகவே பெருமளவில் உள்ளது. எனினும் ஆதிக்க சக்திகளை கலங்கடித்த இந்த இலக்கியங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த மரபில் வந்த தோழர் பெரியாரின் போராட்ட வாழ்வு நாம் அறிந்ததுதான். அவரது சீடர்கள் என்று கூறிக்கொள்வோரின் ஆட்சியிலும் இலக்கியம் என்ற பெயரில் மாணவர்களின் மூளையில் திணிக்கப்படுவது ஆன்மிக கருத்துகளே. அதற்கு மாற்றாக உள்ள இலக்கியங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. பாடப்புத்தகங்களில், பெரியாரேகூட பெண் விடுதலைப் போராளியாக வருகிறாரே தவிர கடவுள் மறுப்பாளராக காட்டப்படுவதில்லை.

இந்திய அரசியல் அமைப்பில் இந்திய குடி மக்களுக்காக விதிக்கப்பட்ட அடிப்படை கடமைகளில்

“சமயம், மொழி, பிராந்தியம் அல்லது குறுகிய பிரிவுகளைத்தாண்டி வந்து, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும் ஒன்றுபட்ட உணர்வையும் உண்டாக்கவும்;

பெண்களின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும்…”


“அறிவியல் ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும்…”

“-ஆவன புரிவதை ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்”
என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக்கடமையை யாராவது செய்யப்போனால் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக்கூறி குற்றவியல் சட்டம் உங்களைத் தடுக்கும்.

மதத்தின் பெயரால் செய்யப்படும் எந்த அராஜகத்தையும் விமர்சிக்கக்கூட பெரும்பாலானோர் முன்வருவதில்லை. அவர்களில் பெரியாரின் சீடர்களும், இடதுசாரிகளும் அடக்கம்.

உதாரணமாக கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற அரசு ஆதரவுடன் நடைபெற்ற பயங்கரவாதத்தை சொல்லலாம். அந்த சம்பவத்திற்கு எதிராக தமிழகத்தில் மக்கள் மட்டுமே கொந்தளித்தனர். அரசியல் தலைவர்கள் சிலர் அந்த சம்பவத்தை ரசித்தனர். மற்ற சிலர் மவுனம் காத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக “தெஹல்கா” பத்திரிகை அண்மையில் மேற்கொண்ட புலனாய்வு இந்திய பத்திரிகை வரலாற்றில் புதிய முத்திரை பதித்தது. ஆனால் சமூகத்தில் அது எதிரொலித்ததா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

சில ஊடகங்களைத்தவிர மற்ற ஊடகங்கள் கள்ள மவுனம் சாதித்தன. அரசியல்வாதிகள் அதையும் அரசியலாக்க முயற்சித்தனர். நீதிமன்றங்களோ தங்கள் “கற்றறிந்த” தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டன. ஆக மொத்தத்தில் மிகப்பெரும் சான்றாதாரங்கள் யாருக்கும் பயனின்றி போகும் நிலை.

இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை. ஆனால் அம்மதத்தை விமர்சிக்கும் தஸ்லீமா நஸ் ரீன் போன்றவர்களை தாக்கி அம்மத தீவிரவாதிகள் நிறைவு காண்கின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறதா? என்று பார்த்தால் மிகப்பெரிய ஏமாற்றமே கிடைக்கும். வழக்கு தொடுப்பதிலிருந்து நீதிமன்றம் வரை பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் மதம் சார்ந்தவர்களாகவே இருப்பதால் மதரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் சுலபத்தில் தண்டிக்கப்படுவதில்லை.

ஆக, கருத்துரிமை என்பது ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு இணக்கமான கருத்து உள்ளவர்களுக்கே என்பதே உண்மை நிலை. இந்த நிலை நீடித்தால் இன்று எகிப்தின் சட்டமாணவர் கரீம் சுலைமான் அமீர்-க்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழ் பிளாக்கர்களுக்கும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனெனில் தமிழச்சியின் பிளாக்கில் எழுதப்பட்ட கருத்தை ஏற்கமுடியாமல் அந்த பிளாக்கையே களவாடி அழித்தவர்கள்தான் இந்தியாவின் அதிகார பீடங்களிலும் வீற்றிருக்கின்றனர்.

என்ன செய்யப்போகிறோம்?
-சுந்தரராஜன்

Thursday, November 29, 2007

சிபில்(CIBIL) என்ற சிலந்தி வலை!

கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையை பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்.


இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் ஆபத்து குறைந்த கடன்களை வழங்கமுடியும் என்று வங்கிகள் கருதுகின்றன. அதாவது வாங்கிய கடனை திரும்ப கட்டும் பழக்கம் உடைய நல்ல வாடிக்கையாளர்களை பெறுவதே இந்த அமைப்பின் நோக்கம்.

அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.

இது உலகத்தின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். அமெரிக்கா போன்ற முன்னேறிய(தாகக் கூறப்படும்) நாடுகளில், கடன் வரலாறு சிறப்பாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது.

நல்ல திட்டம்தானா?

ஒரு வெளிப்படையான பார்வையில் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டமாக தோன்றும். ஆனால் இந்தியாவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இந்த திட்டத்தின் நோக்கத்தை சிதைப்பவையாக உள்ளன.

கடன் தகவல் மையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த 1972ம் ஆண்டு முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், 2000ம் ஆண்டில்தான் சிபில் அமைப்பு முழு வடிவத்திற்கு வந்தது. இந்த சிபில் நிறுவனத்தை முறைப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் 2004ம் ஆண்டில் விவாதம் நடந்தது.

வாடிக்கையாளர்களின் நலன்களைப்புறக்கணித்து, வங்கிகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டமான, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

அந்த விவாதத்தில் மிகச்சில உறுப்பினர்களே கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டதாக தெரியவில்லை.

இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு சுமார் 5 ஆண்டுகள் முன்பாகவே துவங்கப்பட்ட சிபில்(www.cibil.com) நிறுவனத்தில் இன்றைய நிலையில்,
டிரான்ஸ்யூனியன் இன்டர்நேஷனல் இன்க், டன் & பிராட்ஸ்ட்ரீட் தகவல் சேவை என்ற நிறுவனங்களின் தொழில் நுட்ப பங்கேற்புடன், ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் பாங்க், ஐசிஐசிஐ(ICICI), ஹெச்டிஎஃப்சி(HDFC), ஹெச்எஸ்பிசி(HSBC), சிட்டி பாங்க், ஜிஈ(GE) போன்ற தனியார்/வெளிநாட்டு நிறுவனங்களும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.

நடைமுறை என்ன?

சிபில் அமைப்பில் உள்ள அனைத்து வங்கி மற்றும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை இந்த தகவல் கிடங்கில் சேமிக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது நிதிநிறுவனத்திலோ கடன் வாங்கிவிட்டு உரிய முறையில் திரும்ப செலுத்தாவிட்டால் அந்த விபரமும் சிபில் அமைப்பில் உறுப்பினராக உள்ள வங்கிகளுக்கு வழங்கப்படும்.

கடன் கொடுக்கும் வங்கிகள் வாடிக்கையாளரிடம் பெறும் அனைத்து தகவல்களும், பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகிறது. பின் இந்த வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையும் ஒரு புள்ளிவிவரமாக பதிவு செய்யப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் ஏதோ ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று திரும்ப செலுத்தாவிட்டால் அவரது பெயர், மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் வைக்கப்படுகிறது.

எந்த ஒரு நபருக்கும் புதிதாக கடன் வழங்கும் நிறுவனம், கடனுக்கான விண்ணப்பத்தை பெற்றவுடன் அந்த உத்தேச வாடிக்கையாளர் குறித்த தகவலை சிபில் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வாடிக்கையாளர் வேறு ஏதேனும் நிறுவனத்தில் கடன் வாங்கி திரும்ப செலுத்தியிராவிட்டால் அவரது பெயர் மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் இருப்பது தெரியவரும். பிறகு அவர் வங்கிக்கடன் என்பதையே மறந்து விட வேண்டியதுதான்.

