Showing posts with label சட்டம் - நீதி. Show all posts
Showing posts with label சட்டம் - நீதி. Show all posts

Sunday, July 31, 2016

தமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்

தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துகளை பதிவு செய்கிறார். 



தற்சமயம் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, ஆர்.கே.ஆனந்தின் தீர்ப்பின் வெளிச்சத்தில் பரிசீலிப்போம். உயர் பதவிகளில் உள்ளவர்களும், இருந்தவர்களும், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்களும் கடும் குற்றம் புரிந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; இது என் கருத்து. ஆனால், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்கள் தண்டிக்கப்படுகின்றனரா? : சாட்சியை விலை கொடுத்து வாங்கிய ஆர்.கே.ஆனந்த் கடந்த, 1999 ஜன., 1ம் தேதி, டில்லியில் பெரும் செல்வந்தரின் மகன் சஞ்சீவ் நந்தா என்பவர், பி.எம்.டபிள்யூ., காரை கவனக்குறைவாகவும், அதி வேகமாகவும் ஓட்டி விபத்தை நிகழ்த்தினார். அதில், ஆறு பேர் உயிர் இழந்தனர்; ஆறு பேரில், மூவர் காவல்துறையினர். விபத்தை நிகழ்த்திய பின் நிற்காமல் சென்றுவிட்டார். அவர் காரை ஓட்டியபோது, மதுவும் அருந்தி இருந்தார் என்பது காவல்துறையின் வழக்கு. குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. குற்றவியல் நீதிமன்றத்தில், சஞ்சீவ் நந்தாவின் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த்; அரசு தரப்பு வழக்கறிஞர் ஐ.யு.கான். இந்த நிலையில், வழக்கின் நேரடி சாட்சியான சுனில் குல்கர்னியுடன் மேற்சொன்ன ஆர்.கே.ஆனந்த் மற்றும் ஐ.யு.கான் சந்தித்து, சாட்சியை பெரும் தொகை கொடுத்து வாங்குவது என்ற நிகழ்ச்சியை, 'என்டிடிவி' சேனல், 2007 மே, 30ம் தேதி ஒளிபரப்பியது. இது டில்லியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. அந்த சேனல் இப்படி ஒரு முறைகேட்டை ஒளிபரப்பாமல் இருந்திருந்தால், இது வெளி உலகத்தின் மற்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கே வந்திருக்காது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : இந்த நிலையில், டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் மற்றும், இருவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. உயர் நீதிமன்றத்தின், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. இதை எதிர் கொண்ட ஆர்.கே.ஆனந்த், பல இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தார்; அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த விபரங்களுக்குள் நான் செல்லவில்லை.

அவர் எழுப்பிய, ஒரு முதல் நிலை எழு வினா பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவர், 'என்டிடிவி -தான் குற்றவியல் விசாரணையில் தலையிடும் வகையில் ஒளிபரப்பு செய்தது; எனவே, அதன் மீது தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்' என்று ஆட்சேபனையை எழுப்பினார்; அந்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆர்.கே.ஆனந்திற்கு வழங்கப்பட்ட தண்டனை : அவர் சாட்சியை விலை பேசிய தன் மூலம், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட்டு நீதிமன்ற மாட்சிமையை குலைத்து அவமதிப்பு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதாக, 2008 ஆக., 21ல், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது; அவருக்கு கீழ்கண்ட தண்டனைகளை விதித்தது.

1) டில்லி உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும், நான்கு மாதங்களுக்கு அவர் வழக்கறிஞர் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அவர் மற்ற வழக்கறிஞர் வேலைகளை, - ஆலோசனை, அறிவுரை, விளக்கவுரை, கருத்துகளாகச் செய்யலாம்.
2) மூத்த வழக்கறிஞர் பதவி பறிக்கப்பட்டது.
3) 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஆர்.கே. ஆனந்தின் மேல்முறையீடு : இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை, 2009 ஜூலை, 29ல் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்று கூறி, 'அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது?' என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவிப்பு அனுப்பியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்ய, 'அமீக்கஸ் க்யூரி'யாக, இரு வழக்கறிஞர்களை நியமித்தது. அவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம் மற்றும் நாகேஸ்வர ராவ். அதன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: உயர் நீதிமன்றத்தின், இருவர் அமர்வின் மூத்த நீதிபதி, தன் வழக்கை விசாரிக்கக்கூடாது என்றும், வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். அமர்வுக்கு தலைமை தாங்கிய அந்த நீதிபதியின் மேல் கடும் குற்றச்சாட்டுகளை கூறினார். அவரது மனு, நீதிபதியை மிரட்டுவதாக இருந்தது. அந்த மனு, தலைமை தாங்கிய மூத்த நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

