Thursday, September 27, 2007

மண்ணிலிருந்து ‘பிரித்தெடுக்க’ப்படுகிறார்கள் மக்கள்

அரேபியாவைப் போல அத்தனை வறண்ட பூமியல்ல சாத்தான்குளம்! தேரிக்காட்டில் நூற்றாண்டுகளாக முருங்கையும், தென்னையும், முந்திரியும் விளைந்து வருகின்றன. பிரச்சினைகளின்றி வாழ்க்கையை நடத்த அரேபியாவின் ஒட்டகங்களைப் போல அவை இன்றுவரை உதவியும் வந்திருக்கின்றன. இருந்தாலும், இன்றைய தேரிக்காட்டு மக்கள் அரேபியாவின் மூதாதைகளைப் போல அத்தனை ஏழைகளல்லர்!



1908 ஆம் ஆண்டு அரேபியாவில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டது. சாத்தான் குளத்தைப் போலவே அந்தக் கண்டுபிடிப்பை அம்மக்கள் முதலில் கண்டு கொள்ளவில்லைதான். 1930-களில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட படையெடுத்தபோது மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தையே தீர்மாணிக்கும் அளவிற்கு அரேபியாவின் பெட்ரோல் வளம் வளர்ந்தது. உலக வல்லரசுகள் இன்றுவரை இந்தப் பகுதியில் உள்ள நாடுகளைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக்கொள்ள தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஈராக்கை ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அமெரிக்க அரசு இன்றளவும் துவம்சம் செய்து வருவது அங்கிருக்கும் பெட்ரோல் வளத்திற்காகத்தான் என்பதை பிறந்த குழந்தையும் அறியும்.



பாலைக் காட்டிலும் வெண்மை நிறம் கொண்டது டைட்டானியம். இந்தத் கனிமத்தை 1791 ஆம் ஆண்டில் மனித இனம் முதன்முதலாக அறிந்து கொண்டது. 1795 ஆம் ஆண்டில் இதற்கு “டைட்டானியம்” என்ற பெயரை அது சூட்டியது. எனினும் அதனை சுத்தமான உலோகமாக மாற்றக் கற்றுக் கொண்டது என்னவோ 1910 ஆம் ஆண்டில்தான்! இல்மனைட் மற்றும் ரூட்டைல் என்ற கனம் கூடிய கனிமங்களில் இருந்து டைட்டானியத்தைப் பிரித்தெடுக்கும் வழிமுறைகள் இதன் பின்னரே கண்டறியப் பட்டன. 1946 ஆம் ஆண்டு வரையிலுமே டைட்டானியத்தை பரிசோதனைக் கூடங்களால் மட்டுமே உருவாக்க முடிந்தது. அந்த வருடத்தில்தான் டைட்டானிய உலோகத்தினை பெரிய அளவில் உருவாக்க முடியும் என்பதைக் “கிரால்” என்பவர் கண்டு பிடித்தார். அவரால் முன்மொழியப்பட்ட அந்த முறை இன்றுவரை கையாளப்பட்டு வருகிறது.



ஆங்கிலேய அரசினருக்குக் கீழிருந்த “இந்திய நிலவியல் துறை”க்குத் தென்னிந்தியாவின் “தேரி”யிலும், கடற்கரைகளில் உள்ள “கருமணலிலும்” இல்மனைட், ரூட்டைல், மோனசைட் போன்ற “கனத்த” கனிமங்கள் இருப்பது தெரிந்து தான் இருந்தது. இருப்பினும் அன்றைய உலக சந்தையில் அவற்றிற்கு மதிப்பில்லை. எனவே இந்தக் கனிமங்களை வெள்ளையர்கள் கொள்ளையடிக்காமல் நம்மிடமே விட்டுச் சென்று விட்டார்கள்.



