Monday, July 28, 2008

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 6

வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை வழக்குகளுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் வரக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ளது மேலவளவு ஊராட்சி மன்றம். 1996ஆம் ஆண்டிற்கு முன் இதன் தலைவர் பதவியை அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தினரான கள்ளரில் ஒரு பிரிவினரான அம்பலக்காரர்கள் வகித்து வந்துள்ளனர். இவ்வகையில் கடைசியாக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அழகர்சாமி. 1992ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைய பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டுமெனக் கூறியது. அதனடிப்படையில் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை இயற்றியது. அப்போது பொதுத் தொகுதியாக இருந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, 1996ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிப் பதவியாக மாற்றம் செய்யப்பட்டது.
.
இதுநாள் வரை தங்களுக்கு கீழே இருந்த தலித்துகள் தங்களுக்கு மேலே வந்துவிடுவார்களோ என்று, ஒரு தலித்தை தலைவராக ஏற்றுக் கொள்ளாத மனநிலையிலிருந்த ஆதிக்க சாதியினர், இது குறித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டினர். இருப்பினும், தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி கிடைத்த புதிய உரிமையை கைக்கொள்ள தலித் மக்கள் ஆர்வம் காட்டினர். தி.மு.க.வைச் சேர்ந்த முருகேசனும் மற்றும் சிலரும் 10.9.1996 அன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், ஆதிக்க சாதியினர் அவர்களை மிரட்டவே, அவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
.
மேலூர் வட்டாட்சியர் நடத்திய சமாதானக் கூட்டத்தில், ஆதிக்க சாதியினர் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். அச்சத்தால் தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, 9.10.1996 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்தல் நடத்தப்படவில்லை. மீண்டும் 28.12.96 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உட்பட சிலர் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆதிக்க சாதியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிவிட்டு வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று தேர்தலை தடுத்துவிட்டனர். காவல் துறையின் பலத்த காவலுடன் மீண்டும் 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆதிக்க சாதியினர் இத்தேர்தலைப் புறக்கணிக்க, தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து, இறுதியில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
.
தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆதிக்க சமூகத்தினர் முருகேசனுடன் தந்திரமாகப் பழகி, ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிய முடியாத அளவிற்கு முருகேசன் தடுக்கப்பட்டார். முதன்முறையாக 10.9.1996 அன்று முருகேசனும் மற்ற தலித் மக்களும் வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தலித் மக்களின் மூன்று குடிசைகளுக்கு தீ வைத்தனர் ஆதிக்க சாதியினர். முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவராக வந்தபிறகு தீ வைக்கப்பட்ட குடிசைகளின் உரிமையாளர்களுக்காக இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.
.
இது குறித்து நிவாரணம் கோரி 30.6.1997அன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த மேலவளவு மனோகரன் (செட்டியார் சமூகம்), இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் எனக் கேட்டு, கே.என்.ஆர். பேருந்தில் முருகேசன் உட்பட மற்றவர்களும் ஊர் திரும்ப உள்ளதைத் தெரிந்து கொண்டார். அவ்வாறே அந்தப் பேருந்தில் புறப்பட்டனர்.
.
மேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் தலித் சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். வண்டி அக்ரகாரம் பழைய கள்ளுக்கடைமேடு என்ற இடத்தின் அருகே வந்ததும், பேருந்தில் வந்த துரைபாண்டி என்பவர், ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே சமயம், சென்னகரம்பட்டி ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.
.
பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பில் இருந்து தனியாக வெட்டி எடுத்து, அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
.
25.9.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு மா. சுப்பிரமணியன் என்ற துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக காவல்துறையின் குழுக்கள் செயல்பட்டன. 85ஆவது நாளில் 25.9.97 அன்று குற்றப்பத்திரிகை 41 பேர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (90 நாட்கள் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருந்ததால், கைதானவர்களை பிணையில் தவிர்க்க முடியாமல் விடுவித்தாக வேண்டும் என்பது சட்டவிதி). குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர்.
.
1998 மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் பெரும்பான்மையினருக்குப் பிணை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலவளவிற்குத் திரும்பியதால், தலித் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் செல்வாக்குள்ள முக்கியமான ஓரிருவர் சம்பவ சாட்சிகளான தலித் மக்கள் சிலரிடம் மறைமுக மிரட்டலில்ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக இது குறித்து அவர்களால் நேரடியாக ஒன்றும் செய்ய இயலவில்லை. முருகேசனின் தம்பி கருப்பையா இச்சூழ்நிலையை விளக்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அளித்தார். ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
.
இத்தகவல்களைக் கேள்விப்பட்ட உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் பொ. ரத்தினமும், இக்கட்டுரையாளரும், மற்ற சக வழக்குரைஞர்களும் இச்சூழ்நிலை குறித்துப் பெரும் கவலையடைந்தனர். 1998 ஏப்ரல் மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போதிருந்த மன்மோகன் சிங் லிபரான் (பாபர் மசூதி இடிப்பு குறித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தற்பொழுது உள்ளார்) அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கி, இச்சூழலால் வழக்கில் சாட்சிகளாக உள்ள தலித் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 75 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனுவை உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரப்படி நடவடிக்கை எடுக்க, இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் விசாரணைக்கு அம்மனுவை அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.
.
ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயராம் சவுத்தா மற்றும் பி. பக்தவச்சலு ஆகியோர், மனுதாரர்களான வழக்குரைஞர்கள் வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர்களோ, அரசோ அல்லர்; அவர்கள் வழக்கிற்கு மூன்றாம் தரப்பினர். எனவே, அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று இவ்வகையில் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று அதிரடித் தீர்ப்பு வழங்கினர்.
.
இத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் பொ. ரத்தினம் (முதலாம் மனுதாரர்) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பிணை ரத்து குறித்த குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவை ஆய்ந்து அளித்த தீர்ப்பு, மிகவும் முன்னோடித் தீர்ப்பாக இன்று வரை அறியப்படுகிறது. அதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள், “ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை குற்றவியல் வழக்கைத் தொடுத்து நடத்தும் அரசோ அல்லது அவ்வழக்கில் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினரோதான் தாக்கல் செய்ய முடியும்” என்றிருந்த நிலையை மாற்றி, வழக்கில் நேரிடையாகத் தொடர்பற்ற ஆனால் அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையில் உண்மையான, நேர்மையான அக்கறையுள்ள நபர்களும் பிணை ரத்து மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் (ரத்தினம்-எதிர்-அரசு (2000) 2SCC 391) சட்ட விளக்கமளித்தது.
.
இத்தீர்ப்பின் காரணமாக மேலவளவு படுகொலை வழக்கு, சட்டரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததால், இதற்குப் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வட்டாரத்தில் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய வழக்கு என்ற தனிக்கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்னொரு செய்தியையும் இங்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நீதிமன்றத்தை எவ்விதம் அணுகலாம் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமையும்.
.
மேலவளவு வழக்கின் விசாரணை மதுரையிலேயே நடத்தப்பட்டால், மதுரை மற்றும் பிற தென்மாவட்டங்களில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆதிக்க சாதியின மக்களே பெரும்பான்மையினராக இருப்பதால், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சியளிக்க பல்வேறு விதமான இடையூறுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்துதல், சாட்சிகளை விலை பேசுதல் போன்றவை நிகழ்ந்ததாலும் வழக்கு விசாரணையை வேறு வட மாவட்டத்திற்கு மாற்றக்கோரி, பாதிக்கப்பட்டோர் சார்பில் மனு செய்யப்பட்டது. இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த போதுதான் உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னரே உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்தது. எனவே, வழக்கு விசாரணை மதுரையிலிருந்து சேலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
.
வழக்கு விசாரணையை சேலத்தில் நடத்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் திருமலைராஜன் அவர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞரான நியமனம் செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டோர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அரசு உத்ததரவு ஏதும் பிறப்பிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு மனுவம் தாக்கல்செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலவளவு வழக்கை நடத்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். அவருடன் மற்றொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையை திறமிக்க வகையில் நடத்தினார். பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 26.7.2001 அன்று வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; 23 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
.
தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு நிலுவையிலிருக்கும் காலத்திற்கு தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவர்கள் தாக்கல் செய்த பிணை மனுக்கள், முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் செய்யப்பட்ட எதிர் மனு காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், பின்னர் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல் வழங்கியது, மனித உரிமை மற்றும் தலித் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

