Sunday, July 31, 2016

தமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்

தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துகளை பதிவு செய்கிறார். 



தற்சமயம் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, ஆர்.கே.ஆனந்தின் தீர்ப்பின் வெளிச்சத்தில் பரிசீலிப்போம். உயர் பதவிகளில் உள்ளவர்களும், இருந்தவர்களும், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்களும் கடும் குற்றம் புரிந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; இது என் கருத்து. ஆனால், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்கள் தண்டிக்கப்படுகின்றனரா? : சாட்சியை விலை கொடுத்து வாங்கிய ஆர்.கே.ஆனந்த் கடந்த, 1999 ஜன., 1ம் தேதி, டில்லியில் பெரும் செல்வந்தரின் மகன் சஞ்சீவ் நந்தா என்பவர், பி.எம்.டபிள்யூ., காரை கவனக்குறைவாகவும், அதி வேகமாகவும் ஓட்டி விபத்தை நிகழ்த்தினார். அதில், ஆறு பேர் உயிர் இழந்தனர்; ஆறு பேரில், மூவர் காவல்துறையினர். விபத்தை நிகழ்த்திய பின் நிற்காமல் சென்றுவிட்டார். அவர் காரை ஓட்டியபோது, மதுவும் அருந்தி இருந்தார் என்பது காவல்துறையின் வழக்கு. குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. குற்றவியல் நீதிமன்றத்தில், சஞ்சீவ் நந்தாவின் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த்; அரசு தரப்பு வழக்கறிஞர் ஐ.யு.கான். இந்த நிலையில், வழக்கின் நேரடி சாட்சியான சுனில் குல்கர்னியுடன் மேற்சொன்ன ஆர்.கே.ஆனந்த் மற்றும் ஐ.யு.கான் சந்தித்து, சாட்சியை பெரும் தொகை கொடுத்து வாங்குவது என்ற நிகழ்ச்சியை, 'என்டிடிவி' சேனல், 2007 மே, 30ம் தேதி ஒளிபரப்பியது. இது டில்லியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. அந்த சேனல் இப்படி ஒரு முறைகேட்டை ஒளிபரப்பாமல் இருந்திருந்தால், இது வெளி உலகத்தின் மற்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கே வந்திருக்காது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : இந்த நிலையில், டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் மற்றும், இருவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. உயர் நீதிமன்றத்தின், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. இதை எதிர் கொண்ட ஆர்.கே.ஆனந்த், பல இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தார்; அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த விபரங்களுக்குள் நான் செல்லவில்லை.

அவர் எழுப்பிய, ஒரு முதல் நிலை எழு வினா பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவர், 'என்டிடிவி -தான் குற்றவியல் விசாரணையில் தலையிடும் வகையில் ஒளிபரப்பு செய்தது; எனவே, அதன் மீது தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்' என்று ஆட்சேபனையை எழுப்பினார்; அந்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆர்.கே.ஆனந்திற்கு வழங்கப்பட்ட தண்டனை : அவர் சாட்சியை விலை பேசிய தன் மூலம், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட்டு நீதிமன்ற மாட்சிமையை குலைத்து அவமதிப்பு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதாக, 2008 ஆக., 21ல், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது; அவருக்கு கீழ்கண்ட தண்டனைகளை விதித்தது.

1) டில்லி உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும், நான்கு மாதங்களுக்கு அவர் வழக்கறிஞர் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அவர் மற்ற வழக்கறிஞர் வேலைகளை, - ஆலோசனை, அறிவுரை, விளக்கவுரை, கருத்துகளாகச் செய்யலாம்.
2) மூத்த வழக்கறிஞர் பதவி பறிக்கப்பட்டது.
3) 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஆர்.கே. ஆனந்தின் மேல்முறையீடு : இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை, 2009 ஜூலை, 29ல் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்று கூறி, 'அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது?' என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவிப்பு அனுப்பியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்ய, 'அமீக்கஸ் க்யூரி'யாக, இரு வழக்கறிஞர்களை நியமித்தது. அவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம் மற்றும் நாகேஸ்வர ராவ். அதன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: உயர் நீதிமன்றத்தின், இருவர் அமர்வின் மூத்த நீதிபதி, தன் வழக்கை விசாரிக்கக்கூடாது என்றும், வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். அமர்வுக்கு தலைமை தாங்கிய அந்த நீதிபதியின் மேல் கடும் குற்றச்சாட்டுகளை கூறினார். அவரது மனு, நீதிபதியை மிரட்டுவதாக இருந்தது. அந்த மனு, தலைமை தாங்கிய மூத்த நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