நியாயம்தானே! இதிலென்ன தவறு? என்ற கேள்வி எழலாம்.

விசாரணை இன்றியே தண்டனை!

வங்கிகள் நியாயமாக கொள்ளும் நிலையில்தான் இந்த நடவடிக்கையும் நியாயமாக அமையும். ஆனால் இந்தியாவில் இயங்கும் எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நியாயமாக நடப்பது இல்லை. ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை இவை பொருட்படுத்துவதே இல்லை.

குறிப்பாக, கடன் பெறும் வாடிக்கையாளரின் திரும்ப செலுத்தும் தன்மையை சோதித்தல், கணக்குகளை வெளிப்படையாக பராமரித்தல், வாடிக்கையாளரின் புகார்களை விசாரிக்க தனி அமைப்பை நிறுவுதல் ஆகிய முக்கிய கோட்பாடுகளை இதுவரை எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.

இந்த நிலையில் வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் ஏற்படும் பிணக்குகளை விசாரிக்கவே ஆள் இல்லாத நிலையில் விசாரணை இன்றியே வாடிக்கையாளர் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுகிறார். அவரது தரப்பு விளக்கத்தை கேட்க யாரும் இல்லாத நிலையில் வழக்கின் தரப்பினரில் ஒருவரான வங்கியே நீதிபதியாகி தீர்ப்பும் வழங்கி தண்டித்து விடுகிறது.

வழக்கு தரப்பினரே நீதிபதியாகி, மற்றொரு தரப்பினரை விசாரிக்காமலே தீர்ப்பு அளிப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது.

ஆனால் இந்த சட்ட விரோத செயலை, சட்டம் படித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் முதல் அனைத்து அரசு தலைவர்களும் ஆசிர்வதித்து அனுமதிக்கின்றனர்.

ஏட்டு சுரைக்காய்கள்!

அதேபோல, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) கீழும் ஒரு வாடிக்கையாளர், அவரது கடன் நம்பகத்தகவலை(Credit Worthiness) அவர் கடன்கோரும் வங்கிமூலம் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த வங்கியிலும் இதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. சிபில் ஒரு தனியார் அமைப்பு என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அங்கே செல்லுபடியாகாது.

எனவே வங்கிகள் என்ன அநியாய வட்டி மற்றும் கட்டணங்கள் விதித்தாலும், எதிர் கேள்வி கேட்காமல் கட்டும் வாடிக்கையாளர் நல்ல வாடிக்கையாளராகவும், கேள்வி கேட்பவர்கள் மோசமான வாடிக்கையாளராகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

ஒரு வாடிக்கையாளரைப்பற்றி தவறான தகவல் கொடுத்தால், பாதிக்கப்படும் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க செய்யும் விதத்திலும், கடன் தகவல் மையங்கள் தவறிழைத்தது உறுதியானால் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் மேற்கூறிய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களின் கடன் நம்பகத்தகவலை வங்கிகள் தவிர வேறு யாரும் பெற முடியாத நிலையில் இந்த சட்டம் வெறும் ஏட்டு சுரைக்காய்தான். சமையலுக்கு உதவாது.

கிரெடிட் கார்டு வணிக நெறிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதைக்கூட கண்காணிக்காத ரிசர்வ் வங்கி, சிபில் அமைப்பை கட்டுப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கையே.

நுகர்வோர் பாதுகாப்பு கருத்தியல் நிறைந்த வளர்ந்த நாடுகளில் கடன் தகவல் மையங்கள் சிறந்த முறையில் பணியாற்றலாம். ஆனால் நுகர்வோரின் நலனில் மயிரளவுகூட அக்கறை செலுத்தாத வணிக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் கோலோச்சும் இந்தியாவில், நுகர்வோர் விழிப்புணர்வு மிகக்குறைந்த அளவே உள்ள இந்தியாவில் - சிபில் போன்ற கடன் தகவல் மையங்கள் மக்களை சுரண்டும் அமைப்புகளாகவே விளங்குகின்றன.

என்ன செய்யப் போகிறோம்?

மூளையை மழுங்கடிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கவர்ச்சி அரசியல், பரபரப்பூட்டும் ஊடகங்கள் இவற்றின் ஆதிக்கத்தை தகர்த்து, உணர்வு பூர்வமான அணுகுமுறையை விடுத்து; அறிவுபூர்வமான விமர்சன அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த சமூக அநீதிகளை – அவலங்களை மாற்றும் வழியாகும்.



Awareness is Better: Action is Best!


-சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

Sunday, November 25, 2007

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா?

அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949.

இந்த நாள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கான சட்ட நாளாக நினைவுகூறப்படுகிறது.

அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தை பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. குடி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குரியதே என்பதை உணர்த்தி, தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கும் வழி வகுத்தவர் தோழர் பெரியார்.

பெரியாரின் தோழரான திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடி” என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் எழுப்பியுள்ள பல விவகாரங்களுக்கு இன்னும் பதில் அளிக்க முடியாத நிலையே உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும். அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் நடுவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கார் முன்வைத்த பல கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்த கொள்கைகளுக்கு எதிரான திசையிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4, அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY) என்ற பிரிவின்கீழ் பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவையாவன...

38. மக்களின் நலமேம்பாட்டிற்காக அரசு சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல்:

(1) பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும், அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத்தெளிவு படுத்த வேண்டும்.

(2) அரசு, பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையில், தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.

39. சில கொள்கைகளை அரசு பின்பற்றுதல் வேண்டும்:
அரசு குறிப்பாக-
(அ) குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்;

(ஆ) உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் சமுதாயத்தின் பொதுநலன் கருதி அனைவருக்கும் கிடைப்பதற்காக அவற்றின் உரிமை – கட்டுப்பாடு பொதுவாக பகிர்ந்தளிக்கப்படுவதற்கும்;

(இ) செல்வமும், உற்பத்தியும் பொதுத்தீங்கின்றி, தேக்கமடைவதைத் தவிர்க்கும் பொருளாதார அமைப்பை செயல்படுத்துவதற்கும்;

(ஈ) ஆண், பெண் இருபாலாருக்கும் இணையான வேலைக்கு, இணையான ஊதியம் அளிப்பதற்கும்;

(உ) வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்;

(ஊ) குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையை தேர்வு செய்ய வேண்டும்.

40. கிராம ஊராட்சி அமைப்புகள்:
கிராம ஊராட்சிகளை அமைக்கவும், அவை தன்னாட்சி பெற்று செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும்.

41. சில தறுவாய்களில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமை:
வேலை, கல்வி உரிமையின் பொருட்டு, வேலையில்லாதபோது, முதிய வயதினர், நோயுற்றோர், தொழில் புரிய இயலாதோர் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோர் ஆகியோரை பாதுகாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்.

42. நியாயமானதும், மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களுக்கான வகையங்கள்:
நியாயமானதும் மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, அரசு வகையங்களை உருவாக்க வேண்டும்.

43. வேலையாட்களுக்கான வாழ்வூதியமும் இன்ன பிறவும்:
வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வூதியம், நாகரிகமான வாழ்க்கைத்தரத்திற்கு உறுதியளிக்கும் வகையிலான தொழில்கள், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்பு ஆகியன கிடைப்பதற்கு உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் வகையிலும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

43அ. தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்றல்:
தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்களின் நிர்வாகப்பணியில், தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில், அரசு தகுந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும்வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

44. குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம்.
குடிமக்களுக்கு இந்திய நிலவரை முழுவதும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்திற்கு அரசு முயற்சித்தல் வேண்டும்.