-காயங்கள் தொடரும்

-சு. சத்தியச்சந்திரன்

Friday, July 18, 2008

தகவல் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி!

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே முதன்மையானது. இங்கு மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நமக்கு புகார்கள் வரவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதற்காக மருத்துவக்கல்லூரியின் இணையதளத்தை தேடினோம்.

அவ்வாறு இணையதளம் எதுவும் நமக்கு புலப்படாத நிலையில் நமது முதல் கேள்வியே மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் இணையதளம் குறித்ததாக அமைந்தது. கேள்விகள் 25-06-2008 அன்று அனுப்பப்பட்டது. அதற்கான பதில் 11-07-2008 அன்று கையெழுத்தாகி 18-07-2008 அன்று நம்மை வந்தடைந்தது. இந்த பதில்கள் அடங்கிய கடிதத்தில் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வரும், பொது தகவல் அதிகாரியுமான Dr. S.கீதாலட்சுமி , MD அவர்கள் கையொப்பம் இட்டுள்ளார்.

இனி கேள்வியும், பதில்களும்.

கேள்வி 1. தங்களது கல்வி நிறுவனத்திற்கு இணையதளம் ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதன் பெயரை தெரிவிக்கவும். இணையதளம் இல்லையென்றால் அவ்வாறு இணையதளத்தை அண்மையில் ஆரம்பிக்கும் உத்தேசம் உள்ளதா?

