Wednesday, December 14, 2011

வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்ற (முன்மாதிரி) தீர்ப்பு



மாண்பமை உச்ச நீதிமன்றம், புது டில்லி

நீதிபதிகள்: மார்கண்டேய கட்ஜு & கியான் சுதா மிஸ்ரா 

மேற்கோள்: 2011 -1- L.W. (Crl) 677 : (2011) 3 MLJ (Crl) 551(SC) தீர்ப்பு நாள்: 19.04.2011

ஆறுமுகம் சேர்வை & அஜித் குமார்                                                 ........ மேல்முறையீட்டாளர்கள்
 எதிர்
தமிழ்நாடு அரசு                                                                                              ......... எதிர் மனுதாரர்

தீர்ப்புரை 

“ஒவ்வொரு அணுவிலும் ஒரு பகுதி இருளே; ஒரு யுகத்தின் கோப்பையை ஏந்துபவனே, இது குற்றங்களின் காலம்”. – - ஃபிராக் கோரக்புரி 


“அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்; மனிதர்கள் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க விழைவது போன்றவைகளை உள்ளடக்கிய, விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையான உண்மைகளாகக் கொள்கிறோம். - அமெரிக்க சுதந்திர பிரகடனம், 1776

1.தாமஸ் ஜெஃபர்சன் என்பார் எழுதிய நினைவில் கொள்ளத்தக்க மேற்கண்ட வரிகள், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும், இன்றளவும் வரலாற்றில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினர், தங்களின் சொந்த நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை இன்றளவும் தாழ்வாகக் கருதும் நிலையே நீடிக்கிறது. மேற்கண்ட மனநிலையானது இந்த நவீன யுகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நாட்டின் வளர்ச்சியில் மந்த நிலையை ஏற்படுத்தும் காரணங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.

2.அனுமதி அளிக்கப்பட்டது.

3.மதுரை 4ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் பகரப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, குற்றவியல் மேல்முறையீடு (எண்.536&537/2001) செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 25.01.2008அன்று அத்தீர்ப்பை உறுதி செய்து அளித்த தீர்ப்புக்கு எதிராக, இந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

4. கடந்த, 01.07.1999அன்று, கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, மாடுகட்டும் முறை குறித்து, முதல் சாட்சி பன்னீர்செல்வம் மற்றும் இரண்டாம் சாட்சி மகாமணி ஆகிய இருவருக்கும் மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டாளரான ஆறுமுகம் சேர்வை, முதல் சாட்சியை, “நீ பள்ளப்பயல், செத்த மாட்டுக்கறியைத் தின்பவன்” என்று திட்டி அவமதிப்பு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 1, 7 மற்றும் 9 ஆகியோர், முதல் சாட்சியின் இடது தோளில் கம்பால் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள். அப்போது இரண்டாம் சாட்சியான, மகாமணி இப்பிரச்சனையில் குறுக்கீடு செய்தபோது அவரையும் கம்பால் தாக்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக அவருக்குத் தலையில் முறிவும், கொடுங்காயமும் ஏற்பட்டுள்ளது.

5. காயமுற்ற நேரடி சாட்சிகளான மேற்கண்ட இருவரையும் தவிர, அந்த நிகழ்வில் மேலும் மூன்று நேரடி சாட்சிகளும் இருக்கின்றார்கள். காயமுற்றவர்களை மருத்துவர் பரிசோதனை செய்திருக்கிறார். மகாமணியின் தலையில் ஏற்பட்ட முறிவு, குற்றவாளிகளின் கொலை செய்யும் நோக்கத்தை உணர்த்துகிறது.

6. அரசு தரப்பின் வழக்கை இரண்டு நீதிமன்றங்களும் நம்புகின்றன. நிகழ்வு தொடர்பாக சாட்சிகளின் விவரிப்புகளை நாங்கள் மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்தபோதும், நிகழ்வை நம்பாமலிருக்க ஒரு காரணமும் தென்படவில்லை.

7. குற்றவாளி பிற்படுத்தப்பட்ட “சேர்வை” ஜாதியைச் சேர்ந்தவர். புகார்தாரர்களோ பட்டியலின “பள்ளன்” ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

8. “பள்ளன்” என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இதே வார்த்தை, ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. (வட இந்தியாவில் “சமார்” என்ற வார்த்தை குறிப்பிட்ட ஒரு ஜாதியைக் குறிக்கும் அதேவேளையில், ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் அதே வார்த்தை பயன்படுத்தப்படுவதைப்போல). பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் ஒருவரை “பள்ளன்” என்று சொல்வது, எங்களது கருத்துப்படி, பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமாகும். தமிழ்நாட்டில், “பள்ளப்பயல்” என்று ஒருவரைச் சொல்வது இன்னும் கூடுதலாக அவமதிப்பு செய்வதாகும்; அது மேலும் பெரிய குற்றமாகும்.

9. அதேபோல, தமிழ்நாட்டில் “பறையன்” என்றொரு ஜாதி உள்ளது. ஆனால் அதே “பறையன்” என்ற வார்த்தை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. “பறப்பறையன்” என்ற வார்த்தை மேலும் பெரிய அவமதிப்பாகும்.

10. பள்ளன், பள்ளப்பயல், பறையன், பறப்பறையன் போன்ற வார்த்தைகளை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் பயன்படுத்துவது, எங்களது கருத்துப்படி மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது. மேலும் பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். (50ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும்) தற்போது, “நிக்கர்” அல்லது “நீக்ரோ” என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை அழைப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அது போலவே, நவீன யுகத்தில் இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

11. இந்த வழக்கைப் பொருத்த வரையில், பன்னீர்செல்வத்தை அவமதிப்பு செய்யும் நோக்கத்தில் “பள்ளப்பயல்” என்ற வார்த்தை, முதல் குற்றவாளியால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே, இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் தெளிவான குற்றமாகும்.

12. இந்த நவீன யுகத்தில், எவரது உணர்வுகளும் நோகடிக்கப்படக்கூடாது. குறிப்பாக, பல வேற்றுமைகளை உடைய இந்தியா போன்ற நாட்டில், ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி போன்றவைகளால் எவரொருவரது உணர்வுகளும் அவமதிப்பு செய்யப்பட்டு விடாதவாறு, நாம் கண்டிப்பாக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் நமது நாட்டை ஒற்றுமையுடையதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்க முடியும்.

13. ஸ்வரன்சிங் மற்றும் பலர் -எதிர்- அரசு ((2008) 12 SCR 132) என்ற தீர்ப்பில் (பத்தி 21 முதல் 24 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
"21.பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்களாலும், உயர்ஜாதி என்று அழைக்கப்படும் மக்களாலும் அவமதிப்பு, கீழ்தரமாக நடத்துதல் மற்றும் கேலி செய்யும் நோக்கத்தில், தற்காலத்தில், ‘சமார்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நிகழ்காலத்தில் 'சமார்’ என்று ஒருவரை அழைப்பது கீழ்த்தரமான வார்த்தை மற்றும் கடுமையான குற்றமுமாகும். மேலும் இன்று ‘சமார்’ என்று சாதரணமாக அழைப்பது, ஒரு ஜாதியைக் குறித்து குறிப்பிட அல்ல, மாறாக திட்டமிட்டு ஒருவரின் மாண்புக்கு இழிவு ஏற்படுத்தவும், அவமதிப்பு செய்யவுமே.

22. பிரிவு 3 (1) (x) க்கு சட்ட பொருள் விளக்கம் தரும்போது, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதற்கான நோக்கத்தை பார்க்கவேண்டும். பட்டியலின பிரிவினரின் மாண்புக்கும், மனிததன்மைக்கும் இழுக்கு ஏற்படுத்துவதையும், அவர்களைத் தொந்தரவு செய்வதிலிருந்து தடை செய்வதற்காகவுமே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது, இச்சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் 3 (1) (x) பிரிவிற்கு பொருள் விளக்கம் கொள்ளும் போது, 'சமார்' என்ற வார்த்தையின் மூலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதை விட பயன்பாட்டினால் அந்த வார்த்தை பெற்றுள்ள பரவலான அர்த்தத்தை பார்க்க வேண்டியதுள்ளது. அந்த வார்த்தையின் மூலப்பொருளை கண்டறிய முயல்வோமானால், அது இந்த சட்டத்தின் முக்கியமான குறிக்கோளை அடையவிடாது.

23. இது சமத்துவத்திற்க்கும், மக்களாட்சிக்குமான காலமாகும். எவருடைய உணர்வுகளும் காயப்படுத்தப்படக் கூடாது. மேலும் எந்த மனிதனும், சமூகமும் அவமதிப்பு செய்யப்படவோ அல்லது கீழ்த்தரமாக பார்க்கப்படவோ கூடாது. அரசியல் சாசனத்தின்ஆன்மா என்பதுடன்,அதன் அடிப்படை அம்சங்களின் பாகமும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, எங்களது கருத்துப்படி, ஒருவர், “சமார்” இனத்தை சேர்ந்தவராகவே இருந்தாலும், ஒருவரை அடையாளப்படுத்தும் போது, 'சமார்' என்ற வார்த்தையை உயர் ஜாதியினரும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அந்த வார்த்தையை உபயோகிக்கும்போது ஒருவருடைய உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன. மதம், ஜாதி, இனம், மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகளை உடைய குழுவினர் இருக்கும் நம் போன்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், குழுக்களும் கண்டிப்பாக மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மேலும், எவரொருவரும் தாழ்வாகப் பார்க்கப்படக்கூடாது. நமது நாட்டை ஒற்றுமையுள்ள நாடாக வைத்திட இது ஒன்றே வழியாகும்.