நீதிபதியின் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், மற்றொரு நீதிபதி மனுவின் மீது எந்த உத்தரவும் போடவில்லை. ஆனால், அமர்வில் எந்த பங்கும் வகிக்க மறுத்து விட்டார். இதை பயன்படுத்தி, மேற்சொன்ன உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். தலைமை நீதிபதி, அமர்வின் இளைய நீதிபதியை மாற்றி மற்றொரு இளைய நீதிபதியை கொண்ட அமர்வை ஏற்படுத்தினார். 'பழைய அமர்வே மறுபரிசீலனை மனுவை விசாரிக்க வேண்டும்' என்று ஆர்.கே.ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
புதிய அமர்வு, மறுபரிசீலனை மனுவை, தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை, அமர்வின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைய நீதிபதி, உத்தரவு எழுதினார். அதற்குப்பின் அந்த வழக்கின் முக்கிய உத்தரவுகள் அனைத்தையும் இளைய நீதிபதியே எழுதினார்.

இறுதியில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை 29ல் தள்ளுபடி செய்கையில், ஆர்.கே.ஆனந்திற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்றும், அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது என்பதற்கும், நான்கு மாதங்களுக்கும் மேலாக, நீண்ட காலத்திற்கு வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க கோரியது.

ஆர்.கே.ஆனந்திற்கு அதிக தண்டனை அளிக்கப்பட்டதா? : கடந்த, 2010 ஜன., 13ல் அவர், உச்ச நீதிமன்றத்தில் அவரது விளக்கத்தை அளித்தார். அதில், அவர் மன்னிப்பு கோரியும், நடவடிக்கையை கைவிடுமாறும் கோரினார். அந்த விளக்கத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த தவறுக்கு அவர் வருந்தியதாக தெரியவில்லை என்றது. இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியவுடன், 2011 மே 4ல், கூடுதல் ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை, 29ல் தீர்ப்பில் கூறிய அனைத்தையும் ஒப்புக்கொள்வதாகவும், முந்தைய விளக்கத்தில் கூறிய ஆட்சேபகரமான பகுதியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.

பின், 2012 செப்., 24ல் மேலும், ஒரு ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், அவர் இந்திய பார் கவுன்சிலுக்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்க ஒப்புக் கொள்வதாகவும், ஒரு ஆண்டுக்கு டில்லி இலவச சட்ட மையத்தில் ஏழைகளுக்காக வழக்கு நடத்த ஒப்புக் கொள்வதாகவும், 'இந்த ஓராண்டில், வழக்கறிஞர் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டேன்' என்றும் கூறி இருந்தார். அவர் செய்த கடும் குற்றத்திற்கு சிறை தண்டனை தான் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை பதிவு செய்தாலும், அதிக தண்டனை வழங்கவில்லை.

அவருக்கு, 69 வயது ஆவதாக வும், அவர், 2007 முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவதாகவும், அவரது மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், 21 லட்சம் ரூபாய் பார் கவுன்சிலுக்கு நன்கொடை அளிப்பதையும், ஓர் ஆண்டு இலவச சட்ட உதவி மைய வழக்குகளை நடத்த ஒப்புக் கொள்வதையும் அதிக தண்டனை வழங்காத தற்கு காரணங்களாக அடுக்கியது. இறுதியில், 2012 நவ., 2012ல் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு கூறியது.

