Monday, February 18, 2008

60% எடு - இல்லை கல்வியை விடு...!

இந்திய அரசின் சமூகநீதித் துறை செப்டம்பர் 24, 2007 அன்று - இந்தியா முழுவதும் உள்ள பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் தலித் மாணவர்கள் (+2) மேல்நிலை இரண்டாம் ஆண்டு வகுப்பின் இறுதித் தேர்வில் 60 சதவிகிதம் மதிப்பெண் எடுத்திருந்தால்தான் – மத்திய அரசின் உயர் கல்விக்கான (போஸ்ட் மெட்ரிக்) கல்வி உதவித் தொகையைப் பெற முடியும் என்று ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது.



இந்த அரசாணை முற்றிலும் தலித் விரோதமானது. மேலோட்டமாகப் பார்த்தால் - தலித் மாணவர்கள் நன்கு படிக்கவும், அறுபது சதவிகிதத்திற்கும் கூடுதலாக மதிப்பெண் பெற ஊக்குவிக்கிற, கட்டாயப்படுத்துகிற முயற்சிபோல இது தோற்றமளிக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. நூறுகோடி மக்களைக் கொண்ட நாட்டில், பல்வேறு சாதி, மத, பொருளாதார, புவியியல், தலைமுறை ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிற இந்தியாவில்/தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் - 60 சதவிகிதம் மதிப்பெண் பெறுவது என்பது எங்கும், எப்போதும் நடைமுறை சாத்தியமற்ற எதிர்பார்ப்பாகும்.
.
ஒருவேளை மிகப்பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள், குறைந்த அளவு 60 சதவிகிதத்திலிருந்து உச்சபட்ச அளவான 100 சதவிகிதம் வரை மதிப்பெண் எடுப்பார்களானால், அப்போதும் இந்த அரசு கல்வி உதவித் தொகையை எல்லோருக்கும் வழங்கிவிடாது. இன்று 60 சதவிகிதம் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை, ஒருவேளை 70 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் மதிப்பெண்ணைக் கோரி நிபந்தனையை மாற்றியமைக்கவே செய்யும்.

எல்லோரும் ஒரே மாதிரி மதிப்பெண் எடுக்கும் நிலைமை இருக்குமானால், நமது தேர்வு முறையிலேயே மிகப்பெரிய தவறு இருப்பதாகவே பொருள். 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதத்திற்குள் மதிப்பெண் எடுக்கிறவர்கள் தகுதி, திறமை குறைந்த நேர்மையற்றவர்கள் (அயோக்கியர்கள்) என்பதற்கோ, 60 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை மதிப்பெண் எடுக்கிறவர்கள் தகுதி, திறமை மிகுந்த நேர்மையாளர்கள் (யோக்கியர்கள்) என்பதற்கோ, நம்மிடம் எந்தவிதமான அளவுகோல்களோ, முன்னுதாரணங்களோ இல்லை.
.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே உயர் கல்வி படிப்போருக்கான கல்வி உதவித் தொகை அளிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. தலித் மக்கள் மிகப் பரவலாக படிக்கத் தொடங்கிய 1960களுக்குப் பிறகு, அக்கால இண்டர்மீடியட், புதுமுக வகுப்புகளில் 40 சதவிகிதம் முதல் 60 சதவிகிதத்திற்குள் மதிப்பெண் எடுத்த மாணவர்கள்தான் – கடந்த காலங்களில் பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களாக விளங்கினார்கள். தலித்துகளிலிருந்து உயர் பொறுப்புக்கு வந்த அத்தகைய அறிவுத்துறை, தொழில்நுட்பத் துறையினரிடம் இந்த ஆட்சியாளர்கள் கண்ட நிர்வாகக் குறைபாடு என்று எதையேனும் சுட்டிக் காட்ட முடியுமா?

அன்றைய நிலவரத்தைவிட, இன்றைக்கு தலித்துகளில் உயர் கல்வி படிக்க வந்துள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது தேச விரோதச் செயலா? தலித்துகள் இன்றும், இன்னும் இந்திய அளவில் விவசாயக் கூலிகளாகவும், சிறு, குறு விவசாயிகளாகவும், அரசு ஊழியர்களாகவும், தனியார் துறையில் கடைநிலைப் பணியாளர்களாகவும் தானே இருந்து வருகின்றனர். வணிகம், தொழில் துறை, தொழில்நுட்பத் துறைகளின் சொந்த முதலீட்டாளர்களாகவோ, பங்குதாரர்களாகவோ, வளர்ந்திடும் வாய்ப்புகள் உருவாகிவிடவில்லையே!
.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிட்டால், தலித்துகளில் உயர் கல்விக்கு வருவோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒரு புள்ளி விவரத்தின்படி, தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 70,000 தலித் மாணவர்கள் +2 வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார்கள். இவர்களில் அய்.டி.அய். பாலிடெக்னிக், கலை, அறிவியல், மொழி, பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட எல்லா படிப்புகளிலுமே சேருவோர் எண்ணிக்கை சுமார் 15,000 முதல் 20,000–க்குள் தான் வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 50,000 தலித் மாணவர்கள் உயர்கல்விக்கான வாய்ப்பை எட்ட முடியாமல் தேங்கிக் கிடக்கின்றனர்.