24. எங்களது கருத்துப்படி, பொது இடத்தில், பொது மக்கள் முன்னிலையில் வைத்து ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நபரை அவமதிப்பு மற்றும் கீழ்த்தரமாக நடத்தும் நோக்கத்துடன், 'சமார்' என்று அழைப்பது, நிச்சயமாய் பிரிவு 3 (1) (x) ன் கீழ் குற்றமாகும். அப்படியாக, கீழ்த்தரமாக அல்லது அவமதிக்கும் நோக்கத்தில்தான் ‘சமார்' என்று ஒருவர் அழைக்கப்பட்டார் என்பது, அது உபயோகிக்கப்பட்ட சூழலைச் சார்ந்தது."

14. மேலும் நாங்கள், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் ஆட்சேபணைக்குரிய இரட்டை குவளை முறை குறித்தும் குறிப்பிட விரும்புகிறோம். இந்த முறைப்படி, அனேக தேநீர் கடைகளிலும், உணவகங்களிலும் பட்டியலின மக்களுக்கும், பிற மக்களுக்கும் தேநீர் அல்லது பிற பானங்கள் வழங்கும்போது, தனித்தனி குவளைகள் பயன்படுத்தப்படுகிறது. எங்களது கருத்துப்படி, இது கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். மேலும், இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். ஆகவே இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டிப்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், குற்றம் புரிந்தது உறுதிபடுத்தப்படும்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும். மேலும், தங்களது அதிகார வரம்புகளுக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் குறித்த செய்திகள் தெரிந்தும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

15. லதா சிங் –எதிர்- உத்திரபிரதேச மாநில அரசு ((2006)5 scc 475) என்ற தீர்ப்பில் (பத்தி 14 முதல் 18 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

"14. இந்த வழக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. தற்போது மட்டுமின்றி நிகழ்வு தொடர்புடைய காலத்திலும், மனுதாரர் வயது வந்தவர் என்பதில் எவ்வித குழப்பமுமில்லை. ஆகவே அந்த பெண், தான் விரும்பும் எவருடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் அல்லது தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு, இந்து திருமண சட்டத்திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ, எவ்விதமான தடைகளுமில்லை. ஆகவே மனுதாரரோ, அவரது கணவரோ, கணவரின் உறவினர்களோ என்ன குற்றம் செய்தார்கள் என்று எங்களால் கண்ணுற முடியவில்லை.

15. எங்களது கருத்துப்படி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான இந்த வழக்கின் குற்றவாளிகள் எவ்விதமான குற்றமும் செய்யவில்லை. மனுதாரர், வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதால், அவரது சகோதரர்கள் உணர்ச்சிவசப்பட்டதைத் தொடர்ந்து, தொடரப்பட்டஇவ்வழக்கு நிகழ்வுகளில் நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரமானது தவறாகக் கையாளப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல மனுதாரரின் சகோதரர்கள் புரிந்த சட்டத்திற்குப் புறம்பான அடாவடி செயல்களுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், அதற்கு நேரெதிராக மனுதாரரின் கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் தவறாக நடவடிக்கை எடுத்துள்ளதை இங்கே நாங்கள் வருத்தத்துடன் கவனத்தில் கொள்கிறோம்.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்களுக்கெதிராக வன்முறைகளும், மிரட்டல்களும், தொந்தரவுகளும் செய்யப்படுவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் எங்களது கவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே அது தொடர்பான சில பொதுவான அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டியது அத்தியாவசியமானதென்று நாங்கள் உணர்கிறோம். தற்போது நமது நாடு அதன் வரலாற்றில் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது. எனவே, இந்த நீதிமன்றமானது இது போன்றதொரு பொது பிரச்சனையில் இனியும் மௌனம் சாதிக்க முடியாது.

17. நமது நாட்டுக்கு ஜாதிய முறையானது பெரிய சாபமாகும். எனவே, எவ்வளவு விரைவாக இது ஒழிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது. சரியாகச் சொல்லப்போனால், நமது நாட்டிற்கு எதிராகவுள்ள சவால்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் ஜாதிய முறையானது நாட்டை பிளவுபடுத்துகிறது. ஆகவே, ஜாதி மறுப்புத் திருமணமானது, நாட்டின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் இதன் விளைவாகவே ஜாதிய முறைகள் ஒழிக்கப்படும். ஆனபோதிலும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிரட்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுவது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருத்தமளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எங்களது கருத்துப்படி, இதுபோன்ற வன்முறைகளோ, மிரட்டல்களோ அல்லது துன்புறுத்தல்களோ முற்றிலுமாக சட்டத்திற்குப் புறம்பானவைகள் என்பதால் அவைகளைப் புரிந்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இது ஒரு சுதந்திரமான மக்களாட்சி நாடு என்பதால், உரிய வயதை அடைந்துவிட்ட ஒருவர், தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தங்களது மகன் அல்லது மகளுடனான சமூக உறவுகளை வேண்டுமானால் அதிகபட்சமாக அவர்களது பெற்றோர்கள் துண்டித்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களை மிரட்டவோ, துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடவோ முடியாது. எனவே, நாடு முழுவதும் உரிய வயதையடைந்த ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் அல்லது அந்த தம்பதிகள் இருவரும் மிரட்டப்படுதல் அல்லது அவர்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுதல் குறித்து கண்காணிக்க வேண்டுமென்று காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளை அறிவுறுத்துகிறோம். அப்படியாக வன்முறை, மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யும் நபரையோ அல்லது எவரது அறிவுறுத்தலின் பேரில் செய்யப்படுகிறதோ, அவர்கள்மீது குற்றவியல் நடைமுறைகளை எடுப்பதை இலக்காகக்கொண்டு செயல்படுவதுடன், அது போன்ற நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

 18. தங்களது சொந்த விருப்பத்தில், ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை, கௌரவக் கொலைகள் செய்வதாக நாங்கள் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். அது போன்ற கொலைகளில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, அப்படிப்பட்டவர்கள் செய்யும் அதுபோன்ற கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானப்படத்தக்க, கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும்”.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கௌரவக் கொலைகள் அல்லது இதர வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், நிறுவனமாக்கப்பப்பட்ட வழியில் ஊக்கப்படுத்திவரும், தனி மனிதர்களுடைய வாழ்வில் தலையீடு செய்யும் “காப் பஞ்சாயத்துகள்” (தமிழ்நாட்டில் கட்டப் பஞ்சாயத்துகள் என அறியப்படுகின்றன) தொடர்பாக சமீப காலங்களாக கேள்விப்படுகிறோம். எங்களது கருத்துப்படி, இது முழுவதுமாக சட்டப்புறம்பானதும், வேறோடு களைந்தெறியப்பட வேண்டியதுமாகும். மேலே சொல்லப்பட்ட லதா சிங் வழக்கில் கூறப்பட்டுள்ளது போல், கௌரவக் கொலைகளிலும் இதர வன்கொடுமைகளிலும் கௌரவமானதாக ஏதும் இல்லை. மேலும், அவை காட்டுமிராண்டித்தனமான மற்றும் அவமானமான கொலைகளேயன்றி வேறேதுமில்லை. சகமனிதர்களின் தனிமனித வாழ்வில் வன்கொடுமைகளை நிகழ்த்தும் முரட்டுத்தனமான, நிலபிரபுத்துவ சிந்தனைகளைக் கொண்ட நபர்கள், கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே காட்டுமிராண்டித்தனமான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளுடன்கூடிய மனநிலை உடையோரை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும். மேலும் தங்களது கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் இது போன்ற செயல்கள், முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான கட்டப் பஞ்சாயத்துகளுக்குச் சமமாகும்.

17. ஆகவே, இது போன்ற வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும்பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

18. இந்த வழக்கில், நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் போல மேல்முறையீட்டாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் கருணைக்கு தகுதியுடையோர்கள் அல்ல. ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு இந்த இரு மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

19. இந்த தீர்ப்பின் நகல், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மூத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்/மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்குக் குறையாத அனைத்து அதிகாரிகளுக்கும், இதனை கண்டிப்பான முறையில் முறையில் அமல்படுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படவேண்டும். மேலும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பரப்புரை செய்திட வேண்டி, அனைத்து பொது மற்றும் இதர உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் இதன் நகல் அனுப்பப்படும்.

