Monday, May 16, 2011

இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும் !

சுனாமி காரணமாக ஜப்பானில் புக்கூஷிமா நகர அணுஉலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அணுக் கதிரியக்க கசிவுகள் வெளியாகி மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தங்களுடைய அணுசக்தி கொள்கை குறித்து மறுபரிசீலனை செய்யத் துவங்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய அணு உலைகள் குறித்தான பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளார்.
கல்பாக்கம்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

இங்கே நாம் முதன்மையாக கவனிக்கவேண்டியது இயற்கை சீற்றத்தையும் அதன் காரணமாக விளையக்கூடிய விபத்துகளையும் அழிவுகளையும் எதிர்கொள்ளும் ஜப்பானின் அவசர தயாரிப்பு நிலை (Emergency Preparedness) தான். அணுக்கதிர்கள் மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்னும் காரணத்தால் அணுஉலையின் சுற்றுப்புறத்தில் (சுமார் 25 கி.மீ.) வசித்து வந்த மக்களை சில மணிநேரத்தில் வெளியேற்றியுள்ளது ஜப்பான் அரசு. இந்தியா இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம் நாம் அறிந்ததே. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக் கூடிய  அளவிற்கு நாம் தயார் நிலையில் உள்ளோமா என்கிற கேள்வி இப்பொழுது மிகவும் அவசியமானது.

இந்திய அணுசக்தி துறை

1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) துவங்கப்பட்டது. பின்பு 1954 ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை (Department of Atomic Energy) செயல்படத் துவங்கியது. அணுசக்தி ஆணையம் இதன் கீழாக செயல்பட்டு வந்தது.  அணுசக்தித் துறையே அணுஉலைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக அணுசக்தி நெறிப்படுத்தும் வாரியம் (Atomic Energy Regulatory Board) செயல்படுகிறது. இந்த அமைப்பை தற்சார்பு உடைய அமைப்பாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை இப்பொழுது எழுந்துள்ளது. அணுசக்தி ஆராய்ச்சி தொடர்பான பல ஆராய்ச்சி மையங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. Nuclear Power Corporation of India Ltd உள்ளிட்ட அணுசக்தி சார்ந்த சுமார் ஐந்து பொதுத் துறை நிறுவனங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. தற்போது அணுசக்தித் துறை கீழாக 18 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 8 அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன.

அணுஉலைகளின் கட்டுமானங்கள்

பலவிதமான அபாயங்கள் நிறைந்தவையாக அணுஉலைகள் உள்ள காரணத்தால் இவை கட்டப்படுகின்றபோது கடைப்பிடிக்க வேண்டிய பலவித கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அணுஉலைகளின் செயல்பாட்டை இடத்தேர்வு, கட்டுமான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் செயல்நிறுத்தம் எனப் பிரிக்கலாம்.

இடத்தேர்வு : இயற்கை சீற்ற ஆபத்து உள்ள பகுதியில் அணுஉலை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது விதி. ஜனத்தொகை குறைவான பகுதியே அணு உலை கட்டுமானத்திற்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதும் விதி. வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் முக்கிய உயிரின பாதுகாப்பு பகுதியாகவும் அது இருக்கக் கூடாது என்றும் விதியுள்ளது. இந்தியாவில் தற்போது இயங்கும் எல்லா அணு உலைகளும் நிலநடுக்கம் வரக்கூடிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல அணுஉலைகள் கடலோரமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் சுனாமி ஆபத்தும் உள்ளது.

மேலும் இடத்தேர்வில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று இருக்க வேண்டும். அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி அளிக்கப்படுவதில் பொதுமக்களின் கருத்துகளும் அவசியம் கேட்கப்பட வேண்டும்.