ஆர்.கே.ஆனந்திற்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை என்பது, ஒரு பொருட்டே அல்ல. அவர், 21 கோடி ரூபாய் கொடுத்தால் சிறை தண்டனையில் இருந்து விடுபடலாம் என்றால், அதையும் கொடுக்கும் வசதி படைத்தவர். ஆனால், சாதாரண வழக்கறிஞர்கள் என்ன செய்வது? இப்படி, ஒரு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்து, தண்டனையில் இருந்து சுலபமாக தப்பிக்க இயலுமா? விசாரணைக்குப் பின் தண்டனை என்பதற்கு மாறாக, விசாரணையை நிலுவையில் வைத்தே பல மாதங்கள் தமிழக வழக்கறிஞர்களை தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாமா? ஆறு மாதங்களுக்கும் மேலாக, ஒன்பது மாதங்கள் வரையில் கூட வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தமிழக வழக்கறிஞர்கள் செய்த தவறுகள், ஆர்.கே.ஆனந்த் செய்த தவறுகளை விட கூடுதலானதா? ஆர்.கே.ஆனந்த் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டப் பிரிவு - 34ன் கீழ் விதி ஏதும் செய்யவில்லை. எனவே, ஆர்.கே.ஆனந்த் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனையாக, 'சஸ்பென்ஷன்' அல்லது வழக்கறிஞர் பதிவில் இருந்து நீக்கம் என்ற தண்டனையை அளிக்க முடியாது என்று வாதிடப்பட்டது.

அந்த வாதத்தை, உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் உதவி செய்ய நியமித்த, இரு மூத்த வழக்கறிஞர்களும் ஆதரித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் இதற்கு முன் வழங்கிய தீர்ப்பில், 'சஸ்பென்ஷன் மற்றும் பதிவில் இருந்து நீக்கம் என்பதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையாக அளிக்க முடியாது' என்று கூறி இருப்பதை, தீர்ப்பின் பத்தி - 138ல், கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளது. இந்த சூழலில், உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்களையும் வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை உண்டாக்கச் சொன்னது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் நபரை, அவர் நீதிமன்றத்தில் வழக்காடுவதில் இருந்து விலக்கி வைக்க வகை செய்துள்ளது. எனவே, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய விதிகள் தேவையற்றவை. இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை உண்டாக்குவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கைத் தான் சுட்டிக் காட்டுகிறது. ஏற்கனவே உரிய விதிகள் இருப்பதால் இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது என் கருத்து. பார் கவுன்சிலும், ஒழுங்கு நடவடிக்கையை ஒட்டி நடைபெறும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, சஸ்பென்ஷனோ அல்லது பதிவு நீக்கமோ செய்யலாமே ஒழிய, விசாரணை நிலுவையில் இருக்கும்போது செய்ய முடியாது.

இதை, இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மன்னன் குமார் மிஸ்ராவே, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆணை உறுதி உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், நான் ஓய்வு பெற்றபோது ஆற்றிய உரையில், 'பார் கவுன்சில் சஸ்பென்ஷனை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்' என்றேன்.

மேலும், ஆர்.கே.ஆனந்த் வழக்கில், உச்ச நீதிமன்றம், 'நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, பார்கவுன்சில் சஸ்பென்ஷன் செய்ய இயலும்' என்றது. இத்தீர்ப்பின் பத்தி - 138ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், பத்தி - 136ல், நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் (இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி) வாதத்தை உச்ச நீதிமன்றம் கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளது.எனவே, பார் கவுன்சிலுக்கு விசாரணையை நிலுவையில் வைத்து சஸ்பென்ஷன் செய்யும் அதிகாரம் இல்லை. 'பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வன்முறை செய்த வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் சஸ்பென்ஷன் செய்ய மாட்டேன்' என்று கூறும் மன்னன் குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மேல் மட்டும் சீறி பாய்வதேன்? சமீபத்தில், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கோல்கட்டாவிலும் வழக்கறிஞர்கள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய போது, அவர் இன்று வரை மவுனமாக இருப்பது ஏன்; தமிழகத்தில் மட்டும் வேறுபட்ட நிலைப்பாட்டை அவர் கொள்வதற்கு காரணம் என்ன?