தமிழாக்கம்: இராபர்ட் சந்திரகுமார் ( robertckumar@gmail.com) & சபிதா

Monday, December 12, 2011

சென்னை உயர்நீதிமன்றம் - 150 ஆண்டுகள்... மக்கள் கருத்து என்ன?

நீதியின் உயரம்
நேர்மையின் உறுதி
சென்னை உயர் நீதிமன்றம்


அறத்தின் கவசம்
அழியாத வெளிச்சம்
சென்னை உயர் நீதிமன்றம்


மேற்கே சூரியன் தோன்றி மறையலாம்
மேல்நோக்கி மழை பொழிந்து கழியலாம்
ஆனால் -
ஒரு நாளும் நீதி பிறழாது - சென்னை
உயர் நீதிமன்றம் வழுவாது


காசு பணங்கள் கடந்து நீதியைக்
காவல் புரிவது உயர் நீதிமன்றம்
கடவுள் நம்பிக்கை இல்லாத பேர்க்கும்
கடைசி நம்பிக்கை உயர் நீதிமன்றம்


ஆளவந்தாரை லட்சுமிகாந்தனை
ஆய்ந்து சொன்னது உயர் நீதிமன்றம்
ஆளவந்தோரின் நன்மை தீமையை
அறுதி செய்வதும் உயர் நீதிமன்றம்


உண்மைகள் கூடி சத்தியம் கட்டிய
உறுதிகொண்டது உயர் நீதிமன்றம்
உலகப் போரில் குண்டு விழுந்தும்
உடைந்து போகாத உயர் நீதிமன்றம்


ஆண்டவர் ஆள்வோர் யார் சொன்னாலும்
அசைந்து கொடுக்காத உயர் நீதிமன்றம்
அறங்களாலே சமூகம் காக்கும்
அரண்கள் அமைக்கும் உயர் நீதிமன்றம்!

-கவிப்பேரரசு(!) வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றம் குறித்து எழுதிய கவிதை இது.


தமிழ்நாட்டின் நீதி நிர்வாகம் குறித்து நீதிபதிகள் மட்டுமே பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய பொதுமக்களிடம் பத்திரிகைகள் உட்பட யாரும் கருத்து கேட்டதாக தெரியவில்லை.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நீதிமன்றங்களை விமர்சிக்கும் உரிமை வரி செலுத்தும் பொதுமக்களுக்கே உண்டு. (இந்தியாவில் நேர்முக வரியை விட மறைமுக வரியே அதிகம் வசூலாகிறது. இந்த மறைமுக வரியை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களே அதிகம் செலுத்துகின்றனர்) சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து, அதன் அதிகார வரம்புக்குள் இயங்கும் தமிழ்நாட்டின் ஏனைய அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் டிரிப்யூனல் அமைப்புகளை குடிமக்கள் மதிப்பிட வேண்டும்.

அதற்கான களம் இது...  உங்கள் நண்பர்களிடமும் அறிமுகப்படுத்துங்கள்.

Friday, December 9, 2011

மனித உரிமைகள் - ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.  உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.

இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.


1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை

7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.

8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.

16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை

23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.

அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.

தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.



ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் இணைய தளத்தில் இந்த பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது. 


இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.


எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.

மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும்.

Tuesday, November 1, 2011

குடி, குடிமக்கள், சட்டம்

‘குடி’யின் கெடுதல் குறித்து, தமிழ் சமூகத்தில் எவருக்கும் கட்டுரை எழுதி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில், பத்து விழுக்காடு மக்கள் அதாவது ஏழரை லட்சம் மக்கள் தினமும் மது அருந்துகின்றனர் என்றும், மேலும் 13 வயது பள்ளி மாணவர்களும் கூட மது அருந்துவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு:

“உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது.

மது விலக்கு: 

போதை தரக்கூடிய, மது வகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், அதனை அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்தல் முறையே மது விலக்கு என குறிப்பிடப்படுகிறது. 

 தமிழ் சமூகத்தில் தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று. 

பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் கடைபிடிக்கும் ‘’பஞ்ச சீலம்’’ என அழைக்கப்படும் ஐந்து கொள்கைகளில், நான்காவது கோட்பாடானது, மதுவையோ அல்லது வேறு வகையான போதை பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.

உலக பொதுமறையாம் ‘திருக்குறளில்”, அறத்துப்பால் எனும் தலைப்பில் இயற்றப்பட்டுள்ள குறள்களில் 93வது அதிகாரமாக “கள்ளுண்ணாமை” குறித்து அய்யன் வள்ளுவரால் பாடப்பட்டுள்ளது..

மது விற்பனையின் மூலமாகக் கிடைக்கும் வருவாயினை, ஒரு நாட்டின் கல்வி மற்றும் பொது சேவைக்குப் பயன்படுத்துவது குற்றம். மேலும் மது விற்பனையின் மூலமாக பெறப்படும் பணமானது கறை படிந்த ஒன்று. எனவே அது தேசத்தைச் சீரழித்துவிடும் என்று இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எச்சரித்தார்.

மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி “விமோசனம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார்.

தந்தை பெரியார், 1921ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் பங்குபெற்றதோடு மட்டுமின்றி, அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமாக தாத்தம்பட்டியிலுள்ள தோப்பிலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டினார்.

தமிழ்நாட்டில் மது விலக்கு:

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, கடந்த 1937ம் ஆண்டில் ராஜாஜியின் ஆட்சியின்போது “தமிழ்நாடு மது விலக்கு சட்டம்” என்றொரு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் மது விலக்கு அமலுக்கு வந்து விட்டது. இப்படியாக, இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. கடந்த, 1952ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். பின்னர், காமராஜர் ஆட்சி காலத்திலும், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரான பிறகும்கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது.

தமிழ்நாட்டில் மது விலக்கு நீக்கம்:

சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மதுவிலக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், ஆனால் ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது என்றும் 1970ம் ஆண்டில் அறிவித்தது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள், என்று அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படாததைத் தொடர்ந்து, அவரது ஆட்சியின் போது, 1971 ஆகஸ்டு மாதம் 30ம் நாள் முதல், மதுவிலக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

மது விலக்கை நீக்கும் அவசர சட்டம்: 

தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம்,1937 அமல்படுத்தப்படுவது அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றும் கூறி, அவசர சட்டம் ஒன்றை கடந்த 1971ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் நாள், சட்டசபை கூட்டம் கூட்டப்படாமலேயே, அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா பிறப்பித்தார். மேலும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், ஒயின் மற்றும் மது கடைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் மற்றும் மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் தலா 60 முதல் 100 கடைகள் வரையிலும் திறக்கப்பட்டன. 

 மீண்டும் மது விலக்கு: 

1973ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல் படியாக, 1973 ஜுலை 30ம் நாள் முதல் 7 ஆயிரம் கள்ளுக்கடைகளும், 1974 செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளும் தமிழ்நாட்டில் மூடப்பட்டன. 1981ம் ஆண்டில் மே மாதம் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டது. 1984 வரையிலும், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் ஜுலை மாதம் “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்”(TASMAC) நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கான மொத்த விற்பனைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

மது விலக்கு சட்ட திருத்தம், 2003: 

‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம், 1937ல், கடந்த 29.11.2003 அன்று, அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் போது, மது தொடர்பாக சில்லறை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் பெற்ற ஒரே முற்றுரிமையாளராக, “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்” (TASMAC) மட்டுமே விளங்கும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்து 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி ஆட்சியின் போதும் அதேநிலைதான் தொடர்ந்தது. 

மது விலக்கு கோரி வேண்டுகோள்:

கடந்த 2008ம் ஆண்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென்றும், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களும், 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையின் கருத்து:

டாஸ்மாக்கினால் ஆண்டுக்கு 14000 கோடி வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதேவேளையில், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார். தமிழகத்தில் இருந்த கள்ளசாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் மாநிலத்தில் சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால் தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச்சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும். தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூரண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றும் தமிழ்நாட்டின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். 

மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ள சாராயம் பெருகும் என்பது ஆட்சியாளர்களால் முன் வைக்கப்படும் வாதங்களில் ஒன்று. ஆனால் மது விலக்கு அமலில் இல்லாத தற்போது, கடந்த ஏப்ரல் 25, 2011ல், தமிழக அரசு கொடுத்த செய்தி அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மது விலக்கு சோதனையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி பார்த்தால், கள்ள சாராயம் எல்லா காலத்திலும் காய்ச்சப்படுகிறது என்பது புலனாகிறது. 

தமிழ் சினிமாவில் மது விலக்கு: 

1980களில் உன்னால் முடியும் தம்பி, பேர் சொல்லும் பிள்ளை, பொன்மனச் செல்வன் என்பது போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மது விலக்கு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

மதுவினால் விளையும் தீமைகள்: 

மது அருந்தியதால் ஏற்பட்ட போதையில் தன் மகளிடமே தகாத முறையில் நடந்த தந்தை, தன் மருமகளிடம் மது போதையில் மதிகெட்டு நடக்கும் மாமனார், தனக்கு மது அருந்த பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாயைக் கொலை செய்ய துணிந்த மகன், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே மது அருந்திவிட்டு, பொது இடத்தில் கட்டிபுரண்டு சண்டை, தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 60 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் தான் என்கிறது புள்ளிவிபரம்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது. 