கட்டுமான வடிவமைப்பு : அணு உலை கட்டப்படுவதிற்கான பல நெறிமுறைகளை அணுசக்தித் துறை வகுத்துள்ளது. குறிப்பாக அணு உலை கட்டுவதற்கு தேர்வு செய்யக்கூட வழிமுறைகளை Monograph on Siting Of Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான நெறிமுறைகளை Geotechnical Aspects and Safety of Foundation for Buildings and Structures Important to Safety of Nuclear Power Plants வழங்குகிறது. அணுக்கதிர் வெளியேறாமல் இருக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறையை Radiation Protection Aspects in Design for Pressurised Heavy Water Reactor Based Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான தரத்திற்கான நெறிமுறைகளை Quality Assurance in Nuclear Power Plants வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட எல்லா நெறிமுறைகளும் 2000-ம் ஆண்டுக்கு பின்பாக இயற்றப்பட்ட காரணத்தால் புதிதாக கட்டப்படும் அணு உலைகளுக்கு மட்டுமே இவை பெருந்தும். தற்போது இயங்கி வரும் பல அணு உலைகள் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படவில்லை. மேலும் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றித்தான் அணு உலைகள் கட்டப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு தற்சார்பு உடைய அமைப்புகள் இந்தியாவில் கிடையாது.

அணு உலை செயல்பாடு : யுரேனிய அணுக்கள் பிளக்கப்படும்போது, 3500- 4000 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்துடன் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அணு உலையில் இதே அணு பிளப்பின்போது நியூட்ரான் விழுங்கிகளைத் (Neutron Absorbers) தக்க சமயத்தில் நுழைவித்து, வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பசக்தி காரணமாக வெளியாகும் நீராவி கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு உலையில் அணுகதிர் வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவை மனிதர்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்களை உண்டாக வல்லது. எனவே இவை அணு உலையைவிட்டு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒரு அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை (Radioactive Spent Fuel Wastes) உண்டாக்கும். இவையும் அணுக்கதிர் உடையவை. இவற்றை அழிக்க முடியாத காரணத்தால் இவற்றையும் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பாதுகாக்க வேண்டும்.

செயல்நிறுத்தம் : ஒரு அணு உலையின் மொத்த ஆயுட்காலமே 40-50 வருடங்கள்தான். அதன்பிறகு அதை அப்படியே பெரிய, பெரிய கான்கிரீட் தொட்டியின் மூலம் பூமிக்கடியில் புதைத்துவிடவேண்டும். இப்படி அணு உலைகளை மூடுவதற்கு De-Commissioning என்று சொல்வார்கள். அதன்பிறகு அந்தப் பகுதி உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். ஆக ஒவ்வொரு நாற்பதாண்டுக்கும் ஒரு தடவை அணு உலைகளை இடம்மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

அணு உலை விபத்துகள்

1979இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டியன.

இந்திய அணு உலைகளில் விபத்துகளே நேர்ந்தது இல்லையா என்றால் பல விபத்துகள் நிகழ்ந்து உள்ளன என்பதே பதில். இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.

அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது அணுசக்தித் துறை சார்பாக பல விளக்கங்கள் கூறப்பட்டது. மேலும் அணுஉலை பாதுகாப்பு என்பதே அணுசக்தி சட்டப் பிரிவு 18 கீழ் இரகசியமானது என்றும் உயிர் நீதிமன்றத்தில் பார்வைக்கு மட்டும் அணுஉலை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யத் தயார் என்று கூறியது அணுசக்தி துறை. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் ஆவணங்களை தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் நம் நாட்டு அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து பிரிவு 18 –யை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது [PUCL vs UOI (2004) 2 SCC 476].

கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ - 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தித் துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

வெளிப்படையற்றதன்மை தான் இந்திய அணுசக்தி கொள்கையாக உள்ளது. எனவே அணு உலை விபத்துகள், அது குறித்த பல தகவல்கள் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அணுசக்தி:

சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station). ‎ இந்த உலையின் கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலை 1983 ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது. இங்கு 500 மெகா வாட் திறன் உள்ள இன்னும் ஒரு உலையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் அணுமின் உலைகள் ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.

சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை புளுத்தோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன் இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்றது இந்த உலை. இந்த உலை இந்திய வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளைக் கொண்டுள்ளது. உலையின் பாதுகாப்புக்காக இவ்வாலையைச் சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

அவசர தயாரிப்பு நிலை

1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

அணுசக்தி சட்டம் மூலமாக சில விதிகள் இயற்றப்பட்டுள்ன. அதில் Atomic Energy (Safe Disposal of Radioactive Wastes) Rules, 1987 கதிரியக்க எருக்கழிவை பாதுகாப்பைப் பற்றி கூறுகிறது. மேலும் அணுசக்தி கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான [Atomic Energy (Radiation Protection) Rules, 2004] சட்ட விதியும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிதி அணுவிபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்புநிலைக்கான (Emergency Preparedness) செயல்பாடுகளைப் பற்றி திட்டம் வரையப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. Convention on Assistance in the Case of a Nuclear Accident or Radiological Emergency ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

அணுவிபத்து நேருகின்ற போது அணுஉலை நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை செயல்பாடுகளைப் பற்றிய திட்டமும் (Site Emergency Preparedness Plans) மற்றும் அணு உலை சுற்றுப்புறத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை குறித்த திட்டமும் (Off-site Emergency Preparedness Plans) ஒவ்வொரு அணுஉலை சார்ந்து இயற்றப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டவிதி கூறுகிறது. இந்த தயாரிப்பு நிலை குறித்தான திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authourity) அணு உலை விபத்து குறித்த அவசர தயாரிப்பு நிலைக்கான திட்ட அறிக்கையை (Management of Nuclear and Radiological Emergencies) 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தயாரிப்பு நிலையின் தேவை மற்றும் செயல்படும் முறை பற்றிய குறிப்புகள் உள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் சாமானிய மக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. இதற்கு பின்பாகவும் நிலைமை மாறியுள்ளதா? மேற்கூறிய அவசர தயாரிப்பு திட்டப்படி விபத்தை எதிர்கொள்ள கூடிய அளவில் கல்பாக்கம் அணு உலை உள்ளதா என்பதைக் காண்போம்.

(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.

(ii) அடுத்து கல்பாக்க சுற்றுப்புற மக்களிடம் அணு உலையின் ஆபத்து மற்றும் அணுக்கதிர் ஆபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே ஒரு விபத்து நேருகின்றபோது தாமாகவே பாதுகாப்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு இம்மக்களிடம் குறைவு.

(iii) அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.

(iv) கல்பாக்க பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதற்கான சரியான தொலைத்தொடர்பு வசதியும் இல்லை. வட்டார அரசு அதிகாரிகள் மூலமாக மக்கள் எச்சரிக்கை செய்யப்படுவர் என்று அணுசக்தித் துறை கூறுகிறது. நடைமுறையில் இது எந்த அளவிற்கு உதவக் கூடும் என்பது கேள்விக்குறியே.

(v) விபத்து பின்பாக மக்களை குடியமர்த்தக் கூடிய மாற்றுப் பகுதியும் இதுவரை கண்டறியப்படவில்லை. அணு உலை விபத்து பின்பாக ஜப்பான் அரசு இதுவரை வெளியேற்றப்பட்ட மக்களை மாற்று இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இத்தகைய பண்பு நம் அரசுக்கு இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.

அணு உலை விபத்து காரணமாக வெளியேறக் கூடிய அணுக்கதிர்கள் இவ்வளவு தொலைவு தான் பயணிக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. ஆக கல்பாக்கத்தில் அணு உலை விபத்து நேர்ந்தால் அது 25 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் தொகை மிகுந்த மாமல்லபுரம், 75 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை போன்ற இடங்களைத் தாக்கக் கூடும்.

முடிவாக...