மற்ற உலோகங்களைக் காட்டிலும் டைட்டானியம் எடை குறைந்தது. அதே நேரத்தில் எஃக்கைக் காட்டிலும் உறுதி மிக்கது. எந்த உலோகத்துடனும் எளிதில் சேரும் சிறந்த தன்மையையும் கொண்டது. இந்தத் தன்மைகள் சோவியத் ஒன்றியத்தின் விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தன. தம் நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த உலோகத்தினை அவர்கள் பெரிதளவில் உபயோகப்படுத்தத் தொடங்கினர். இதுவே டைட்டானியத்தின் புகழை 1950--60-களில் எட்டுத்திக்கும் பரவச் செய்ததது. சோவியத் விஞ்ஞானிகளின் போக்கைக் “கன்னம்” வைத்து அறிந்து கொண்ட அமெரிக்க அரசு துடித்துதான் போனது. இருப்பினும் உடனடியாக சுதாரித்தும் கொண்டது. டைட்டானிய உலோகத்தை “இராணுவ ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உலோகம்” என்று அறிவித்து, அதனை சேமித்து வைக்கும் பணியில் உடனடியாக ஈடுபடத் தொடங்கியது. தான் உருவாக்கும் போர் விமானங்களில் மிக அதிக அளவில் டைட்டானிய உலோகத்தினை உபயோகிப்பது என்ற முடிவை எடுத்தது.



மேற்கூறிய தன்மைகளே டைட்டானியக் கனிமத்தின் தீராப் புகழுக்குக் காரணம். என்றாலும் கூட, இன்றைய தேதியில் மனித இனத்தை அதன் அப்பழுக்கற்ற வெண்மை நிறமே அதிகம் கவர்ந்திழுத்திருக்கிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் டைட்டானியக் கனிமத்தில் 95% இந்த வெண்மை நிறத்திற்காகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை!



டைட்டானியம் கனிமம் இல்லையேல் வெள்ளை பெயிண்ட்,, வெள்ளைக் காகிதம், (அ.இ.அ.தி.மு.க-வால் கண்டுபிடிக்கப்பட்டு பிறகு தமிழ்நாடு அரசியல்வாதிகள் அனைவரையும் தொற்றிக் கொண்ட “அரசியல்வாதி வெள்ளை யூனிபார்ம்” தைக்கத் தேவையான) வெள்ளைத் துணி, வெள்ளை பிளாஸ்டிக், பற்பசை, சலவைப் பவுடர், சூயிங்கம் போன்றவை இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதன் வெண்மை நம்முடன் இரண்டறக் கலந்து போயிருக்கிறது.



இந்தக் கவர்ச்சியே ரத்தன் டாட்டாவை சாத்தான்குளத் தேரியை நோக்கிப் பாய்ந்தோடி வரச் செய்தது.



குட்டம், நவ்வலடி கடற்கரை மணலிலும், சாத்தான் குனத்தின் தேரிக் காட்டிலும் மேற்கூறிய கனிமங்கள் பெரிதளவில் உள்ளன என்பதை 1980-களில் இருந்து கல்லூரி ஆய்வாளர்கள் பலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன. 1989 ஆம் ஆண்டில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை நகரத்தில் வி.வி.மினரல்ஸ் என்றொரு நிறுவனம் இயங்கத் தொடங்கியது. குட்டம், நவ்வலடிப் பகுதிகளில் கடற்கரைக் கருமணலுக்காக எப்பேற்பட்ட இழி செயலையும் செய்ய அது துணிந்தது.



கடலை அம்மையாக வணங்கும் மீனவ மக்கள் அந்த நிறுவனத்தின் கொடூர லாபப் பசியின் துவம்சத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். அரசியல் செல்வாக்கு வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்தமையால் ஏழை மீனவர்களால் அநீதியைத் தின்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியவில்லை. நிறுவனத்தின் அடாவடி ஆட்டம் இன்று ஆண்டொன்றுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் டன் இல்மனைட் கனிமத்தை உற்பத்தி செய்யும் “மதிப்பு மிக்க” நிறுவனமாக அதை “உயர்த்தியிருக்கிறது!”