 “மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும், உடலுக்கும் கேடு” என்று பள்ளி பாட புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதைப்படிக்கும் மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்தால் அங்கு தென்படுவது டாஸ்மாக் கடை. என்னவொரு விந்தை? அதேபோல, குடி குடியைக் கெடுக்கும்” என்ற தமிழ் பழமொழியானது, அனைத்து மது புட்டிகளிலும் அச்சடிக்கப்பட்டு அரசால் விநியோகிக்கப்படுகிறது. போதாததற்கு, திரைப்படங்களில் மது அருந்தும் கட்சிகளின் போது, இதே வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. இதையெல்லாம் காணும்போது நகைச்சுவை எண்ணம் தான் மேலேழுகிறதேதவிர, “குடி” குறித்த விழிப்புணர்வு எண்ணம் ஏதும் தோன்றுவதில்லை. ஒரு நாட்டின் மண்ணின் மைந்தன், தன்னை அந்த நாட்டின் “குடிமகன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாத வகையில், இங்கே “குடிமகன்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே மாறிப்போய் உள்ளது.


மது விற்பனை செய்வது தனது அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என்ற வாதத்தை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சூழலில் எடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், மது விலக்கு தொடர்பான சரத்தானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளதால், அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே. இதனால் இதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாத சூழலே நிலவுகிறது. ஆரம்பக் கல்வி வழங்க வேண்டியது, எப்படி அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் என்பதிலிருந்து, அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட்டதோ அதேபோல, மது விலக்கும் அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.

-- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Tuesday, July 5, 2011

இலவச கட்டாயக் கல்வி : சட்டமும், நடைமுறையும்...!

தனிமனித வளர்ச்சிக்கும், அதன் ஊடாக சமூக வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது கல்வி. சமமற்ற சமூகத்தை, சமநீதிச் சமூகமாக உருவாக்கிட கல்வியின் பங்கு அளப்பறியது. அப்படிப்பட்டதான கல்வியை, “மக்கள் நல அரசு” என அறிவித்துக் கொள்ளும் நம் போன்ற நாடுகள் அனைத்து குடிமக்களுக்கும், பாகுபாடின்றி வழங்கிட வேண்டியது அடிப்படையான உரிமையாகும். அதேவேளையில் வழங்கப்படும் கல்வியானது இலவச, கட்டாய, தரமான கல்வியாக அமைய வேண்டியதும் மிகவும் அவசியமானதாகும்.


அகில உலக மனித உரிமைகள் பிரகடனம்:1948

“கல்வி பெறும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆரம்ப மற்றும் அடிப்படை நிலைகளிலாவது கல்வி இலவசமாக இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறைக் கல்வியை பரவலாக்குவதோடு, உயர் கல்வியை அனைவருக்கும் தகுதி அடிப்படையில் சம வாய்ப்பிற்குரியதாக்க வேண்டும்.” என்று இந்திய அரசால் கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் விதி 26(1) தெளிவாகக் கூறுகிறது.

உடன்படிக்கைகள்:-

1989ம் ஆண்டில் இயற்றப்பட்டு, இந்திய அரசால் கையொப்பமிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் “குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கை”யின் விதி 28(ஆ)வில் “ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பின் அடிப்படையில் ஆக்க பூர்வமான முன்னேற்றகரமான முறையில், கட்டாய, இலவச, தரமான கல்வி பெறுவதற்கான உரிமையுண்டு” என்று கூறியுள்ளது.

பொருளாதார,சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குறித்த உடன்படிக்கை, 1966ன் விதி12(2)(அ)வில் “ஆரம்பக்கல்வி, அனைவருக்கும் கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைக்க வேண்டும்” என்று கூறுகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனம் (86-வது சட்டதிருத்தம்), 2002:

அரசியலமைப்பு சாசனம் 1950ம் ஆண்டில் இயற்றப்பட்ட போது, சரத்து 45ல் “சாசனம் அமலுக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குள்ளாக, 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்று அரசின் நெறியுறுத்தும் கொள்கையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்த உரிமையானது, 21(A) என்ற புதிய சரத்து உருவாக்கப்பட்டு “இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமையானது, அடிப்படை உரிமை”யாக அங்கீகரிக்கபட்டது.

மேலும், பிரிவு 51(A)(k)வில் புதிதாக ஒரு சரத்து இணைக்கப்பட்டு, “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் தங்களது பாதுகாப்பில் உள்ள குழந்தைகளுக்கும், கல்வி பெறும் வாய்ப்புகளையும், வசதிகளையும் உருவாக்கிட வேண்டும்” என்றும் திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், 1992 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம், பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டியது அடிப்படை உரிமை என்று கூறியிருந்தாலும், பத்தாண்டுகள் கழித்து 2002ஆம் ஆண்டில் தான், அது குறித்த திருத்தம் அரசியல் அமைப்பு சாசனத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே தாமதம் ஏற்பட்டிருந்த போதிலும் மேலும் எட்டு ஆண்டுகள் கழித்து 2010ஆம் ஆண்டில் தான், இது குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே வேதனையான உண்மை. இந்த நாட்டின் குடிமக்களான குழந்தைகளின் மீதும், நாட்டின் எதிர்காலத்தின் மீதும், ஆட்சியாளர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், அக்கறையும எவ்வளவு அலாதியானது என்பதற்கு இதுவே சான்றாக விளங்கும்.


இப்படியாக பல்வேறு செயல்பாடுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தில், “6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் அவர்களின் குடியிருப்புக்கு அருகிலிருக்கும் பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரைக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி பெறுவதற்கு உரிமையுண்டு என்று உத்தரவாதபடுத்தியுள்ளது. தற்போது நாட்டின், கல்வி தொடர்பான உயரிய ஆலோசனை மையமான, “கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம்” இச்சட்டமானது, 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் என்பதை 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் என நீட்டிப்பு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்படத்தக்கது.

இவ்வொப்புதலைப் பெற்றுள்ள மத்தியஅரசு, அடுத்த கல்வியாண்டிற்குள் உயர்நிலைப்பள்ளி வரையிலும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி வழங்குவதை இச்சட்டத்தில் இணைத்து, அமலுக்குக்கும் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மத்தியில் உள்ளது.

கல்வியானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்கவேண்டியது என்ற நிலையில் “பொதுப்பட்டியலில்” இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்த சட்டத்தை அமலாக்கம் செய்து நடைமுறைக்குக் கொண்டு வர மத்தியஅரசு 65 விழுக்காடும், மாநிலஅரசு 35 விழுக்காடும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் 2010ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில், இச்சட்டத்திற்காக நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை என்பதிலிருந்து இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிப்பது தொடர்பாக பெயரளவுக்கு மட்டும் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டால் போதும் என மத்தியஅரசு கருதுவதாகவே தோன்றுகிறது.

நாட்டில், நடப்பிலுள்ள ஆசிரியர்களில் 21 விழுக்காட்டினர் கல்வி கற்றுக் கொடுப்பதற்கான திறனும், தகுதியும் பெறாதவர்கள் என்று மத்தியஅரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களில் 5.8 இலட்சம் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிற சூழலில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், மேலும் 4.5 இலட்சம் கூடுதல் ஆசிரியர்கள் தேவை என்று கூறியுள்ளது. இப்படியாக ஏறக்குறைய 13 இலட்சம் ஆசிரியர்களின் தேவை நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ளது.

“தேசிய கல்விக் கொள்கை” 1986ம் ஆண்டில் இயற்றப்பட்ட போது, அதில் ஓராசிரியர் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளிகளாக மாற்றப்படும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் 24 ஆண்டுகள் கடந்து இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இன்றளவும் நாட்டில் 9 விழுக்காடு பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றி வரும் அவலநிலைதான் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் போதிய அளவிலான ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் இந்த சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற மேலும்; மூன்று ஆண்டுகாலம் தேவைப்படும் என்று ஜீன் 2011ல் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2009ல் இயற்றப்பட்ட இந்த சட்டத்திற்கான விதிகளை பல்வேறு மாநிலங்கள் உருவாக்கிவிட்ட சூழலில், இன்றளவும் தமிழக அரசு உருவாக்காத சூழலில், இந்த சட்டத்திற்கான விதிகளை உடனடியாக வெளியிட வேண்டும் என உத்திரவிடக் கோரி ஜீன் 2011ல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொது நல வழக்கில், ஆறு வார காலத்திற்குள் விதிகளை உருவாக்கி அறிவிப்பு செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசானது சமீபத்தில் “சமஸ்கிருத பள்ளிகளை” நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிறுவிட, அதற்கான கட்டமைப்பு மற்றும் அடிப்படை செலவுகளுக்கான தொகைகள் முழுவதையும் ஒதுக்கீடு செய்துள்ளது கவனிக்க வேண்டியது. சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற “காமன்வெல்த் போட்டி”களின் போது, விளையாட்டு தொடர்பான குழுவினர்கள் தங்க வைப்பதற்காக, 60 மாநகராட்சி பள்ளிகள் காலி செய்யப்பட்டு, தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டு, அதில் வைத்து வகுப்பு நடத்தப்பட்டது என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

சட்டமாக இயற்றியபிறகும் அமல்படுத்த இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்தும் ஆட்சியாளர்கள், சட்டமேதும் இயற்றப்படாமலேயே ‘சமஸ்கிருத’ பள்ளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும் போது மதசார்பற்ற அரசாக தன்னைக் காட்டிக் கொள்ளும், மத்திய அரசின் மீது மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை ஆட்சியாளர்கள் விரைவாக சரிபடுத்தி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கத்தை நோக்கி பயனிக்கும் வகையில் தங்களது செயல்பாடுகளை மாற்றியமைப்பார்களா? என்பதற்கான பதிலை சில ஆண்டுகள் கழித்தே நாம் அறிய முடியும்.