அணு உலை விபத்து என்று இல்லாமல் கல்பாக்க பகுதி மக்கள் பல நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அணு உலை சுற்றுப்புற பகுதிகள் தொடர்ச்சியாக அணுசக்தித் துறையினால் ஆய்வு மேற்கொள்ள அணுசக்தி சட்டம் வலியுறுத்துகின்ற போதும் இத்தகைய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவே இல்லை. கல்பாக்கம் அருகே உள்ள பல கிராமங்களுக்கு இதுவரை சரியான மின்சார வசதி இல்லை என்பதே யாதார்த்த நிலை. அணு உலை இருந்து கிடைக்கப்பெறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே அணு உலைகள் கட்டப்படுவதற்கான முக்கிய காரணம். இந்தியாவின் வல்லரசுக் கனவு காரணமாக உண்டான கதி இது. மேலும் அணு உலை கட்டுமான செலவுத்தொகைக்கு எவ்வித தணிக்கை கட்டுப்பாடுகளும் இல்லை. இதில் மின்சார தயாரிப்பு என்பதெல்லாம் சுத்தப் பொய். இழப்புகள்தான் அதிகம். இறுதியில் பாதிப்புக்குள்ளாவது மக்கள்தான்.
- மு.வெற்றிச்செல்வன் 
( m.vetriselvan@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Friday, May 6, 2011

அமலுக்கு வராமலே அராஜகம் செய்யும் தவணைக் கொள்முதல் சட்டம்

அதிக மதிப்புடைய சரக்கு வாகனங்கள், மகிழுந்து இருசக்கர, மூன்று சக்கர வாகனம், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் மடிக்கனினி என்பன உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, அதன் மொத்த விலையில், ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை முன்பணமாக கட்டிவிட்டு மீதுமுள்ள தொகையை தவணை முறையில் வாரக் கணக்கிலோ, மாதக்கணக்கிலோ செலுத்தும் முறையே தவணைக் கொள்முதல் முறையாகும். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த முறையானது பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.
 
தங்களது கனவுகள் நனவாவதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதே நேரத்தில் பல ஏழை குடும்பங்களை சிறிது சிறிதாக மன அழுத்தத்தை ஏற்படுத்தி கொன்று கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
தவணை கொள்முதல் (HIRE PURCHASE SCHEME) திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் :-

 சமீபத்தில் சென்னையில் புகழ் பெற்ற பட்டியலின தலைவரான அமரர் எம்.சி.ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்குள்ளானது. அவர்கள் தவணைக் கொள்முதல் முறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வாங்கிய பொருட்களுக்கான தவணையைத் திரும்ப செலுத்த முடியாததால் அந்த நிறுவனத்தினர் கொடுத்த சித்ரவதைகளின் காரணமாக ஏற்பட்ட‌ மன அழுத்தத்தின் விளைவாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறப்பட்டது. இது போன்ற தற்கொலைகள் தமிழகத்தில் இன்று பரவ‌லாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

24 மாத ஒப்பந்தத்தில் குறிப்பாக 20 மாதங்கள் இருசக்கர வாகனத்திற்கு முறையாக தவணை தொகை செலுத்திவிட்டு, மீதமுள்ள நான்கு மாத தவணையினை செலுத்த தாமதமான காரணத்திற்காக அமுலுக்கே வராத தவணை கொள்முதல் சட்டத்தினை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக ‘வங்கி குண்டர்களால்’ வீடு புகுந்து களவாடப்படும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதிலும் குறிப்பாக ஓரளவிற்கு பண வசதி கொண்டவர்களையெல்லாம் கண்டும் காணாமல் விட்டு விட்டு சாமானியர்களையும், விவசாய பணி மற்றும் பலசரக்கு சாமான்கள் கொண்டு செல்வதற்காக இரு சக்கர வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்களை கடன்பட்டு வாங்கியிருக்கும் கிராமத்து ஏழைகளைத்தான் ஆட்டுவித்தும், மிரட்டி வருகிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.