45. ஆறு வயதுக்கு உட்பட்ட இளங்குழந்தைகளைப் பாதுகாப்பதும் கல்வி அளிப்பதும்:
ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.

46. பட்டியல் மரபினர், பட்டியல் பழங்குடி மரபினர் மற்றும் வேறு பலவீனப்பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்:
பலவீனப் பிரிவு மக்களிடையே பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகப் பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடி மரபினரின் பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். மற்றும் அவர்களை சமூக அநீதியினின்றும், அனைத்து வித சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும்.

47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:
ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தை உயர்த்துவதையும் அரசு தமது கடமையாக கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள், போதைமருந்துகள் ஆகியன மருந்துக்காக பயன்படுத்துவதைத் தவிர வேறுவிதமாக பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

48. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கான அமைப்பு:
வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்ரகக் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவற்கும் பசுக்கள், கன்றுகள் மற்ற பால்தரும் விலங்குகள் வறட்சியுள்ள கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுத்தல் வேண்டும்.

48அ. சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், மேம்படுத்தலும் மற்றும் வனங்கள் வனவிலங்குகளை பாதுகாத்தலும்:
நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். மற்றும் நாட்டின் வனங்கள், வனவிலங்குகளை பாதுகாத்தல் வேண்டும்.

49. தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னம், இடங்கள், பொருள்களைப் பாதுகாத்தல்:
தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், அல்லது இடம் அல்லது கலைப்பொருட்கள் அல்லது வரலாற்றுச்சின்னங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிதைப்பது, நீக்குவது, முடிவு செய்வது அல்லது ஏற்றுமதி செய்வதினின்று பாதுகாப்பது ஆகியவை அரசின் கடமை.

50. நிர்வாகத்தினின்று நீதித்துறையைத் தனியே பிரித்தல்:
அரசின் பொதுப்பணியிலிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

....என்பன உள்ளிட்ட மக்கள் நல அம்சங்கள் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, “இந்தப்பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும், “இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது” என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது சுதந்திர இந்தியாவின் வயது இரண்டுதான். அந்த நிலையிலேயே மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கோரி வழக்குகள் தொடரப்பட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடும் என்ற நிலையில் இந்த பிரிவு 37 எழுதப்பட்டது. காலப்போக்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் சொல்லப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.

ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அம்சங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு இந்த அம்சங்களுக்கு எதிரானதும், மக்கள் விரோத தன்மை கொண்டதுமான பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 37 நீடிப்பது மக்களுக்கு எதிரானது.

இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும். ஆனால் இன்றைய நிலையில் உலகமயம்; தனியார்மயம்; தாராளமயம் என்ற அடிப்படையில் இயங்கும் அரசு அமைப்புகள் உலக வர்த்தக கழக நிபந்தனைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு நேரெதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.


புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.

மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்ற தேவையற்ற துறைகளில் அரசு ஈடுபடுகிறது.

தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் செயலற்றுப்போகும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.

அனைத்துத்துறை பணியாளர்களும் எந்தவிதமான சமூக பாதுகாப்புமின்றி நிராதரவான நிலையில் உள்ளனர். இந்த நிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை உருவாகி வருகிறது.

கல்வி தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக விலை கொடுத்தே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதைச்செய்தாவது பொருள் ஈட்டுவதே பிழைக்கும் வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்பவன் சாமர்த்தியசாலி என்ற கருத்தாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

பெரிய தவறுகளை செய்பவர்கள், அரசியல் தலைவர்களாகவும், சிறிய தவறுகளை செய்பவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக சமூகத்தில் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன.
உலக வர்த்தக கழகத்தின் முன்னோடியான காட் (General Agreement on Trade and Tariff) ஒப்பந்தத்தை வரைந்த டங்கல் என்பவரின் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”
“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விமரிசனம் விழ வேண்டியவர்களின் காதுகளில் இன்று வரை விழவில்லை. எனவே மக்கள் எக்கேடு கெட்டாலென்ன? என்ற போக்கிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் இயங்குகின்றன. மாநில சுயாட்சி குறித்து உரத்து முழங்கிய கட்சித்தலைவர்கள்கூட பில்கேட்ஸூக்கும், அவரது உள்நாட்டு எடுபிடிகளுக்கும் காவடி தூக்கும் அவலநிலை நிலவுகிறது.

இதற்குத்தானா இந்தியா சுதந்திரம் பெற்றது?

அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே ஒரு மோசடிதானா?

இந்த கேள்விகளுக்கான பதில் அரசியல்வாதிகளிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமும், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமே இல்லை.

இந்தியாவில் உருவாகும் அனைத்து சட்டங்களும், பொது மக்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே நல்ல சட்டங்களோ, கெட்ட சட்டங்களோ - அவை உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.

என்ன செய்யப்போகிறோம்?

-சுந்தரராஜன்

Thursday, November 22, 2007

வங்கிக்கடன் வசூலிப்பில் அத்துமீறல்

வங்கிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சட்டதிட்டங்கள் மட்டுமல்லாமல், காலம்காலமாக மதிக்கப்படும் மரபுகளும் உள்ளன.


இதனை BANKING LAW AND PRACTICE என்பார்கள். ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது தேவையான வரைமுறைகளை வகுத்துக் கொடுப்பதோடு, பல்வேறு வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் கடன் வசூப்புக்கு குண்டர்களைப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டு வங்கிகள் மீது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த அவலம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனியார் வங்கிகளில் தொடங்கியது.

ஆனால், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் இந்த வசூல் கலாசாரம் தொற்றுநோய் போல் வேகமாகப் பரவி வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணை தவறினால், வீட்டுக்கதவைத் தட்டுவதற்கு "தனியாள்கள்" நியமிக்கும் போக்கு வங்கிகளுக்கு அழகல்ல.

இந்தக் கடன் வசூலிப்பு ஏஜெண்ட்களின் அராஜகத்தால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்துள்ளன. எப்படியாவது கடனை வசூலித்துக் கொடுக்க வேண்டியது இந்த ஏஜெண்ட்களின் வேலை. இவர்களால் ஏற்படும் துன்பத்தையும், அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பலர்.

பல தனியார் வங்கிகளுக்கு எதிராக, பல் வேறு மாநில நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் நிலைமை மாறவில்லை.

கவலைக்குரிய இந்த நிலை எப்படி ஏற்பட்டது? கடந்த காலங்களில், வங்கிக்கடன் வழங்குவதற்கு சில வரைமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டன. பெரும்பாலும் தேவை அடிப்படையிலும் ஏதேனும் ஒருவகை செக்யூரிட்டியின்' பேரிலும்தான் வங்கிகள் தனிநபர் கடன்கள் வழங்கி வந்தன. கடன் கோருபவர்களுக்கு, அக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஆதாரம் மற்றும் வருமானம் உள்ளதா என்பதைப் பரிசீலித்த பின்னரே வங்கிகளில் கடன் தருவார்கள்.

ஆனல் 1990களின் தொடக்கத்தில் அறிமுகமான பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அதே காலகட்டத்தில் தோன்றிய, அதீத நுகர்வோர் கலாசாரத்தின் விளைவாக, வங்கிகள் அதிலும் குறிப்பாக புதிய தலைமுறை தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் போக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. புதிதாக உருவான நுகர்வோர் கலாசாரத்தை லாபம் ஈட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக வங்கிகள் கருதின.

இதன் பயனாக, வாகனக் கடன், தனிநபர் கடன், நுகர்பொருள் வாங்குவதற் காக கடன் மற்றும் கடன் அட்டைகள் என விதவிதமான கடன்களை வங்கிகள் தாராளமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கின.