இது தவிர, 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் +2 வகுப்பில் அல்லது பாலிடெக்னிக் படிப்புக்குச் செல்ல முடியாதவர்கள், 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலான தலித் இளைஞர்களின் எதிர்காலமே இருண்டுதான் கிடக்கிறது.
.
மனிதவளத்தை மேம்படுத்துவது பற்றியும், மனிதவள ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கச் செய்ய வேண்டும் என்றும் பேசும் அரசியல்வாதிகள், அறிஞர்கள், பல தலைமுறைகளாக வஞ்சிக்கப்பட்டு வரும் தலித் சமூகத்தில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மாணவப் பருவ இளைஞர்களின் எதிர்காலம் குறித்து எள்ளளவும் கவலைப்படுவதில்லை. அவர்களது கவலையெல்லாம் மலிவான திட்டங்கள் மூலம் வாக்கு வங்கியை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பது மட்டுமே! இந்நிலையில் தான் மய்ய அரசின் சமூக நீதித்துறை அமைச்சகம், உயர்கல்வி பயிலும் தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தலித் மாணவர்களுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளது.
.
அதாவது, தொழில் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்களில் இனிமேல் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகையை வழங்க முடியும்; நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. இது மட்டுமின்றி, அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கிற மாணவர்களும் கூட, அவர்கள் தனியார் கல்லூரிகளில் படிப்பவர்களானால் +2 தேர்வில் 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருந்தால்தான் கல்வி உதவித் தொகை பெற முடியும் என்று அக்கடிதம் கூறுகிறது : Govt. of India, Ministry Of Social Justice And Empowerment F.No14012/6/2006 SCD - V நாள் 24.09.2007.
இக்கடிதத்தின் மூலம் அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் தலித் மாணவர்கள் 60 சதவிகிதத்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தாலும், கல்வி உதவித் தொகை பெறலாம் என்பது போன்ற பொருளேயற்ற ஒரு பொருளும் பொதிந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, அய்ந்து முதல் ஏழுக்குள்ளேயே உள்ளது. மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் மதிப்பெண் தர வரிசை :
.
1. தலித்துகளிலேயே மிக அதிக மதிப்பெண் பெறும் தலித் மாணவர்களும், பொதுப்போட்டியில் வரும் தலித் மாணவர்களும் இத்தகைய அரசுக் கல்லூரிகளிலேயே சேர்க்கப்படுகின்றனர்.
.
2. 70 சதவிகிதத்திற்கும் மேல் 80 சதவிகிதத்திற்குள் மதிப்பெண் எடுத்த தலித் மாணவர்கள் – அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்ற தனியார் பல்கலைக்கழகங்களிலும் சேர்க்கப்படுகின்றனர்.
.
3. 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை மதிப்பெண் பெற்ற தலித் மாணவர்களே – பெரும்பாலும் தனியார் சுயநிதிக் கல்லூரி களிலும், அரசு உதவி பெறும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களிலும் –அரசு ஒதுக்கீட்டின்படியோ, மேலாண்மை நிர்வாக ஒதுக்கீட்டின்படியோ சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்
.
முதல் இருநிலை கல்லூரிகளிலும் சேர்க்கப்படும் மாணவர்களில், 60 சதவிகித மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கே கல்வி உதவித் தொகை என்ற நிபந்தனையால் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் இவர்களில் பலரது வாழ்க்கைத் தரம், குடும்பப் பின்னணி, பெற்றோர் படித்த தலைமுறையினராகவோ, உயர் வருவாய் ஈட்டக் கூடிய அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் முதலிய பிரிவினரின் பிள்ளைகளே – பெரும்பாலும் தலித்துகளுக்கான இடங்களை கைப்பற்றுகின்றனர். இவர்களுக்காவது கல்வி உதவித் தொகை உண்டா என்றால் அதுதான் இல்லை.
.
பெற்றோரின் ஆண்டு வருமானம், கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வருமான வரம்பை விட கூடுதலாக இருப்பதால், இத்தகைய வருவாய் குடும்பத்தினரின் உயர் மதிப்பெண் பெற்ற தலித் மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை நீண்ட காலமாகவே மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு காலமாக, தலித் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவித் தொகை வழங்கிட வருமான வரம்பை விதித்திருந்த மத்திய அரசு, இப்போது மதிப்பெண் வரம்பையும் கொண்டு வந்து, தலித் சமூகத்தின் உயர் கல்விக்கே வேட்டு வைத்துள்ளது.
.
கடந்த 2006-07 ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்களில், தலித்துகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பெற்ற பத்தாயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களில் தலித்துகள் சேராததால், அந்த இடங்கள் பொதுப் போட்டிக்கு மாற்றப்பட்டு, தலித் அல்லாத பிற சமூகத்தினரால் நிரப்பப்பட்டது. இதற்கான அடிப்படைக் காரணம், பத்தாயிரம் தலித் மாணவர்கள் பொறியியல் படிப்பை விரும்பவில்லை என்பதால் அல்ல. இவர்கள் அனைவருமே சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் அளவுக்கே மதிப்பெண் பெற்றிருந்தனர்.
.
ஆனால், அரசு ஒதுக்கீட்டின் மூலம் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் சேருவோருக்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையை கூட கட்ட முடியாமல் தான் – பத்தாயிரம் இடங்களும் காலியாக கிடந்தன. தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் பாதியளவேனும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்திருக்குமேயானால், தலித் மாணவர்களுக்கு இந்த அவலம், ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது. இன்று உயர்கல்விக்கென கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஆணை, எதிர்காலத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் ஆபத்து உள்ளது.