நீதிபதியின் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், மற்றொரு நீதிபதி மனுவின் மீது எந்த உத்தரவும் போடவில்லை. ஆனால், அமர்வில் எந்த பங்கும் வகிக்க மறுத்து விட்டார். இதை பயன்படுத்தி, மேற்சொன்ன உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். தலைமை நீதிபதி, அமர்வின் இளைய நீதிபதியை மாற்றி மற்றொரு இளைய நீதிபதியை கொண்ட அமர்வை ஏற்படுத்தினார். 'பழைய அமர்வே மறுபரிசீலனை மனுவை விசாரிக்க வேண்டும்' என்று ஆர்.கே.ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
புதிய அமர்வு, மறுபரிசீலனை மனுவை, தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை, அமர்வின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைய நீதிபதி, உத்தரவு எழுதினார். அதற்குப்பின் அந்த வழக்கின் முக்கிய உத்தரவுகள் அனைத்தையும் இளைய நீதிபதியே எழுதினார்.

இறுதியில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை 29ல் தள்ளுபடி செய்கையில், ஆர்.கே.ஆனந்திற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்றும், அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது என்பதற்கும், நான்கு மாதங்களுக்கும் மேலாக, நீண்ட காலத்திற்கு வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க கோரியது.

ஆர்.கே.ஆனந்திற்கு அதிக தண்டனை அளிக்கப்பட்டதா? : கடந்த, 2010 ஜன., 13ல் அவர், உச்ச நீதிமன்றத்தில் அவரது விளக்கத்தை அளித்தார். அதில், அவர் மன்னிப்பு கோரியும், நடவடிக்கையை கைவிடுமாறும் கோரினார். அந்த விளக்கத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த தவறுக்கு அவர் வருந்தியதாக தெரியவில்லை என்றது. இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியவுடன், 2011 மே 4ல், கூடுதல் ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை, 29ல் தீர்ப்பில் கூறிய அனைத்தையும் ஒப்புக்கொள்வதாகவும், முந்தைய விளக்கத்தில் கூறிய ஆட்சேபகரமான பகுதியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.

பின், 2012 செப்., 24ல் மேலும், ஒரு ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், அவர் இந்திய பார் கவுன்சிலுக்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்க ஒப்புக் கொள்வதாகவும், ஒரு ஆண்டுக்கு டில்லி இலவச சட்ட மையத்தில் ஏழைகளுக்காக வழக்கு நடத்த ஒப்புக் கொள்வதாகவும், 'இந்த ஓராண்டில், வழக்கறிஞர் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டேன்' என்றும் கூறி இருந்தார். அவர் செய்த கடும் குற்றத்திற்கு சிறை தண்டனை தான் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை பதிவு செய்தாலும், அதிக தண்டனை வழங்கவில்லை.

அவருக்கு, 69 வயது ஆவதாக வும், அவர், 2007 முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவதாகவும், அவரது மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், 21 லட்சம் ரூபாய் பார் கவுன்சிலுக்கு நன்கொடை அளிப்பதையும், ஓர் ஆண்டு இலவச சட்ட உதவி மைய வழக்குகளை நடத்த ஒப்புக் கொள்வதையும் அதிக தண்டனை வழங்காத தற்கு காரணங்களாக அடுக்கியது. இறுதியில், 2012 நவ., 2012ல் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு கூறியது.

ஆர்.கே.ஆனந்திற்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை என்பது, ஒரு பொருட்டே அல்ல. அவர், 21 கோடி ரூபாய் கொடுத்தால் சிறை தண்டனையில் இருந்து விடுபடலாம் என்றால், அதையும் கொடுக்கும் வசதி படைத்தவர். ஆனால், சாதாரண வழக்கறிஞர்கள் என்ன செய்வது? இப்படி, ஒரு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்து, தண்டனையில் இருந்து சுலபமாக தப்பிக்க இயலுமா? விசாரணைக்குப் பின் தண்டனை என்பதற்கு மாறாக, விசாரணையை நிலுவையில் வைத்தே பல மாதங்கள் தமிழக வழக்கறிஞர்களை தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாமா? ஆறு மாதங்களுக்கும் மேலாக, ஒன்பது மாதங்கள் வரையில் கூட வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தமிழக வழக்கறிஞர்கள் செய்த தவறுகள், ஆர்.கே.ஆனந்த் செய்த தவறுகளை விட கூடுதலானதா? ஆர்.கே.ஆனந்த் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டப் பிரிவு - 34ன் கீழ் விதி ஏதும் செய்யவில்லை. எனவே, ஆர்.கே.ஆனந்த் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனையாக, 'சஸ்பென்ஷன்' அல்லது வழக்கறிஞர் பதிவில் இருந்து நீக்கம் என்ற தண்டனையை அளிக்க முடியாது என்று வாதிடப்பட்டது.