1998 ஆம் ஆண்டில் இந்தியக் “கனிம மணல்” தொழிலில் உலக முதலாளிகள் எவரும் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிவித்த போதுதான் டாட்டாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. டூ பாண்ட் போன்ற பகாசுர டைட்டானிய வெள்ளை நிறுவனங்கள் வருவதற்கு முன்பு தான் முந்திக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக நினைத்தார் ரத்தன் டாட்டா. 2000 ஆம் ஆண்டில் தேரி மணலைத் தோண்டுவதற்கான அப்ளிக்கேஷனை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார். இருப்பினும் இரண்டு வருடங்களுக்குப் பிறகே அவருக்கு பதில் கிடைத்தது. சாத்தான்குளத்தை சுற்றியுள்ள 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) தேரி நிலத்தில் உள்ள மணலைத் தோண்டுவதற்கும், மணலில் உள்ள கனிமங்களைப் பிரித்தெடுப்பதற்கும், பிரித்தெடுத்த கனிமங்களைக் கூடுதல் மதிப்புள்ள பொருட்களாக மாற்றுவதற்குமான “உத்தேச” உரிமத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஜீன் 27 ஆம் தேதியன்று இதில் சுமார் 25%-ஆன 5000 ஏக்கர் நிலத்திற்கான “உத்தேச உரிமத்தை” வழங்கவே தமிழ்நாடு அரசு முன்வந்திருந்தது. வேறு வழியின்றி இந்த உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் ரத்தன் கையெழுத்திட்டார்.



கவலை வெகு நேரம் நீடிக்கவில்லை. தேரியின் சிவந்த நிறம் ரத்தனை சிலிர்க்க வைத்தது. மும்பையின் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களால் கொடுக்க முடியாத பேரானந்தத்தை சாத்தான்குளத்துத் தேரியின் வறண்ட காற்று அவருக்கு அளித்தது. உப்பு முதல் புல்டோசர் வரை முக்கித் திணறி வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து உற்பத்தி செய்து ஈட்டிய லாபத்தை சில வருடங்களுக்குள்ளேயே இந்தத் தேரியிலிருந்து கறந்துவிட முடியும் என்ற கனவுகள் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கின.



சுட்டுவிரல் ஆட்டத்தில் அனைத்தும் நடந்தேறின. இந்திய அணுசக்தித் துறையைத் துவங்கிய டாக்டர்.ஹோமி பாபாவை 1944 ஆம் ஆண்டில் இந்தியப் பிரமுகராக உருவாக்கியதே ரத்தனின் தாத்தா சர்.தோராப்ஜி டாட்டா அவர்களின் அறக்கட்டளைதான் அல்லவா? தேரியைப் பரிசோதிக்கத் தேவையான அணுசக்தித் துறையின் “சான்றிதழ்” கிடைப்பதில் இம்மியும் சிரமமிருக்கவில்லை. காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் உடனடியாகக் கிடைத்தது.



தேரியின் வளத்தைப் பரிசோதிக்க உலக நிபுணர்கள் ஓடோடி வந்தார்கள். பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக் -ஆலன்-ஹோல்ட், இந்தியாவின் எல்&டி நிறுவனங்களில் இருந்து வந்த அந்த வெள்ளை நிபுணர்கள் இரவு பகல் பாராது தம் பரிசோதனைகளை நடத்தினர். கிடைக்கும் கனிமங்களை இனம் வாரியாகப் பிரிப்பதற்கும், மதிப்பு கூட்டுவதற்கும் தேவையான திட்டங்களைத் தீட்ட ஆஸ்திரேலிய நாட்டின் ஜிஞீவிமி, இந்தியாவின் தஸ்தூர்கோ நிறுவனங்களை ரத்தன் கேட்டுக் கொண்டார்.



தேரியின் பரிசோதனைக்காக செலவிட்ட 15 கோடி ரூபாய் மன நிறைவை அளிப்பதாக அமைந்தது. நிம்மதியில் பெருமூச்சு விட்டார் ரத்தன்.