கடுமையான குற்றம் இழைத்த, ஆர்.கே.ஆனந்திற்கு சிறை தண்டனை இல்லை. அவர் மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்தார். ஆனால் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் நிலை என்ன? உயர் நீதிமன்றத்தின், முதலாவது அமர்வு முன், தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும் என்று அமைதியான முறையில் பதாகையை துாக்கிப் பிடித்தாலும், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாக தான் கொள்ள வேண்டும். ஆனால், அந்த அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதும் தொடரவில்லை. ஆனால் அவர்கள், ஒரு மாதம் சிறையில் இருந்தனர். அவர்களை, ஏழு மாதம் சஸ்பென்ஷனில் வைத்தது பார் கவுன்சில்; அதையே தண்டனையாகவும் அளித்தது. அதேபோல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்த நீதிமன்றத்தில் விசாரணையை பார்க்க செல்ல அனுமதிக்க வேண்டும் என்றதற்காக, பல வழக்கறிஞர்களை பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்தது. அவர்களில் சிலரின் சஸ்பென்ஷன், ஒன்பது மாதங்களுக்கு மேலாகி யும், இன்னும் தொடர்கிறது. சி.ஐ.எஸ்.எப்., சம்பந்தப்பட்ட வழக்கிலும், பல வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலால் விசாரணை இன்றி, பல மாதங்கள் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த இறுதி பகுதியை வெளியிடும் நேரத்தில், 105 தமிழக வழக்கறிஞர் தலைவர்களை, இந்திய பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்துள்ளதாக, ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதை, மன்னன் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது. மன்னன் குமார் மிஸ்ரா தமிழக வழக்கறிஞர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏனோ? இதற்கு பின்புலமாக யார் இருக்கின்றனர் என்பதை தமிழக வழக்கறிஞர்கள் அறிவர்.

உயர் நீதிமன்றம் புதிய விதிகளை உடனே திரும்ப பெறவேண்டும்; பார் கவுன்சில் அனைத்து சஸ்பென்ஷன்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும். இதுவே நிரந்தர அமைதிக்கான தீர்வாக இருக்கும்.

வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் யார்? 

உச்சநீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி, இன்று தமிழகத்தில் வழக்கறிஞர் மத்தியில் பேசப்படுகிறது. எனவே, அத்தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பது அவசியம்; காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் வழக்கறிஞர்களின் தற்காலிக பணி நீக்கத்தையும், உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிகளையும், அத்தீர்ப்பின் அடிப்படையில் பரிசீலிக்கலாம். மேற்சொன்ன தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பதற்கு முன், யார் இந்த ஆர்.கே.ஆனந்த் என்ற சிறு விபரத்தை தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும்.

ஆர்.கே.ஆனந்த், டில்லியில் மிக பிரபலமான மூத்த வழக்கறிஞர். மூன்று, இந்திய பிரதமர்கள் அவருக்கு கட்சிக்காரர்கள். அவர்களின் வழக்குகளை நடத்தி வெற்றி பெற்றவர்.

இந்திரா, பிரதமராக இருந்த போது, அவரது மகன் சஞ்சய், 1980-ல், விமான விபத்தில் இறந்தார். அவர் மனைவி மேனகா, நீதிமன்றம் மூலமாக, சஞ்சயின் உயிலின் அடிப்படையில் சொத்து உரிமை கோரினார். அதை எதிர்த்து, இந்திராவுக்காக, டில்லி உயர்நீதிமன்றம் வரை வெற்றிகரமாக வழக்காடியவர் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த். இந்திராவுக்கு உயில் எழுதிய வழக்கறிஞரும் அவரே. இந்திரா, 1984ல் பிரதமராக இருந்தபோது கொல்லப்பட்டார்; ராஜிவ் பிரதமர் ஆனார். அந்த உயிலின் அடிப்படையில் ராஜிவுக்காக வழக்கு நடத்தியவரும் ஆர்.கே.ஆனந்த் தான்.

அடுத்து, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், மூன்று ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டபோது, அவருக்கு விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வெற்றி பெற்று தந்தவரும், ஆர்.கே.ஆனந்த் தான். இந்திரா கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்கள் மேல் நடந்த வன்முறை தாக்குதல் பற்றி அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா விசாரணை கமிஷன் முன், மத்திய அரசுக்காக ஆஜரான வழக்கறிஞரும் இவரே. மேற்சொன்ன விபரங்கள், ஆர்.கே.ஆனந்த் பிரபல மூத்த வழக்கறிஞராக இருந்தவர் என்பதை தெளிவாக்கும்.

பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் தலைவர் மேலும், அவர் டில்லி பார் கவுன்சில் உறுப்பினராக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். இருமுறை, அதன் தலைவராகவும் இருந்தார்.

அரசியல் செல்வாக்கு அவர் மிகுந்த அரசியல் செல்வாக்கும் உடையவர். 2000 மார்ச் மாதம், ராஜ்யசபாவிற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்துஎடுக்கப்பட்டார்.

கடந்த 2004-, லோக்சபா தேர்தலில், டில்லி தெற்கு தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு தோற்றார். மீண்டும், 2014- தேர்தலில் பாரிதாபாத் லோக்சபா தொகுதியில், இந்திய தேசிய லோக்தளத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். கடந்த ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும் காங்., ஆதரவுடன் அரியானா மாநிலத்தில் போட்டியிட்டார். காங்., கலக சட்டசபை உறுப்பினர்கள், அவருக்கு ஓட்டு போடாததால் தோற்றுப் போனார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, ஆர்.கே.ஆனந்த் பேரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அவர் அதை மறுத்து வழக்காடினார். அவர் கடுமையான குற்றம் புரிந்தார் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தது; அவருக்கு தண்டனையும் அளித்தது. அதை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவானது என்றும், அதிக தண்டனையை ஏன் வழங்கக்கூடாது என்று காரணம் காட்டுமாறு அறிவிப்பு அளித்தது. ஆனால், அதிக தண்டனை அளிக்கப்படவில்லை.அவர் செய்த கடும் குற்றம் என்ன, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன, உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்த தீர்ப்பு என்ன, அவர் அவமதிப்பு வழக்கிலும், மேல்முறையீட்டு வழக்கிலும் நடந்துகொண்ட முறை என்ன போன்ற விபரங்களை பிரதான செய்தியில் படிக்கவும்.


அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற நீதிபதி
இ - மெயில்: hariparanthaman@gmail.com

தினமலர் நாளிதழில் 27-07-2016 அன்று வெளியான கட்டுரை

Sunday, July 24, 2016

"ஓங்கி ஒலித்த சமூக நீதிக்கான குரல்"

"நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால், பகவத்கீதையையும், மகாபாரதத்தையும்  முதலாம் வகுப்பு பாடத்தில் சேர்த்து விடுவேன்" என்று கடந்த 2015 ஜனவரி மாதம், குஜராத்தில் நடந்த உலகளாவிய கருத்தரங்கில் பேசினார் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி அணில் ஆர். தவே. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படையில் இயங்கிகொண்டிருக்கும் நாட்டில் அது சாத்தியமல்ல என்று தைரியமாகப் பேசிய ஒரே நீதிபதி ஹரி பரந்தாமன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு அல்ல என்பது நீதித்துறையோடு பரிச்சயம் உள்ளவர்களுக்கு எளிதில் விளங்கும்.

நீதிபதி ஹரி பரந்தாமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்து கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, சமூக நீதி சார்ந்த அவரது பல்வேறு தீர்ப்புகளில், எட்டு தீர்ப்புகளை மட்டும் தொகுத்து, "People's Judge D.Hariparanthaman's Judgments on Social Justice" என்ற புத்தகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ளது மதுரையிலுள்ள சோகோ அறக்கட்டளை.


சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்து வழங்கியவைகளில் ஐந்தும், மதுரை கிளையில் வைத்து  வழங்கியவைகளில் மூன்று தீர்ப்புகளும், அவர் நீதிபதியாக பொறுப்பேற்கும் போதும்,  பணி ஓய்வின்போதும் ஆற்றிய உரைகளும் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எட்டு தீர்ப்புகளும் எட்டு விதமானவை. அவைகளுக்குள் இருக்கும் ஒரே தொடர்பு அவைகள் அனைத்தும் சமூக நீதி  அடிப்படையில் வழங்கப்பட்டவை என்பது மட்டுமே.