அந்த வாதத்தை, உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் உதவி செய்ய நியமித்த, இரு மூத்த வழக்கறிஞர்களும் ஆதரித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் இதற்கு முன் வழங்கிய தீர்ப்பில், 'சஸ்பென்ஷன் மற்றும் பதிவில் இருந்து நீக்கம் என்பதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையாக அளிக்க முடியாது' என்று கூறி இருப்பதை, தீர்ப்பின் பத்தி - 138ல், கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளது. இந்த சூழலில், உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்களையும் வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை உண்டாக்கச் சொன்னது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் நபரை, அவர் நீதிமன்றத்தில் வழக்காடுவதில் இருந்து விலக்கி வைக்க வகை செய்துள்ளது. எனவே, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய விதிகள் தேவையற்றவை. இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை உண்டாக்குவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கைத் தான் சுட்டிக் காட்டுகிறது. ஏற்கனவே உரிய விதிகள் இருப்பதால் இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது என் கருத்து. பார் கவுன்சிலும், ஒழுங்கு நடவடிக்கையை ஒட்டி நடைபெறும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, சஸ்பென்ஷனோ அல்லது பதிவு நீக்கமோ செய்யலாமே ஒழிய, விசாரணை நிலுவையில் இருக்கும்போது செய்ய முடியாது.

இதை, இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மன்னன் குமார் மிஸ்ராவே, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆணை உறுதி உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், நான் ஓய்வு பெற்றபோது ஆற்றிய உரையில், 'பார் கவுன்சில் சஸ்பென்ஷனை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்' என்றேன்.

மேலும், ஆர்.கே.ஆனந்த் வழக்கில், உச்ச நீதிமன்றம், 'நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, பார்கவுன்சில் சஸ்பென்ஷன் செய்ய இயலும்' என்றது. இத்தீர்ப்பின் பத்தி - 138ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், பத்தி - 136ல், நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் (இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி) வாதத்தை உச்ச நீதிமன்றம் கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளது.எனவே, பார் கவுன்சிலுக்கு விசாரணையை நிலுவையில் வைத்து சஸ்பென்ஷன் செய்யும் அதிகாரம் இல்லை. 'பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வன்முறை செய்த வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் சஸ்பென்ஷன் செய்ய மாட்டேன்' என்று கூறும் மன்னன் குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மேல் மட்டும் சீறி பாய்வதேன்? சமீபத்தில், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கோல்கட்டாவிலும் வழக்கறிஞர்கள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய போது, அவர் இன்று வரை மவுனமாக இருப்பது ஏன்; தமிழகத்தில் மட்டும் வேறுபட்ட நிலைப்பாட்டை அவர் கொள்வதற்கு காரணம் என்ன?

கடுமையான குற்றம் இழைத்த, ஆர்.கே.ஆனந்திற்கு சிறை தண்டனை இல்லை. அவர் மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்தார். ஆனால் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் நிலை என்ன? உயர் நீதிமன்றத்தின், முதலாவது அமர்வு முன், தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும் என்று அமைதியான முறையில் பதாகையை துாக்கிப் பிடித்தாலும், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாக தான் கொள்ள வேண்டும். ஆனால், அந்த அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதும் தொடரவில்லை. ஆனால் அவர்கள், ஒரு மாதம் சிறையில் இருந்தனர். அவர்களை, ஏழு மாதம் சஸ்பென்ஷனில் வைத்தது பார் கவுன்சில்; அதையே தண்டனையாகவும் அளித்தது. அதேபோல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்த நீதிமன்றத்தில் விசாரணையை பார்க்க செல்ல அனுமதிக்க வேண்டும் என்றதற்காக, பல வழக்கறிஞர்களை பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்தது. அவர்களில் சிலரின் சஸ்பென்ஷன், ஒன்பது மாதங்களுக்கு மேலாகி யும், இன்னும் தொடர்கிறது. சி.ஐ.எஸ்.எப்., சம்பந்தப்பட்ட வழக்கிலும், பல வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலால் விசாரணை இன்றி, பல மாதங்கள் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த இறுதி பகுதியை வெளியிடும் நேரத்தில், 105 தமிழக வழக்கறிஞர் தலைவர்களை, இந்திய பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்துள்ளதாக, ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதை, மன்னன் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது. மன்னன் குமார் மிஸ்ரா தமிழக வழக்கறிஞர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏனோ? இதற்கு பின்புலமாக யார் இருக்கின்றனர் என்பதை தமிழக வழக்கறிஞர்கள் அறிவர்.

