Thursday, October 28, 2010
உயிர் காக்கும் மருந்துகள் மீதான காப்புரிமை கட்டுப்பாடுகள்
Thursday, October 23, 2008
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழி சித்த மருத்துவ கல்விக்கு நீதிமன்றம் தடை!
தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம், பத்தாம் வகுப்பு தேறியவர்களுக்கு அஞ்சல் வழியில் ஓராண்டில் சித்த மருத்துவம் கற்றுத்தந்து டிப்ளமோ வழங்குவதாக கடந்த ஆண்டு விளம்பரம் செய்தது.
“மருத்துவ கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் மருத்துவ பயிற்சி அளிக்க முடியும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில் (INDIAN MEDICAL COUNCIL).
சித்த மருத்துவ கல்வியை அங்கிகரிக்க இருக்கிறது இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE).
தமிழகத்தில் மருத்துவ கல்வியை அங்கிகரிக்க வேண்டியது டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் (DR.
தொலைநிலை கல்வியை அங்கிகரிக்க வேண்டியது மத்திய அரசின் தொலைநிலை கல்விக்குழு (DISTANCE EDUCATION COUNCIL).
இந்த அமைப்புகளின் அங்கீகாரம் இல்லாமல் தமிழ்ப் பல்கலைக்கழகம் மருத்துவ கல்வியை "தொலைநிலை கல்வி"யில் வழங்குகிறது”
…என்றும், இந்த கல்வி தமிழ் மக்களின் மருத்துவ நலனில் பேராபத்தை விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டு, இந்த படிப்புக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த 13-10-2008 அன்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதன்மை ஆயம் முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நமது மனுவில் உள்ள வாதங்களை ஏற்றுக்கொண்டு, தஞ்சாவூர் - தமிழ்ப் பல்கலைக் கழகம், சித்த மருத்துவ டிப்ளமோ படிப்பை நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை தொடர்வதற்கு ஆலோசனை வழங்கிய சித்த மருத்துவர்கள், எதிர் வழக்காடிய தமிழ்ப் பல்கலைக் கழக நிர்வாகத்தினர், பல்கலைக் கழகத்திற்கு ஆதரவாக வாதாடிய பரம்பரை சித்த மருத்துவர்கள், செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள், தாமதமாக வழங்கினாலும் நல்ல தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்த வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
சமூகத்தில் தீயவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை, சட்டத்தின் துணையுடன் எதிர்த்து நின்று தொடர்ந்து போராடவும், வெற்றி பெறவும் உங்கள் உதவியை நாடுகிறோம்.
Friday, July 18, 2008
தகவல் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி!

இந்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நமக்கு புகார்கள் வரவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதற்காக மருத்துவக்கல்லூரியின் இணையதளத்தை தேடினோம்.
அவ்வாறு இணையதளம் எதுவும் நமக்கு புலப்படாத நிலையில் நமது முதல் கேள்வியே மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் இணையதளம் குறித்ததாக அமைந்தது. கேள்விகள் 25-06-2008 அன்று அனுப்பப்பட்டது. அதற்கான பதில் 11-07-2008 அன்று கையெழுத்தாகி 18-07-2008 அன்று நம்மை வந்தடைந்தது. இந்த பதில்கள் அடங்கிய கடிதத்தில் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வரும், பொது தகவல் அதிகாரியுமான Dr. S.கீதாலட்சுமி , MD அவர்கள் கையொப்பம் இட்டுள்ளார்.
இனி கேள்வியும், பதில்களும்.
கேள்வி 1. தங்களது கல்வி நிறுவனத்திற்கு இணையதளம் ஏதேனும் உள்ளதா? இருப்பின் அதன் பெயரை தெரிவிக்கவும். இணையதளம் இல்லையென்றால் அவ்வாறு இணையதளத்தை அண்மையில் ஆரம்பிக்கும் உத்தேசம் உள்ளதா?
பதில் : இணையதளம் உள்ளது! http://www.mmc.org/
(தவறான தகவல்! இந்த இணைய தளம் இங்கிலாந்திலுள்ள Maine Medical Centre என்ற அமைப்பினுடையது)
கேள்வி 2. தங்கள் துறைக்கு பொதுத்தகவல் அதிகாரி மற்றும் மேல்முறையீட்டு அதிகாரிகள் என்று யாரேனும் இருந்தால் அவர்கள் குறித்த விவரங்கள் அந்த இணையதளத்தில் இடம்பெறச் செய்வீர்களா?