.
மய்ய அரசின் சமூகநீதித் துறையின் அரசாணை, இன்னும் கூடுதலாக ஒரு செய்தியை தலித் மக்களுக்கு சொல்கிறது. + 2 வகுப்பில் 60 சதவிகிதத்திற்க்கும் கீழே மதிப்பெண் எடுத்த தலித் மாணவர்கள், எதிர்காலத்தில் உயர்கல்விக்கே விண்ணப்பிக்கக் கூடாது என்பதே அச்செய்தி. இது குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் குறிக்கோளுக்கே எதிரானது. உலகமயமாதல் சூழலில் இது ஒரு வகையான தொழில்நுட்பவியலான குலக்கல்வித் திட்டமே.
.
ராஜா கோபாலாச்சாரி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகக் குழந்தைகள் அய்ந்தாம் வகுப்பைத் தாண்டிவிடக் கூடாது என்ற அடிப்படையில் குலக் கல்வி முறையைக் கொண்டுவந்தார். அதைத் தோற்கடிக்க, நமக்கு பெரியாரும் காமராசரும் இருந்தார்கள். ஆனால், இன்று காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ, தலித்துகள் 10,12 ஆம் வகுப்பை கடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.
.
மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம், சமூகநீதி இவற்றின் கூட்டுக் கலவையிலான கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தாலும், இவ்வரசை இயக்கும் அதிகார வர்க்கம், பார்ப்பனியமயமாகவே இருக்கும்போது, கோட்பாடுகள் நீரின் மீது எழுதப்பட்ட எழுத்தே.
.
சரி, திடீரென மதிப்பெண் நிபந்தனைகளை கொண்டுவரும் மத்திய அரசின் செயலுக்கு என்ன காரணம்? நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூற்றின்படி, நாட்டில் அந்நிய மூலதன வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழலில் ஏன் இந்த நிபந்தனை? தலித்துகளின் உயர்கல்வி வாய்ப்பைக் கட்டுப்படுத்தும் சாதிய, பார்ப்பனிய, நிலவுடைமை உற்பத்தி உறவின் மனப்பாங்குக்கும், உலகமயமாதல் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளுக்கும் நெருங்கிய உறவு இங்கு இழையோடுவதையே இந்நிபந்தனை நமக்கு உணர்த்துகிறது.
.
பொருளாதார சீர்திருத்தம் என்பது உலக வங்கியின் அகராதியில் தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, பாதுகாப்புக்காக செலவிடப்படும் செலவினங்களை வெட்டுவதும், நிறுத்துவதுமே ஆகும்.
.
நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், உற்பத்தி உறவும் உருவாக்கிய பண்ணையடிமைத்தனம், படியாள் உற்பத்தி உறவுகள், தொழில்வழி சாதியமைப்பின் மீது அவை ஏற்படுத்திய தாக்கங்கள், சாதியமும் – வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ள, அக்கம்பக்கமாயுள்ள பிற்போக்கான சமூகங்களின் மீது / நாடுகளின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஏகாதிபத்திய நாடுகள், தங்கள் பொருளாதாரக் கொள்கைகளுக்கு புதுப்புதுப் பெயர்கள் சூட்டி, தங்கள் கொள்ளையை தொடர்ந்திட – மூன்றாம் உலக நாடுகள் மீது தங்கள் அதிகாரத்தின் பிடியை, ஆளுமையைக் கூட்டிக்கொண்டே போவார்கள்.
.
இங்குள்ள மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற அவர்களது அரசியல் முகவர்கள் அதற்கு "சீர்திருத்தங்கள்' என்று பெயர் சூட்டிக்கொள்வார்கள். மத்திய அரசின் சமூகநீதித் துறையின் இந்த அரசாணை ஏன் வந்தது? நிதிப் பற்றாக்குறையா? இல்லவே இல்லை!
.
உலக வங்கி இந்திய அரசுக்குப் பல நிபந்தனைகளை விதிக்கிறது. உலக வங்கிக்கு அமெரிக்க, அய்ரோப்பிய முதலீட்டாளர்களும், அரசுகளும் பல நெருக்கடிகளையும் நிபந்தனைகளையும் போடுகிறார்கள். இந்திய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியின் கீழுள்ள பல்வேறு சமூகத்தினருக்கும் வர்க்கங்களுக்கும் நிபந்தனைகளையும், நெருக்கடிகளையும் கொடுக்கின்றனர். பங்குச் சந்தையில் ஒரு "சென்செக்ஸ்' புள்ளி உயர்ந்தால், அம்பானியின் சொத்து மதிப்பு 1000 கோடி உயர்கிறது. ஆனால் மய்ய அரசின் ஓர் அரசாணை, பல லட்சம் தலித் மாணவர்களின் உயர்கல்விக் கண்ணைப் பறிக்கிறது.
.
பதினோறாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்கென 10 சதவிகித நிதி ஒதுக்கீடு கோரி இடதுசாரிகள் போராட்டம் நடத்துகிறார்கள். 1980க்கு முன்னால் கல்விக்கு 6 சதவிகித நிதி ஒதுக்கிய மத்திய அரசு, இன்று 3.2 சதவிகிதத்திற்கும் கீழாகவே நிதி ஒதுக்குகிறது.
.
அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் 11ஆவது அய்ந்தாண்டு திட்டத்துக்கான கலந்தாய்வுக் கூட்டமொன்றில் பேசும்போது, ஏழைகளுக்கான மானியங்கள் அவர்களை சென்றடையவில்லை என்று பேசினார். எழைகளின்பால் பிரதமருக்கு எவ்வளவு கருணை பாருங்கள் என்பது போல அவரது பேச்சு அமைந்தது. ஆனால் உண்மை அதுவல்ல! அவரது பேச்சு, ஏழைகளுக்குச் சென்றடையாத மானியங்கள் அவர்களை சென்றடைவதற்கான முயற்சிகளை எடுப்பதற்காக அல்ல: மாறாக, மானியங்களை ரத்து செய்வதற்கான வெள்ளோட்டமே அவரது பேச்சு.
.
அது மட்டுமல்ல, தலித் மாணவர்களின் கல்வி உதவித் தொகை பெறுவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஏழை தலித் மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு வேட்டு வைக்கும் அரசாணையை சமூக நீதித்துறை கொண்டு வந்திருப்பதன் உள்நோக்கம்.
.
எல்லா சமூகத்திலும் போட்டியில் வெல்லும் வசதிபடைத்த பிரிவினரை மட்டுமே, மேலும் மேலும் ஊக்குவிப்பது என்பது உலகமயமாதல் கொள்கையின் தொடர் நடவடிக்கையே. இந்தியாவின் 11ஆவது அய்ந்தாண்டு திட்டங்களுக்கான உலக வங்கியின் நிபுணர் குழுவினர், மானியங்களுக்கான செலவினங்களை வெட்ட வேண்டும் என்று பரிந்துரைத்ததின் அம்சங்களில் ஒன்றுதான், தலித் மாணவர்களுக்கான நிதியை வெட்ட வேண்டும் என்பது. இதன் விளைவு, தலித் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுவதில் மய்ய அரசு கொண்டு வந்துள்ள மதிப்பெண் வரம்பு ஆணை.