அடிப்படை கட்டமைப்புகளையே உருவாக்காமல் ஒரு சட்டம் இயற்றப்பட்டு இரண்டு ஆண்டு காலம் பூர்த்தியான பிறகும் அதை நடைமுறைக்கு கொண்டு வர எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலை. ஆம் நிச்சயமாகவே நம்மை “மக்கள் நல அரசு” தான் ஆட்சி செய்கிறது.

-இ. இ. இராபர்ட் சந்திரகுமார்

Tuesday, June 21, 2011

அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்

அலைபேசியில் சில மென்பொருட்களை பரிசோதித்துக்கொண்டிருந்த போது அலைபேசி செயலி (mobile app) ஒன்றை ஒருவாக்குவது எளிது போல் தோன்றியது. மேலும் சிறிது நேரம் செலவழித்ததில், மூன்று செயலிகளை செய்துள்ளேன்

  1. இந்திய அரசியல் சாசனம் : Constitution of India செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய அரசியல் சாசனத்தை வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் Constitution.jar மற்றும் Constitution.jad .
  2. இந்திய தண்டனை சட்டம் : IPC - Indian Penal Code செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் இந்திய தண்டனை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் IPC.jar மற்றும் IPC.jad           .              
  3. குற்றவியல் நடைமுறை சட்டம் : CrPC - The Code of Criminal Procedures செயலியை உங்கள் அலைபேசியில் நிறுவினால் குற்றவியல் நடைமுறை சட்டத்தை முழுவதும் வாசித்துக்கொள்ளலாம். தேடும் வசதியும் உள்ளது. நீங்கள் தரவிறக்க வேண்டிய கோப்புகள் CrPC.jar மற்றும் CrPC.jad
நோக்கியா அலைபேசியில் பரிசோதித்து பார்த்ததில் பிரச்சனை எதுவும் இல்லை. வேறு அலைபேசிகளில் பிரச்சனை இருந்தால் கூறவும்




Nokia PC Suite மென்பொருளில் இருக்கும் Install Application பயன்பாட்டினை உபயோகித்து நீங்கள் பிற செயலிகளை நிறுவுவது போல் இதையும் எளிதாக நிறுவலாம்


நன்றி: மருத்துவர் புரூனோ 
(ஐயங்களை அவரிடம் தொடர்பு கொண்டு கேட்கவும்) 
அவரது இணையதள முகவரி:  http://www.payanangal.in/2009/07/blog-post.html

Monday, May 16, 2011

இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும் !

சுனாமி காரணமாக ஜப்பானில் புக்கூஷிமா நகர அணுஉலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அணுக் கதிரியக்க கசிவுகள் வெளியாகி மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தங்களுடைய அணுசக்தி கொள்கை குறித்து மறுபரிசீலனை செய்யத் துவங்கியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்திய அணு உலைகள் குறித்தான பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளார்.
கல்பாக்கம்: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்

இங்கே நாம் முதன்மையாக கவனிக்கவேண்டியது இயற்கை சீற்றத்தையும் அதன் காரணமாக விளையக்கூடிய விபத்துகளையும் அழிவுகளையும் எதிர்கொள்ளும் ஜப்பானின் அவசர தயாரிப்பு நிலை (Emergency Preparedness) தான். அணுக்கதிர்கள் மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்னும் காரணத்தால் அணுஉலையின் சுற்றுப்புறத்தில் (சுமார் 25 கி.மீ.) வசித்து வந்த மக்களை சில மணிநேரத்தில் வெளியேற்றியுள்ளது ஜப்பான் அரசு. இந்தியா இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம் நாம் அறிந்ததே. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக் கூடிய  அளவிற்கு நாம் தயார் நிலையில் உள்ளோமா என்கிற கேள்வி இப்பொழுது மிகவும் அவசியமானது.

இந்திய அணுசக்தி துறை

1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) துவங்கப்பட்டது. பின்பு 1954 ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை (Department of Atomic Energy) செயல்படத் துவங்கியது. அணுசக்தி ஆணையம் இதன் கீழாக செயல்பட்டு வந்தது.  அணுசக்தித் துறையே அணுஉலைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக அணுசக்தி நெறிப்படுத்தும் வாரியம் (Atomic Energy Regulatory Board) செயல்படுகிறது. இந்த அமைப்பை தற்சார்பு உடைய அமைப்பாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை இப்பொழுது எழுந்துள்ளது. அணுசக்தி ஆராய்ச்சி தொடர்பான பல ஆராய்ச்சி மையங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. Nuclear Power Corporation of India Ltd உள்ளிட்ட அணுசக்தி சார்ந்த சுமார் ஐந்து பொதுத் துறை நிறுவனங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. தற்போது அணுசக்தித் துறை கீழாக 18 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 8 அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன.

அணுஉலைகளின் கட்டுமானங்கள்

பலவிதமான அபாயங்கள் நிறைந்தவையாக அணுஉலைகள் உள்ள காரணத்தால் இவை கட்டப்படுகின்றபோது கடைப்பிடிக்க வேண்டிய பலவித கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அணுஉலைகளின் செயல்பாட்டை இடத்தேர்வு, கட்டுமான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் செயல்நிறுத்தம் எனப் பிரிக்கலாம்.

இடத்தேர்வு : இயற்கை சீற்ற ஆபத்து உள்ள பகுதியில் அணுஉலை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது விதி. ஜனத்தொகை குறைவான பகுதியே அணு உலை கட்டுமானத்திற்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதும் விதி. வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் முக்கிய உயிரின பாதுகாப்பு பகுதியாகவும் அது இருக்கக் கூடாது என்றும் விதியுள்ளது. இந்தியாவில் தற்போது இயங்கும் எல்லா அணு உலைகளும் நிலநடுக்கம் வரக்கூடிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல அணுஉலைகள் கடலோரமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் சுனாமி ஆபத்தும் உள்ளது.

மேலும் இடத்தேர்வில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று இருக்க வேண்டும். அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி அளிக்கப்படுவதில் பொதுமக்களின் கருத்துகளும் அவசியம் கேட்கப்பட வேண்டும்.

கட்டுமான வடிவமைப்பு : அணு உலை கட்டப்படுவதிற்கான பல நெறிமுறைகளை அணுசக்தித் துறை வகுத்துள்ளது. குறிப்பாக அணு உலை கட்டுவதற்கு தேர்வு செய்யக்கூட வழிமுறைகளை Monograph on Siting Of Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான நெறிமுறைகளை Geotechnical Aspects and Safety of Foundation for Buildings and Structures Important to Safety of Nuclear Power Plants வழங்குகிறது. அணுக்கதிர் வெளியேறாமல் இருக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறையை Radiation Protection Aspects in Design for Pressurised Heavy Water Reactor Based Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான தரத்திற்கான நெறிமுறைகளை Quality Assurance in Nuclear Power Plants வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட எல்லா நெறிமுறைகளும் 2000-ம் ஆண்டுக்கு பின்பாக இயற்றப்பட்ட காரணத்தால் புதிதாக கட்டப்படும் அணு உலைகளுக்கு மட்டுமே இவை பெருந்தும். தற்போது இயங்கி வரும் பல அணு உலைகள் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படவில்லை. மேலும் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றித்தான் அணு உலைகள் கட்டப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு தற்சார்பு உடைய அமைப்புகள் இந்தியாவில் கிடையாது.

அணு உலை செயல்பாடு : யுரேனிய அணுக்கள் பிளக்கப்படும்போது, 3500- 4000 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்துடன் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அணு உலையில் இதே அணு பிளப்பின்போது நியூட்ரான் விழுங்கிகளைத் (Neutron Absorbers) தக்க சமயத்தில் நுழைவித்து, வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பசக்தி காரணமாக வெளியாகும் நீராவி கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு உலையில் அணுகதிர் வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவை மனிதர்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்களை உண்டாக வல்லது. எனவே இவை அணு உலையைவிட்டு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒரு அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை (Radioactive Spent Fuel Wastes) உண்டாக்கும். இவையும் அணுக்கதிர் உடையவை. இவற்றை அழிக்க முடியாத காரணத்தால் இவற்றையும் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பாதுகாக்க வேண்டும்.