முன்பு, கடன் விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிப்பதை கடமையாகக் கருதிய வங்கிகள் இப்போது அப்படிச் செய்வதில்லை. மாறாக, "கடன் வாங்கலியோ, கடன்!'' என்று கூவிக் கூவிக் கடன் கொடுக்கத் தொடங்கின. தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்தன.

இந்நிலையில், வங்கிகளுக்குத் தேவையெல்லாம் கையெழுத்திட்ட, பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் மட்டுமே! காரணம், மேலே குறிப்பிட்ட வசூல் முறையை நம்பித்தான் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக இந்தத் தனியார் வங்கிகள் வழங்கி வருகின்றன.

இப்படி, லாப நோக்கினால் உந்தப்பட்ட வங்கிகள், கடன் வழங்குவதில் காட்டிய அதீத ஆர்வம், கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஏற்பட்ட அலட்சியப்போக்கு ஒரு புறம் என்றால், இன்னொருபுறம், கடன் தொகையை வசூலிப்பதற்கு வெளியாட்களை நியமித்தன. தாங்களே மேற்கொள்ள வேண்டிய பணியை, வங்கிக்குத் தொடர்பில்லாத ஆட்களை அல்லது நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தன.

அவர்கள் முறைகேடான வழிமுறைகளை கையாளுவதால் வங்கிக்கு அவப்பெயர் ஏற்படுமே என்ற கவலை ஏனோ ஏற்பட வில்லை.
நீதிமன்றங்களை அணுகினால் காலதாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஆனால், இதைக் காரணம் காட்டி, வங்கிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் அனுமதிக்காது.

நல்லவேளையாக, இதுவரை அமைதி காத்துவந்த பாரத ரிசர்வ் வங்கி, இப்போது தன் மவுனத்தைக் கலைத்துள்ளது. கடந்தமாத இறுதியில், "நிதி மற்றும் கடன்கொள்கை''யை அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.
ரெட்டி, "வங்கிகள் தங்கள் கடன்தொகையை வசூலிப்பதற்கு, ஏஜெண்ட்களை நியமித்து, வன்முறையைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'' என்று எச்சரித் துள்ளார்.

காலம் கடந்து வந்திருந்தாலும், இந்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கக்கூடியது. இது தொடர்பான விரிவான வழிமுறைகள் அடங்கிய வரைவு சுற்றறிக்கையையும் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இதற்கான தொடர் நடவடிக் கையை தாமதமின்றி மேற்கொண்டு, வங்கிகளின் இத்தகாத செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் என்று நிச்சயமாக நம்பலாம்.


இதற்கிடையே உச்ச நீதிமன்றம் ஒரு யோச னையைத் தெரிவித்துள்ளது. வசூல் ஏஜெண்ட்களின் அராஜகம் மற்றும் அத்துமீறிய செயல்களுக்கு அவர்களை நியமித்த வங்கிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற வகையில் விதிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அது. உச்ச நீதிமன்றத்தின் யோசனை செயல்படுத்தப்படுமேயானால், வங்கிகள் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

ரிசர்வ் வங்கி கவர்னரின் எச்சரிக்கையை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி தனது கடன் தொகையை வசூல் செய்வதற்காக, 3,000 மார்க்கெட்டிங் மற்றும் சிறப்பு வசூல் அதிகாரிகளை வங்கி அலுவலர்களாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலர்கள் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மென்மையான முறையில் கடன்தொகையை வசூலிக்க முற்படுவார்கள் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இதர வங்கிகளும் இந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தருணத்தில், மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடன் தொகையைத் தவணை முறையில், அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துகிறார்கள்.

வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிதி அமைப்புகள், வட்டிவீதத்தையும் கடனுக்கு மாதம்தோறும் கட்ட வேண்டிய தவணைத் தொகையையும் தங்கள் போக்கில் மாற்றுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதில் வெளிப்படையான நடைமுறை இல்லாததால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இதுதவிர, வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்பே கடன் தொகையை முழுவதுமாக வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்பினால், அதற்கென ஒரு தனிக்கட்டணத்தை வங்கிகள் வசூக்கின்றன. ஆக, தவணையை கட்ட தாமதம் ஏற்பட்டாலும் தண்டனை; முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்தினாலும் தண்டனையா? இப்படி கூடுதல் கட்டணம் வசூப்பது நியாயமாகாது. இது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இதுவும் விரைந்து அமல் படுத்தப்பட வேண்டும்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் தேவையான வங்கிச் சேவை அளிக்கவும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் செயல்பட வேண்டிய வங்கிகள், வணிக ரீதியிலும் செயல்படுவது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், தனியார் லேவாதேவிக்காரர்களைப்போல் வங்கிகள் செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.





-எஸ். கோபாலகிருஷ்ணன்




(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்)






நன்றி:
22 நவம்பர் 2007

Thursday, October 18, 2007

நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்...! சாமானிய மக்களுக்கோ திண்டாட்டம்...!

அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மற்ற உரிமையியல் நீதிமன்றங்களுக்கும் தசரா பண்டிகைக்கால விடுமுறை. தசரா பண்டிகைக்கும் நீதித்துறையினருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? விடுமுறைகள் அறிவிப்பதில் இந்திய நீதிமன்றங்கள் கல்வி நிலையங்களுடன் போட்டியிடுகின்றன என்று துணிந்து கூறலாம்.

தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்ற வசனம் திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் பலமுறை உச்சரிக்கப்பட்டாலும் உரியவர்களின் காதுகளில் அந்த வசனம் சரிவர விழுவதில்லை.


இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பல நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதும், அந்த நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் விசாரணைக்காக காத்திருப்பதும் அனைவரும் அறிந்த செய்தியே.

இந்த நிலையில் நாட்டின் முக்கிய நீதிமன்றங்களின் செயல்பாடு மிகுந்த அச்சத்தை அளிப்பதாகவே உள்ளது. உதாரணமாக, 2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 49 நாட்கள்; தசரா பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; தீபாவளி பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 16 நாட்கள்; இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 137 நாட்கள் விடுமுறை. அதாவது சுமார் நான்கரை மாதங்கள் இந்தியாவின் உச்சநீதி மன்றம் இழுத்து மூடப்படுகிறது.

தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 37 நாட்கள். தீபாவளி பண்டிகை விடுமுறை 9 நாட்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 11 நாட்கள். இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 145 நாட்கள் (5மாதங்கள்) விடுமுறை. அதாவது சென்னை உயர்நீதிமன்றம், இந்த ஆண்டின்12 மாதங்களில் சுமார் ஏழு மாதங்களும் 10 நாட்களும் மட்டுமே பணியாற்றுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்புகள் தனிக்கணக்கு.

வாரம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களுக்கு வார இறுதி நாளன்று ஓய்வு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மதம் சார்ந்த பண்டிகைகளுக்காக வாரக்கணக்கிலும், கோடை விடுமுறை என்ற பெயரில் மாதக்கணக்கிலும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடும் அரசை மக்கள் நல அரசாகவும் கருத முடியாது.
.
மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் அனைத்து அமைப்புகளும் எந்த விடுமுறையுமின்றி, எந்நேரமும் பணியாற்றி வருகையில், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, நீண்ட விடுமுறைகளை அனுமதிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலே!

மதசார்பற்ற அரசின் நீதித்துறை, மதம் சார்ந்த மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்கு மற்றவர்களின் உரிமைகளை விலையாக கொடுக்கும் நிலை இருக்கக்கூடாது. எனவே பண்டிகைக் கால நீண்ட விடுமுறைகள் குறித்த மறுபரிசீலனை அவசியம்.