.
சமூகத்தின் கடைகோடியில் வாழும் தலித்துகள் தான் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி ஆற்றலின் மூலாதாரங்களாக விளங்குகின்றனர். இச்சமூகத்திற்கு உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகை வழங்குவதால் நாடு கடனில் மூழ்கிவிடுமா? இவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க நிதி இல்லாமல் போய்விட்டது என்றால், நாடு திவாலாகி விட்டது என்று பொருள்.
.
தமிழகத்தில் அண்மையில் ஹுண்டாய் கார் நிறுவனம் 100 கார்களை காவல் துறைக்கு இலவசமாக அளிக்க இருப்பதாக முதல்வர் கூறினார். அதன்படி, ஹûண்டாய் நிறுவனமும் நூறு கார்களை தமிழக அரசுக்கு அளித்தது. அந்தக் கார்களின் விலை 8 கோடி ரூபாய். முதல்வரின் திறமையால், அணுகுமுறையால் இந்தக் கார்கள் பெறப்பட்டதாகவும், அவரது நிர்வாகத் திறனுக்கு இது சான்று என்றும் கூறப்பட்டது. உண்மையில், நூறு கார்களை தமிழக முதல்வரிடம் அளித்த ஹûண்டாய் நிறுவனம், அதே முதல்வரிடம் 2006-07 ஆம் நிதியாண்டுக்கு மட்டும் 15 கோடி ரூபாய் வரிவிலக்கு பெற்றுள்ளது.
.
எட்டுக்கோடி ரூபாய் கொடுத்து நூறு கார்களை வாங்கிக்கொண்டு வரியை ஒழுங்காக வசூலித்து இருந்தால், அரசுக்கு இன்னும் கூடுதலாக 7 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திலேயே தமிழக அரசின் நிர்வாக லட்சணம் இப்படி இருக்குமானால், இந்திய அளவில் எவ்வளவு முறையற்ற சலுகைகளைப் பெற்று உள்நாட்டு தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் லாபம் அடைவார்கள்.
.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அரசு அளிக்கும் வரி விலக்கு மூலம், முதல் அய்ந்தாண்டுகளுக்கு இந்திய அரசு இழக்கும் வரி வருவாய் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இப்படிப் பல வழிகளிலும் ஆட்சியாளர்கள் செல்வந்தர்க்கே செல்வம் தழைக்க சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, தலித்துகளின் உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகையில் கை வைப்பது எவ்வளவு பெரிய துரோகம்! ""ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்'' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கேற்ப, ஏழைகள் கூரிய வாளாய் மாறிடும் காலத்தை நோக்கி தலித் அரசியலை முன்னகர்த்துவது மட்டுமே – நமது எல்லா சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும் தீர்வாகும். தற்போதைய நிலைமைக்கும் எதிரான நமது போராட்ட முறைகள் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்.
.
சமூக நீதித்துறை அமைச்சக ஆணை, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டவுடன் இது குறித்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மாறாக, அந்த ஆணையை அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் அதை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தி, தமிழக அரசு தன் பங்குக்கு தலித் மக்கள் விரோத கடமையை ஆற்றியுள்ளது.
.
மண்டல் குழு பரிந்துரை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, முஸ்லிம், கிறித்துவர் இடஒதுக்கீடு, கிரீமிலேயர், மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தை தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், 93ஆவது அட்டவணை சட்டத்திருத்தங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கெல்லாம் எதிர்ப்புக்குரல் கொடுத்த, பேராட்டக் களம் கண்ட பல சமூகநீதிக்கான இயக்கங்கள் / கட்சிகள், தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு விதிக்கப்பட்டுள்ள மதிப்பெண் வரம்பைக் கண்டிக்காமல் இருப்பது ஏன்? ஏனெனில், கல்வி உதவித் தொகைக்கான மதிப்பெண் வரம்பு முழுக்க முழுக்க தலித்துகள் தொடர்புடையது.
.
ஒருவேளை, சமூகநீதி இயக்கங்கள் இடஒதுக்கீடு அளவு குறையும்போதோ அல்லது இடஒதுக்கீட்டுக்கே ஆபத்து நேரும்போதோதான்– தங்கள் எதிர்ப்பின் வலிமையை காட்டுமோ என நாம் கருதிக்கொண்டாலும்கூட, இடஒதுக்கீட்டின் நோக்கம் உரிய இடங்களை ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அளிப்பதால் மட்டுமே வெற்றி பெற்றுவிடாது. அந்நோக்கம் நிறைவேற இடஒதுக்கீட்டால் பயன்பெற்ற மாணவர்களுக்கு உரிய நிதி ஆதார வசதிகளும், விடுதி வசதிகளும் அளிக்கப்பட்டால் மட்டுமே – இடஒதுக்கீட்டின் நோக்கம் முழு வெற்றி பெறும். எனவே, சமூகநீதி இயக்கங்கள், கல்வி உதவித்தொகைக்கான போராட்டத்திலும் தங்களது கவனத்தை திருப்ப வேண்டிய தேவையை இந்த அரசாணை ஏற்படுத்தியுள்ளது.
.
தலித் மாணவர்களுக்கு எதிரான இந்த அரசாணையை ரத்து செய்வதற்கான போராட்டத்தை, தலித் மாணவர்களின் பிரச்சனையாக மட்டுமே பார்க்க முடியாது. ஒட்டுமொத்த தலித் சமூகத்தின், நாட்டின் மனித வள ஆற்றல் மேம்பாட்டுக்கு எதிரான சதியாகவே பார்க்க வேண்டும். மாணவர்கள் போராட்டத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளட்டும் என்று தலித் இயக்கங்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட முடியாது.
.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால் தலித்துகளுக்கான கல்வி உதவித்தொகை, மத்திய அரசால் மாநில அரசு களுக்கு அளிக்கப்பட்டு, மாநில அரசு கல்லூரிகள் மூலம் அந்நிதியை மாணவர்களுக்கு வழங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் இந்த ஆணையின் மீது கவனம் செலுத்தாததற்கு, அது தங்கள் சமூகத்தைப் பாதிக்கவில்லை என்பதுகூட காரணமாக இருக்கலாம்.
.
"மக்கள் நல அரசு" என்ற நிலையிலிருந்து மத்திய – மாநில அரசுகள் லாப, நட்ட கணக்கு பார்க்கும் மளிகை மண்டி போல மாறிவிட்ட சூழலில், தலித்துகள் முன்னெப்போதையும்விட போர்க்குணத்தோடு களமிறங்க வேண்டும்.


