Friday, April 25, 2008

சுற்றுச்சூழல் போராளி நாகர்கோவில் அசுரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் (எ) அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்களுடைய அடிப்படைப் பிரச்னைகளை முன்வைத்து எழுதியும், போராடியும் வந்தார்.


கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.


உடல் நோயால் அவதியுற்ற நிலையிலும் திண்ணை இணைய இதழ், புதிய தென்றல் இதழ்களில் எழுதி வந்தார். மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுதே புதிய தென்றல் இதழில் இணையாசிரியராக மும்முரமாகப் பணியாற்றினார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அவரது நினைவைப்போற்றும் நிகழ்ச்சி 2008 மே தினத்தன்று காலை 10 மணியளவில், சென்னை தியாகராயநகர், வேங்கடநாராயணா சாலை, (திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் எதிரே உள்ள) செ. தெ. நாயகம் தியாகராயர் மேனிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.


அசுரனின் மனிதநேய கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுக்க விரும்பும் அறிவியலாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைப்போராளிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், கவிஞர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

தங்களையும் உளமாற வரவேற்கிறோம்.