கோடை விடுமுறை என்பதே, இந்தியா சுதந்திரம் பெற்றதை அங்கீகரிக்காத போக்காக படுகிறது. ஏனெனில் கோடை விடுமுறை ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த நடைமுறை. இந்தியா அடிமை தேசமாக இருந்தபோது, இந்தியர்களுக்கான நீதி என்பது அடிமை-இந்தியர்கள் மீது காட்டப்படும் கருணையாக இருந்தது. குளிர் தேசமான இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்கு இந்தியாவின் கோடை வெப்பம் ஒத்துவராததால் அவர்கள் சொந்த நாடான இங்கிலாந்து செல்வதற்காக நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மின்விசிறிகூட இல்லாத அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் கோடையில் விடுமுறை அனுபவித்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
.
ஆனால், இந்தியாவிலேயே பிறந்து, இந்நாட்டின் வெப்பத்திலேயே வளர்ந்து, குளிர்பதனம் (Air Condition) செய்யப்பட்ட நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்யும் தற்கால நீதியரசர்(!)களுக்கு கோடை விடுமுறை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. குளிர்பதன வசதி செய்யப்படாத பல விசாரணை மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்கள் கோடை காலத்திலும் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தி.

நம் நாட்டில் கற்றுத்தேர்ந்த வழக்கறிஞர்களுக்கோ, நீதியியல் அறிஞர்களுக்கோ பஞ்சமில்லை. ஆனால் அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. சமூகத்தின் உயர்நிலையில் உள்ள ஆதிக்க சக்திகளே நீதித்துறையையும் ஆக்கிரமித்துள்ளதால், சாமானிய மக்களின் பிரசினைகள், நாட்டின் உச்சத்தில் உள்ள தலைவர்களை சென்றடைவதில்லை.
.
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்குதான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்பது உண்மையானால் அவை காலை, மாலை என இரு அமர்வுகளாக (ஷிப்ட் முறையில்) கூடுதல் நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுடன் இயங்கவேண்டும். வழக்குகளை தீர்ப்பதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வழக்குகளை உரிய காலத்தில் தீர்க்காத நிலையில். அதனால் வழக்கு தொடுக்கும் பொதுமக்கள் அடையும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகி, நீதிபெற முடியும் என்ற நிலை வந்தால்தான் நாட்டில் 'சட்டத்தின் ஆட்சி' நடப்பதாக பொருள் கொள்ள முடியும்.

கோடை விடுமுறை உள்ளிட்ட அசாதாரண விடுப்புகளை கோரும் நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கலாம். மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இது போன்ற நீண்ட விடுமுறைகள் தேவை என்றே கருத்து தெரிவிக்கக்கூடும். மூளை உழைப்பாளிகளான தங்களுக்கு இது போன்ற கட்டாய விடுமுறைகள் மட்டுமே ஓய்வு அளிப்பதாக அவர்கள் கூறக்கூடும்.
.
ஆனால் அடுத்த தலைமுறை வழக்கறிஞர்கள் உருவாவதை விரும்பாத, பேராசை படைத்த மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே இத்தகைய வாதத்தை முன்வைப்பார்கள் என்பதை அனைவரும் அறிவர். உண்மையாகவே மக்களுக்கு பாடுபடும் எந்த ஒரு வழக்கறிஞரும் எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்ய தயாராகவே இருப்பர் என்பதை கூறத்தேவையில்லை.
-சுந்தரராஜன்
.
பின்குறிப்பு: இந்த பதிவிற்கு மறுமொழி எழுதுவதால் நீதிமன்ற அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே உங்கள் கருத்துகளை தைரியமாக பதிவு செய்யலாம்.

Tuesday, October 16, 2007

தமிழ்ப் பல்கலைக் கழகம் - சித்த மருத்துவக் கல்வி - தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அஞ்சல் வழியில் சித்தமருத்துவம் கற்றுத்தருவதாக வந்த விளம்பரத்தை அடுத்து நாம் மேற்கொண்ட விசாரணையில், இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழு உள்ளிட்ட அதிகார அமைப்புகளிடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பணம் பண்ணும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிந்தது. இதையடுத்து இந்த கோர்ஸுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுவதாக தெரியவந்தது. ஆனால் இந்தப் பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழுவோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமோ அங்கிகரிக்க வில்லை என்பதும் தெரியவந்தது. எனவே இந்த பட்டங்களின் அந்தஸ்து குறித்து சில தகவல்களை தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 05-09-2007 அன்று கேட்டோம்.

இம்மனுவைப் பெற்றுக்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். க. பாஸ்கரன் அவர்கள் பதில் அனுப்பி உள்ளார். அதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் சித்த மருத்துவ பட்டய படிப்பை எதிர்த்து நாம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நாம் கேட்டுள்ள விவரங்களை தெரிவிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

மேலும் மேல்முறையீடு செய்ய விரும்பினால் துணைவேந்தரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நல் வாய்ப்பொன்றை வழங்கி உள்ளார். எனவே நாம் மேல்முறையீட்டு மனுவை அனுப்பி உள்ளோம். அதன் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
16-09-2007
சென்னை

அனுப்புனர்,

பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்பு செட்டி தெரு,
சென்னை-600 001.

பெறுனர்,

துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - 613 010.

ஐயா,

பொருள்: தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 19ன் கீழான மேல் முறையீட்டு மனு

---

கடந்த 05-09-2007 அன்று, தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை வழங்குமாறு பொதுத்தகவல் அதிகாரியான பதிவாளருக்கு மனு அனுப்பினேன்.

அக்கேள்விகள் கீழ் வருமாறு:

1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?
.
2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்?
.
3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது?
.
4. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்?
.
5. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?
.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பொதுத்தகவல் அதிகாரியும், பதிவாளருமான முனைவர் க.பாஸ்கரன் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
.
அதில், 2007-08ஆம் கல்வி ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்கக வழி, சித்த மருத்துவப் பட்டயக் கல்வி பயிற்றுவிப்பதற்கு எதிராகத் தாங்கள் சென்னை, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிள்ள நிலையில், கேட்கப் பட்டுள்ள விவரங்களைத் தெரிவிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு அஞ்சல் வழியில் வழங்கப்படும் சித்த மருத்துவப் பட்டயக்கல்வி குறித்ததே. அந்த வழக்கில் தங்கள் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி அல்லாத முறைகளில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2007 அக்டோபர் முதல் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது தங்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அம்சம் குறித்த - தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 8ன் படி தகவல் அளிக்க விலக்கு அளிக்கப்பட்ட அம்சங்களில் சேர்க்கப்படாத தகவலை அளிக்க மறுப்பது, தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 20ன் கீழ் தண்டனைக்கு உரியது.

எனவே, மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.
நன்றி.


தங்கள் உண்மையுள்ள,
.
(பி. சுந்தரராஜன்)
.
இந்த மனுவிற்கு வரும் பதிலும் மக்கள் சட்டம் வலைப்பூவில் பதிவாக இடம் பெறும்.

மக்கள் சட்டம் வலைப்பூவின் இதுபோன்ற சமூக செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நீங்களும் தேவைப்படும் இடங்களில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகளின் தூக்கத்தை கலையுங்கள்.
-மக்கள் சட்டம் குழு

Thursday, October 11, 2007

பாலைவனமாகும் தேரிக்காடும் கலைஞர் மறந்த திருக்குறளும்

30,000 பேருக்கு வேலை வழங்கும் நிலத்தை எடுத்துக் கொண்டு 2,000 பேருக்கு வேலை தரும் டாடாவின் பெருந்தன்மையைத் தேரிக்காட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தப் பெருந்தன்மையால் எரிச்சலடைந்துள்ளனர். அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறது. இந்தச் சிவந்த மண் பூமியை நம்பித்தான் இங்கே உள்ள முழு மக்கள்தொகையும் வாழ்ந்துவருகிறது.