-அரங்க. குணசேகரன்

(கட்டுரையாளர், தமிழக மனித உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர்.)


நன்றி:



ஜனவரி, 2008






வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும்

நீதி, சுதந்திரம், சமத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 58 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் இந்திய சமூகத்தில் சமத்துவம் நிலவுகிறதா என்று சற்றே ஆய்வோமானால், பெரும் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினராக உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வருகின்றனர்.
.
இம்மக்களின் துயர் துடைக்க அரசமைப்புச் சட்டம் தொடங்கி பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நிலையிலும் - சமூகத்தில் பெரிய அளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. மாறாக, புறக்கணிப்பும், வஞ்சகமும் புதுப்புது வழிகளில் மென்மேலும் நுட்பமாகி வருவதையே பார்க்கிறோம்.
.
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, துணைப்பிரதமர் பதவி உட்படப் பல்வேறு உயர்பதவிகள் வகித்த தேசியவாதியான பாபுஜெகஜீவன்ராம், பார்ப்பனியத்தின் கூடாரமான வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு சிலையைத் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்ததாலேயே அச்சிலைக்குத் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகக்கூறி, அத்தீட்டை நீக்க கங்கையிலிருந்து "புனித நீரை' கொண்டு வந்து அச்சிலை மீது ஊற்றிக் குளிப்பாட்டியது,இந்து சாதியத்தின் முழு உருவமான பார்ப்பனியம்.
.
இந்தியாவில் நாள்தோறும் தலித்துகளுக்கெதிராக அரங்கேறிவரும் எண்ணிலடங்கா வன்கொடுமைகளில், இவற்றின் பனிநுனியளவே வெளிச்சத்திற்கு வந்துள் ளது. நீருக்கடியில் இருக்கும் பனிப்பாறை அளவிலானவை, அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பன்மடங்காக அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில்கூட வெளிவருவதில்லை. ஊடகத்துறையில் தலித்துகள் கணக்கிலெடுத்துக்கொள்ளக்கூட முடியாத சிறுபான்மையினராக இருப்பதும், அப்படி உள்ளவர்களில் கூட மிகச் சிறுபான்மையினரே சமூக உணர்வுள்ளவர்களாக இருப்பதும்தான் இதற்கு காரணம் எனலாம்.
.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமை, இம்மக்களுக்குத் தற்போது ஓரளவேனும் கிடைத்துவருவது வன்கொடுமை குறித்த விழிப்புணர்வை மீட்டெழுப்பியுள்ளது. இதன் காரணமாக, 1989 ஆம் ஆண்டின் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 1955லிருந்து நடைமுறையில் இருந்துவரும் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் – தீண்டாமைக் குற்றத்தை, மற்ற குற்றங்களைப் போல மற்றுமொரு குற்றமாகவே பார்த்தது. ஆனால், 1989 ஆம் ஆண்டின் சட்டம் மட்டுமே தீண்டாமையின் அடிப்படையில் இழைக்கப்படும் செயல்களை முதன்முறையாக வன்கொடுமைகள் என்ற தீவிரத்தன்மையுடன் அணுகியதால் சிறப்பு பெற்றது.
.
1955 ஆம் ஆண்டின் சட்டம் பொது இடங்களில், பொதுப் பயன்பாடுகளில் அனைவருக்கும் உள்ள உரிமையைப் போன்றே தீண்டத்தகாதவர் என்ற அடிப்படையில் - ஒரு குறிப்பிட்ட நபருக்கு அந்த உரிமை மறுக்கப்படுமேயானால், அதைக் குற்றம் என விளம்பியது. பொதுக் கிணறு, பொதுக்குழாய், பொது இடங்களில் பாகுபாடு என்ற அளவில் மட்டுமே அது இயங்கி வருகிறது.
.
இந்தியா என்பது கிராம சமூக வாழ்க்கை என்பதாலும், ஒவ்வொரு கிராமமும் "ஊர்' என்றும் "சேரி' என்றும் தனித்தனி வாழ்விடங்களாக அமைந்திருப்பதாலும், இயல்பாகவே ஒவ்வொரு சமூகப் "பொது' வாழ்விலிருந்தும் பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் விலகியே இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில், 1955 ஆம் ஆண்டின் சட்டம் மிகமிக அரிதாகவே பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் தீண்டாமை மறைவதற்குப் பதிலாக, இச்சட்டம் வரையறுக்கும் தீண்டாமைக் குற்றம் நுண்ணிய முறையில் தவிர்க்கப்பட்டு விடுகிறது.
.
இதற்கு முற்றிலும் மாறுபட்டு, 1989 ஆம் ஆண்டின் சட்டம் ஒவ்வொரு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் "தனி நபர்' வாழ்க்கையில் அவர் சந்திக்க நேரிடும் குற்ற நிகழ்வுகளை வன்கொடுமைக் குற்றங்களாகப் பட்டியலிட்டு வரையறுத்துள்ளது. இது, இச்சட்டத்தின் உண்மை நிலையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டின் பிரிவு 3 இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் உட்பிரிவில் பிரிவு 3(1) பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர், ஒரு தனி நபர் மீது சாதியம் காரணமாக இழைக்கப்படும் பல்வேறு வன்கொடுமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
.
இவற்றில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஒருவர் தேர்தலில் தன் விருப்பப்படி வாக்களிப்பதைத் தடுப்பது உட்பட, நுண்ணிய வன்கொடுமைகளும் முதன்முறையாக குற்றங்களாக்கப்பட்டுள்ளன. இவை தலித்துகளுக்கெதிராக சாதியத்தின் அடிப்படையில் நேரிடையாக இழைக்கப்படும் வன்கொடுமைகளாகும். இரண்டாம் உட்பிரிவு பிரிவு 3(2), இப்பிரிவினருக்கெதிராக இழைக்கப்படும் பிற சட்டங்களிலுள்ள (இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை) குற்றங்கள் பாதிக்கப்படும் நபர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் என்ற அடிப்படையில் நிகழ்த்தப்படுமானால், அவற்றையும் வன்கொடுமைகளாக வரையறுக்கிறது.
.
எனவேதான், இச்சட்டம் இயற்றப்பட்டதிலிருந்தே ஆதிக்க சாதியினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதன் விளைவாக இச்சட்டமே திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மாநாடுகளில் இன்றுவரை முழக்கங்கள் எழுப்பப்பட்டு, தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இவர்கள் எழுப்பும் முழக்கங்களில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்து சாதியத்தையே புரட்டிப் போட்டுவிட்டது என்பது போன்ற மாயை தொடர்ச்சியாக ஏற்படுத்தப்படுகிறது. மாநாடுகள் தவிர பல்வேறு விதமான போராட்டங்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது நிகழ்த்தப் பெறுகின்றன. இவற்றிலெல்லாம் முன்வைக்கப்படும் ஒரே வாதம், இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்துமே பொய் வழக்குகள் தாம் என்பதே!
.