பதில் : இணையதளம் இல்லாததால் இந்த பிரசினை எழவில்லை!
(முதல் கேள்வியில் இணையதளத்தின் பெயரை எவ்வாறு கொடுத்தார்கள்?
அடுத்த கேள்வியிலேயே இணையதளம் இல்லை என்பதை எவ்வாறு உணர்ந்தார்கள்? தலை சுற்றுகிறது!)
கேள்வி 3. உங்கள் கல்லூரியில் பட்டமேற் படிப்பில் எத்தனைப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன? எந்தெந்த பிரிவுகளில் அவை நடத்தப்படுகின்றன? அவை அனைத்தும் இந்திய மருத்தவுக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளனவா?
பதில் : பட்டமேற்படிப்பு கல்விகள் இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவை – 34 எண்ணிக்கை. (M.D)
( M.S. என்ற பெயரில் நடத்தப்படும் படிப்புகள் குறித்து துணை முதல்வருக்கே தெரியாது போலும். அவை எந்தெந்த துறைகளில் நடத்தப்படுகிறது என்ற தகவலை எங்கே, யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் தெரியவில்லை)
கேள்வி 4 . பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்? அவர்களது பெயர், கல்வித்தகுதி, பதவி ஆகியவற்றை வழங்கவும். இவற்றில் எத்தனை நிரப்பப்படாமல் உள்ளன? அந்த காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? துறைவாரியான தகவல்களை தரவும்.
பதில் : 586. பணிமர்த்தும் அதிகாரம் தமிழக அரசுக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரம் மருத்துவ கல்வித்துறை இயக்குனரிடமும் உள்ளது.
(கேள்வியை முழுமையாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் அளவுக்கு துணை முதல்வருக்கு கல்வி அறிவு இல்லை போலுள்ளது!)
கேள்வி 5. பட்டமேற்படிப்பு பிரிவில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்? துறை வாரியான தகவல்களை தரவும்.
பதில் : 439 தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
(துறை வாரியாக கணக்கெடுக்கும் அளவிற்கு ... என்னத்தை சொல்றது..போங்க!)
கேள்வி 6. மருத்துவ பட்ட மேற்படிப்பு எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது? வகுப்பறை கல்வி, செய்முறை கல்வி, மருத்துவமனை கல்வி வழங்கப்படுவதற்கான கால அட்டவணையை வழங்கவும்.
பதில் : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நடத்தப்படுகிறது.
(அந்த விதியைதாங்க கேட்டோம். அதைச் சொல்லுங்க!)
கேள்வி 7 முதல் 18 வரை உள்ள கேள்விகளை முதல்வர், அரசு பொது மருத்துவமனை, சென்னை-3 என்ற முகவரிக்கு அனுப்பவும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
(தகவல் உரிமைச் சட்டம், பிரிவு 6(3)ன் படி கோரப்படும் தகவல் வேறொரு அதிகார அமைப்பிடம் இருக்கும்போது தகவல் கோரும் விண்ணப்பத்தை , அது எந்த துறைக்கு செல்லவேண்டுமோ அந்தத்துறைக்கு 5 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இந்த தகவலை மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்த சட்டவிதிகள் பின்பற்றப் படாததோடு, மனுவைப் பெற்று சுமார் 15 நாட்களுக்கு பிறகு பதில் தயாரிக்கப்பட்டு ,கையெழுத்தாகி அதன்பிறகு ஒரு வாரம் கழித்தே அந்த பதில் நம்மை வந்தடைந்தது)
மேற்கண்ட விவகாரங்களை விளக்குமாறு மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பப் பட்டுள்ளது. அதற்கான பதில்களும், தொடர் நடவடிக்கைகளும் இங்கு வெளியிடப்படும்.
Tuesday, December 25, 2007
குற்றவாளிக்கு ஜாமீன் உண்டு! விசாரணை கைதிக்கு ஜாமீன் கிடையாது! -உச்ச நீதிமன்ற விந்தை தீர்ப்புகள்.
டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? யாருடைய சிறுநீரகத்தையாவது திருடியிருப்பாரா? கவனக்குறைவாக சிகிச்சை அளித்து யாருடைய மரணத்திற்காவது காரணமாக இருந்திருப்பாரா? கொள்ளை லாப வெறியோடு தனியார் மருத்துவமனை நடத்தினாரா? தேவையற்ற பரிசோதனைகளை செய்யவைத்து மக்களை சுரண்டினாரா? மருந்து வியாபாரிகளோடு கள்ள உறவு வைத்து தேவையற்ற மருந்துகளை மக்களிடம் திணித்தாரா? அல்லது தன்னிடம் வரும் நோயாளிகளை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து இணைய தளம் மூலம் வணிகம் செய்தாரா? டாக்டர் பினாயக் சென் ஏன் கைது செய்யப்பட்டுள்ளார்? அவரை ஜாமீனில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் ஏன் மறுப்பு தெரிவிக்க வேண்டும்?
யார் இந்த பினாயக் சென்?
தமிழ்நாட்டில் “வ”(VA) என்ற ஒலிக்கப்படும் எழுத்து மேற்கு வங்கத்தில் “ப”(BA) என்று ஒலிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் “டாக்டர் பினாயக் சென்”-ஐ தமிழ்ப்படுத்தினால் “விநாயக் சென்” ஆகிவிடும்.

இந்த டாக்டர் விநாயக் சென், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரியில் MBBS மற்றும் MD ஆகிய படிப்புகளை மிகச்சிறப்பாக படித்துத் தேறியவர். பின்னர் 1976 முதல் 1978ம் ஆண்டுவரை புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக மருத்துவத்துறையில் ஆசிரியராக பணியாற்றியவர். பிறகு சமூக-பொருளாதார தளத்தில் பின் தங்கிய மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பணியை உதறிவிட்டு(பல தனியார் மருத்துவமனை அழைப்புகளையும் புறக்கணித்துவிட்டு) கூலித்தொழிலாளிகள் மற்றும் ஆதிவாசி மக்கள் வாழும் பகுதியில் சென்று மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார்.
வறுமை நிலையில் உள்ள மக்களின் நோய் அகற்ற, அவர் படித்த நவீன மருத்துவம் முழுமையாக பயன்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமுறைகளையும் பயன்படுத்திய அவர், சுகாதாரமான வாழ்வும் - ஊட்டச்சத்துமே நோயற்ற வாழ்வுக்கு சரியான வழி என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மக்களின் நல்வாழ்வுக்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்தும் அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-மருந்து மற்றும் மருத்துவ சேவை வியாபாரிகளின் கூட்டணிக் கொள்ளை காரணமாக மக்களுக்கு பயன்படாமல் போவதைக் கண்டு மனம் கொதித்தார். மேலும், சமூகத்தில் நிலவும் சுரண்டல் அமைப்பில் ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் வளங்கள் சூறையாடப்பட்டு, அம்மக்கள் அகதிகளாக விரட்டப்படுவதை கண்டு கொதித்து எழுந்தார்.

ஆரோக்கியமும், நல்வாழ்வும் அடிப்படை மனித உரிமைகள் என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர் வினாயக் சென், மக்கள் சிவில் உரிமைக் கழக(Peoples’ Union for Civil Liberties)த்துடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். (தமிழகம் போலல்லாது, சில மாநிலங்களில் அந்த அமைப்பு சாமானிய மக்களுக்காக உண்மையிலேயே செயலாற்றி வருகிறது) பின்னர் அந்த அமைப்பின் தேசியத்துணைத் தலைவராகவும், சத்திஸ்கர் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆதிவாசிகள் மற்றும் தலித் மக்களின் நலன்களை அரசு அமைப்புகள் புறக்கணித்தபோது, அம்மக்கள் மாவோயிஸ இயக்கங்களில் சேர்ந்தனர். மாவோயிஸ இயக்கப்பணியாளர்களை அரசுப்படையினரும், அரசின் ஆதரவு பெற்ற சல்வா ஜுடும் என்ற ஆதிக்க சக்திகளின் கூலிப்படையினரும் வேட்டையாடுவதைக்கண்டு மனம் பொறுக்காத அவர், உண்மை கண்டறியும் குழுக்களை அமைத்து அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற கூலிப்படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினார். 