உயர் நீதிமன்றம் புதிய விதிகளை உடனே திரும்ப பெறவேண்டும்; பார் கவுன்சில் அனைத்து சஸ்பென்ஷன்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும். இதுவே நிரந்தர அமைதிக்கான தீர்வாக இருக்கும்.

வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் யார்? 

உச்சநீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி, இன்று தமிழகத்தில் வழக்கறிஞர் மத்தியில் பேசப்படுகிறது. எனவே, அத்தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பது அவசியம்; காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் வழக்கறிஞர்களின் தற்காலிக பணி நீக்கத்தையும், உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிகளையும், அத்தீர்ப்பின் அடிப்படையில் பரிசீலிக்கலாம். மேற்சொன்ன தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பதற்கு முன், யார் இந்த ஆர்.கே.ஆனந்த் என்ற சிறு விபரத்தை தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும்.

ஆர்.கே.ஆனந்த், டில்லியில் மிக பிரபலமான மூத்த வழக்கறிஞர். மூன்று, இந்திய பிரதமர்கள் அவருக்கு கட்சிக்காரர்கள். அவர்களின் வழக்குகளை நடத்தி வெற்றி பெற்றவர்.

இந்திரா, பிரதமராக இருந்த போது, அவரது மகன் சஞ்சய், 1980-ல், விமான விபத்தில் இறந்தார். அவர் மனைவி மேனகா, நீதிமன்றம் மூலமாக, சஞ்சயின் உயிலின் அடிப்படையில் சொத்து உரிமை கோரினார். அதை எதிர்த்து, இந்திராவுக்காக, டில்லி உயர்நீதிமன்றம் வரை வெற்றிகரமாக வழக்காடியவர் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த். இந்திராவுக்கு உயில் எழுதிய வழக்கறிஞரும் அவரே. இந்திரா, 1984ல் பிரதமராக இருந்தபோது கொல்லப்பட்டார்; ராஜிவ் பிரதமர் ஆனார். அந்த உயிலின் அடிப்படையில் ராஜிவுக்காக வழக்கு நடத்தியவரும் ஆர்.கே.ஆனந்த் தான்.

அடுத்து, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், மூன்று ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டபோது, அவருக்கு விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வெற்றி பெற்று தந்தவரும், ஆர்.கே.ஆனந்த் தான். இந்திரா கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்கள் மேல் நடந்த வன்முறை தாக்குதல் பற்றி அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா விசாரணை கமிஷன் முன், மத்திய அரசுக்காக ஆஜரான வழக்கறிஞரும் இவரே. மேற்சொன்ன விபரங்கள், ஆர்.கே.ஆனந்த் பிரபல மூத்த வழக்கறிஞராக இருந்தவர் என்பதை தெளிவாக்கும்.

பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் தலைவர் மேலும், அவர் டில்லி பார் கவுன்சில் உறுப்பினராக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். இருமுறை, அதன் தலைவராகவும் இருந்தார்.

அரசியல் செல்வாக்கு அவர் மிகுந்த அரசியல் செல்வாக்கும் உடையவர். 2000 மார்ச் மாதம், ராஜ்யசபாவிற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்துஎடுக்கப்பட்டார்.

கடந்த 2004-, லோக்சபா தேர்தலில், டில்லி தெற்கு தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு தோற்றார். மீண்டும், 2014- தேர்தலில் பாரிதாபாத் லோக்சபா தொகுதியில், இந்திய தேசிய லோக்தளத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். கடந்த ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும் காங்., ஆதரவுடன் அரியானா மாநிலத்தில் போட்டியிட்டார். காங்., கலக சட்டசபை உறுப்பினர்கள், அவருக்கு ஓட்டு போடாததால் தோற்றுப் போனார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, ஆர்.கே.ஆனந்த் பேரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அவர் அதை மறுத்து வழக்காடினார். அவர் கடுமையான குற்றம் புரிந்தார் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தது; அவருக்கு தண்டனையும் அளித்தது. அதை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவானது என்றும், அதிக தண்டனையை ஏன் வழங்கக்கூடாது என்று காரணம் காட்டுமாறு அறிவிப்பு அளித்தது. ஆனால், அதிக தண்டனை அளிக்கப்படவில்லை.அவர் செய்த கடும் குற்றம் என்ன, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன, உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்த தீர்ப்பு என்ன, அவர் அவமதிப்பு வழக்கிலும், மேல்முறையீட்டு வழக்கிலும் நடந்துகொண்ட முறை என்ன போன்ற விபரங்களை பிரதான செய்தியில் படிக்கவும்.


அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற நீதிபதி
இ - மெயில்: hariparanthaman@gmail.com

தினமலர் நாளிதழில் 27-07-2016 அன்று வெளியான கட்டுரை

Sunday, October 5, 2014

உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமையுமா?

 “நீதிமன்ற பணியானது மருத்துவ பணிகளைப் போல அத்தியாவசிய பணியாகும். எனவே, மருத்துவமனைகளைப் போல நீதிமன்றமும் ஆண்டு முழுவதும், 365 நாட்களும் இயங்க வேண்டும்” என கடந்த மே மாதத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆ.எம். லோதா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்க்கப்படாமல், பெருமளவில் தேங்கி கிடக்கிறது, எனவே, விடுமுறைகள் தொடர்பாக கருத்து கேட்டு, நாட்டின் அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர் குழுமங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக நீதித்துறையிலும், ஊடகங்களிலும் இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலத்தின் வழக்குரைஞர் குழுமங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் கூறியுள்ளன. தலைமை நீதிபதியின் இந்த கருத்துக்கு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டன. 

ஆண்டு முழுவதும் வேலை நாளாக அறிவித்தால் வழக்குகள் தேக்கம் ஏற்படாது என்றும், நீதிமன்ற விடுமுறைகள் மட்டுமே, வழக்குகள் தேக்கத்திற்கு காரணம் என்றும் கருதினால் அது ஒரு தவறான கருத்தாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு பல்வேறு அடிப்படையான காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது, இன்றளவிலும் உச்சநீதிமன்றத்தின் கிளைகள் அமைக்கப்படாததும், பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாததுமே ஆகும்.  

“இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று, இந்திய உச்சநீதிமன்றத்தை டில்லியிலோ, அல்லது வேறு பகுதியிலோ அல்லது பகுதிகளிலோ அவ்வப்போது அமைக்கலாம்” என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 130 கூறுகிறது.   
சுதந்திரமடைந்த போது  இந்திய மக்கள் தொகை சுமார் 30 கோடி. தற்போதைய மக்கள் தொகை 130 கோடி. எதிர்காலத்தில் மக்கள் தொகை மேலும் உயரும். கல்வி, அறிவியல் வளர்ச்சி உள்ளிட்டவைகளின் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து தங்களின் உரிமைகளை நிலைநாட்டிட நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாக தாக்கல் செய்யப்படும். அந்த சமயத்தில், வழக்கிடைதாரர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில்தான், நாட்டின் பல பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைப்பது தொடர்பான இந்த பிரிவு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல் முறையீடு வழக்குகளில், வட மாநிலங்களான டில்லியிலிருந்து 12%,  பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து 8.9%,  உத்திரகாண்டிலிருந்து 7%,  இமாச்சல பிரதேசத்திலிருந்து 4.3%ம் தாக்கல் செய்யப்படுகிறது.. ஆனால் தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து 2.5%,  ஆந்திர பிரதேசத்திலிருந்து 2.8%,  தமிழ்நாட்டிலிருந்து 1.1%ம்  மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட்ட வேண்டும் என்பது வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களின் நெடுநாளைய கோரிக்கையாகும்.

இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு 67 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், துவக்கத்தில் உருவாக்கியபடி, டில்லியில் மட்டுமே உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. நியாயமான தேவைகளும், தவிர்க்கவும், தட்டிக் கழிக்கவும் முடியா பல்வேறு காரணங்களும்   தொடர்ந்தாலும் டில்லி தவிர்த்து நாட்டின் வேறு எந்த பகுதியிலும் இன்று வரையிலும் இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படவில்லை.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலகிலுள்ள அனைத்தும் மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது அல்லது மக்களுக்கு அருகாமையிலேயே கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விதிவிலக்காக, இங்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதிக்காக, குடிமக்கள் பல ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது. வழக்கு கட்டணம் மட்டுமின்றி, போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு, பயண காலம் என பெரும் பொருட்செலவை சந்திக்க வேண்டியதுள்ளது.  இதன் காரணமாக வழக்கிடைதாரருக்கு, தனது அடிப்படை உரிமையை நிலைநிறுத்த, மிகுந்த பொருட்செலவும், கால விரயமும் ஆகிறது.

இப்படியாக, பணம் மற்றும் பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் எனும் மோசமான நிலைதான் இங்கு நிலவுகிறது. இதன் காரணமாகவே, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், தென் இந்தியாவிலிருந்து தாக்கல் செய்யபடும் வழக்குகளின் எண்ணிக்கையானது சொற்ப அளவாக உள்ளது. உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்கப்பட்டால் இந்த நிலையில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.