இந்த வாதம் முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பானதாகும். இக்கோரிக்கையை முன்வைப்பவர்களும் இதை அறிந்தே இருக்கின்றனர். இருப்பினும், ஏன் இந்தப் பொய்ப்பிரச்சாரம்? இச்சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு ஏற்பட்ட விழிப்புணர்வில் பல்வேறு வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் கொடுக்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப் படுகின்றன. இவற்றில் மிக மிக குறைந்த வழக்குகளிலேயே வன்கொடுமை இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
.
மேலவளவு, திண்ணியம் போன்ற ஊடகங்களின் மூலம் பெருமளவு அறியப்பட்ட வழக்குகளில்கூட, நீதிமன்றங்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றங்களை – அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர் நிகழ்த்தவில்லை என்று தீர்ப்பு கூறியிருப்பதைப் பார்க்கும் போது, இச்சட்டத்தையே திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எவ்வளவு கேலிக்கூத்தானது என்பது விளங்கும்.
.
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் வெளியிடும் ஆண்டறிக்கைகளில் நாள்தோறும் வன்கொடுமை விகிதங்கள் அதிகரித்து வருவதையும், அதே சமயம் வன்கொடுமை வழக்குகளின் தண்டனை விகிதம் அதிகளவிற்கு குறைந்து வருவதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
.
அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டிற்குப் பிந்திய தலித் இயக்கங்களின் விழிப்புணர்வு, வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு பார்த்தால் – இது பெரிதும் வியப்பளிப்பதாகவே உள்ளது. இத்தனை ஆயிரம் இயக்கங்கள், அமைப்புகள் இருக்கும் போதும் வன்கொடுமை வழக்குகளைக் கையாள்வதற்கான போதிய திட்டமோ, பயிற்சியோ, செயல்பாடோ இல்லாமலிருப்பது வியப்புக்குரியது.
.
வன்கொடுமைகளைப் பட்டியலிட்டு, அரசியல் அரங்குகளில் கைத்தட்டல்களையும் வாக்குகளையும் பெற்றுக் குவிப்போரும் – இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாமலிருப்பது, வன்கொடுமைகளுக்குத் துணைபோவதாகவே அமைந்துள்ளது. ஊடகங்களின் மவுனமும் இந்தக் கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
.
மேல்தட்டு வகுப்பினருக்கு இயல்பாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட பெரிய அளவில் கவனத்தில் கொண்டு, அந்நிகழ்வின் ஒவ்வொரு அசைவையும் உற்றுநோக்கி ஊடகங்களில் விவாதித்து, அவர்களின் மனநிலையைப் பிரதிபலித்து வரும் ஊடகங்கள், திட்டமிட்ட வன்கொடுமை நிகழ்வுகளை மட்டும் – பெரும்பாலும் பதிவு செய்யாமலேயே புறக்கணிப்பதும், ஒரு சில நேர்வுகளில் மேலோட்டமாகப் பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்வதும் நாம் கண்கூடாகக் காண்பதே.
.
ஜெசிகா லால் கொலை, டில்லி உப்ஹார் திரையரங்க விபத்து, பிரமோத் மகாஜன் கொலை போன்ற நிகழ்வுகளில் விசாரணை நீதிமன்றங்களின் ஒவ்வொரு அசைவும் ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தால் இது நன்கு விளங்கும். உள்ளூரில், கோவை குண்டுவெடிப்பு வழக்கு, காஞ்சி சங்கராச்சாரி வழக்கு, குஷ்பு மீதான வழக்கு, ஓட்டல் முதலாளி ராஜகோபால் வழக்கு போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
.
மேற்சொன்ன வழக்குகளில், ஊடகங்கள் பாதிக்கப்பட்டோருக்கு சார்பாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கெதிரான கருத்தாக்கங்களையும் தொடர்ச்சியாக முன்வைத்தன. மேற்கூறியவற்றிலிருந்து, நீதிமன்றங்களின் அணுகுமுறை நபருக்கு நபர் அவரவர்களின் பொருளாதார - ஊடகங்களின் பின்புலம், பலம் ஆகியவற்றை சார்ந்தே அமைகிறது என்பதையும் உணரலாம்.
.
இச்சூழலில் வன்கொடுமை வழக்குகள் பொய் வழக்குகள் என்று கூறப்படுவதõலேயே இச்சட்டம் நீக்கப்படவேண்டியதுதானா என்பதைப் பார்ப்போம். ஒரு பத்தாண்டுகளுக்கு முன் மதுரை நீதிமன்றமொன்றில் பாண்டியம்மாள் என்ற பெண்மணி கொலை செய்யப்பட்டார் என்றும் - அதற்கு அவர் கணவரும், கணவரின் உறவினர்களுமே காரணம் என்றும் அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 302இன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது "கொலை' செய்யப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தின் முன் வந்து, தான் கொலை செய்யப்படவில்லை என்றும், தகவல் சரியாகச் சொல்லாமல் வெளியூர் சென்றுவிட்ட தாகவும் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கக் கோரினார்.
.
முதலில் மறுத்த விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் பாண்டியம்மாளின் ஆளடையாளத்தை விசாரித்து உறுதி செய்து கொண்ட பின்னரே குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. இது ஒரு பொய் வழக்கு என்று நிரூபணம் ஆன ஒரே காரணத்திற்காக – கொலையைக் குற்றம் என்று கூறி, அதை செய்தவர்களைத் தண்டிக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவான 302அய்யே நீக்க வேண்டுமென்று எவரேனும் கூறினால் அதை ஏற்க முடியுமா? அதே போன்றது தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை, பொய் வழக்குகள் வருகின்றன என்று கூறி நீக்கம் செய்யக் கோருவதுமாகும்.
.
இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில், உண்மையாக நடைபெற்ற வன்கொடுமையையே புகாராகவும் வழக்காகவும் பதிவு செய்து நடத்த முடியாத நடைமுறைச் சூழலில், இது போன்ற கற்பனைக் கோரிக்கைகள் – சாதிய உள்நோக்கம் கொண்டவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சாதிய மேலாதிக்கம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இத்தகைய கருத்துகளைப்பரப்பி வருகிறார்கள்.
.
இது ஒருபுறமிருக்க, தன்னெழுச்சி பெற்றுள்ளதாகக் கூறிக் கொள்ளும் தலித் அரசியல் அமைப்புகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் - வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்யும் அளவிலேயே நின்று விடுகின்றன. பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர் நடவடிக்கைகள் மூலம் வலுப்படுத்தி – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நிவாரணமும், வன்கொடுமை செய்பவர்களுக்கு தக்க தண்டனையும் பெற்றுத்தர முயற்சிகள் எடுப்பதில்லை என்பதும் வேதனைக்குரியது.
.
அதைவிட வேதனைக்குரிய விஷயம், மேற்சொன்னவர்களுக்கு இதுகுறித்த பார்வையே இல்லை என்பதுதான். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களிடம் வன்கொடுமையாளருக்கு நயந்துபேசி பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ளச் சொல்லும் அவலத்தையும் – பல நேர்வுகளில் மேற்சொன்னவர்கள் ஈடுபடுவதும் நடைமுறையில் அரங்கேறியுள்ளன.
.
-காயங்கள் தொடரும்...