இன்னும் குறிப்பாக இப்படியொரு சட்டமே அமுலில் இல்லையென்றும், வங்கி, நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் அமைப்புகள் போன்றவற்றிற்கு தவணை தொகையினை செலுத்த தாமதிக்கும் ஒருவரின் உடமையை அத்துமீறி திருட்டுத்தனமாக பறிமுதல் என்ற ‘நவீன திருட்டுத்தனம்’ செய்வதற்கு துளியும் உரிமையில்லை என்ற செய்தி பெரும்பாலான காவல் நிலையங்களுக்கு தெரியவில்லை என்பதும் இவ்வாறு வங்கிகளால் சட்டத்திற்கு முரணாக அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்களால் பறிமுதல் நடக்கும் போது பாதிக்கப்பட்டோருக்கு எதிராகத்தான் காவல்துறையின் போக்கும் இருந்து வருகிறது என்பது அப்பட்டமான உண்மை. இதற்கான காரணம் காவல்நிலையங்களுக்கு இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் சென்றடையவில்லை என்பது தான் நிதர்சனம்.

உலகமயமாக்கல் சூழலால் சமீப காலமாக கிராமங்கள் காலியாகி நகரங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு மற்றும் பெரு நகரங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் துவங்கப்படுகின்றன. தொலைக்காட்சி, செய்தித்தாள் உள்ளிட்ட ஊடகங்கள் விளம்பரங்கள், செய்திகள் மூலமாக பொதுமக்களிடையே அதிக அளவில் பொருட்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வு காலச்சாரத்தை திட்டமிட்டு தொடர்ந்து உருவாக்குகின்றன. 

இதன் விளைவாக நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையிலுள்ள குடும்பங்கள் தங்களது பொருளாதார தகுதிக்கும் கூடுதலான மதிப்புடைய பொருட்களை வாங்கிட வேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த மனநிலையை தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனிநபரின் வாங்கும் சக்திக்கும் அதிக மதிப்பிலான பொருட்களுக்கு, முன் தொகையாக ஒரு குறிப்பிட் அளவு பணத்தைப் பெற்றுக் கொண்டு மீதமுள்ள தொகையை தவணை முறையில் கட்டிக் கொள்ளலாம் என்று வசீகர திட்டங்களை அறிவித்து எண்ணிக்கையிலான குடும்பங்களை கடன் சுமைக்குள் தள்ளுகிறது.

தவணைக் கொள்முதல் முறையின் பின்ன‌ணி:

 உலகின் காலனியாதிக்கத்தை உருவாக்கிய இங்கிலாந்தில் 1846 ஆம் ஆண்டில் முதன் முதலாக‌ இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு எனும் தளத்தில் அரியதொரு கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. சிங்கார் எனும் நிறுவனம் தையல் இயந்திர பணிகளில் அறிமுகம் செய்தது ஒப்பந்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சரக்குகள் கொண்டு செல்வதற்கான குதிரை வண்டிகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் மெல்ல மெல்ல பரவிய இந்த திட்டமானது, தானியங்கி கருவிகள் கண்டறியப்பட்ட காலத்தில் இன்னும் அதிகமாய் பரவத் தொடங்கியது.

 துவக்க காலங்களில் பொருட்களின் உற்பத்தியாளர்கள் பொருட்களை வாங்குபவர்களுடன் நேரடியாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். நிதி உதவி செய்து விற்பனை செய்தார்கள். முதலாம் உலகப் போருக்கு பிறகு நீண்ட கால ஒப்பந்த முறை அமலுக்கு வந்தது. இந்த சமயத்தில் தான் உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே தரகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதே கால கட்டத்தில் தான் இங்கிலாந்திடம் காலனி நாடாகயிருந்த இந்தியாவிலும் இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களின் இதர பொருட்களுக்காக தானியங்கி பொருட்களும், அதற்குத் தேவையான உதிரி பாகங்களும் ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆன போதிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் இந்தமுறை நாடு முழுவதும் விரிந்து பரவத் தொடங்கியது. 1960களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்தது ஆனாலும் ஆழமாக வேரூன்றவில்லை.

வர்த்தக ரீதியாக செயல்பட்ட வங்கிகளும் இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்தன. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி செய்ய முடியாத காரணத்தால் தவணை கொள்முதல் மூலம் பொருட்களை விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் தவணை முறையில் கடன் வழங்கும் திட்டங்களை வங்கிகள் மேற்கொள்ளத் துவங்கின. இப்படியாக தவணைக் கொள்முதல் முறை இந்தியாவில் வேரூன்றி வளர துவங்கியது.

