Tuesday, July 3, 2007

மாறும் சட்டங்களும், பறிபோகும் விவசாயிகளின் உரிமைகளும்...! (பகுதி-2)

காப்புரிமை சட்டம் (PATENT ACT)





இந்தியாவின் காப்புரிமை சட்ட வரலாறு 1856ம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தியாவில் அன்றைய ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினர். இந்த சட்டம் 1859, 1872, 1883 ஆண்டுகளில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு சட்டம் 1911ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதைய காப்புரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒரு பொருளையோ, அதன் பயன்பாட்டையோ முதன்முறையாக கண்டறியும் ஒருவர், உரிய அதிகார அமைப்புகளிடம் பதிவு செய்து பெறும் உரிமை, காப்புரிமை எனப்படுகிறது. இவ்வாறு காப்புரிமை பெற்ற அப்பொருளை பதிவு செய்தவர் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடியும். அவரைத்தவிர வேறு யாரும் அப்பொருளை 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது.

பழைய சட்டத்தின்படி, விவசாயம் மற்றும் மருத்துவத்துறை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்கு இந்த சட்டத்தின்கீழ் 7 ஆண்டுகள்வரை மட்டுமே காப்புரிமை வழங்கப்பட்டது. மேலும், இந்த சட்டத்தின்கீழ் விவசாயம் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த புதிய பொருட்களை கண்டுபிடிப்பவர்கள், அப்பொருளை தயாரிக்கும் முறையை (மட்டுமே) PROCESS PATENT என்ற பெயரில் காப்புரிமை பதிவு செய்யலாம்.

இவ்வாறு காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு ஒருவர், அதே முறையில் தயாரிக்க முடியாது. ஆனால், அதே பொருளை வேறு முறைகளில் தயாரித்து விற்பதையோ, பயன்படுத்துவதையோ யாரும் தடுக்க முடியாது. இந்த முறையின் கீழ் விலை உயர்ந்த வெளிநாட்டு மருந்துப்பொருள் ஒன்றை உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்கள் வேறு முறைகளில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் வாய்ப்பு முன்னர் இருந்தது.

ஆனால், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒரு பகுதியான TRIPS ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இட்டதைத் தொடர்ந்து தற்போது PROCESS PATENT என்ற பொருள் தயாரிப்பு முறையோடு கூடுதலாக PRODUCT PATENT என்ற பெயரில் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய முறையின் கீழ் காப்புரிமை பதிவு பெற்ற மருந்து அல்லது விதை போன்ற ஒரு பொருளை காப்புரிமை பெறாத மற்றவர்கள் வேறெந்த முறையிலும் தயாரிப்பது தடை செய்யப்படுகிறது. இதனால் மருந்து அல்லது விதைப்பொருட்களுக்கு காப்புரிமை பெற்றவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெறுகின்றனர்.

மேலும், இயற்கையாக தோன்றும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு காப்புரிமை வழங்கத் தேவையில்லை என TRIPS ஒப்பந்தம் கூறுகிறது. ஆனாலும் இயற்கையில் அமையாத/ மனித முயற்சிகளால் மேற்கொள்ளப்படும் உயிரியல் சாராத முறை (NON-BIOLOGICAL) மற்றும், நுண்ணுயி்ர் முறை (MICRO-BIOLOGICAL) மூலம் இயற்கை பண்புகள் மாற்றி அமைக்கப்பட்ட தாவரம் உள்ளிட்ட உயிரினங்களுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று அந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.



இதன்படி இந்தியாவும் தனது காப்புரிமை சட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. உயிரியல் அற்ற முறை (NON-BIOLOGICAL) என்பது மறைமுகமாக GENETICALLY MODIFIED ORGANISM எனப்படும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு காப்புரிமை வழங்கவே உதவுகிறது. மேலும் TRIPS ஒப்பந்தத்தின்படி காப்புரிமை பதிவு செய்யப்பட்ட பயிர்களை 20 வருட காலத்திற்கு வேறு யாரும் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ இச்சட்டம் தடை விதிக்கிறது. (TRIPS ஒப்பந்தத்திற்கு முன் இது 7 வருடமாக இருந்தது)

இந்தியாவின் காப்புரிமை சட்டத்தின்கீழ் நேரடியாக தாவரம், விதைகள், பயிர்வகைகள், அவை இயற்கையாக விளையும் முறை போன்றவற்றிற்கு காப்புரிமை வழங்குவதில்லை. தாவரத்தின் இயற்கையான போக்கில் அமையாமல், மனித செயல்பாடுகள் மூலம் ஏற்படும் மாற்றங்களை NON-ESSENTIAL BIOLOGICAL PROCESS என்று வகைப்படுத்துகின்றனர். இது போன்ற செய்முறைகளுக்கு காப்புரிமை பெற முடியும். ஆக GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு காப்புரிமை பெற உதவுகிறது.