ஆடு புலி ஆட்டம்


2006 மார்ச் மாதம் அனைத்து பரிசோதனைகளும், திட்டங்களும் நிறைவடைந்தன. தண்ணீர் மட்டும்தான் பிரச்சினை. நாள் ஒன்றுக்கு சுமார் 546 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் தேவை என்றார்கள் நிபுணர்கள். தாமிரபரணியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பது முந்தைய திட்டம். குடிநீருக்கே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் மணல் குவாரிக்குத் தண்ணீரைக் கொடுக்க எந்த அரசுதான் முன்வரும்? வேறு வழியின்றி குலசேகரப் பட்டணத்தில் இதற்காக “கடல் நீர் உப்பகற்றி ஆலை” ஒன்றை நிறுவுவது என்று முடிவானது. உப்பகற்றி ஆலையோடு சேர்த்து 30 மெகாவாட் திறனுள்ள மின் நிலையம் ஒன்றையும் அமைத்தால் உப்பகற்றி ஆலைக்கு ஆகும் செலவு குறையும். மேலும் திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தையும் குறைந்த விலையில் பெற்றிட முடியும் என்று ஆலோசனை கூறப்பட்டது. இவ்வாலைகளை நிறுவுவதற்காக குலசேகரப் பட்டணத்தில் சுமார் 213 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.



இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் 2007 ஜீன் மாதம் பழைய ஒப்பந்தத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பித்தது. ஜீன் 28 ஆம் தேதியன்று இந்தப் புதிய ஒப்பந்தத்தில் டாட்டாவும், தமிழக அரசும் கையெழுத்திட்டன. இதன்படி டாட்டாவின் திட்டத்திற்காக முதல் முதலில் கோரப்பட்ட 19,768 ஏக்கர் (80 சதுர கிலோ மீட்டர்) நிலத்தில் (கிட்டத்தட்ட) சரி பாதியான 9828.78 ஏக்கர் தேரிக் காட்டை தமிழக அரசே கையகப் படுத்திக் கொடுக்கும் என்று முடிவானது.



இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தன. இவ்வெதிர்ப்பின் காரணம் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்கியது. நிலத்தை டாட்டா நிறுவனமே பட்டாதாரர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியது. “ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடியும். வறண்ட தரிசு நிலமான தேரிக்கு இதுவே அதிகம்“, என்றது டாட்டா நிறுவனம். கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அமைச்சர் ஒருவரின் தலைமையில் பகுதியைப் பாரிவையிட்டு ஆய்வறிக்கை தயார் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏக்கருக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் வரை கொடுக்கலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது.



திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று அந்தக் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது தமிழ்நாடு அரசு.



“எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தாங்கள் சந்திக்கத் தயார். திட்டத்தை விட்டு விலகுவது என்ற பேச்சுக்கு இடமேயில்லை” என்ற அதிரடி அறிக்கையை டாட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.



டைட்டானிய ஆலை வந்தால் நிலத்தை விற்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தேரிக்காட்டை நோக்கி செல்லும் காவடிக் கூட்டம் என்றும் கிண்டலடித்திருக்கிறார். தமிழக அரசும் திட்டத்தின் நன்மைகளை விளக்கி அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.



தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் திட்டம் குறித்து முழுமையாகத் தெரியுமா என்ற சந்தேகத்தை எழுப்பவே அவர்களின் மேற்கூறிய நடவடிக்கைகள் இன்றளவும் உதவியிருக்கின்றன.



திட்டத்தின் உண்மை நிலவரத்தை முதல்வரிடம் விளக்கும் பொறுப்பு டிட்கோ அதிகாரிகளுடையது. அவர்கள் அப்பணியை சரிவரச் செய்யவில்லை போலும். அவர்களின் அரை வேக்காட்டுப் பேச்சை நம்பித்தான் கலைஞர் திட்டம் குறித்துத் தவறான கருத்துக்களை அளித்துக் கொண்டிருக்கிறாரோ?இல்லை ‘‘வேறு’’ எதுவும் காரணமோ? தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் திட்டம் குறித்து தெளிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.



திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள்


இந்தத் திட்டத்தினால் மூன்று மக்கள் குழுக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இரண்டுவகை நிலப்பகுதிகளும், அவற்றில் வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.


1. திட்டத்திற்காக நிலத்தை விற்கப் போகும் மக்கள்


2. திட்டத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மின் நிலையத்தையும், நல்ல நீரைக் கடல் நீரில் இருந்து பிரித்தெடுக்கும் ஆலையையும் ஏற்றுக் கொள்ளவிருக்கும் குல சேகரப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராம மக்களும், மீனவர்களும்


3. திட்டம் வரவிருக்கிற “சாத்தான் குளத் தேரி”யை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள்


4. சாத்தான்குளம் தேரியைச் சுற்றியுள்ள நிலப் பகுதி


5. குலசேகரப்பட்டணத்தை அடுத்துள்ள கடற்கரையும், கடலும், அவற்றில் வாழும் உயிரினங்களும்.



ஆலையில் இருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக் கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாழ்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத் தன்மையைக் கொண்டிருப்பதால் ஆலையை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வாழும் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் மரபணு நோய்களும், பல்வேறு வகைப் புற்றுநோய்களும் (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியைச் சுற்றி வாழும் மக்களைப் போல) உருவாக வாய்ப்பிருக்கிறது.



குலசேகரப் பட்டணம் மற்றும் அதை அடுத்துள்ள மணப்பாடு போன்ற கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாவ்வாதாரங்களும் கடல் நீர் உப்பகற்றி ஆலையின் இயக்கத்தாலும், மின் நிலையத்தின் செயல்பாட்டாலும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.


இப்பாதிப்புகள் குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது உடனடி அவசியம். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டத்திற்காக டாட்டா நிறுவனம் மேற்கொண்ட அனைத்து ஆய்வறிக்கைகளையும் மக்கள் முன் வைத்து விவாதிக்க வேண்டியது அவசியமாகிறது.



திட்டத்திற்கான “சுற்றுச் சூழல் தாக்கீட்டு அறிக்கை”யையும், “சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அறிக்கை”யையும் புது தில்லியைச் சேர்ந்த “மின்-மெக்” என்ற நிறுவனம் செய்திருப்பதாக திட்ட அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கைகளை உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்.



அதுபோல பின்லாந்து நாட்டின் ஒளட்டோகும்பு, அமெரிக்காவின் பின்காக்-ஆலன்-ஹோல்ட், ஆகிய நிறுவனங்களும், ஆஸ்திரேலிய நாட்டின் TZMI, நிறுவனமும் திட்டம் குறித்து முன்வைத்த அனைத்து தொழில்நுட்ப அறிக்கைகளையும் உடனடியாக வெளியிட தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.



இவ்வறிக்கைகளின் அடிப்படையில்தான் இப்பகுதி மக்களும், உயிரினங்களும் எதிர்நோக்க வாய்ப்புள்ள பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கியமான இவ்வறிக்கைகளை டாட்டா நிறுவனம் இன்றுவரை வெளியிடாதது ஏன்? டாட்டாவின் இந்தக் கயமைத் தனத்தைத் தமிழ்நாடு அரசு தட்டிக் கேட்காமல் இருப்பதை எப்படிப் புரிந்து கொள்ள?



தென்மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு என்றும், நாட்டின் வளர்ச்சி என்றும் கூறிக்கொண்டு இத்திட்டம் பற்றி ஒன்றுமே தெரியாமல், அதைத் தவிர்த்து ‘எல்லாம் தெரிந்து’ அறிக்கை விடும் அரசியல் தலைவர்களிலிருந்து திட்டத்திற்கான நிலம் திருநெல்வேலிக்கு தெற்கே இருக்கிறதா?, நாகர்கோவிலுக்குத் தெற்கே இருக்கிறதா? என்பதுகூடத் தெரியாமல் குளிர்பதனம் செய்யப்பட்ட அறைகளில் இருந்து அறிக்கை விடும் அறிவு ஜீவிகள் வரை அனைவரும் யோசிக்க வேண்டும்.



எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையிலும், ஒருவனை அவன் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலிருந்து அகதியாக அவனை இன்னொரு இடத்துக்கு துரத்துவது கொடுமையானது. ஆனால், அதைச் செய்வதற்கு தற்பொழுது அனைவரும் ஒன்று திரண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்தப் பகுதியை ஏதோ பாலைவனம் போலவும் இவர்கள் அதை மிதமிஞ்சிய வளர்ச்சிப் பகுதியாக மாற்ற டாடாவின் டைட்டானியம் ஆலை உதவும் என்று காரணம் கூறிக் கொண்டிருக்கிறனர்.



திட்டத்தில் இருந்து டாட்டாவிற்குக் கிடைக்கப் போகும் லாபம் மிகப் பெரியது. 2005-06 ஆம் வருடத்தில் டாட்டா குழுமத்தின் ஒட்டுமொத்த வர்த்தகமே 97 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால் சாத்தான்குளத் தேரியின் டைட்டானியத் திட்டமோ அதைக் காட்டிலும் பன்மடங்கு லாபத்தைக் கொடுக்க வல்லது. ஆனால், அதற்காக தமிழ் மக்கள் கொடுக்கும் விலையோ மிகவும் அதிகம்.



இன்னொரு சிலப்பதிகாரமோ?



“என் தலையின் மீது நீங்கள் துப்பாக்கியையே வைத்தாலும்பயத்தில் தலையை அசைத்துடுவேன் என்று கனவு காணவேண்டாம்” என்று நான் பலமுறை கூறியுள்ளேன்

-ரத்தன் டாட்டா, மேற்கு வங்காளம், சிங்கூர் பிரச்சனையை ஒட்டி கூறியது


“எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டோம். டைட்டானியம் ஆலை அமைப்பதில் உறுதியாக இருக்கிறோம்.

-டாடா நிறுவன மேலாளர் முத்துராமன்15.8.07


“யார் என்ன சொன்னாலும் டைட்டானியம் ஆலை அமைப்பதைத் தடுக்க முடியாது. டைட்டானியம் ஆலை அமைவது உறுதி”

-தமிழக அமைச்சர் ஆற்காடு வீரசாமி28.9.07 தினத்தந்தி.


திட்டம் குறித்த தகவல்களை “ஒளித்து” வைத்திருப்பதன் மூலம் 5 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொடுக்கப்போகும் நிலத்தை வெறும் 50 கோடி ரூபாய்க்கு விலை பேசி முடிக்க டாட்டா முயற்சி செய்கிறது. தமிழ்நாடு அரசோ செங்கோலைப் பிடித்து நீதியை வழங்கத் தயங்கிறது.


“கள்வனுக்கே” பரிந்து பேசவும் அது துணிந்திருக்கிறது. தொன்மை வாய்ந்த இந்தத் தமிழ் மண்ணின் மனதில் “இது இன்னொரு கொலைக்களத் காண்டமோ?” என்ற பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறது.


வாழ்வாதாரத்தை இழந்து துடித்திட்ட கண்ணகியை நினைவுபடுத்துகின்றனர், சாத்தான்குளத் தேரியின் மைந்தர்கள்!


மீண்டும் ஒரு முறை சிலம்பின் அவல முடிவை நாம் சந்தித்துதான் ஆக வேண்டுமா?.




-அசுரன்-மருத்துவர் இரமேஷ்-கு.காமராஜ்
நன்றி:
செப்டம்பர், 2007
இந்த விவகாரம் குறித்து மேலும் தகவலுக்கு பார்க்கவும்:
www.tatatitanium.blogspot.com,
www.tatatitanium.wordpress.com

6 comments:

Voice on Wings said...