ஒவ்வொரு உயர்நீதிமன்றமும், தனது அதிகார வரம்பிற்குற்பட்ட பகுதிகளில்  தேவைகேற்ப ஒன்றோ அல்லது அதற்கு கூடுதலான கிளைகளையோ உருவாக்கிக் கொள்ளலாம் என இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மகராஷ்டிரம், கொல்கத்தா, கர்நாடகம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில், அங்கு எழுந்த தேவைகளின் காரணமாக உயர்நீதிமன்ற  கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளை சார்ந்த குடிமக்கள் அதற்கு முன்பாக நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக சந்தித்து வந்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் மத்தியில் அமைந்துள்ள 14 மாவட்டங்களுக்காக  கடந்த 2004ம் ஆண்டில், உருவாக்கப்பட்ட, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், தற்போது ஆண்டுக்கு சராசரியாக, நீதிப்பேராணை மனுக்கள் மட்டும் 20,000க்கும் அதிகமாக தாக்கல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே உயர்நீதிமன்றம் இருந்தபோது, இந்த 14 மாவட்டங்களிலிருந்து இவ்வளவு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போது தாக்கல் செய்யப்படும் வழக்குகளைக் காட்டிலும் தற்போது அதிகமாக தாக்கல் செய்யப்பட்டாலும் சராசரியாக இவ்வளவு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் மதுரை கிளை வந்த பிறகு, வழக்கிடைதாரர்களுக்கு, போக்குவரத்து செலவு, பயண நேரம் போன்றவை வெகுவாகக் குறைந்துள்ளது. தங்கும் செலவு அறவே இல்லாமல் போய்விட்டது. நெருக்கடியான சென்னையில் ஒரு சிறிய அளவு நெருக்கடி இது போன்ற வழக்கிடைதாரர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களால் குறைந்துள்ளது. இந்த சான்றானது, உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட்டால் அப்படியே பொருந்தும்.

27 மே 1949 அன்று, அரசியல் சாசன உருவாக்கத்தின் போது நடந்த ஒரு விவாதத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “டில்லி தவிர்த்த பிற இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளையை உருவாக்கலாம் என, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான டாக்டர். அம்பேத்கர் பதில் கூறியுள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தோர் பகுதியை சேர்ந்த  எஸ்.பி. ஆனந்த் மற்றும் வழக்கறிஞர். எம்.எல். பாப்னா ஆகியோர் இந்தோர் உயர்நீதிமன்ற கிளையில், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையினை இந்தோர் பகுதியில் அமைத்திடக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட  நீதிமன்றம், இந்தோரில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கவும், அதற்கான ஒப்புதலையும், நிதியையும் நடுவணரசு வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக நடுவணரசு மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி அந்த உத்தரவை, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் தள்ளுபடி செய்தது.

ஆனால், கடந்த பிப்ருவரி மாதம் புதுச்சேரியைச் சேர்ந்த  வழக்கறிஞர் வசந்த குமார் என்பவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையினை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு பதில் அளிக்க நடுவணரசுக்கு அறிவிப்பு அனுப்பட்டுள்ளது.

எனவே, இதுநாள் வரையிலும் பயன்படுத்தப்படாத, அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 130க்கு உயிர் கொடுக்கும் விதமாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்று, சுமார் ஆறு மாநிலங்களுக்கு ஒரு கிளை என்ற அடிப்படையில்,  நாட்டின் வடக்கு (டில்லி), கிழக்கு (கொல்கத்தா), மேற்கு (மகராஷ்டிரம்), தெற்கு (தமிழ்நாடு) மற்றும் மத்திய பகுதி (மத்தியபிரதேசம்) களில், உச்சநீதிமன்ற கிளைகள் அமையும் விதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31, தற்போது அதில் காலியிடம் 5 ஆகும். மொத்தமுள்ள 24  உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 906, கடந்த 01.04.14ம் தேதி நிலவரப்படி, அதில் காலியிடம் 257 ஆகும். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 14 காலியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட நீதின்றங்களில் நீதிபதிகளின் காலியிடம் 3300. நீண்ட காலமாக நிரப்பப்படாமலுள்ள இந்த காலி இடங்களை நிரப்பினாலேயே நிலுவையிலுள்ள பெரும்பாலான வழக்குகள் தீர்வு செய்யப்பட்டுவிடும். காலியிடங்கள் தொடர்ந்து நீடிப்பதால் பணியுள்ள நீதிபதிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, இயல்பான பணிகளிலும் தொய்வு ஏற்படுகிறது.