-சு. சத்தியச்சந்திரன்
நன்றி:
ஜனவரி, 2008

Wednesday, February 13, 2008

வேளாண்மையில் ஒர் அணுகுண்டு ஒப்பந்தம் (இந்திய - அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்)

சுதந்திர இந்தியாவின் வயது 60-ஐ தாண்டியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 57 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் கொடியேற்றி உரையாற்றும் தேசத்தலைவர்கள் வறுமையை ஒழிக்க உறுதி ஏற்கின்றனர்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறைகளில் இந்தியா பல மடங்கு முன்னேறியுள்ளதாக கூற/நம்பப் படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த இந்தியாவில்தான், அரை மணிக்கு நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்ளும் அவல நிலை நிலவுகிறது. மத்திய அரசு அமைப்பான தேசிய குற்றத்தகவல் ஆவண மையம் (National Crime Record Bureau) அளிக்கும் தகவலின்படி கடந்த 1997 முதல் 2006ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 304 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசுத்துறை புள்ளி விவரம் அளிக்கும் தகவல் இது என்றால் உண்மையான புள்ளிவிவரத்தை நாமே அனுமானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இந்த நிலையில்தான் புதிய ஒரு அணு குண்டாக, “இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்” அறிமுகம் ஆகியுள்ளது.

இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ்-உடன் கூட்டாக கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்களுக்கான கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அவற்றில் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மட்டுமே இடதுசாரிகள் உள்பட பல அரசியல் கட்சிகளும், செய்தி ஊடகங்களும் எதிர்த்தும், ஆதரித்தும் பேசி வந்தன.

ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சற்றும் குறையாமல் நாட்டின் உணவு இறையாண்மையையும், பல கோடி விவசாயிகளின் வாழ்வையும் கேள்விக்குறி ஆக்கியிருக்கும் “இந்திய -அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்த”த்தை, பற்றி யாரும் சிறு மூச்சுகூட விட்டபாடில்லை.

“இந்திய-அமெரிக்க வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, சேவை மற்றும் வணிகதொடர்பிற்கான அறிவு முனைப்பு” (INDIA-UNITED STATES KNOWLEDGE INITIATIVE ON AGRICULTURAL EDUCATION, RESEARCH, SERVICE, AND COMMERCIAL LINKAGES) என்கிற இந்த ஒப்பந்தம் முதலாம் “பசுமைப் புரட்சியின்” (GREEN REVOLUTION) வெற்றியை(!?) தொடர்ந்து “என்றென்றும்-பசுமைப் புரட்சியை” (EVERGREEN-REVOLUTION) ஏற்படுத்துவதற்காக வரையப்பட்டுள்ளது.

ஆனால் பழைய பசுமைப் புரட்சி போல முற்றிலும் அரசே ஏற்று நடத்தாமல், இந்தப்புதிய “என்றென்றும்-பசுமைப் புரட்சி”யானது தனியாருக்கும் இடம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வால்-மார்ட் (WAL-MART), மான்சான்டோ (MON SANTO) போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (RELIANCE) நிறுவனம் வரை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

விவசாயத்தோடு மட்டும் நில்லாமல் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் தொடரும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளாக இரண்டு அம்சங்களைக் கூறலாம்:

· மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (GENETIC ENGINEERING) பயன்பாட்டை விவசாயம், மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல்

· வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துததல்.

விதையற்ற பழங்கள், குஞ்சு பொரிக்காத முட்டைகள், மலட்டு விதைகள் மற்றும் விஷமாக பூக்கும் பருத்தி என பல சாதனைகள்(?!) படைத்திருக்கும் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு இந்த ஒப்பந்தம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள், பட்டினிச் சாவுகள் போன்றவற்றை மரபணுமாற்று தொழில்நுட்பத்தினால் தடுத்துவிடலாம் எனவும் இவ்வொப்பந்தம் மறைமுகமாக நமக்கு ஆசை காட்டுகிறது.

இயற்கைவளங்களை கொள்ளைபோக அனுமதித்தல்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர்..

இதுபோன்ற இயற்கைவளங்கள் “முதலாம் பசுமைப் புரட்சி” காலகட்டங்களில் அமெரிக்காவால் திட்டமிட்டு கொள்ளை அடிக்கப்பட்டன. ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் பாரம்பரிய தாவர வளங்களை எடுத்துச்சென்ற அமெரிக்கா, பின்னர் மஞ்சள், வேம்பு, புளி, பாசுமதி போன்றவற்றுக்கு காப்புரிமை கோரியதை இதற்கு சான்றாக கூறலாம்.

மூன்றாம் உலக நாடுகளிருந்து இயற்கைவளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கைவளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை (UNITED NATIONS) தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்கின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை உள்ளடங்கிய பல்உயிரின ஒப்பந்தம் (CONVENTION FOR BIODIVERSITY) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

இன்று வரை இந்த ஒப்பந்தத்தை ஏற்காத அமெரிக்காவிடமிருந்து, இந்தியா எப்படி தன்னுடைய வளங்களை காக்க போகிறது என்பதை காலம்தான் கூற வேண்டும்.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் நம் நாட்டின் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களையும் (TRADITIONAL KNOWLEDGE) பாதுகாத்திட, உயிரினவகை வேறுபாட்டு சட்டம் (BIOLOGICAL DIVERSITY ACT,2002) இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களாக இரண்டினை கூறலாம்:

· நம்நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை வழங்குவதை முழுவதுமாக தடைசெய்வது.