பதில் : இணையதளம் உள்ளது! http://www.mmc.org/
(தவறான தகவல்! இந்த இணைய தளம் இங்கிலாந்திலுள்ள Maine Medical Centre என்ற அமைப்பினுடையது)

கேள்வி 2. தங்கள் துறைக்கு பொதுத்தகவல் அதிகாரி மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகள் என்று யாரேனும் இருந்தால் அவர்கள் குறித்த விவரங்கள் அந்த இணையதளத்தில் இடம்பெறச் செய்வீர்களா?

பதில் : இணையதளம் இல்லாததால் இந்த பிரசினை எழவில்லை!
(முதல் கேள்வியில் இணையதளத்தின் பெயரை எவ்வாறு கொடுத்தார்கள்?
அடுத்த கேள்வியிலேயே இணையதளம் இல்லை என்பதை எவ்வாறு உணர்ந்தார்கள்? தலை சுற்றுகிறது!)

கேள்வி 3. உங்கள் கல்லூரியில் பட்டமேற் படிப்பில் எத்தனைப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன? எந்தெந்த பிரிவுகளில் அவை நடத்தப்படுகின்றன? அவை அனைத்தும் இந்திய மருத்தவுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளனவா?

பதில் : பட்டமேற்படிப்பு கல்விகள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவை – 34 எண்ணிக்கை. (M.D)
( M.S. என்ற பெயரில் நடத்தப்படும் படிப்புகள் குறித்து துணை முதல்வருக்கே தெரியாது போலும். அவை எந்தெந்த துறைகளில் நடத்தப்படுகிறது என்ற தகவலை எங்கே, யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் தெரியவில்லை)

கேள்வி 4 . பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்? அவர்களது பெயர், கல்வித்தகுதி, பதவி ஆகியவற்றை வழங்கவும். இவற்றில் எத்தனை நிரப்பப்படாமல் உள்ளன? அந்த காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? துறைவாரியான தகவல்களை தரவும்.

பதில் : 586. பணிமர்த்தும் அதிகாரம் தமிழக அரசுக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் மருத்துவ கல்வித்துறை இயக்குனரிடமும் உள்ளது.
(கேள்வியை முழுமையாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் அளவுக்கு துணை முதல்வருக்கு கல்வி அறிவு இல்லை போலுள்ளது!)

கேள்வி 5. பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? துறை வாரியான தகவல்களை தரவும்.

பதில் : 439 தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
(துறை வாரியாக கணக்கெடுக்கும் அளவிற்கு ... என்னத்தை சொல்றது..போங்க!)

கேள்வி 6. மருத்துவ பட்ட மேற்படிப்பு எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? வகுப்பறை கல்வி, செய்முறை கல்வி, மருத்துவமனை கல்வி வழங்கப்படுவதற்கான கால அட்டவணையை வழங்கவும்.

பதில் : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நடத்தப்படுகிறது.
(அந்த விதியைதாங்க கேட்டோம். அதைச் சொல்லுங்க!)

கேள்வி 7 முதல் 18 வரை உள்ள கேள்விகளை முதல்வர், அரசு பொது மருத்துவமனை, சென்னை-3 என்ற முகவரிக்கு அனுப்பவும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
(தகவல் உரிமைச் சட்டம், பிரிவு 6(3)ன் படி கோரப்படும் தகவல் வேறொரு அதிகார அமைப்பிடம் இருக்கும்போது தகவல் கோரும் விண்ணப்பத்தை , அது எந்த துறைக்கு செல்லவேண்டுமோ அந்தத்துறைக்கு
5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இந்த தகவலை மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த சட்டவிதிகள் பின்பற்றப் படாததோடு, மனுவைப் பெற்று சுமார் 15 நாட்களுக்கு பிறகு பதில் தயாரிக்கப்பட்டு ,கையெழுத்தாகி அதன்பிறகு ஒரு வாரம் கழித்தே அந்த பதில் நம்மை வந்தடைந்தது)

மேற்கண்ட விவகாரங்களை விளக்குமாறு மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பப் பட்டுள்ளது. அதற்கான பதில்களும், தொடர் நடவடிக்கைகளும் இங்கு வெளியிடப்படும்.


-மக்கள் சட்டம் குழு

Friday, July 11, 2008

பளபளா சூப்பர் மார்க்கெட்களும், பல்லிளிக்கும் தொழிலாளர் - நுகர்வோர் நலன்களும்...!