டாடா நிறுவனத்தினர் 15,000 ஏக்கர் நிலத்தை வாங்கப்போகிறார்கள். அவர்கள் வாங்கப்போகும் நிலத்தில் வீடுகள், சாலைகள், கல்லறைகள், மாதா கோவில்கள், மசூதிகள், கோவில்கள், பள்ளிகள், விவசாய நிலம் என்று அனைத்தும் அடக்கம். டாடா நிறுவனத்தினர் இந்த நிலத்தின் மேலிருக்கும் அனைத்தையும் அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கப்போகிறார்கள். 30 ஆண்டுகள் கழித்து என்ன மிச்சமிருக்கும்?


இந்தப் பூமி வளமான விவசாய பூமி. முருங்கை, கொய்யா, மா, முந்திரி போன்ற பணப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ள பூமி. நிலமற்ற மக்கள் விவசாய வேலைகளில் கிடைக்கும் கூலியில்தான் வாழ்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வானுயர வளர்ந்துள்ள பனை மரக்காடுகள் செழித்துள்ள பூமி. பனை மரத்தைக் கர்ப்பக விருட்சம் என்றும் சொல்வார்கள். அதன் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு வாழ்வளிக்கும். இந்த மரங்களை நம்பி இங்கே நாடார் சமூகம் வாழ்ந்துவருகிறது. அவர்கள் மிக மோசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மரம் ஏறுதல், பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனை ஓலை-மட்டைகளைப் பதப்படுத்துதல், கூடை அல்லது பாய் முடைதல் என்று இவர்களின் குடும்பமும் வாழ்க்கையும் பனையைச் சுற்றியே இருக்கிறது. டாடாவின் சுரங்கத் தொழிலில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்? அதற்கான சிறப்புத் தகுதிகள் என்ன இருக்கிறது இவர்களிடம்? இவர்கள் வாழ்க்கை என்னவாகும்?


தேரிக்காடு: நீர்வனமா? பாலைவனமா?

கருணாநிதி தேரிக்காடுகளைப் பாலைவனம், பயனற்ற பொட்டல் காடு என்கிறார். எப்படியாவது டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிலகத்தை நிறுவிவிட வேண்டும் என்ற அவசரத்தில் அவர் பேசுகிறார். ஆனால், தேரிகள் அதாவது மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கிவைக்கும் இயற்கை அணைகள். பெய்யும் மழையைச் சேகரித்து அவை ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுகின்றன. தேரிகள் இல்லை என்றால் நீரில்லை. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவர் கூற்றைத் தமிழறிஞர் கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை. மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் தேரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் தமிழக அரசு பல கோடிகள் செலவழித்து முந்திரிக்காடுகளை வளர்த்துக் காற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்துத் தேரிகளைக் காப்பாற்றும் வேலையைச் செய்து வந்திருக்கிறது. தஞ்சபுரம் கிணறு 40 அடியில் நல்ல நீரைக் கொண்டுள்ளது. குட்டம் என்னும் கிராமத்தின் 1,500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை ஆண்டு முழுவதும் தந்துகொண்டிருக்கிறது.


டாடாவால் கொள்முதல் செய்யப்படும் நிலங்களில் 50 அடிகள்வரை ஆழங்கொண்ட மணற்குன்றுகள் இருக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள். ஆற்று மணலையே அடியாழம்வரை தோண்டிப் பாறாங்கற்களைக் கண்டுபிடிக்கும் மணற்கொள்ளையரைத் தமிழகம் பார்த்திருக்கிறது. டாடா 50 அடிவரை தோண்டினார் என்றால் தேரிக்காடு, நீர்வனம் என்ற இன்றைய நிலையிலிருந்து உண்மையிலேயே பாலை வனம் ஆகிவிடும்.

டாடாவின் திட்டந்தான் என்ன?

டைட்டானியம் அடங்கிய இல்லுமினேட் என்னும் தாதுப்பொருளை ஆண்டுக்கு 5,00,000 டன் தோண்டி எடுத்து, 1,00,000 டன் டைட்டானியம் டை ஆக்சைடு தயார் செய்வதுதான் டாடாவின் திட்டம். 2,500 கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்படும் இத் திட்டம் 15,000 ஏக்கர் பரப்பைத் தோண்டும். இது ஏறக்குறைய 60 ச.கி.மீ பரப்பாகும். மதுரை நகரின் பரப்பைவிடப் பெரியதாகும்.

இந்த மாபெரும் திட்டத்தின் விவரம் எதனையும் தமிழக அரசு இதுவரை தரவில்லை. டாடாவும் வழக்கம்போல அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் என்ன என்பது பற்றியோ உற்பத்தி நடக்கும் முறை பற்றியோ எந்த முறையான தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை.


டைட்டானியம் என்றால் என்ன?
டைட்டானியம் வலுமிக்க உலோகம் ஆகும். ஆனால், அதன் எடை மிகவும் குறைவு. டைட்டானியம் அடங்கிய மூலப்பொருள்கள் புவிப்பரப்பில் பெருமளவு இருக்கின்றன. ஆனால், வணிக ரீதியாக எடுக்கப்படக்கூடிய மூலப்பொருள்கள் ருட்டைல் (Rutile) என்னும் வடிவிலும் இல்லுமினேட் (Ilmenite) என்னும் வடிவிலும் கிடைக்கின்றன. ருட்டைல் வடிவத்தில் கிடைக்கும் டைட்டானிம் டை ஆக்சைடு மிகவும் சுத்தமானது. ஆனால், அது அரிதாகத்தான் கிடைக்கிறது.

டைட்டானியத்திற்கும் அதன் டை ஆக்சைடுக்கும் பெரிய அளவான சந்தை காத்திருக்கிறது. அதன் வலு மற்றும் குறைவான எடை, அதுமட்டுமல்லாமல் அரிப்பை எதிர்க்கும் தன்மையின் காரணமாக இராணுவ ஆயுதத் தொழிலிலும் விண்வெளித் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும் தொழிலகக் கட்டுமானங்களிலும் அது பெருமளவு பயனாகிறது. டைட்டானியம் டை ஆக்சைடு மின்னலடிக்கும் வெண்மை நிறம்கொண்டது. இதனால் வண்ணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இதனைப் பெருமளவு பயன்படுத்துகின்றன. இது விஷத்தன்மை அற்றதுங்கூட. அதனால், மாவு, தூய வெண்மையான உயர்தரச் சர்க்கரை, இனிப்புகள், பற்பசை, அழகு சாதனப் பொருள்கள் போன்றவற்றில் வெண்மை வண்ணம் ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.


சொல்லப்படாத செய்திகள்
டாடா எந்த உற்பத்தி முறையைப் பயன்படுத்தப்போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால், உலகெங்கும் உள்ள டைட்டானியம் உற்பத்திமுறைகளைப் பார்க்கும்போது, டாடா என்ன செய்வார் என்று ஊகிக்கமுடிகிறது. கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, இல்லுமினேட்டில் இருந்து டைட்டானியம் டை ஆக்சைடு தயார்செய்து அதனை உள்ளூர் மற்றும் அயல்நாட்டுச் சந்தைக்கு டாடா அனுப்பப்போகிறார் எனத் தெரிகிறது.


இல்லுமினேட் அடங்கிய கடற்கரை மணலை அள்ளியெடுத்து வேதியியல் முறையின் மூலம் மிக உயர்ந்த சுத்தமுள்ள டைட்டானியம் டை ஆக்சைடைப் பிரித்தெடுப்பதுதான் டாடாவின் திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிட வேண்டுமென்றால் தோண்டியெடுக்கும் முறை பற்றியும் உள்ளூர் உயிர்ச் சூழல் மற்றும் புவியியல் தன்மைகளையும் ஆழமாகப் படிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டைப் பற்றியும் போதுமான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் டைட்டானியம் டை ஆக்சைடு தொழில் பொதுவாக எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது என்ற விவரங்களை வைத்துக்கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

தோரியம் என்ற பூதம் என்னவாகும்?