அடுத்தப்படியாக TRIPS ஒப்பந்தம், தாவரங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையையும் காப்புரிமை பெறத்தக்கதாக கூறியுள்ளது. இதன்படி நமது காப்புரிமை சட்டத்திலும் 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றத்தின்படி தாவரங்களுக்கான சிகிச்சை முறைகளுக்கும் காப்புரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம் தாவரங்களுக்கு மட்டுமல்ல, அவற்றிற்கான மருந்துகள், அதை பயன்படுத்தும் முறை, உபகரணங்கள், இயந்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் காப்புரிமை பெற முடியும்.

பசுமைப்புரட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல தாவரங்களும் பூச்சிகளை எதிர்கொள்ளும் திறன் அற்றவையாக இருந்தன. எனவே பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயிகளின் கூடுதல் சுமையாக இருந்தன. இதற்கு மாறாக பூச்சிகளை கொல்லும் திறன் பெற்றதாக கூறப்படும் பாக்டீரியம் துரெஞ்ஜெரிஸ் (BACTERIUM THURENGERIUS) என்ற நச்சுப்பொருளை தாவரத்தின் மரபணுவில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. Bt என்று பரவலாக அழைக்கப்படும் இந்த முறை பருத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது கத்தரிக்காய், பருத்தி, அரிசி உட்பட பல்வேறு பெயர்களில் இந்த உயிரிதொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. நவீன சட்டங்களின் கீழ் இந்த பயிர்கள் அனைத்தும் காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்தியாவில் மான் சான்டோ, பாயர், மஹிகோ உள்ளிட்ட நிறுவனங்களே இத்தகைய காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன.

இத்தகைய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்திய விவசாயம் சென்றுவிடாமல் கட்டாய உரிமைப்பதிவு (COMPULSORY LICENSING) முறை பாதுகாக்கும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இம்முறை மூலமாக, காப்புரிமை பெறப்பட்ட ஒரு பொருள் போதிய அளவில் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கும்போதோ, அல்லது அதிக விலைக்கு விற்கப்பட்டாலோ – மக்களின் நலன் கருதி – அதே பொருளை உற்பத்தி செய்யும் உரிமை, வேறு எவருக்கேனும் வழங்கப்படும். இதன் மூலமாக ஒரு பொருள் ஒருவரிடமே இருப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றும், இதனால் இத்தகைய பயிர்கள் தனியார் சிலரின் ஏகபோக கட்டுப்பாட்டில் செல்வதை தடுக்கமுடியும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், காப்புரிமை சட்டத்தின்படி காப்புரிமை பெற்ற ஒரு பொருளை தயாரிக்க விரும்பி COMPULSORY LICENSING பெறும் ஒரு நபர், காப்புரிமை பெற்றவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார். எனவே அப்பொருளை தயாரித்து விற்பனை செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்குமோ அத்தொகையையே COMPULSORY LICENSING க்கான இழப்பீடாக கேட்பார்கள் என்பதை உண்மை. எனவே இந்த COMPULSORY LICENSING முறை விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பயன்படாது என்பதே உண்மை.

ஒரு பயிர் வகைக்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்ட உடனே அந்த பொருளுக்கான COMPULSORY LICENSING வழங்கலாம் என்றிருந்த நிலை TRIPS-க்கு பின் மாறியுள்ளது. இதன்படி காப்புரிமை பதிவு செய்து 3 ஆண்டுகள் கழிந்த பின்னரே COMPULSORY LICENSING வழங்கப்படும். இந்த 3 ஆண்டுக்காலத்தில் காப்புரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் சட்டம். சொல்வதுதான் விலை. இவற்றை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது.

TRIPS ஒப்பந்தத்தின் கீழ் காப்புரிமை சட்டம் அடைந்துள்ள மாற்றத்தின் பயனாக GMO போன்ற பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதிக லாபம் பெறமுடியும். இது போன்ற பயி்ர்கள் மலட்டுத்தன்மை மிக்கதாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்கள் விதைப்பயிர் தேவைக்கு காப்புரிமை பெற்ற நிறுவனங்களையே சார்ந்திருக்கும் அவல நிலை ஏற்படும். மேலும் காப்புரிமை காலகட்டம் முடிந்த பின்னரும் இதுபோன்ற பயிர்கள் பொது உபயோகத்திற்கு மீண்டும் வராமல் தடுப்பதற்கு அந்த காப்புரிமை சட்டத்தின்படியே பல வழிமுறைகள் உள்ளன.