உலகமயமாதல் கொள்கை இந்தியாவிற்கு கொண்டுவந்த புதிய அம்சங்களுள் முக்கியமான ஒன்று நவீனமயமாக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள்! பேருந்து நிலையங்களுக்கு அருகிலும், மற்ற முக்கிய பகுதிகளிலும் விவசாயிகளோ, சிறு வியாபாரிகளோ செய்து வந்த சில்லறை விற்பனையை இன்று ஸ்பென்சர்ஸ் டெய்லி, ரிலையன்ஸ் ப்ரெஷ், மோர் போன்ற வர்த்தக கழகங்கள் கையில் எடுத்து விட்டன. இந்த மாற்றத்தில் நேரடியாக சில்லறை விற்பனை செய்து வந்த விவசாயிகளும், சிறு வியாபாரிகளும் அவர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லாமல் அழிந்து வருகின்றனர். குளிர்பதனம் செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் சீருடை அணிந்த பணியாளர்கள் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி, கணிணியில் பில் வழங்கி, பளபளவென்று மாசுபடாமல் இருக்கும் காய்கனிகளை வாங்கிச்செல்வது நம்மில் பலருக்கும் சுக அனுபவமாக இருக்கிறது.

இந்த மாற்றத்தில் காணாமல் போய்விட்ட மூதாட்டிகளும், வயசாளிகளும் எங்கு போனார்கள் என்ற கேள்வி நம்முள் எழுவதில்லை.
இதுபோன்ற நவீனமயமான சில்லறை விற்பனை நிலையங்களில் உள்ள காய்கனிகள் ஃப்ரெஷ்ஷாக இருப்பதாக தோன்றினாலும் அங்கு பணியாற்றும் விற்பனையாளர்கள் மிகவும் புழுக்கத்துடனே இருப்பதை நம்மில் பலரும் உணருவதில்லை. ஒரு உதாரணத்திற்காக மோர் ஃபார் யூ (MORE for you) என்ற பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தும் ஆதித்ய பிர்லா குழும (ADITYA BIRLA GROUP) த்தை பார்ப்போம். சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள, பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான இந்த குழுமத்தில் சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணி புரிவதாக அந்த நிறுவனத்தின் இணையதளம் பெருமிதம் கொள்கிறது. மேலும் பணியாளர்களை நல்ல முறையில் நிர்வகிப்பதில் ஆசியாவிலேயே முதல் 20 நிறுவனங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் கூறுகிறது.

இந்த நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவான “மோர்” நவீன விற்பனை நிலையங்களில் அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. அதற்கேற்ப சுமார் 15 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள சரக்குகள் இருப்பு வைக்கப்படுகின்றன.
இங்கு பணியாற்றும் அடிப்படை பணியாளர்கள், வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சுமாராக 2,500 முதல் 3,500 ரூபாய் வரையே மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த விற்பனை நிலையங்களோ காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை இடைவெளியின்றி இயங்குகின்றன. பணியாளர்கள் ஷிப்ட் முறைப்படி பணியாற்றுவதாக தொழிலாளர் நலத்துறைக்கு கணக்கு காட்டப்பட்டாலும் உண்மை அதுவல்ல.

பல சிறிய கிளைகளில் மேற்பார்வையாளர், மேலாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை.

இந்த விற்பனை நிலையங்களுக்கு தேவையான விற்பனைப் பொருட்கள் அந்தந்த நகரின் மைய கிட்டங்கி(Warehouse)யிலிருந்து, தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தப் பொருட்கள் பட்டியல்படி இருக்கிறதா என்பதை சரி பார்ப்பதற்கான முறையே பல இடங்களில் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு தேவையான ஆட்களும் இருப்பதில்லை; நேரமும் இருப்பதில்லை என்று பணியாளர்கள் கூறுகின்றனர். எப்போதும் பணியாளர் பற்றாக்குறையிலேயே இருக்கும் இந்த விற்பனை நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், கடை திறக்கும் நேரத்தில் அல்லது மூடும் நேரத்தில் வரும் இந்த சரக்குகள் பட்டியல்படி இருக்கிறதா என்பதை பார்க்காமலேயே அவை அலமாரிகளில் ஏற்றிவிடுகின்றனர்.

எப்போதும் வாடிக்கையாளர்களின் கூட்டத்தில் தத்தளிக்கும் இந்த விற்பனை நிலையங்களில் தேவையான அளவிற்கு பணியாளர்கள் இல்லாததால், நாளின் முடிவின்போது காசாளரிடம் இருக்க வேண்டிய தொகை குறைந்து அதற்கு காசாளர் பொறுப்பேற்கும் நிலை மிகச்சாதாரணமாக ஏற்படுகிறது. சுமார் 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் எந்த ஒரு காசாளரும் முழு சம்பளத்தை வீட்டுக்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