இந்தத் தாதுப்பொருளை எடுக்கும்போது தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமமும் கிடைக்கும். அணுசக்தி தொடர்பான துறைகளில் தனியார் நுழைவது பற்றிய அதிருப்திக் குரல்கள் ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளன. டாடாவின் வரலாற்றையும் அணுசக்தித் துறையில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையும் கவனிக்கும் எவரும் கவலைகொள்வார்கள். தோரியம் போன்ற அணுசக்தி மற்றும் ஆயுத முக்கியத்துவம் உள்ள தாதுப் பொருள்கள் கிடைக்கும் நிலத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது நீண்டகால நோக்கில் கவலைக்குரியதாகும்.


சுரங்கமும் அதன் தாக்கமும்: குறையுள்ள குழந்தை, துரத்தும் புற்றுநோய்

கேரளா மற்றும் தமிழகக் கடற்கரையில் இல்லுமினேட், ருட்டைல், ஜிர்கான் என்று மூன்று தாதுப்பொருள்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடற்கரை மணலை அள்ளியெடுத்துத் தொழில்செய்து வருகின்றன. தோரியம் உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழில் கொல்லம் மாவட்டத்தில் பரவலான ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறையுள்ள குழந்தைகள் பிறப்பது, கூடுதல் புற்றுநோய்த் தாக்குதல் முதலியவற்றுக்கான அபாயங்கள் பரவலாக இருக்கின்றன.

டைட்டானியம், டைட்டானியம் ஆக்சைடு என்ற அதன் ஆக்சைடு வடிவத்தில் இரும்பு மற்றும் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களுடன் கிடைக்கிறது. இயற்கையான அமைப்பை நாம் தொந்தரவு செய்யாத வரையில் கதிரியக்கத் தனிமங்களின் நிலைத்தன்மை பாதிக்கப்படாதவரையில் அவை அபாயகரமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. தோண்டி எடுத்து அவற்றைப் பிரித்தெடுத்துச் சுத்தம்செய்யும்போது, அவை கதிரியக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகத் தொழிலாளர்களும் அருகாமை மக்களும் புற்று நோய் மற்றும் குறையுள்ள குழந்தைப் பிறப்புகளுக்கு ஆளாகிறார்கள்.


நிர்வாணமாகும் பூமி

டைட்டானியம் வழக்கமாக 'நிர்வாணச் சுரங்க முறை'யில் எடுக்கப்படுகிறது. அதாவது புவிப் பரப்பின்மீதுள்ள அனைத்துத் தாவரங்களும் அழித்தொழிக்கப்பட்டு, பூமியை நிர்வாணமாக்கி, தாதுக்களைத் தோண்டியெடுக்கிறார்கள். மேல் மண்ணை அகற்றி வைத்துவிடுவார்கள். தாதுப்பொருள் அடங்கிய கீழ் மண் எவ்வளவு ஆழம்வரை கிடைக்கிறதோ அதனை எடுத்து முதல் கட்டச் சுத்திகரிப்புக்கு அனுப்புவார்கள். தூத்துக்குடியில் வெளி வரும் செய்தித்தாள்கள் 6 மீட்டர் முதல் 20 மீட்டர்வரை தோண்டப்படும் எனச் செய்தி வெளியிட்டுள்ளன. நமது அரசியல்வாதிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பணப்பசியையும் டாடாவின் பணபலத்தையும் பார்க்கும் எவரும் ஆழம் பற்றிய எந்தக் கணக்கும் செல்லுபடியாகாது என்பதைப் புரிந்துகொள்வார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகும்.

நிர்வாணச் சுரங்கம் உள்ளூர்ச் சுற்றுச்சூழல்மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆழமாகத் தோண்டுவது நிலத்தடி நீர்வளத்தைப் பாதிக்காது என்றாலும், நிலத்தடியை ஒட்டிய ஆழக்குறைவான நீர்வளமும் ஓடைகளும் வடிகால்களும் குளங்களும் மறைந்துபோக நீர்வளம் குறைய ஆரம்பிக்கும்.

நிலத்தடியில் 50 மீட்டரில் கடும்பாறைகள் இருக்கின்றன என்று உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடற்பஞ்சு போல நீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் மணலை அகற்றுவது அப்பகுதியின் நீர்ச்சமநிலையைப் பாதிக்கும். இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் தேரிகளையே நம்பியுள்ளது.


நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படும்போது, வெப்பம் நேரடியாகப் பூமியைத் தாக்கும். அருகாமைக் கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்று வெப்பமடையும். இதன் காரணமாக உள்ளூர் மழையின் அளவும் தன்மையும் முறையும் மாற்றமடையும். அனைத்தையும்விட மிக முக்கியமானது, கடல் அருகாமையில் இருப்பதால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதே. இதனால் குடிப்பதற்கும் வாழ்வதற்குமான நீர் அரிய பொருளாகிவிடும். நிர் வாணச் சுரங்கத்தால் எழும் தூசு அருகாமைத் தாவரங்களில் படிந்து ஒளிச்சேர்க்கையைத் தடுத்து, இருக்கும் பசுமையையும் சாகடிக்கும்.



தாதுக்களைச் சுத்தம் செய்தல்
தாதுப்பொருள்களுயும் தேவையற்ற மணலும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்திப் பிரிக்கப்படுகிறது. பெருமளவு நீருள்ள தொட்டியில் தோண்டியெடுக்கப்பட்ட மணல் கொட்டிக் கலக்கப்படும்போது, கனமான தனிமங்களான ஜிர்கான், இல்லுமினேட், மோனோ சைட், ரூட்டைல் போன்றவை கீழே தங்கிவிட லேசான மணல் மேல்பகுதியில் மிதக்கிறது. அந்தத் தேவையற்ற மணல் வெளியேற்றப்படுகிறது.


டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி
வணிகத் தேவைக்கான டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி இரண்டு வழிகளில் நடைபெறக்கூடும். ஒன்று சல்பேட் முறை, மற்றது குளோரைடு முறை. இந்த இரண்டு முறைகளுமே கடும் மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. விவசாயத்தையும் மீன் வளத்தையும் அழிக்கக் கூடியவை. இந்த முறைகளில் மிக அபாய கரமானது சல்பேட் முறையாகும். இந்த இரண்டு முறைகளில் குளோரைடு முறையையே டாடாக்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

இந்த முறையில் குளோரைடு மற்றும் ஆக்சிஜன் நிரப்பி இல்லுமினேட் எரிக்கப்பட்டு டைட்டானியம் டெட்ரா குளோரைடு என்ற வாயு பெறப்படும். இதனை வடித்தெடுத்து ஆக்சிஜனோடு இணைத்து எரிக்கும்போது, டைட்டானியம் டை ஆக்சைடு கிடைக்கும். அதோடு சேர்ந்து குளோரின் வாயுவும் உற்பத்தியாகும். உற்பத்தியில் மீண்டும் மீண்டும் குளோரின் பயன்படுத்தப்படும் என்றாலும் வாயுக் கசிவு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நிலம், நீர், காற்றில் குளோரின் கலப்பது தவிர்க்க முடியாதது.