ஆகவே, சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் விரைவில் உச்சநீதிமன்ற கிளை அமைத்தல், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில்  காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நீதிபதிகளை நியமித்தல், இனி காலியாகும் இடங்களுக்கு முன்கூட்டியே நீதிபதிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை பெருமளவில் முடிவுக்கு கொண்டு வரலாம். 


-ஐ. இராபர்ட் சந்திரகுமார்

Thursday, April 17, 2014

முதல் தகவல் அறிக்கை (F.I.R.) பதிவு - சட்டமும் நடைமுறையும்...

நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல் துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் காவல் துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்துவரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.

வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.


முதலில் ஒரு குற்றச்சாட்டின் பல்வேறு தன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  பொதுவாக குற்றங்களை உரிமையியல் வழக்குகள் (Civil Cases), குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) என இருவகையாக பிரிக்கலாம். இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக  செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை.  பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அனுபவத்தின் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்சனைகளை உரிமையியல் வழக்குகள் என்கிறோம். இந்த உரிமையியல் பிரச்சனைகள் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகியவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்தவரை குற்றவியல் தன்மை பெறுகின்றன.

குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை  இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும் சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும் அவை அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாக கருதப்படுவதுடன் காவல் துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.  பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுகின்றன.

குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences), நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு(Non Cognizable Offences)களாகும்.

அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டுகுத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல் போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை
நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாக (Cognizable Offences) கருதப்படுகின்றன.

ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு, தன்மீது அவதூறு பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு, பொய்யான ஆவணம் தயாரித்துவிட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படினும்  காவல் துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விசயங்கள் சற்றுக்கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.

ஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும்.

எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள்  என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொறு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல் துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order) படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படியும் வழியுள்ளது.

எனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவுசெய்து விசாரிக்க வேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமையாகும்.

அவ்வாறு காவல் துறையினர்  நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர்  தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக இருக்கும். மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல் துறையினர்  பதிவுசெய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்றவரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்துகொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப்பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு.

குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 154 (3) ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ,  பெருநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம் அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.

அவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3) ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அப்புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர்  வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை.  மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம். இப்பிரிவின்கீழ் நீதித்துறை நடுவரின் அதிகாரத்தை சக்கிரியா வாசு எதிர் உ.பி அரசு,  டிவைன் ரெட்ரிட் எதிர் கேரள அரசு ஆகிய வழக்குகள் விரிவுபடுத்தியுள்ளன.

மேலும்  இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை (Accused) நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லையென்றும் அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பில்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 156 (3) ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும் அவ்வாணையினால் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482 ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் பிறர் எதிர் எம். எஸ். கிருஸ்ணாபத் மற்றும் பிறர்  வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.

எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. குற்றச்சாட்டை பதிவுசெய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவுதான் தனிப்புகார் (Private Complaint) ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1) ன் கீழாக புலன்கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர்  சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார்அவ்வாறு விசாரிக்கப்படும் போது  தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம்.  தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல் துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம்.  அவ்வாறு விசாரித்தபின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம்.  மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.

 இதைப்போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல் துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 155(3) ன் கீழ் அதிகாரமுள்ளது.  அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல் துறையினர்  நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.

மேற்கண்ட முறைகளைவிட சற்று எளியதும் சற்று கூடுதல் ஆற்றலுடையுதுமான வழிதான் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர்  விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றத்தின் தன்னிச்சை அதிகார பிரிவான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482 ஆகும்.  இப்பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரை காவல்துறையினர்  பதிவு செய்யவேண்டுமென்று கூறி நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம். பிரிவு 482 குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றத்திற்கு உள்ள தன்னிச்சை அதிகாரத்தை வழங்குவதாலும் உயர்நீதிமன்றமே புகாரை பதிவு செய்ய ஆணையிடும்போது அதிலிருந்து தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும் என்பதாலும் இப்பிரிவின் முக்கியத்துவம் புகார்களை பதிய வைப்பதில் சற்று கூடுதலாகும்.

-க. திலகேஸ்வரன்
(thilakjurist@gmail.com)


Thursday, May 3, 2012

கைது செய்யப்படும் நபர்களுக்கு உரிமைகள் உண்டா..?



மனித மனம் விந்தையானது.