அதைபோல கடையில் உள்ள சரக்குகள் அனைத்தையும் மாதம் ஒரு நாளில் கணக்கு சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. அன்று மொத்த வரவிலிருந்து, விற்பனை போக மீதியுள்ள மதிப்பிற்கு சரக்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருப்பதில்லை.
குறைவான ஆட்களே இருப்பதால் பொருட்களை பாதுகாப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து நிறுவன நிர்வாகம் கவலைப்படுவதில்லை. சரக்கை விற்பனை நிலையத்துக்கு கொண்டுவரும் நிலையில் அதை அந்த கிளையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் சரிபார்ப்பதில்லை என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இவ்வாறு போக்குவரத்தின்போது அந்த சரக்குகளை “வேறுவித”மாக கையாளும் உயர் பதவியினர் தப்பிவிடுகின்றனர். அதற்கு மாறாக குறையும் மதிப்பிற்கு அந்த கிளையில் பணியாற்றும் பணியாளர்களை பொறுப்பாக்குகின்றன. கிளையில் உள்ள விற்பனைப்பொருட்கள் அனைத்தும் கணிணி மூலமாகவே கணக்கிடப்படுகிறது. கணிணிகள் அனைத்தும் நிறுவனத்தின் மையஅலுவலகத்தின் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. விற்பனையாளர்கள் பலருக்கும் கணிணி குறித்து குறைந்த பட்ச அறிவே இருப்பதுடன், நிர்வாகமோ, உயர் அதிகாரிகளோ முறைகேடுகள் செய்தால் அதைக்கண்டுபிடிக்கும் திறன் இருப்பதில்லை. அவ்வாறான பணியாளர்களை நிறுவனமோ, நிர்வாகிகளோ விரும்புவதில்லை.

குறைபடும் மதிப்பு குறைவாக இருக்கும் நிலையில், நிறுவன நிர்வாகமே பணியாளர்களை உடல்ரீதியாக தாக்கியோ, வேறுவிதமாக மிரட்டியோ எழுதி வாங்கிக்கொண்டு ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனர்.

குறைபடும் பொருட்களின் மதிப்பு அதிகரிக்கும் நிலையில், அருகிலுள்ள காவல் நிலையத்தில் விற்பனை பணியாளர்கள் மீது புகார் செய்யப்படுகிறது.
முதலாளிகள், காரில் வருபவர்கள், வெள்ளைத்தோல் உள்ளவர்கள், ஆங்கிலத்தை கோர்வையாக பேசுபவர்கள் நல்லவர்கள்; தொழிலாளிகள், பஸ்ஸிலோ, சைக்கிளிலிலோ வருபவர்கள், கருப்புத்தோல் உள்ளவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் கெட்டவர்கள் என்ற பொதுக்கருத்தின் அடிப்படையில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே இதுபோன்ற எந்த ஒரு சில்லறை விற்பனை நிலையத்திலும். எந்த ஒரு பணியாளரும் ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்ற முடிவதில்லை.


இத்தகைய பிரசினைகள் காரணமாகவே சுபிக்ஷா என்ற பெயரில் மிக ஆடம்பரமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சங்கிலித்தொடர் விற்பனை நிறுவனம், மிகவும் நலிந்துபோய் இப்போது வேறொரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

இதுபோன்ற நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு எந்த விதமான சட்டரீதியான உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. எப்போதோ இயற்றப்பட்ட குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுவிடுவதால் அவர்கள் இந்த நிறுவனங்களின் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

இந்த அவலம், வாடிக்கையாளர்களின் புலன்களை அடைவதேயில்லை. அப்படியே அவர்கள் உணர்ந்தாலும் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்த நிறுவனங்கள் பணியாட்களை மட்டுமல்ல, வாடிக்கையாளரையும் மோசடி செய்கின்றன என்பதை பலரும் உணருவதில்லை.

குறிப்பாக இதுபோன்ற பல நிறுவனங்களும் ஆட்டா மாவு, சர்க்கரை, எண்ணெய் வகைகள், நூடுல்ஸ் போன்றவற்றை சொந்த தயாரிப்பாக விற்பனை செய்து வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் டிடர்ஜன்ட் சோப், ஷாம்பூ போன்ற சொந்த தயாரிப்பு பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றன.

ஆனால் இந்தப்பொருட்களின் கவர்கள் இருக்கும் அளவுக்கு பொருட்கள் தரமாக, சரியான அளவில் இருக்கிறதா என்பதை பலரும் கவனிப்பதில்லை. உணவுப் பொருட்களில் அவற்றின் காலம் காலாவதியான பின்னரும் அவை விற்பனை செய்யப்படுகின்றன. சுட்டிக்காட்டி கேட்பவருக்கு மட்டுமே புதிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆக இந்த நிறுவனங்கள் பணியாளர்களை மட்டுமல்ல; வாடிக்கையாளர்களையும் ஏமாற்றியே லாபம் ஈட்டி வருகின்றன.

ஆனால் இந்த நிறுவனங்களின் இத்தகைய அறமற்ற போக்குகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படாமல், லாபம் ஒன்றே குறி என்ற அடிப்படையில் அதன் பங்குதாரர்களும் இருக்கின்றனர். பங்குச்சந்தையில் இந்த நிறுவனங்களின் மதிப்பே இந்த நிறுவனங்களின் தகுதியாக விளங்குகிறது.