இந்த உற்பத்தி முறையில் வெளியேறும் மற்ற முக்கியப் பொருள்கள்: ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், குளோரின் வாயு, அமிலத் தன்மையுள்ள சகதி, சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, கன உலோகங்கள் நிறைந்த திடக்கழிவுகள், அமிலத் தன்மையுள்ள திரவக் கழிவுகள் மற்றும் காற்றில் மிதக்கும் திடப்பொருள் துகள்கள். டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளில் அலுமினியம், ஆண்டிமணி, ஈயம், மோலிப்டனும் போன்றவை மிகக்குறைந்த அளவில் இருக்கும். இந்த உலோகங்கள் காற்றில் மிதக்கும் தூசுக்களிலும் இருக்கும். இந்த மிகக்குறைந்த அளவே போதுமான அபாயத்தை விளைவிக்கும். இவை நுரையீரலில் மிகக்குறைந்த அளவு நுழைந்தால்கூட, நீண்ட காலப்போக்கில், சரிசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

சல்பர் டை ஆக்சைடு உள்ளூர் அளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது அந்தப் பகுதியில் அமில மழையை ஏற்படுத்தும். வெளியேறும் திடக்கழிவுகள் நிலத்தையும் நீரையும் கடலையும் நஞ்சாக்கும்.


இந்த முறையில் இரும்பு குளோரைடும் உற்பத்தியாகும். இதனை முறையாகப் பாதுகாத்து வைக்கவில்லை என்றால், அது சுற்றுச்சூழலில் கலந்துவிடும். கேரளாவில் சவரா என்னும் ஊரில் கேரளா மினரல் & மெட்டல் என்னும் நிறுவனம் டைட்டானியம் ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுபடுத்திவிட்டன என்று உச்ச நீதி மன்றக் கண்காணிப்புக் குழு 2004இல் குற்றஞ்சாட்டியது. தற்போது அந்த ஆலையைச் சுற்றியுள்ள ஊர்களிலுள்ள மக்கள் ஆலை கொண்டுவந்து அளிக்கும் நீரை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.


குளோரைடு முறையில் டைட்டானியம் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படும்போது, 76 கிலோ சல்பர் டை ஆக்சைடும் 1 டன் திடக் கழிவுகளும் 2.7 கிலோ திரவக் கழிவுகளும் உற்பத்தியாகும்.

மிகுந்த கவனத்திற்குரியது குளோரைடு முறையின் மூலம் டைஆக்சினும் (dioxins) ஃபுரானும் (furans) உற்பத்தியாகும் என்பதே. குளோரைடு முறை இந்த விஷ வாயுக்களையும் உற்பத்தி செய்யும் என்று ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது. அறிவியலுக்குத் தெரிய வந்த மிகக்கொடூரமான நச்சுத் தன்மைகொண்ட 100 வேதிப்பொருள்களின் பட்டியலில் இந்த இரண்டு பொருள்களும் இடம்பிடித்துள்ளன. இவை புற்றுநோயை உண்டாக்குவதோடு குறைபாடுகளுள்ள குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாகின்றன. மிகக் குறைந்த அளவு டைஆக்சின் உடலில் நுழைந்தால்கூட அது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை ஒழித்துக்கட்டிவிடுகிறது. இதன் காரணமாக இப் பொருளை வேதியல் எய்ட்ஸ் என்று கூறுகின்றனர். வைரசுக்குப் பதிலாக டைஆக்சினும் ஃபுரானும் உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை ஒழித்து மனிதர்களை மரணத்தின் பிடிக்குள் தள்ளுகின்றன.


டைட்டானிய உற்பத்தியின் ஆபத்தும் எதிர்ப்புப் போராட்டங்களும்

வழக்கமான ஆலை மாசுபாடுகளுக்கு அப்பால் அபாயகரமான கழிவுகளின் தாக்குதலுக்கும் மக்கள் ஆட்பட வேண்டியிருக்கும். டைட்டானியம் டெட்ரா குளோரைடு ஒரு பிரச்சினைக்குரிய வாயுவாகும். அது நீருடன் கடுமையான வினையாற்றி ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை உருவாக்கும். ஹைட்ரஜன் குளோரைடு தரையைத் தழுவியபடியே பயணித்துப் பெரிய பகுதிக்குப் பரவும். அது பரவும் இடம் முழுவதும் மரணம் பரவும். எத்தனை சிறப்பாகப் பராமரிக்கப்படும் ஆலையிலும் விபத்து ஏற்படுவது இயற்கை என்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாது என்று 100 சதம் உத்திரவாதம் தர முடியாது.

2006 ஆகஸ்ட்டில் சீனாவின் ஜிங்சூ மாகாணத்தில் டைட்டானியம் ஆலை நானி ஆற்றில் 3000 டன் சுத்தி கரிக்கப்படாத கழிவை வெளியேற்றிய குற்றத்திற்காக மூடப்பட்டது. அந்தக் கழிவு ஆற்றைக் கொன்று போட்டது. ஆற்றங்கரையில் உள்ள ஊர்மக்கள் அனை வரும் பாதிக்கப்பட்டனர்.

1999இல் இங்கிலாந்தின் டைட்டானிய உற்பத்தி ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டது. குழாய் உடைந்ததால் 8 ஆயிரம் டன் திரவக் கழிவு வெளியேறியது. அதில் 37 டன் அடர்த்தியான ஹைடிரோ குளோரிக் அமிலமும் அடக்கம். விளைவாக 17 ஏக்கர் நிலம் பயனற்றுப்போனது.

அமெரிக்காவின் தெற்கு ஜார்ஜியாவில் பழங்குடியினர் பகுதியில் டூபாண்ட் நிறுவனம் டைட்டானியம் தோண்டியெடுக்க 1999இல் முயற்சி செய்தது. ஆனால், பழங்குடி மக்களின் போராட்டத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்டது.

நிலத்தடி நீர் கெட்டுப்போனது மற்றும் குறைந்துபோனது என்று காரணம் காட்டி மத்திய வியட்னாமின் கிராம மக்கள் 2006இல் டைட்டானியம் தோண்டியெடுப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தினர்.

கென்யாவின் கடற்கரைப் பகுதியான க்வாலேவில் பழங்குடியினர் டைட்டானிய உற்பத்தியின் பாகசுரக் கம்பெனியான டியோமினுடன் (Tiomin) விடாப்பிடியான யுத்தம் நடத்திவருகின்றனர். தங்களது மூதாதையர் நிலத்தைத் தோண்டவிடமாட்டோம் என்று அவர்கள் போராடுகின்றனர்.

எது பெரியது?

எந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏனென்றால் அனைத்து முறைகளும் ஆபத்தானவை. அவை சுற்றுச்சூழலையும் மனிதர்களின் நல்வாழ்வையும் பாதிக்கும்.

அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த டைட்டானியத் தொழிற்சாலை பற்றிய முக்கிய விவரங்களைப் பார்க்கத் தவறுகின்றன. நிலத்தை யார் வாங்குகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ, தொழிலை யார் நடத்துகிறார்கள் அரசா? டாடாவா? என்பதோ முக்கியமல்ல. யார் தோண்டினாலும் டைட்டானியம் 30 ஆண்டுகளில் தீர்ந்துபோகும். டாடா உலகப் பணக்காரர்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவிடுவார். அதே சமயம் அந்தப் பகுதியின் நீரும் தீர்ந்துபோயிருக்கும்.

எது பெரியது? எது முக்கியம்?

டைட்டானியமா? நீரா?

எவர் முக்கியமானவர்?

டாடாவா? மக்களா?



டைட்டானியம் இன்றி வாழ்ந்திருக்கிறோம். ஆனால், நீரின்றி அமையாது உலகு.



-நித்தியானந்த் ஜெயராமன்




(கட்டுரை ஆசிரியர் தொழில்நிறுவனங்கள் இழைக்கும் குற்றங்கள் பற்றியும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றியும் கவனம் செலுத்தும் எழுத்தாளர். சுதந்திரமான பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை இது. [தமிழில்: ப்ரேமா ரேவதி])


நன்றி:

அக்டோபர் 2007