· நம் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களை ஆராய நினைப்பவர்கள் இந்த சட்டத்தின் கீழ் அமைந்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இப்படி அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (BENEFIT SHARING).

மறைமுகமாக இந்த சட்டம் நம் இயற்கைவளங்கள் கொள்ளை போவதை அனுமதித்தாலும் குறைந்தபட்சம் மக்களுக்கு இழப்பீடு என்ற கருத்தையாவது ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்விரு முக்கிய அம்சங்களையும் கண்டுகொள்ளாத இந்திய-அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தம் குறைந்தபட்ச இழப்பீடு கூட மக்களுக்கு கொடுக்க மறுக்கிறது.

இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் முக்கிய பகுதியாக இரு நாடுகளை சார்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூட்டாக சேர்ந்து இயற்கைவளங்களின் உயிரியல் மரபணு(GENE)வை ஆராய போகின்றன. அமெரிக்காவின் இயற்கை வளங்களை இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆராய்வதற்கான வழிகள் எதுவும் ஒப்பந்தத்தில் இல்லாத நிலையில் இந்தியாவின் இயற்கைவளங்களே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதை கூறத் தேவையில்லை.

இந்த ஆராய்ச்சி செய்கின்ற போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கொண்ட பல்உயிரின ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு வரி கூட இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் இல்லை.

இப்படி நம்நாட்டு சட்டங்கள் மற்றும் பன்னாட்டு ஒப்பந்தகளுக்கு எதிராக இயற்கை வளங்களை எளிதில் ஆராய்ச்சி செய்ய அனுமதி அளிப்பதன் மூலம் காலம்காலமாக இவற்றை பாதுகாத்து வரும் நம் மக்களிடமிருந்து இவற்றை அமெரிக்கா கொள்ளையடிக்க இந்த ஒப்பந்தம் துணைபோகிறது. அது மட்டுமல்லாமல் இப்படி ஆராய்ந்து(!?) கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவதன் மூலம் தற்போது பொதுச்சொத்தாக உள்ள இயற்கை வளங்களை, அமெரிக்க மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் தனிச்சொத்தாக மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது.

நிறுவனமயமாகும் வேளாண்மை

இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் வேளாண்மை துறையை வணிகமயமாக்க, அறிவுசார் சொத்துரிமையின் தேவையை முன்வைக்கிறது. குறிப்பாக வேளாண்மை துறையில் காப்புரிமையின் அவசியத்தை கட்டாயமாக்குகிறது.

இது குறித்த விவரங்களை, “மாறும் சட்டங்களும் விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்” பகுதி 1, 2, 3, 4 ஆகிய பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் நம் நாட்டு வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு அமெரிக்கா மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயம் செய்ய மட்டுமல்ல; எப்படி காப்புரிமை பெறுவது என்பதையும் கற்றுக் கொடுக்க போகிறது. காப்புரிமை பெறுவது மட்டுமல்ல அதனை பன்னாட்டு மற்றும் இந்நாட்டு நிறுவனங்களிடம் எப்படி விற்பது என்பதையும் கற்றுக் கொடுக்கப்போகிறது.


இதற்காக அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம்(INDIAN COUNCIL FOR AGRICULTURAL RESEARCH)கூட அறிவு சொத்துரிமைக்கான மேலாண்மை (INTELLECTUAL PROPERTY MANAGEMENT) என்ற சிறப்புப் பிரிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காப்புரிமை உள்ளிட்ட அறிவு சொத்துரிமைச் சட்டங்கள் மீறப்படாமல் இருப்பதை கண்காணிக்க இந்தியா அமெரிக்கா இடையே ஒரு தனி ஒப்பந்தமும் (MEMORANDUM OF UNDERSTANDING) 2006 ஆம் ஆண்டு கையெழுத்து ஆகியுள்ளது.

ஆக, இந்திய விஞ்ஞானிகள், நம்நாட்டு விதைகளை எடுத்து அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து புதிய பொருட்களை கண்டறிந்து, அதற்கு காப்புரிமை பெற்று அமெரிக்க நிறுவனங்களிடம் விற்பதற்கான இந்த ஒப்பந்தத்திற்கு, நம் நாட்டு மக்களிடம் பெற்ற வரிப்பணம் சுமார் 650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் தகுதி- திறமையின் அடிப்படையில் பயின்ற இந்த விஞ்ஞானிகளின் தேசப்பற்றை நிச்சயம் நாம் இந்த இடத்தில் நன்றியோடு நினைக்க வேண்டும்.


முடிவுரை

இந்த ஒப்பந்தம், வேளாண்மை நிறுவனமயமாவதற்கு மட்டுமே உதவும். மரபணுமாற்று பயிர்களை பெரு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பயிரிட்டு ரிலையன்ஸ் பிரஷ், வால்-மார்ட் போன்ற விற்பனை கூடங்களுக்கு விற்பனைக்கு வைக்கபோகின்றன. பல மாதங்கள் ஆனாலும் கெடாமல் இருக்க செயற்கையாக நிறமூட்டப்பட்ட இந்த காய்கறிகளைத்தான் இனி நாம் உண்ணப்போகிறோம். இந்த விவசாய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் விவசாயம் செய்ய புதிய வகை விவசாய கூலிகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தபோகிறது.

காப்புரிமை பெற்ற இப்பயிர்களை விவசாயிகள் அதிக விலைகொடுத்து பயிர் செய்யவேண்டும், மேலும் மலட்டுதன்மை மிக்க இந்த பயிர்கள் மீது விவசாயிகளுக்கு எந்த உரிமையும் இருக்க போவதில்லை. ஆக உணவு உற்பத்திக்கே நாம் இனி நிறுவனங்களை தான் நம்பியிருக்க வேண்டும்.

இத்தகைய புரட்சிகரமான இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தத்தின் இந்திய அரசுத்தரப்பு கவுரவ ஆலோசகர் (Honorary Adviser) எம். எஸ் சுவாமிநாதனுக்கும் ஒரு சிறப்பு நன்றியை கூறிக்கொள்வோம்.


-மு. வெற்றிச்செல்வன்