அதேநேரத்தில் அடித்தள மக்களின் நல்வாழ்வைப்பேண சமூக மருத்துவத்துறையிலும் பல சாதனைகளைப் படைத்தார். இதைப் பாராட்டும்விதமாக வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி, அதன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் “பால் ஹாரிசன்” என்ற பெருமை மிக்க விருதை கடந்த 2004ம் ஆண்டில் டாக்டர் வினாயக் சென்னுக்கு வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில்தான், கடந்த 2007 மே மாதம் 17ம் தேதி சத்திஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் டாக்டர் விநாயக் சென் கைது செய்யப்பட்டார். பணிநிமித்தமாக கொல்கத்தா சென்றிருந்த அவரை, தலைமறைவாகி விட்டார் என்று காவல்துறையினர் பிரச்சாரம் செய்ததால் தாமாகவே காவல் நிலையம் சென்ற அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக அவர் மீது, சத்திஸ்கர் சிறப்பு பொதுப்பாதுகாப்பு சட்டம் (Chhattisgarh Special Public Security Act, 2006) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (Unlawful Activities (Prevention) Act, 2004) ஆகிய சட்டங்களின்படி கைது செய்துள்ளதாக சத்திஸ்கர் மாநில அரசு கூறுகிறது.
ராய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயண் சன்யால் என்ற கைதி எழுதிய கடிதங்களை, மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பியூஷ் குஹா என்பவருக்கு டாக்டர் விநாயக் சென் சட்டவிரோதமாக கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் குஹா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடைபெற்றுள்ளதாகவும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தம்மை சித்ரவதை செய்து வெற்றுத்தாள்களில் காவல் மற்றும் சிறைத்துறையினர் கையொப்பம் பெற்றதாக பியூஷ் குஹா நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். 
சிறையில் உள்ள நாராயண் சன்யால், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் டாக்டர் விநாயக் சென்னுக்கு எழுதிய கடிதத்தை அவருக்கு எதிரான சான்றாக காட்டுகிறது அம்மாநில அரசு. அந்த கடிதத்தில் டாக்டர் விநாயக் சென்-ஐ “தோழர்” என்று நாராயண் சன்யால் அழைத்துள்ளாராம். இது ஒன்றே போதுமாம், டாக்டர் விநாயக் சென்-னும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறுவதற்கு. ஆனால், நாராயண் சன்யாலை சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பலமுறை பார்த்துள்ள டாக்டர் விநாயக் சென், சிறையில் கைதிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து அரசுத்தரப்பில் விளக்கம் ஏதுமில்லை.
சத்திஸ்கர் மாநில அரசின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இதுவரை பத்திரிகைகளில் வெளிவந்ததுதான். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவர் மீது நீதிமன்றத்தில் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
ஆனால் அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலோ, அரசு அதிகாரிகள் வழக்கம் போல தாமதப்படுத்தும் தந்திரங்களை கையாண்டு வருகின்றனர்.
இதன் உச்சகட்டம் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 10ம் தேதி, நாட்டின் கடைசி நியாயஸ்தலமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்திலும் நடந்தேறியது. நீதியரசர்கள் அஷோக் பான், டி.கே. ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் டாக்டர் விநாயக் சென் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடினார்.
அப்போது டாக்டர் விநாயக் சென் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், எனவே அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் விநாயக் சென்னின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டரில் காவல்துறையினர் “கதை விட்டதை”ப்போல எந்த விவகாரமும் காணப்படவில்லை என்று ஆந்திர மாநில குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதம் அனைத்தையும் கேட்ட நீதியரசர்கள், “இந்த வாதங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றத்தில் கூற வேண்டியது” என்று கூறினர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டே பதிவு செய்யாத நிலையில் இருப்பதால்தான் உச்சநீதிமன்றம் வர நேர்ந்தது” என்று எடுத்துரைத்தார்.
ஆனால் அவரது வாதத்தை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்த நீதியரசர்கள், டாக்டர் விநாயக் சென்-னை ஜாமீனில் விடமுடியாது என்று தீர்ப்பளித்தனர். டாக்டர் விநாயக் சென்னுக்கு ஜாமீன் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நாள், டிசம்பர் 10, 2007. மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படும் ஒரு தினத்தில்தான் மனிதஉரிமைக்காக போராடிய ஒருவருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்-துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையும் ஒப்பு நோக்கலாம்.
மும்பையில் கடந்த 1993 ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் தத் உட்பட சுமார் 100 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக்கூறி சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தண்டனையை வழங்கிய நீதிபதி, நடிகர் சஞ்சய் தத் 100 ஆண்டுகள் வாழ்ந்து பல திரைப்பட சாதனைகளை படைப்பார் என்றும், அவரது ஆயுளில் 6 வருடங்களை மட்டுமே தாம் பறிப்பதாகவும் மிகுந்த கவலையுடனும், அக்கறையுடனும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு செய்துள்ள நிலையில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட சிலருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம்.பஞ்ச்சால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆக அரசியல் பின்புலமும், பிரபலமும் இருந்தால் உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவருக்குக்கூட ஜாமீன் வழங்கும். ஆனால் இதுபோன்ற உயர்மட்ட தொடர்புகள் இல்லாத சாதாரண டாக்டர் விநாயக் சென் போன்றவர்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வழியில்லை.