பிற்படுத்தப்பட்ட நாடார் சாதியைச் சேர்ந்த விசாலாட்சி இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார். தனது பெயரை ஆரிஃபா என மாற்றிக்கொள்கிறார். அதன்பிறகு அரசு பணிக்கு விண்ணப்பிக்கிறார். மதம் மாறிவிட்டதால் அவர் முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக கருதப்படுவார் என்று அதிகாரிகள் கூறியதால், அவருக்கு பணியில் சேர வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அது தொடர்பான வழக்கில், பிற்படுத்தப்பட்ட ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகும் அவர் பிற்படுத்தப்பட்டவராகவே தொடர்வார் என்று தீர்ப்பளிக்கிறார்.

மாட்டுக்கறிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம். டாக்டர் அம்பேத்கர் அவர்களது 125வது பிறந்த நாளை மையப்படுத்தி, சென்னை பெரியார் திடலில், 2015 ஏப்ரல் மாதம் 14ம் நாளில், திராவிடர் கழகம், "தானாக மனமுவந்து தாலியை அகற்றும் விழா" நடத்தத் திட்டமிட்டு, அதனைத்தொடர்ந்து மாட்டுக்கறி விருந்தும் ஏற்பாடு செய்தது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இவ்வழக்கில், முன்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை சுட்டிக் காட்டி, தனியார் இடத்தில் நடத்தப்படும் நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுக்க முடியாது என்று தீர்ப்பளிக்கிறார்.

ஓய்வூதியம் வழங்கிட, 01.04.2003க்கு முன்பு தினக்கூலியாக பணியாற்றிய காலத்தில் பாதியை, பணிநிரந்தரம் செய்யப்பட்ட காலத்துடன் சேர்த்து கணக்கிட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42 விழுக்காடு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதால் பட்டியலின மாணவர் மாறன் என்பவருக்கு சென்னை, திருவிதாங்கூர்  வங்கியால் கல்விக் கடன் உதவித்தொகை மறுக்கப்படுகிறது. குறைந்தபட்ச மதிப்பெண் குறித்து எங்கும் சொல்லப்படவில்லை. ஆகவே, தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என்று கூறி அவருக்கு கல்விக் கடன் உதவி வழங்கிட உத்தரவிடுகிறார்.

க்ளோரிபாய் என்பவர், சாலை விபத்தில் இறந்து போன தனது திருமணமான மகளை இழந்தமைக்காக  இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கில், திருமணம் செய்து கொடுத்த பிறகும் ஒரு பெண்ணின் பெற்றோர் அவரது இறப்புக்காக இழப்பீடு பெற முடியும் என்று உத்தரவு இட்டுள்ளார்.

திருமணமான கோவிந்தம்மாள் தனது தந்தையின் மறைவிற்கு பிறகு, கருணை அடிப்படையில் பணி கோருகிறார். திருமணம் ஆகிவிட்டது என்று கூறி அவருக்கு பணி மறுக்கப்படுகிறது. திருமணமான பெண்ணும் கருணை அடிப்படையில் பணி கோரலாம் என்றும் அதற்குத் தடையாக இருந்த அரசாணையில் மாற்றம் கொண்டுவரவும் தீர்ப்பிட்டுள்ளார்.

தான் பணிபுரியும் பாரத ஸ்டேட் வங்கியில் டாக்டர் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதால் பணிநீக்கம் செய்யப்படுகிறார் கடைநிலை ஊழியரான கௌரிசங்கர். அவரது பணிநீக்க உத்தரவினை ரத்து செய்து இரு நீதிபதிகள் அடங்கிய ஆயத்தில் உத்தரவிடுகிறார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த சுதா என்பவது சகோதரர் முத்துகுமார் பட்டியலினம் சாராத நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அது தொடர்பான வழக்கில், பட்டியலின மக்களை, பட்டியலினம் சாராதவர்கள் கொலை செய்யும் பட்சத்தில், சட்டத்தில்  வரையறுத்துள்ள படி பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என தீர்ப்பிட்டுள்ளார்.

இதுபோன்று அரசியலமைப்பு சாசனத்தின் படியான சிறுபான்மையினர் உரிமை, பெண்ணுரிமை, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமையை தொடர்ந்து உறுதிபடுத்தியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் அவர்களை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனது தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி, அவரது கருத்துகளை பரவலாக்க வழிவகுத்துள்ளார்..