தவணைக் கொள்முதல் சட்டம் 1972, இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, பொருட்கள் விற்பனைச் சட்டம் 1830 போன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்தாலும் இவைகளின் சரத்துகள், நிபந்தனைகள் விதிகளை உள்ளடக்கி 1972 ஆம் ஆண்டில் தவணைக் கொள்முதல் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் அமலுக்கு வரும் நாள் குறித்து மூன்று முறை அரசிதழில் அறிவிப்பு வெளியிட்ட பிறகும் இறுதியாக எந்த தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று நாள் குறிப்பிடப்படாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியாக ஒரே ஒரு நாள் கூட அமலுக்கு வராத இந்த சட்டம் இறுதியில் கடந்த 2005 ஜூன் மாதம் 23ம் நாள் இரத்து செய்யப்பட்டது.

அமலுக்கே வராமல் இறுதியில் இரத்தும் செய்யப்பட்டுவிட்ட இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தான் தற்போது வரையிலும் தவணைக் கொள்முதல் முறையில் பொருட்களை வாங்கியவர்கள் தவணைகளைச் சரியாக திருப்பிச் செலுத்தாதபோது அந்த பொருளையோ, வாகன‌த்தையோ குண்டர்கள், அடியாட்கள் மூலமாக சட்டத்துக்குப் புறம்பாக தாக்கிச் செல்லும் அடாவடி நிலை நடந்தேறி வருகிறது.

தவணையை சரியாகத் திருப்பிச் செலுத்தாதபோது ஒப்பந்த மீறுகை ஏற்படுவதால் இந்திய ஒப்பந்தச் சட்டம் பொருட்கள் விற்பனை சட்டம் போன்ற சட்டங்களின் மூலமாக உரிமையியல் நீதிமன்றத்திலும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மூலமாக நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும், முறையாக அறிவிப்பு செய்து தவணை தொகையினை கட்டத்தவறுவோர் மீது வழக்கு தொடர்ந்து பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தவணை முறையில் பொருட்கள் வாங்குபவர் பின்னர் வேண்டுமென்றே கட்ட மறுத்தாலோ அல்லது கட்ட இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அவர் ஜாமீன் சொத்தாக சமர்ப்பித்துள்ள ஆவணங்களை அல்லது உடைமைகளை முறைப்படி அறிவிப்பு வழங்கி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து மீட்டுக் கொள்ளலாம். அதனை விடுத்து குண்டர்களை பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளை கையாளக்கூடாது என்று பல்வேறு மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றங்களில் தொடர்ந்து தீர்ப்புகள் பகரப்பட்டு வருகின்றன.

அரசின் கடமையும் - பொது மக்களின் விழிப்புணர்வும் :-

தவணைக் கொள்முதல் வழங்கும் நிதி நிறுவனங்களினால் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடங்கள் உருவாக்கப்படுகிறது என்றும் அது போன்ற சூழ்நிலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 20வது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “கனா கண்டேன், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா” போன்ற தமிழ்த் திரைபடங்களில் தகுதிக்கு மீறி தவணைக் கொள்முதலில் பணம் வாங்கிய குடும்பங்கள் எப்படியெல்லாம் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவாகக் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. ஆக பொது மக்களும், தங்களுக்கு தாங்களே சுய பரிசோதனை செய்து கொண்டு விழிப்புடன் இருத்தல் அவசியமாகும்.

இப்படியாக அமலுக்கே வராமல் இரத்து செய்யப்பட்டுவிட்ட ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி இன்று சமூகத்தில் தனியார் நிதி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்புறம்பான செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த சட்டப்புறம்பான செயல்கள் தொடர்பான நிகழ்வுகளில் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு முறையான பாதுகாப்பினையும் வழங்கி, சட்டபுறம்பான நிகழ்வுகளில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும். 

இ. இ. இராபர்ட் சந்திரகுமார்
(robertckumar@gmail.com)