சட்டத்தின் முன் அனைவரும் சமமாம். நம்புவோம்!
-சுந்தரராஜன்
டாக்டர் விநாயக் சென்-ஐ விடுவிக்க கோரும் மனுவிற்கு:
http://www.freebinayaksen.org/
Tuesday, October 16, 2007
தமிழ்ப் பல்கலைக் கழகம் - சித்த மருத்துவக் கல்வி - தகவல் உரிமை சட்டத்தின்கீழ் மேல் முறையீடு
இதற்கிடையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுவதாக தெரியவந்தது. ஆனால் இந்தப் பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மருத்துவக்குழுவோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமோ அங்கிகரிக்க வில்லை என்பதும் தெரியவந்தது. எனவே இந்த பட்டங்களின் அந்தஸ்து குறித்து சில தகவல்களை தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கடந்த 05-09-2007 அன்று கேட்டோம்.
இம்மனுவைப் பெற்றுக்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். க. பாஸ்கரன் அவர்கள் பதில் அனுப்பி உள்ளார். அதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் சித்த மருத்துவ பட்டய படிப்பை எதிர்த்து நாம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நாம் கேட்டுள்ள விவரங்களை தெரிவிக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.
மேலும் மேல்முறையீடு செய்ய விரும்பினால் துணைவேந்தரிடம் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நல் வாய்ப்பொன்றை வழங்கி உள்ளார். எனவே நாம் மேல்முறையீட்டு மனுவை அனுப்பி உள்ளோம். அதன் நகல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை
அனுப்புனர்,
பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்பு செட்டி தெரு,
சென்னை-600 001.
பெறுனர்,
துணை வேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - 613 010.
ஐயா,
பொருள்: தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 19ன் கீழான மேல் முறையீட்டு மனு
---
கடந்த 05-09-2007 அன்று, தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை வழங்குமாறு பொதுத்தகவல் அதிகாரியான பதிவாளருக்கு மனு அனுப்பினேன்.
அக்கேள்விகள் கீழ் வருமாறு:
1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு அஞ்சல் வழியில் வழங்கப்படும் சித்த மருத்துவப் பட்டயக்கல்வி குறித்ததே. அந்த வழக்கில் தங்கள் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி அல்லாத முறைகளில் வழங்கப்படும் ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர் (M Phil) ஆகிய பட்டங்கள் குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2007 அக்டோபர் முதல் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது தங்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அம்சம் குறித்த - தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 8ன் படி தகவல் அளிக்க விலக்கு அளிக்கப்பட்ட அம்சங்களில் சேர்க்கப்படாத தகவலை அளிக்க மறுப்பது, தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 20ன் கீழ் தண்டனைக்கு உரியது.
எனவே, மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.
தங்கள் உண்மையுள்ள,
மக்கள் சட்டம் வலைப்பூவின் இதுபோன்ற சமூக செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நீங்களும் தேவைப்படும் இடங்களில் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகளின் தூக்கத்தை கலையுங்கள்.
Saturday, September 8, 2007
மருத்துவ மாணவர்களின் நாட்டுப்பற்று! கிராமப்புற விவசாயிகளின் கதி என்ன?

மாணவர்களின் கோரிக்கைக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரும் இடதுசாரிகளின் கருத்தை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: தினமலர், 8 செப்டம்பர் 2007
இந்தப்பிரசினை மருத்து மாணவர்கள், இடதுசாரிகள், தமிழக முதலமைச்சர் மட்டுமே சார்ந்த விவகாரம் அல்ல. கிராமப்புறங்களில் வாழும் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார பிரசினை.
விவசாயத்திற்கான மானியங்கள் வெட்டு, மின்வெட்டு, நீர் ஆதார பிரசினைகள், மரபணு தொழில் நுட்பத்தின் படையெடுப்பு, மணல் கொள்ளை போன்ற பலவித பிரசினைகளில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு கிடைக்கும் அத்தியாவசிய தேவைகளையும் கிடைக்கவிடாமல் செய்வதில்தான் நம் அரசியல் தலைவர்களுக்கு எத்தனை ஆர்வம்?