மொத்தத்தில் காணாமல் போனது காய்கறி விற்று பிழைத்துக்கொண்டிருந்த மூதாட்டிகளும், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும்தான். இனி இவர்களை கீழே உள்ளதுபோன்ற கலைப்படைப்புகளில்தான் பார்க்கமுடியும்.இவர்களோடு தொழிலாளர் நலன், நுகர்வோர் நலன் போன்ற அடிப்படை உரிமைகளும் காணாமல் போய்விடுவதை நாம் கவனிக்கத்தவறி விடுகிறோம்.
இவ்வாறு வாழ்க்கையை இழக்கும் மக்கள் சமூகத்தில் எந்த விதமான எதிர்வினை ஆற்றுவார்கள் என்பதை கணிக்க முடியாது. இவர்கள் ஒருவேளை சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறினாலும் மிகப்பெரும் வர்த்தகப்புள்ளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எந்த ஆபத்தும் இருக்கப்போவதில்லை.

இந்த சமூக அவலங்களை கண்டும் காணாமல் காலம் கழிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குத்தான் உண்மையான அபாயம் காத்திருக்கிறது.

இதுபோன்ற சமூக அவலத்திற்கு எதிராக சாமானியனான நான் என்ன செய்யமுடியும்? என்ற கேள்வி எழலாம். ஏராளமாக செய்ய முடியும்! முதல் கட்டமாக இதுபோன்று சில்லறை விற்பனை மூலம் நுகர்வோர் சந்தையை தனதாக்க முயலும் உள்நாட்டு, பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை புறக்கணிக்க முடியும். இதை வெற்றிகரமாக செய்துவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் சொல்லாமலே புரிந்துவிடும்.

-மக்கள் சட்டம் குழு

Tuesday, July 8, 2008

சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...

மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது.
.
சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்
-என்ற திருக்குறளே பழந்தமிழர், சுற்றுச்சூழல் குறித்து கொண்டிருந்த பரந்த பார்வையை விளக்கும்.
.
சுதந்திரத்திற்கு பிந்தைய சட்டங்களே நாட்டின் இன்றைய நிலையை நிர்ணயிப்பதால், தற்போதைய சட்டங்களை குறித்து பார்ப்போம்.
.
இந்தியாவில் உள்ள சட்டங்களில் முதன்மையானது, இந்திய அரசியலமைப்புச் சட்டமே! இந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுக்கும் (உறுப்பு 48A) , குடிமக்களுக்குமான (உறுப்பு 51A[g]) சுற்றுச்சூழல் குறித்த கடமைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் குறித்த அரசுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் “அரசுக்கு வழி காட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, “அரசு அமைப்புகள் தேசத்திலுள்ள காடுகளையும், காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்”.
.
சுற்றுச்சூழல் குறித்த குடிமக்களுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது (A) பகுதியில், குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, “இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டு விலங்குகள் மற்ற உயிரினங்கள் உள்பட உள்ள இயற்கைச் சுற்றுச் சார்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களிடத்தில் பரிவு காட்டவும் ஆவன புரிவதை கடமையாக கொள்ள வேண்டும்”.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்து மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் சுற்றுச்சூழல் குறித்த அரசு மற்றும் குடிமக்களின் கவனம் தேவையான அளவு இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதைப் புரிந்து கொள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தன்மைகள் குறித்து சுருக்கமாக புரிந்து கொள்வது அவசியம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ள அம்சங்களில் பலவும் செயல்படும் தன்மை வாய்ந்தவை. அந்த அம்சங்கள் செயல்படாது விடப்பட்டால் அது குறித்து வழக்கு தொடரமுடியும். இந்த அம்சங்கள் அடிப்படை உரிமைகள் எனப்படுகின்றன.
.
ஆனால் அதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில பகுதிகள் செயல்படா தன்மையுடையதாகவும் இருக்கின்றன. அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் உள்ள அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை செயல்படுத்த வலியுறுத்தி நீதிமன்றங்களை நாடமுடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 37ன் படி, அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவையாகும். சட்டங்களை இயற்றும்போது, இத்தகைய அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை, எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது.
.
இவ்வாறு நீதிமன்றங்களின் மூலம் வலியுறுத்த இயலாத பிரிவுகளின் கீழ்தான் மேலேக் கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
.
எனினும் அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் குறித்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, இந்திய நீதித்துறையையும் ஓரளவு நல்லவிதத்தில் பாதிக்கவே செய்துள்ளது. நீதிபதிகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், ஏ. எம். அஹமதி மற்றும் மூத்த வழக்கறிஞர் எம். சி. மேத்தா போன்றவர்களின் உழைப்பாலும், ஈடுபாட்டாலும் சுற்றுச்சூழல் குறித்த இந்திய நீதித்துறையின் பார்வை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
.
இந்திய அரசியல் சட்டத்தின் செயல்படும் பிரிவில் அமைந்துள்ள உறுப்பு 21ல் குறிப்பிடப்பட்டுள்ள, சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது என்ற சட்ட வாசகத்திற்கு மிகவிரிந்த பொருளை நீதிபதிகள் கொடுத்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்ற புரிதலில், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது அடிப்படை உரிமை மீறலாக பொருள் கொள்ளப்பட்டு பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
.
இந்த அடிப்படையில் இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் கீழ் கீழ்க்கண்ட கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
.
1. வாழ்வதற்கான உரிமை என்பது மாசுபடாத சுற்றுச்சூழலுக்கான உரிமையாக பொருள் கொள்ளப்படும். இது அனைவருக்கும் பொதுவானது.
.
2. அரசுக்கொள்கைகளை செயல்படுத்தும் அதிகாரக்குழுக்கள் சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாக செயல்படுத்தும் பொறுப்பும், கடமையும் கொண்டவை.
.
3. சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழுள்ள தமது கடமைகளை செய்யத்தவறுவதற்கு நிதி ஆதாரம் இல்லை என்றோ, தேவையான பணியாளர்கள் இல்லை என்றோ அரசு அமைப்புகள் கூறக்கூடாது.
.
4. சுற்றுச்சூழல் சட்டத்தின் ஒரு பகுதியான “மாசுபடுத்துபவரே செலுத்துதல்” (Polluter pays principle) என்ற அடிப்படையில் மாசுக்கேடுக்கு காரணமானவரே அதற்கான இழப்பீட்டை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்.
.
5. “முன்னெச்சரிக்கை குறிக்கோள்”(Precautionary principle) –படி அரசு அதிகார அமைப்பு, சுற்றுச்சூழல் மாசுகேட்டிற்கான காரணங்களை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும். புதிய மேம்பாட்டு பணிகளும், தொழில் அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாதது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றின் உரிமையாளர்களுக்கே உடையது.
.
6. சுற்றுச்சூழல் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் (அ) மைய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் கொள்கை; (ஆ) நின்று நிலைத்து நீடிக்கக்கூடிய வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல்; மற்றும் (இ) முந்தைய தலைமுறையிடம் பெற்ற சுற்றுச்சூழலை எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் கடமை போன்ற அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
.
7. சுற்றுச்சூழல் சட்டங்களை பொருட்படுத்தாமல், வளர்ச்சி பணிகளை அல்லது தொழில் முயற்சிகளை மேற்கொள்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
.
8. சுற்றுச்சூழல் சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; சுற்றுச்சூழல் நோக்கங்களை முறியடிக்கும் வகையில் பயன்படுத்தக் கூடாது.
.
9. இயற்கை வளங்கள் அனைத்திற்கும், அரசே பொறுப்புரிமையர் (trustee) ஆகும். கடற்கரை, ஓடும் தண்ணீர், காற்று, காடுகள், மென்மையான நிலங்கள் ஆகிய அனைத்துக்கும் பொதுமக்களே பயனாளிகள். இந்த இயற்கை வளங்களை தனியார் உரிமையுரிமையாக மாற்றுவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது.