செயல்நிறுத்தம் : ஒரு அணு உலையின் மொத்த ஆயுட்காலமே 40-50 வருடங்கள்தான். அதன்பிறகு அதை அப்படியே பெரிய, பெரிய கான்கிரீட் தொட்டியின் மூலம் பூமிக்கடியில் புதைத்துவிடவேண்டும். இப்படி அணு உலைகளை மூடுவதற்கு De-Commissioning என்று சொல்வார்கள். அதன்பிறகு அந்தப் பகுதி உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். ஆக ஒவ்வொரு நாற்பதாண்டுக்கும் ஒரு தடவை அணு உலைகளை இடம்மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

அணு உலை விபத்துகள்

1979இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டியன.

இந்திய அணு உலைகளில் விபத்துகளே நேர்ந்தது இல்லையா என்றால் பல விபத்துகள் நிகழ்ந்து உள்ளன என்பதே பதில். இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.

அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது அணுசக்தித் துறை சார்பாக பல விளக்கங்கள் கூறப்பட்டது. மேலும் அணுஉலை பாதுகாப்பு என்பதே அணுசக்தி சட்டப் பிரிவு 18 கீழ் இரகசியமானது என்றும் உயிர் நீதிமன்றத்தில் பார்வைக்கு மட்டும் அணுஉலை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யத் தயார் என்று கூறியது அணுசக்தி துறை. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் ஆவணங்களை தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் நம் நாட்டு அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து பிரிவு 18 –யை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது [PUCL vs UOI (2004) 2 SCC 476].

கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ - 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தித் துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

வெளிப்படையற்றதன்மை தான் இந்திய அணுசக்தி கொள்கையாக உள்ளது. எனவே அணு உலை விபத்துகள், அது குறித்த பல தகவல்கள் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் அணுசக்தி:

சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station). ‎ இந்த உலையின் கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலை 1983 ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது. இங்கு 500 மெகா வாட் திறன் உள்ள இன்னும் ஒரு உலையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் அணுமின் உலைகள் ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.

சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை புளுத்தோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன் இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்றது இந்த உலை. இந்த உலை இந்திய வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளைக் கொண்டுள்ளது. உலையின் பாதுகாப்புக்காக இவ்வாலையைச் சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

அவசர தயாரிப்பு நிலை

1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

அணுசக்தி சட்டம் மூலமாக சில விதிகள் இயற்றப்பட்டுள்ன. அதில் Atomic Energy (Safe Disposal of Radioactive Wastes) Rules, 1987 கதிரியக்க எருக்கழிவை பாதுகாப்பைப் பற்றி கூறுகிறது. மேலும் அணுசக்தி கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான [Atomic Energy (Radiation Protection) Rules, 2004] சட்ட விதியும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிதி அணுவிபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்புநிலைக்கான (Emergency Preparedness) செயல்பாடுகளைப் பற்றி திட்டம் வரையப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. Convention on Assistance in the Case of a Nuclear Accident or Radiological Emergency ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

அணுவிபத்து நேருகின்ற போது அணுஉலை நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை செயல்பாடுகளைப் பற்றிய திட்டமும் (Site Emergency Preparedness Plans) மற்றும் அணு உலை சுற்றுப்புறத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை குறித்த திட்டமும் (Off-site Emergency Preparedness Plans) ஒவ்வொரு அணுஉலை சார்ந்து இயற்றப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டவிதி கூறுகிறது. இந்த தயாரிப்பு நிலை குறித்தான திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authourity) அணு உலை விபத்து குறித்த அவசர தயாரிப்பு நிலைக்கான திட்ட அறிக்கையை (Management of Nuclear and Radiological Emergencies) 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தயாரிப்பு நிலையின் தேவை மற்றும் செயல்படும் முறை பற்றிய குறிப்புகள் உள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் சாமானிய மக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. இதற்கு பின்பாகவும் நிலைமை மாறியுள்ளதா? மேற்கூறிய அவசர தயாரிப்பு திட்டப்படி விபத்தை எதிர்கொள்ள கூடிய அளவில் கல்பாக்கம் அணு உலை உள்ளதா என்பதைக் காண்போம்.

(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.

(ii) அடுத்து கல்பாக்க சுற்றுப்புற மக்களிடம் அணு உலையின் ஆபத்து மற்றும் அணுக்கதிர் ஆபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே ஒரு விபத்து நேருகின்றபோது தாமாகவே பாதுகாப்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு இம்மக்களிடம் குறைவு.

(iii) அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.

(iv) கல்பாக்க பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதற்கான சரியான தொலைத்தொடர்பு வசதியும் இல்லை. வட்டார அரசு அதிகாரிகள் மூலமாக மக்கள் எச்சரிக்கை செய்யப்படுவர் என்று அணுசக்தித் துறை கூறுகிறது. நடைமுறையில் இது எந்த அளவிற்கு உதவக் கூடும் என்பது கேள்விக்குறியே.

(v) விபத்து பின்பாக மக்களை குடியமர்த்தக் கூடிய மாற்றுப் பகுதியும் இதுவரை கண்டறியப்படவில்லை. அணு உலை விபத்து பின்பாக ஜப்பான் அரசு இதுவரை வெளியேற்றப்பட்ட மக்களை மாற்று இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இத்தகைய பண்பு நம் அரசுக்கு இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.

அணு உலை விபத்து காரணமாக வெளியேறக் கூடிய அணுக்கதிர்கள் இவ்வளவு தொலைவு தான் பயணிக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. ஆக கல்பாக்கத்தில் அணு உலை விபத்து நேர்ந்தால் அது 25 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் தொகை மிகுந்த மாமல்லபுரம், 75 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை போன்ற இடங்களைத் தாக்கக் கூடும்.

முடிவாக...

அணு உலை விபத்து என்று இல்லாமல் கல்பாக்க பகுதி மக்கள் பல நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அணு உலை சுற்றுப்புற பகுதிகள் தொடர்ச்சியாக அணுசக்தித் துறையினால் ஆய்வு மேற்கொள்ள அணுசக்தி சட்டம் வலியுறுத்துகின்ற போதும் இத்தகைய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவே இல்லை. கல்பாக்கம் அருகே உள்ள பல கிராமங்களுக்கு இதுவரை சரியான மின்சார வசதி இல்லை என்பதே யாதார்த்த நிலை. அணு உலை இருந்து கிடைக்கப்பெறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே அணு உலைகள் கட்டப்படுவதற்கான முக்கிய காரணம். இந்தியாவின் வல்லரசுக் கனவு காரணமாக உண்டான கதி இது. மேலும் அணு உலை கட்டுமான செலவுத்தொகைக்கு எவ்வித தணிக்கை கட்டுப்பாடுகளும் இல்லை. இதில் மின்சார தயாரிப்பு என்பதெல்லாம் சுத்தப் பொய். இழப்புகள்தான் அதிகம். இறுதியில் பாதிப்புக்குள்ளாவது மக்கள்தான்.
- மு.வெற்றிச்செல்வன் 
( m.vetriselvan@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Friday, May 6, 2011

அமலுக்கு வராமலே அராஜகம் செய்யும் தவணைக் கொள்முதல் சட்டம்

அதிக மதிப்புடைய சரக்கு வாகனங்கள், மகிழுந்து இருசக்கர, மூன்று சக்கர வாகனம், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் மடிக்கனினி என்பன உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, அதன் மொத்த விலையில், ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை முன்பணமாக கட்டிவிட்டு மீதுமுள்ள தொகையை தவணை முறையில் வாரக் கணக்கிலோ, மாதக்கணக்கிலோ செலுத்தும் முறையே தவணைக் கொள்முதல் முறையாகும். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த முறையானது பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.
 
தங்களது கனவுகள் நனவாவதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதே நேரத்தில் பல ஏழை குடும்பங்களை சிறிது சிறிதாக மன அழுத்தத்தை ஏற்படுத்தி கொன்று கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
தவணை கொள்முதல் (HIRE PURCHASE SCHEME) திட்டத்தால் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் :-

 சமீபத்தில் சென்னையில் புகழ் பெற்ற பட்டியலின தலைவரான அமரர் எம்.சி.ராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்குள்ளானது. அவர்கள் தவணைக் கொள்முதல் முறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வாங்கிய பொருட்களுக்கான தவணையைத் திரும்ப செலுத்த முடியாததால் அந்த நிறுவனத்தினர் கொடுத்த சித்ரவதைகளின் காரணமாக ஏற்பட்ட‌ மன அழுத்தத்தின் விளைவாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறப்பட்டது. இது போன்ற தற்கொலைகள் தமிழகத்தில் இன்று பரவ‌லாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

24 மாத ஒப்பந்தத்தில் குறிப்பாக 20 மாதங்கள் இருசக்கர வாகனத்திற்கு முறையாக தவணை தொகை செலுத்திவிட்டு, மீதமுள்ள நான்கு மாத தவணையினை செலுத்த தாமதமான காரணத்திற்காக அமுலுக்கே வராத தவணை கொள்முதல் சட்டத்தினை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக ‘வங்கி குண்டர்களால்’ வீடு புகுந்து களவாடப்படும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதிலும் குறிப்பாக ஓரளவிற்கு பண வசதி கொண்டவர்களையெல்லாம் கண்டும் காணாமல் விட்டு விட்டு சாமானியர்களையும், விவசாய பணி மற்றும் பலசரக்கு சாமான்கள் கொண்டு செல்வதற்காக இரு சக்கர வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்களை கடன்பட்டு வாங்கியிருக்கும் கிராமத்து ஏழைகளைத்தான் ஆட்டுவித்தும், மிரட்டி வருகிறார்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை.