தகவல்களுக்கு நன்றி.

மாசிலா said...

கட்டுரையின் ஆதி முதல் அந்தம் வரை வெறும் குறைகளாகவே சொல்லித் தீர்த்து இருக்கிறீர்கள். உங்கள் கருத்துப்படி இந்த திட்டங்களில் ஒரு நல்ல செய்தி கூடவா இல்லை. இந்த திட்டங்களை நீங்கள் அனுகும் விதம் ஒவ்வொன்றும் கொள்கைவாத பிடிப்பின் அனுகலாகவே இருப்பது தெள்ளென தெரிகிறது.

உங்களைடைய கட்டுரையின் கருத்தாழத்தை இன்னொரு முறை கொள்கைகள் அற்ற சுதந்திர பரந்த விரிந்த மனதுடன் அலசி பாருங்கள். நீங்கள் அணிந்திருக்கும் நிறக்கண்ணாடியை அகற்றிவிட்டு சாதாரணமாக பாருங்கள். சில நல்ல விசயங்கள் புரியவரும்.

டைட்டேனியம் வளத்தை அந்நிய கம்பெனிகள் சுரண்டி கடுத்துவதைவிட ஒரு இந்தியரே அதை செய்வதால் தீமையாகவா ஆகிவிடப் போகிறது? வீணாக கிடக்கும் தரிசு நிலங்களை பொருளாதார முன்னேற்றத்திற்கு உபயோகப் படுத்தினால் தீமை கிடையாதே.

காலத்திற்கு தகுந்தாற்போல் மாறப்பழகிக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றம் அளிக்கும் கட்டுரை. இதை படிக்கும் பாமர மக்களின் மனதை கெடுக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் இக்கட்டுரைக்கு என் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன். இத்திட்டத்தினால், பலருக்கு வேலைகள் கிடைக்கும் மற்றும் பொருளாதாரம் முன்னேறும்.

(என் கருத்துக்களை எதிர்கருத்து கொண்டு வாதாட வருகிறவர்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டவனாகிறேன்.)

நன்றி.

Anonymous said...

டைட்டானியம் ஆலை பற்றிய செய்திகளை இப்பொழுதுதான் உங்கள் தளம் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி...

உங்கள் வலைப்பதிவு முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளிலிருந்து தொடர்ந்து பயனுள்ள தகவல்களை அறிய விரும்புகிறேன்.

நன்றி

அகராதி said...

டைட்டானியம் ஆலை பற்றிய செய்திகளை இப்பொழுதுதான் உங்கள் தளம் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி...

உங்கள் வலைப்பதிவு முயற்சி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளிலிருந்து தொடர்ந்து பயனுள்ள தகவல்களை அறிய விரும்புகிறேன்.

நன்றி

Me too...

Sundararajan P said...

இந்த விவகாரம் குறித்து மேலும் தகவலுக்கு பார்க்கவும்:
www.tatatitanium.blogspot.com,
www.tatatitanium.wordpress.com

Anonymous said...

தோழரே!
மக்கள் சட்டம், மனசுக்கு போட்டுள்ள கண்ணாடி, ஆதிக்கத்துக்கு மாற்று சக்தி தேடுவதில் அறிவியல் மற்றும் தொழில் வளர்சிக்கு முட்டுகட்டை இடுவதினால் மட்டும் சாத்தியம் என நம்புகிறதா?

அறிவியல் பண ஆதிக்க சக்திகளால் மட்டுமே கைப்பற்ற முடிவதற்கு காரணம் தீய அரசியல் சக்தி, கையாலகாத கல்வி,மட கலாச்சாரம்..இன்னும் பல....அதை உடைக்க, தகர்க்க முயற்சிப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

தேரி வறுமை உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.ஒரு வேளை தேரி இன்னொரு அரபாகிவிடும் பட்சத்தில் எம்மக்கள் நிச்சயம் ஒரு வேளை அதிகம் பசி ஆறுவர்

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!