பசுமை விகடன் இதழில் வெளிவந்த அந்த விவசாயிகளின் குரலை சற்று கேட்போமா?




ச்சும்மா சிரிச்சிட்டு போயிடாதீங்க சித்தப்பு.... சிந்திங்க!
மருத்துவ மாணவர்களுக்கு பரிந்து பேசும் இந்த அரசியல் தலைவர்கள், விவசாயிகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
-மக்கள் சட்டம் குழு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவப்படிப்பு – கிணறு தோண்ட பூதம்.
இதன் மூலம் போலிமருத்துவர்கள் அதிகரித்து, மக்களின் ஆரோக்கியம் பாதிக்கும் என்பதால் அஞ்சல் வழி மருத்துவ கல்விக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மையம், பாடத்திட்டங்கள் குறித்த கையேட்டை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மூலிகை அறிவியல், மருத்துவ மூலிகை அழகுக்கலை, மரபு மருத்துவ உணவு முறைகள் ஆகிய பாடத்திட்டங்களும் உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய மூலிகை, இயற்கை உணவு, இவற்றின் மூலமான அழகுக்கலை ஆகியவற்றை மீட்டெடுக்க தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
ஆனால் இந்த ஆர்வம் எல்லை மீறி சித்த மருத்துவ பட்டயப் படிப்புவரை செல்லக்கூடாது என்பதே நமது கவலை. இந்த பட்டய படிப்பில் (1) சித்த மருந்தறிவியல் அறிமுகம், (2) மருந்தியல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துகளின் தரநிர்ணயம் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாடங்களை மட்டுமே கொண்ட கல்வித்திட்டம் மருத்துவ கல்வி ஆகிவிடாது.
சித்த மருத்தவத்துறையில் தற்போதைய சித்த மருத்துவ (Bachelor of Siddha Medicine and Surgery) இளங்கலை பட்டப்படிப்பு, சில காலம் முன்பு வரை Bachelor of Indian Medicine என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரை ஒட்டியுள்ள Diploma in Siddha Medicine என்ற பெயர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த பட்டயப்படிப்பில் படிப்பவர்கள் மருத்துவம் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
உள்ள நாட்டில் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் Diploma in Siddha Medicine கல்வி பெரும் கேடுகளையே விளைவிக்கும்.இந்த விவகாரம் குறித்த ஆய்வில் நாம் ஈடுபட்டபோது, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களும் வழங்கப்படுவதாக தெரியவந்தது.
இந்த பட்டங்களை அங்கீகரிக்கவோ, இந்த பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர் அல்லது விரிவுரையாளராக பணியில் அமர்த்தவோ மேற்கண்ட அமைப்புகள் இதுவரை முன்வரவில்லை. எனவே இந்த பட்டங்களும் இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டதைப்போன்ற பொருளற்ற அலங்கார பட்டங்களாகவே உள்ளதாக தோன்றுகிறது.
எனவே இந்த ஆய்வு முனைவர் மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
சென்னை
அனுப்புனர்,
பி. சுந்தரராஜன்,
வழக்கறிஞர்,
1-P, பாண்டு கிளிக்ஸ் பிளாஸா,
330/168, தம்புச்செட்டி தெரு,
சென்னை – 600 001.
பெறுனர்,
பதிவாளர்,
(பொதுத்தகவல் அதிகாரி)
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010.
ஐயா,
பொருள்: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பிரிவு 6ன் படி
தகவல் கோருதல்.
---
தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவ துறையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெறுவதாக அறிகிறேன். ஆய்வு முனைவர்(Ph D), ஆய்வு நிறைஞர்(M Phil) ஆகிய பட்டங்களுக்கான ஆய்வுகளும் நடைபெறுவதாக அறிகிறேன். இதுகுறித்த கீழ்க்கண்ட தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. தங்கள் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் சித்தமருத்துவம் படித்த முழுநேரப் பேராசிரியர்கள் எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?
2. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை எத்தனை பேர், சித்தமருத்துவ துறையில் ஆய்வு முனைவர்(Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர்(M Phil) பட்டம் பெற்றுள்ளனர்? இந்தப் பட்டங்களுக்காக தற்போதைய நிலையில் எத்தனை மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்?
3. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையில் வழங்கப்பட்ட ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டங்களை இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE) அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளது? இல்லையெனில் எந்த அடிப்படையில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது?
4. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா? ஆம் எனில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக பணி நியமனம் பெற்றுள்ளனர்?
5. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முனைவர் (Ph D) மற்றும் ஆய்வு நிறைஞர் (M Phil) பட்டம் பெற்றவர்களை சித்தமருத்துவ விரிவுரையாளர்களாக –அல்லது- பேராசிரியர்களாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கவில்லை எனில் அங்கீகாரம் பெற என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது?
அரசுத்துறை அலுவலகங்களில் பொதுத்தகவல் அலுவலர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றும், அது குறித்து இணையதளம் உள்ளிட்ட வழிகளில் பொது அறிவிப்புகள் கொடுக்க வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 4 வலியுறுத்துகிறது. எனினும் தங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பொதுத்தகவல் அலுவலர் குறித்த அறிவிப்பு இல்லை என்பதால், பதிவாளரான தங்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது.
மேலேக் கோரப்பட்ட தகவல்களை உரியகாலத்தில் வழங்கும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தகவல் கோரலுக்கான கட்டணம் ரூ.10/= (பத்து ரூபாய் மட்டும்) நீதிமன்ற கட்டண வில்லையாக செலுத்தப்பட்டுள்ளது.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
(பி. சுந்தரராஜன்)
-மக்கள் சட்டம் குழு
Saturday, September 1, 2007
போலி மருத்துவர்களை உருவாக்க முனையும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்கு!




நன்றி: தினகரன், 01-09-2007.
நன்றி: தினமலர், 01-09-2007.

இந்த சிறுவன் வைத்தியம் பார்ப்பது உண்மை என்றால் அது பகுத்தறிவுக்கும், மருத்துவ நெறிமுறைகளுக்கும், சட்டத்திற்கும் எதிரானது. 

கொள்ளை லாபமே குறிக்கோளாக உள்ள இந்த போலி மருத்துவர்களிடமோ, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அதிபர்/ஆசிரியர்களிடமோ இதை விட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இது போன்ற சமூக அவலங்களை அகற்ற உதவும்.
Friday, August 24, 2007
போலி டாக்டருக்கு படிக்கணுமா? தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகம் வாங்க!
இந்த சட்ட விரோத செயலுக்கு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அரசு பல்கலைக்கழகமும் உதவி செய்வது காலத்தின் கோலம்.
(தினத்தந்தி, திருச்சி பதிப்பு : 29-07-07)
இந்த விளம்பரத்தில் பல்கலைக்கழகத்தின் முகவரியோ, வேறு எண்களோ, இணையதள முகவரியோ இல்லை. பதிலாக சமையல் கலை கற்றுத்தரும் கல்லூரிகளின் முகவரிகள்தான் உள்ளன.
மருத்துவ கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் மருத்துவ பயிற்சி அளிக்க முடியும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில் (INDIAN MEDICAL COUNCIL).
சித்த மருத்துவ கல்வியை அங்கிகரிக்க இருக்கிறது இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE).
தமிழகத்தில் மருத்துவ கல்வியை அங்கிகரிக்க வேண்டியது டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் (DR. MGR MEDICAL UNIVERSITY).
தொலைநிலை கல்வியை அங்கிகரிக்க வேண்டியது மத்திய அரசின் தொலைநிலை கல்விக்குழு (DISTANCE EDUCATION COUNCIL).
இந்த அமைப்புகளின் அங்கிகாரம் இல்லாமல் ஒரு பல்கலைக்கழகம் மருத்துவ கல்வியை "தொலைநிலை கல்வி"யில் வழங்குகிறது, சமையல் கலை கல்லூரிகள் வழியாக.
எனவே மருத்துவ கல்லூரியில் பல்லாயிரம் ரூபாய்களை கொட்டி, ஐந்தாண்டுகளை செலவு செய்து இனி யாரும் மருத்துவம் படிக்க வேண்டாம். வீட்டிலிருந்தபடியே தொலைநிலைக்கல்வியில் ஒரே ஆண்டிலேயே மருத்துவம் படித்து மருத்துவர் ஆகலாம்.
வாருங்கள் தமிழர்களே, மருத்துவம் படிப்போம்! நமக்கே உடற்கோளாறு என்றால் வேறு நல்ல டாக்டராக பார்ப்போம்!
-மக்கள் சட்டம் குழு