மேற்கூறப்பட்ட கொள்கைகள் பல்வேறு வழக்குகளின் தீ்ர்ப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனினும், நடைமுறையில் பல்வேறு பிரசினைகளிலும் இந்த கொள்கைகளுக்கு எதிரான அரசு உத்தரவுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் வருவதை அனைவரும் உணர முடியும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அரசு அமைப்புகள் கொள்கை முடிவுகளை மேற்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்த தேவையான சட்டங்கள் போதுமான அளவில் இல்லாமையே இந்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணமாகும். மேலும் இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு அமைப்பு சீரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதும். அந்த சட்டங்களை செயலிழக்க செய்வதில் அரசு மற்றும் தனியார் தொழில் துறைகளும் முனைப்புடன் நிற்பதும் இந்த பிரச்சினைக்கான மிகமுக்கியமான காரணமாகும்.
(தொடரும்)
.
-சுந்தரராஜன்

Wednesday, July 2, 2008

தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழிற்கல்வியை மேலாண்மை செய்யும் உயர்மட்ட அமைப்பு அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. அரசு மானியத்துடன் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளைத் தவிர சுயநிதி அடிப்படையிலும் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் இந்த பல்கலைக் கழகத்தில் நடத்தப்படுகின்றன.
.
இந்தப் பல்கலை கழகத்தில் பல ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், மற்ற பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுவதாகவும், பணி உத்தரவாதம் இல்லாத நிலையில் அவர்கள் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும் செய்திகள் வந்ததை அடுத்து, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகள் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொதுத்தகவல் அதிகாரி குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், பொதுத்தகவல் அதிகாரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு, 01-04-2008 அன்று கேள்விப் பட்டியல் அனுப்பப்பட்டது.

ஏப்ரல் முதல் தினத்தன்று அனுப்பப்பட்ட கேள்விப்பட்டியலுக்கு, 15-05-2008வரை பதில் வராத நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருக்கு மேல்முறையீட்டு மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து 26-05-2008 அன்று பதில் அனுப்பினார்கள்.
நமது கேள்விகளும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பதில்களும்...