பொதுவாக அவ்வப்போது வெளிவரும் சிறுகதை, கவிதை, கட்டுரை, பின்னர் தொகுக்கப்பட்டு ஒரு தொகுப்பாக வெளிவரும் போது அது புதிய உணர்வுகளை தரும். அப்போது அதன் மொத்த பரிணாமத்தையும் ஒருசேர உணர முடியும்.  நான் வழக்குரைஞராக இருப்பதால் இதில் இடம்பெற்றுள்ள தீர்ப்புகளை முன்னரே அறிந்திருந்த போதிலும், இப்படி மொத்தமாக ஒரே தொகுப்பாக பார்க்கும் போது இந்த தீர்ப்புகளின் வீச்சு அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.

விதிவிலக்கான சூழல்கள் தவிர்த்து, பொதுவாக மனுதாரர்களுக்காக வழக்குரைஞர்கள் தாக்கல் செய்து தன் முன்பாக வரும் வழக்குகளை மட்டுமே ஒரு நீதிபதி விசாரித்து அது குறித்து தீர்ப்பு கூற முடியும். வழக்கறிஞர்களுக்கு, தாங்கள் முன்னெடுக்கும் வழக்குகளைத் தேர்வு செய்வதில் உள்ள வாய்ப்பு, அவ்வளவாக நீதிபதிகளுக்கு இருப்பதில்லை. இருப்பினும், தன் முன் வந்த வழக்கின் பிரமாண பத்திரத்திற்குள் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், தன்னளவில் விரிவாக விவரித்து தீர்ப்பிட்டுள்ளார். அவைகள் அனைத்தும் சமூக நீதி பார்வையில் அமைந்துள்ளது என்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பான கருத்துகளை வெளிப்படுத்திய அணில் ஆர் தவே மற்றும் இட ஒதுக்கீட்டை ஊழலுக்கு இணையாக ஒப்பிட்ட நீதிபதிகள் இருக்கும் இதே நாட்டில் தான், இவரால் இப்படிப்பட்ட தீர்ப்புகளை தைரியமாக தர முடிகிறது.

மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்து, ஆசிரியர் ஆவதை விருப்பமாகக் கொண்டு பின்பு நண்பர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞராகி, அதன் பின்பு உயர் நீதிமன்ற நீதிபதியானதை தனது பதவி ஏற்ப்பு நிகழ்வின்போது பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார். பணி ஓய்வு பெறும்போது, அநியாயமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்களுக்காக குரல் கொடுத்துள்ளார். இப்படியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஓங்கி ஒலித்துள்ளது இவரது குரல்.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு வேட்டி கட்டிச் சென்று, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேட்டி கட்டி செல்லலாம் என  சட்டம் வருவதற்குக் காரணமாக இருந்தவர்.  உயர் நீதித்துறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் என வெளிப்படையாக பல்வேறு கருத்தரங்குகளில், நீதிபதியாக பொறுப்பில் இருக்கும் பொழுதே, பேசி வந்தவர். காந்தி பிறந்த நாளில், கோட்சேவிற்கு சிலை அமைக்க வேண்டுமென்ற இந்து மகா சபையின் கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர். மதுவிலக்கிற்கு ஆதரவாகவும், மாட்டுகறி உண்பதற்கான தடைக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். இப்படியாக, தீர்ப்புகளில் மட்டுமல்லாது தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது வாழ்விலும் வாழ்ந்து காட்டுகிறார்.

இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தீர்ப்பிற்கும் முன்பாக,  தமிழில் சிறிய முன்னுரை வழங்கியதை, முழுமையாக்கி முழுவதுமாகவோ அல்லது தீர்ப்புகளின் சாராம்சத்தை மட்டுமாகவோ தொகுத்து தமிழில் வெளியிட்டிருந்தால் ஆங்கில மொழியில் புலமை இல்லாத சாமானியர்களையும் இந்த தீர்ப்புகள் சென்றடைய வாய்ப்பு கிட்டியிருக்கும்.  


வெளியீடு: 
சோகோ அறக்கட்டளை, 143, 
ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், 
மதுரை-  625020.
தொடர்புக்கு: 0452- 2580636

விலை: ரூ. 250.00  சலுகை விலை: ரூ. 125.00 மட்டுமே
-இராபர்ட் சந்திர குமார்.