இன்னும் குறிப்பாக இப்படியொரு சட்டமே அமுலில் இல்லையென்றும், வங்கி, நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் அமைப்புகள் போன்றவற்றிற்கு தவணை தொகையினை செலுத்த தாமதிக்கும் ஒருவரின் உடமையை அத்துமீறி திருட்டுத்தனமாக பறிமுதல் என்ற ‘நவீன திருட்டுத்தனம்’ செய்வதற்கு துளியும் உரிமையில்லை என்ற செய்தி பெரும்பாலான காவல் நிலையங்களுக்கு தெரியவில்லை என்பதும் இவ்வாறு வங்கிகளால் சட்டத்திற்கு முரணாக அமர்த்தப்பட்டிருக்கும் குண்டர்களால் பறிமுதல் நடக்கும் போது பாதிக்கப்பட்டோருக்கு எதிராகத்தான் காவல்துறையின் போக்கும் இருந்து வருகிறது என்பது அப்பட்டமான உண்மை. இதற்கான காரணம் காவல்நிலையங்களுக்கு இச்சட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் சென்றடையவில்லை என்பது தான் நிதர்சனம்.

உலகமயமாக்கல் சூழலால் சமீப காலமாக கிராமங்கள் காலியாகி நகரங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு மற்றும் பெரு நகரங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் துவங்கப்படுகின்றன. தொலைக்காட்சி, செய்தித்தாள் உள்ளிட்ட ஊடகங்கள் விளம்பரங்கள், செய்திகள் மூலமாக பொதுமக்களிடையே அதிக அளவில் பொருட்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வு காலச்சாரத்தை திட்டமிட்டு தொடர்ந்து உருவாக்குகின்றன. 

இதன் விளைவாக நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையிலுள்ள குடும்பங்கள் தங்களது பொருளாதார தகுதிக்கும் கூடுதலான மதிப்புடைய பொருட்களை வாங்கிட வேண்டிய நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த மனநிலையை தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனிநபரின் வாங்கும் சக்திக்கும் அதிக மதிப்பிலான பொருட்களுக்கு, முன் தொகையாக ஒரு குறிப்பிட் அளவு பணத்தைப் பெற்றுக் கொண்டு மீதமுள்ள தொகையை தவணை முறையில் கட்டிக் கொள்ளலாம் என்று வசீகர திட்டங்களை அறிவித்து எண்ணிக்கையிலான குடும்பங்களை கடன் சுமைக்குள் தள்ளுகிறது.

தவணைக் கொள்முதல் முறையின் பின்ன‌ணி:

 உலகின் காலனியாதிக்கத்தை உருவாக்கிய இங்கிலாந்தில் 1846 ஆம் ஆண்டில் முதன் முதலாக‌ இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு எனும் தளத்தில் அரியதொரு கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. சிங்கார் எனும் நிறுவனம் தையல் இயந்திர பணிகளில் அறிமுகம் செய்தது ஒப்பந்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு சரக்குகள் கொண்டு செல்வதற்கான குதிரை வண்டிகள் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளில் மெல்ல மெல்ல பரவிய இந்த திட்டமானது, தானியங்கி கருவிகள் கண்டறியப்பட்ட காலத்தில் இன்னும் அதிகமாய் பரவத் தொடங்கியது.

 துவக்க காலங்களில் பொருட்களின் உற்பத்தியாளர்கள் பொருட்களை வாங்குபவர்களுடன் நேரடியாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். நிதி உதவி செய்து விற்பனை செய்தார்கள். முதலாம் உலகப் போருக்கு பிறகு நீண்ட கால ஒப்பந்த முறை அமலுக்கு வந்தது. இந்த சமயத்தில் தான் உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே தரகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதே கால கட்டத்தில் தான் இங்கிலாந்திடம் காலனி நாடாகயிருந்த இந்தியாவிலும் இந்த முறையானது அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களின் இதர பொருட்களுக்காக தானியங்கி பொருட்களும், அதற்குத் தேவையான உதிரி பாகங்களும் ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆன போதிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான் இந்தமுறை நாடு முழுவதும் விரிந்து பரவத் தொடங்கியது. 1960களில் பல்வேறு பரிணாமங்களை எடுத்தது ஆனாலும் ஆழமாக வேரூன்றவில்லை.

வர்த்தக ரீதியாக செயல்பட்ட வங்கிகளும் இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்தன. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி செய்ய முடியாத காரணத்தால் தவணை கொள்முதல் மூலம் பொருட்களை விற்பனை செய்வதற்கும் கொள்முதல் செய்வதற்கும் தவணை முறையில் கடன் வழங்கும் திட்டங்களை வங்கிகள் மேற்கொள்ளத் துவங்கின. இப்படியாக தவணைக் கொள்முதல் முறை இந்தியாவில் வேரூன்றி வளர துவங்கியது.

தவணைக் கொள்முதல் சட்டம் 1972, இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872, பொருட்கள் விற்பனைச் சட்டம் 1830 போன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டிருந்தாலும் இவைகளின் சரத்துகள், நிபந்தனைகள் விதிகளை உள்ளடக்கி 1972 ஆம் ஆண்டில் தவணைக் கொள்முதல் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டம் அமலுக்கு வரும் நாள் குறித்து மூன்று முறை அரசிதழில் அறிவிப்பு வெளியிட்ட பிறகும் இறுதியாக எந்த தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று நாள் குறிப்பிடப்படாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியாக ஒரே ஒரு நாள் கூட அமலுக்கு வராத இந்த சட்டம் இறுதியில் கடந்த 2005 ஜூன் மாதம் 23ம் நாள் இரத்து செய்யப்பட்டது.

அமலுக்கே வராமல் இறுதியில் இரத்தும் செய்யப்பட்டுவிட்ட இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தான் தற்போது வரையிலும் தவணைக் கொள்முதல் முறையில் பொருட்களை வாங்கியவர்கள் தவணைகளைச் சரியாக திருப்பிச் செலுத்தாதபோது அந்த பொருளையோ, வாகன‌த்தையோ குண்டர்கள், அடியாட்கள் மூலமாக சட்டத்துக்குப் புறம்பாக தாக்கிச் செல்லும் அடாவடி நிலை நடந்தேறி வருகிறது.

தவணையை சரியாகத் திருப்பிச் செலுத்தாதபோது ஒப்பந்த மீறுகை ஏற்படுவதால் இந்திய ஒப்பந்தச் சட்டம் பொருட்கள் விற்பனை சட்டம் போன்ற சட்டங்களின் மூலமாக உரிமையியல் நீதிமன்றத்திலும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மூலமாக நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும், முறையாக அறிவிப்பு செய்து தவணை தொகையினை கட்டத்தவறுவோர் மீது வழக்கு தொடர்ந்து பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தவணை முறையில் பொருட்கள் வாங்குபவர் பின்னர் வேண்டுமென்றே கட்ட மறுத்தாலோ அல்லது கட்ட இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அவர் ஜாமீன் சொத்தாக சமர்ப்பித்துள்ள ஆவணங்களை அல்லது உடைமைகளை முறைப்படி அறிவிப்பு வழங்கி நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து மீட்டுக் கொள்ளலாம். அதனை விடுத்து குண்டர்களை பயன்படுத்தி சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளை கையாளக்கூடாது என்று பல்வேறு மாவட்ட மற்றும் உயர்நீதிமன்றங்களில் தொடர்ந்து தீர்ப்புகள் பகரப்பட்டு வருகின்றன.

அரசின் கடமையும் - பொது மக்களின் விழிப்புணர்வும் :-

தவணைக் கொள்முதல் வழங்கும் நிதி நிறுவனங்களினால் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த தர்ம சங்கடங்கள் உருவாக்கப்படுகிறது என்றும் அது போன்ற சூழ்நிலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 20வது சட்ட ஆணையம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “கனா கண்டேன், விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டணா செலவு பத்தணா” போன்ற தமிழ்த் திரைபடங்களில் தகுதிக்கு மீறி தவணைக் கொள்முதலில் பணம் வாங்கிய குடும்பங்கள் எப்படியெல்லாம் சித்ரவதைக்குள்ளாக்கப்படுகிறது என்பது குறித்து தெளிவாகக் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது. ஆக பொது மக்களும், தங்களுக்கு தாங்களே சுய பரிசோதனை செய்து கொண்டு விழிப்புடன் இருத்தல் அவசியமாகும்.