கேள்வி 1: அண்ணா பல்கலைக் கழகத்தில் எத்தனை ஆசிரியர்களும், ஆசிரியரல்லாத பணியாளர்களும் பணி புரிகின்றனர்?

பதில் :
பேராசிரியர்கள் - 115, துணைப் பேராசிரியர்கள் – 137, விரிவுரையாளர்கள் – 220
அமைச்சுப்பணியாளர்கள் – 297, தினக்கூலி அடிப்படையில் – 260, தொகுப்பூதியம் அடிப்படையில் – 52.

தொழில்நுட்ப பணியாளர்கள் – 661, தினக்கூலி அடிப்படையில் – 4.

(கேள்வியைவிட கூடுதல் தகவல்கள் தரப்பட்டுள்ளன)

கேள்வி 2: முழு நேரம் மற்றும் பகுதி நேர அடிப்படையில் எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அவர்கள் எந்த அடிப்படையில் (நிரந்தரம்/ஒப்பந்தம்/தினக்கூலி) பணியமர்த்தப்பட்டனர்?

பதில்: 1 துணைப் பேராசிரியரும், 100 விரிவுரையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிகின்றனர். மேலும் 40 பேர் விசிட்டிங் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர்.

அமைச்சுப் பணியாளர் பணியிடங்களில் 177 நிரப்பப்படாமல் உள்ளது.
தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களில் 361 நிரப்பப்படாமல் உள்ளது.

(கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை. நிரந்தர ஆசிரியர்கள் குறித்த தகவலோ, நிரந்தர ஆசிரியரல்லாத பணியாளர்கள் குறித்த தகவலோ இல்லை)

கேள்வி 3: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எத்தனை பேர் பணி புரிகின்றனர்? அவர்கள் பணியமர்த்தப்பட்ட தன்மையை (நிரந்தரம்/ஒப்பந்தம்/தினக்கூலி) கூறவும்?

பதில்: பொருந்தாது.
(கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை.)

கேள்வி 4: அண்ணா பல்கலைத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் எவ்வளவு?

பதில்: 128 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

( இந்த கேள்விக்கான பதிலின் சில பகுதிகள் 2ம் கேள்விக்கான பதிலில் இடம் பெற்றுள்ளன. அதை நீங்கள்தான் தேடிப்படித்து புரிந்து கொள்ள வேண்டும்)

கேள்வி 5: இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை தரவும்?

பதில்: (பதில் அளிக்கப்படவில்லை)

(சமூக நீதிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை போலுள்ளது. மாணவர்கள் தேர்வில் சில கேள்விகளை Choice-ல் விடுவது போல பல்கலைக்கழகம் இந்த கேள்வியை தவிர்த்துள்ளது)

கேள்வி 6: தொழிலாளர் நலத்திட்டங்களான சேமநலநிதி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டங்களின்கீழ் எத்தனை ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் பயன்பெறுகின்றனர்?

பதில்:
1-4-2003க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பொதுசேமநல நிதி மற்றும் ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள். அந்த தேதிக்கு பின் சேர்ந்தவர்கள் பொதுசேமநலநிதி திட்டத்தில் பயன்பெறும் தகுதி அற்றவர்கள்.

(பல்கலைக் கழகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிக்கை தெரியாது போலிருக்கிறது.)

கேள்வி 7: ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களில் சிலர் பொது சேமநல நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி போன்ற திட்டங்களில் பயன் பெறுவதிலிருந்து விலக்கப்பட்டிருந்தால் எந்த சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் விலக்கப்பட்டனர்?

பதில்: 01-04-2003க்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்கள் பங்கீட்டு ஒய்வூதிய திட்ட(Contributory Pension Scheme)த்திற்கு மட்டுமே தகுதி பெற்றவர்கள்.

(கேள்வியை படித்து புரிந்து கொள்ளவோ அல்லது உரியமுறையில் பதில் அளிக்கவோ தேவையான கல்வித்தகுதி பொதுத்தகவல் அதிகாரிக்கு இல்லை என்பது புரிகிறது)

கேள்வி 8: ஆசிரியர்களில் எவருக்கேனும் பல்கலைமானியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லையாயின், அவர்களுக்கு சேமநலநிதி திட்டம் பொருந்துமா?

பதில்:
அனைத்து ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆசிரியரல்லாத அமைச்சுப்பணியாளர்களுக்கு மாநில அரசு ஊதிய விகிதங்களின் கீழ் ஊதியம் வழங்கப்படுகிறது.

(நிரந்தர பணியாளர்களுக்கு அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படலாம். ஆனால் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுவோருக்கு எந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை.)


பல்லாயிரம் மாணவர்களின் எதிர்காலத்தையும், அதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் ஒரு முக்கிய பல்கலைக்கழகத்தின் செயல்பாடு இந்த அளவில்தான் உள்ளது.


மேலும் விளக்கம் கேட்டு மீண்டும் ஒரு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு வரும் பதில்களும் வெளியிடப்படும்.
-சுந்தரராஜன்