காப்புரிமை பெற்ற ஒரு பொருளை வேறு முறையில் தயாரித்து மலிவு விலையில் அளிக்கும் GENERIC MANUFACTURERS-களுக்கு பழைய காப்புரிமை சட்டம் பாதுகாப்பு அளித்தது. ஆனால் புதிய சட்டதிருத்தங்கள் இந்த விவசாயிகளுக்கு பயிர்வகைகள், உரங்கள், ரசாயன உரங்கள் கிடைப்பதை தடுத்து நிறுத்தக் கூடும்.

இயற்கையில் விளையும் தாவரங்களை, மனித முயற்சி மூலம் குறுக்கீடு செய்து மரபணுவை மாற்றியமைக்கும் தாவரங்கள் அனைத்தும் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் நன்மையே செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. இவை மனிதனின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தீமைகளும் செய்யலாம். மரபணு மாற்றப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு தோல் நோய்கள், ஆண்மை-பெண்மை குறைபடுதல் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. இவற்றை வேளாண் வி்ஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.

எதிர்காலத்தில் இந்த மரபணு மாற்ற பயிர்கள், என்னென்ன தீய விளைவுகளை கொண்டுவரும் என்பதற்கோ, அவற்றை தடுக்க என்ன வழி என்பதற்கோ யாரிடமும் பதில் இல்லை.
இத்தகைய குறைபாடுள்ள உணவுப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீது உணவுப்பொருட்கள் கலப்பட தடைச்சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குற்றவியல் சட்டம், தீங்கியல் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் மூலம் வழக்கு தொடரவும், பிரசினைக்கு தீர்வு காணவும் வழி இருந்தது. ஆனால் TRIPS ஒப்பந்தம் இந்திய குடிமக்களுக்கான இந்த உரிமைகளை பெருமளவில் குறைக்கின்றது. TRIPS ஒப்பந்தப்படி இத்தகைய பிரசினைகளை ஏற்படுத்தும் தாவரங்களின் பதிவுகளை ரத்து செய்ய மட்டுமே முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோர முடியாது.

காப்புரிமை போன்ற அறிவுச்சொத்துரிமை சட்டங்கள் விதைகளை தனிநபரின் உரிமையாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க வழி காட்டுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் காப்புரிமை பதிவுபெற்ற எந்த பொருளும், எந்த தடையுமின்றி பொதுமக்கள் உபயோகத்திற்கு வந்துவிட வேண்டும் என்பதை அந்த சட்டத்தின் அடிப்படை விதி. இருப்பினும் புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ள காப்புரிமை சட்டம் சில பின் வழிகளின் மூலம் காப்புரிமை பெற்ற பொருள், ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்வதற்கு உதவுகிறது. எந்த ஒரு கண்டுபிடிப்பையும் அதன் தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தியிருந்தாலோ, அல்லது பொருளாதார முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தாலோ அந்த கண்டுபிடிப்பிற்கு மீண்டும் காப்புரிமை பெறலாம். எனவே GMO போன்ற மரபணு மாற்றப்பட்ட தாவரப்பொருட்களின் காப்புரிமையை, பன்னாட்டு நிறுவனங்கள் எளிதில் நீடித்துக் கொண்டே போகக்கூடும்.







-மு. வெற்றிச்செல்வன்
(vetri@lawyer.com)

4 comments:

Anonymous said...

Your ignorance is appaling. Intellectual Property Rights for Plant varieties is
regulated by another Act and India
does not grant patents on plant varieties or seeds.In case of plant varieties developed using
biotechnology farmers are entitled to saving seeds and reuse them.Indian Patent Act was amended
more than once to fulfill India's
obligations under TRIPS. Please
try to understand the facts and
try to read Patent Act and the
debates on that before making sweeping and illogical comments.
This creates only confusion
and misunderstanding.

மக்கள் சட்டம் said...

It is mandatory under the TRIPS Agreement for its member countries to provide Patent protection for micro-biological process and non-essentially biological process (Article 27.3). These are the processes mainly used for manufacturing! Genetically modified organisms. These processes end in the products namely seed or plant variety. And in our Patent Act these two processes are not excluded from patenting (Refer Sec 3 (i) and (j)). Though seed and plant as such cannot be patented under our Act, by providing process-by-product patent at the backdoor, patent over seed and plant is possible in India. Need not to say Bt seeds are well protected under the IP regime in India. So far India has provided 59 patents in the field of plant reproduction, new plants or process for obtaining them (Journal of IPR July 2005).

-M. Vetri Selvan
vetri@lawyer.com

சிவபாலன் said...

நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த சேவை, நிச்சயம் பாரட்டப்படவேண்டிய ஒன்று! வாழ்த்துக்கள்!!

Anonymous said...

ithaiyellaam padichittu summaavum irukka mudiyala... enna pandrathune theriyala.....

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!