இப்படியாக அமலுக்கே வராமல் இரத்து செய்யப்பட்டுவிட்ட ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி இன்று சமூகத்தில் தனியார் நிதி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டப்புறம்பான செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த சட்டப்புறம்பான செயல்கள் தொடர்பான நிகழ்வுகளில் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு முறையான பாதுகாப்பினையும் வழங்கி, சட்டபுறம்பான நிகழ்வுகளில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும். 

இ. இ. இராபர்ட் சந்திரகுமார்
(robertckumar@gmail.com)

Tuesday, February 15, 2011

விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதைகள் சட்ட மசோதா – 2010

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர் கட்சிகளின் நடவடிக்கை காரணமாக பல சட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் முடிவடைந்தது. அப்படி சட்டமாக நிறைவேறாமல் போன ஒரு சட்ட மசோதா –விதை சட்ட மசோதா 2010 (Seed Bill 2010). பசுமைப் புரட்சியை தொடர்ந்து புதிய வகை விதை உற்பத்தி மற்றும் விதை வர்த்தகத்தில் தனியார் நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக விதைகளின் தரத்தையும், உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் முறைப்படுத்துவதற்கு 1966-ம் ஆண்டு விதைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் உலகமய-பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வர எண்ணிய மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு விதைகள் சட்ட மசோதாவை   (Seed Bill 2004) கொண்டு வந்தது. இச்சட்டம் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் விதைகள் அனைத்தும் மத்திய அரசால் உருவாக்கப்படும், தேசிய பதிவு ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமென கட்டாயப்படுத்தியது. அப்படி பதிவு செய்தவர் மட்டுமே விதைகளை விற்பனை செய்ய முடியும் என்றும் கூறியது. மேலும் விவசாயிகளுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டிருந்த இச்சட்ட மசோதா, பலத்த எதிர்ப்பின் காரணமாக, தேவையான மாற்றங்களை செய்ய நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பட்டது.

அதன்பின் இந்த சட்ட மசோதா பல மாற்றங்கள் செய்யப்பட்டு இப்பொழுது விதைகள் சட்ட மசோதா 2010 (Seed Bill 2010) என மறு உருவெடுத்துள்ளது. ஆனாலும் இந்த மசோதா பழைய அபாயமிக்க பிரிவுகளுடனேயே வந்துள்ளது. உதாரணமாக, விவசாயிகளுக்கு இச்சட்டத்தின் கீழ் விதைகளை பாதுகாக்கவும், மறுபயிர் செய்யவும் அவற்றை விற்கவும் அனுமதி அளித்திருந்தாலும் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டின்படி விவசாயிகள் தங்கள் விதைகளை வணிகப்பெயரிட்டு விற்க முடியாது. அப்படி விற்கவேண்டும் என்றால் அவர்களும் தங்களுடைய விதைகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு நிரூபிக்கப்பட்ட விதைகளை மட்டுமே இச்சட்டத்தின் கீழ்பதிவு செய்யமுடியும். இந்த நிபந்தனை ஒரு சாதாரண விவசாயிக்கு எந்த விதத்திலும் பயனற்றது என்பதும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களே இதன்மூலம் பயனடைய முடியும் என்பதையும் விளக்க வேண்டியதில்லை.

விவசாயிகளின் பாரம்பரிய விதைகளை இச்சட்டத்தின் கீழ் வேறு யாரும் பதிவு செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஒரு பயிரின் மூலத்தை (Parentage) தெரிவிக்க தேவையில்லை என்னும் விதியின் மூலம் நம்முடைய பாரம்பரிய விவசாய விதைகளை மரபணுமாற்றம் (Genetic Engineering) செய்து புதிய வகை விதை என்னும் பெயரில் அவற்றை பதிவு செய்யும் ஆபத்தும் இதில் உள்ளது.

மேலும் இந்த சட்டம், விதை கண்காணிப்பாளருக்கு (Seed Inspector) ஏற்கனவே இருந்ததைவிட அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது. தற்போதைய சட்டத்தின்படி விதை கண்காணிப்பாளர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர் சந்தேகம் கொள்ளும் எந்த ஒரு இடத்தையும், எந்த நேரத்திலும் சோதனை இடலாம். அங்கு விதைச்சட்டங்களின் கீழ் உரிய பதிவு பெறாமல் சேமித்து வைத்துள்ள விதைகளை கைப்பற்றுவதோடு, அவற்றை பாதுகாத்து வைத்துள்ள விவசாயியை கைது செய்யும் அதிகாரமும் படைத்துள்ளார்.

முன்பு இருந்த மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டு புதிய சட்டத்தின்  கீழ் மாநிலங்கள் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் மண்டலத்திற்கான பிரதிநிதித்துவமாக வழங்கப்பட்டுள்ளதது. இது மாநிலங்களுக்கான உரிமைகளை தட்டிப் பறிப்பதாகும்.

தாவரங்களுக்கு காப்புரிமை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட தாவர ரகங்கள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2001, கூட விவசாயிகளுக்கு உழவர்களின் உரிமைகள் என்னும் பிரிவு இப்படி கூறுகிறது: “இச்சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு ரகத்தை சேமிக்கவும், பயன்படுத்தவும், விதைக்கவும், மறுமுறை விதைக்கவும், பரிமாற்றம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் அல்லது நிலத்தில் விளைவிக்கப்பட்ட விதை உள்ளிட்ட விளைபொருட்களை விற்கவும், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்குமுன் ஒரு உழவருக்கு இருந்த அனைத்து உரிமைகளுக்கும் உடையவராகக் கருதப்படுவார்.” ஆனால் இந்த உரிமைகளை பறிக்கின்ற வகையில் விதை சட்ட மசோதா அமைந்துள்ளது. மேலும்  இச்சட்டம் தாவர வகை பயிர்களுக்கு 15 ஆண்டு கால காப்புரிமையும், மரவகைகளுக்கு 18 ஆண்டு கால காப்புரிமையும் கொடுக்கிறது. இதனை மிஞ்சும் வகையில் விதைச் சட்ட மசோதா தாவர வகைகளுக்கு 30 ஆண்டு கால பதிவு உரிமையும் மரம் வகைகளுக்கு 36 ஆண்டு கால பதிவு உரிமையும் வழங்குகிறது. அதாவது, இந்த பதிவு உரிமை காலகட்டத்தில் பதிவு பெற்றவரை தவிர்த்து வேறு யாரும் இந்த விதை வகைகளை விற்பனை செய்ய முடியாது.  

 இந்தியாவில் சுமார் 70 சதவித விதைகள் விவசாயிகள் மூலமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு சட்டமாக்கப்பட்டால், விவசாயிகளின் பாரம்பரிய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும். மேலும் விவசாயிகளின் அடிப்படை உரிமையான விதை சேமிக்கும் உரிமை  கூட தண்டனைக்குரிய குற்றமாக மாறுகின்ற ஆபத்து உள்ளது. மேலும் விதைகள் உற்பத்தி விநியோகம் அனைத்தும் நிறுவனமயமாக்கப்படும்.  

நிறுவனமயமாகும் வேளாண்மை

விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் சட்டங்களை இயற்றும் இதே மத்திய அரசு பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது. இதன் ஒரு அம்சமாக மத்திய அரசின் கீழ் இயங்கும் உயிரி-தொழில்நுட்ப துறையின் தலைமையில் தனியார்-பொதுத்துறை கூட்டுத்திட்டங்கள் Biotechnology Industry partnership Programme (BIPP)  அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்படி மரபணுமாற்று தொழில்நுட்பம் போன்ற உயிரி-தொழில்நுட்பம் சார்ந்த மரபணுமாற்று விவசாய உற்பத்திற்கு ஊக்கம் அளிக்கப்படும். நிறுவனங்கள் இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு செலவிடப்படும் தொகையை, திட்டதிற்கு ஏற்றவாறு, மத்திய அரசிடம்இருந்து மானியமாக பெறலாம். ஏற்கனவே இத்திட்டத்தின் கீழாக மரபணுமாற்று பயிர்களை உற்பத்தி செய்வதற்காக மான்சான்டோவின் இந்திய நிறுவனமான Maharashtra Hybrid Seeds Company, Metahelix Life Science Private Limited மற்றும் Bejo Sheetal Seed Private Limited போன்றவை மத்திய அரசிடம் இருந்து மானியம் பெறுகின்றன. 

விவசாயிகளின் தற்கொலை விகிதம் அதிகரித்துக் கொண்டு போகும் நிலையில் விவசாயிகளின் உரிமைகளை பறித்தெடுக்கும் இந்திய அரசு, நிறுவனங்களின் உரிமை காக்கும் சட்டங்களை இயற்றுவதும் மானியங்களை வாரி வழங்குவதும் இந்திய அரசியலைமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். 

-மு.வெற்றிச் செல்வன்