பேருந்து நிலையம் ஒன்றில் நாம் ஒரு குறிப்பிட்ட பேருந்திற்காக காத்து நிற்கும்போது அந்த பேருந்து நிற்காமல் சென்றுவிட்டால் அதன் ஓட்டுனரை திட்டித்தீர்த்து விடுவோம். ஆனால் அதே பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது அந்தப்பேருந்து, பயணிகள் காத்து நிற்கும்போதும் ஒரு பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்லும்போது நாம் அற்ப மகிழ்ச்சி அடைவோம்.

இது ஒரு எளிய உதாரணம்தான்! இதேபோல வாழ்வின் பல நிகழ்வுகளிலும் நாம் இரட்டை அளவுகோல்களை, அதன் தீவிரத்தன்மை தெரியாமலே பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறான நிகழ்வுகளில் கைது சம்பவங்களையும் சேர்க்கலாம்.

நமக்கு தெரிந்த ஆனால் பிடிக்காத வேறு ஒருவர் கைது செய்யப்படும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். நமக்கு தெரியாத ஒரு நபர் கைது செய்யப்படும்போது எந்த உணர்ச்சிகளும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நமது வீட்டிற்கு ஒரு காவலர் வந்தால் நாம் கலங்கி விடுவோம். அதிலும் வரும் காவலர் நம் வீட்டில் உள்ள ஒருவரையோ அல்லது நம்மையோ கைது செய்வதற்கு வருவதாக தெரிந்தால் நம் நிலை மிகவும் பதற்றமாகிவிடும்.

ஆகவே, குற்றவியல் சட்டத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அம்சம் கைது!

முன்னாள் முதல்வர்களை சில்லறை காரணங்களுக்காக நள்ளிரவில் கைது செய்து இழுத்துச் செல்வதும், கொலை வழக்கில் சிக்கிய மடாதிபதியை கவுரவமாக வீட்டுச்சிறையில் வைத்தால் என்ன? என்று உயர்நீதிமன்ற நீதிபதியே கேள்வி எழுப்புவதும் நாம் அறிந்ததுதான்.

எனவே நமக்கு வேண்டியவரோ, வேண்டாதவரோ கைது செய்யப்படும்போது, கைது செய்யப்படுவதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கவனிப்பதும், கண்காணிப்பதும் மிகவும் அவசியம்.

கைது செய்யப்படும் நபர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம்தான். எனவே அவர் குற்றவாளி என சட்டப்படி தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும்வரை அவரை நிரபராதியாகவே கருத வேண்டும். தவிர்க்க இயலாத சம்பவங்களில் ஒரு நபரை கைது செய்ய நேரிட்டாலும், அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் கருத்தளவில் தெளிவாகவே இருக்கிறது.

மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய திரு. திலிப் குமார் பாசு என்பவர், பணி ஓய்வு பெற்ற பின்னர் மேற்கு வங்க சட்டப்பணி சேவை மையம் என்ற அமைப்பை நிர்வகித்து வந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோதிலும் காவல் நிலைய வன்முறைகள் மிகவும் அதிகமாக  நடைபெறுவதை கவனித்த (ஓய்வு பெற்ற) நீதிபதி திலிப் குமார் பாசு, இந்த பிரசினை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 26-08-1986 அன்று கடிதம் ஒன்றை எழுதினார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற காவல் நிலைய வன்முறைகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை இணைத்திருந்த நீதிபதி டி.கே.பாசு, காவல் நிலையங்களில் நடைபெறும் வன்முறைகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கடிதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங் மற்றும் ஏ.எஸ். ஆனந்த் ஆகியோர் பொதுநல வழக்காக ஏற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் (AIR 1997 SC 610) தீர்ப்பு 18.12.1996 அன்று வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் கைது சம்பவம் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பல்வேறு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைகள் விரிவாக அலசப்பட்டுள்ளன.

மேலும் அந்தத் தீர்ப்பில் கைது சம்பவத்தின்போது பின்பற்றவேண்டிய மிகவும் முக்கியமான 11 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  

1. கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாக படும்வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பேரேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2.      ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி, கைது சம்பவத்தின்போதே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சான்று ஒப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெறலாம்.

3.            கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது – கைது  செய்யப்படும் நபர் – தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ, நலனில் அக்கறை கொண்ட வேறெந்த நபருக்கோ தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. கைது செய்த அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் இந்த தகவலில் கூறப்படவேண்டும். இதற்கான வசதியை செய்து தரவேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

4.    கைது செய்யப்படும் நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறெவரோ கைது செய்யப்படும் நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்ட உதவி மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

5.    கைது செய்யப்படும் நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

6.    கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்படவேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவு செய்யப்படவேண்டும்.

7.   கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால் அவர் உடலில் உள்ள பெரிய மற்றும்  சிறிய காயங்கள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பில் கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்படும் நபரும் கையொப்பம் இட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்படும் நபருக்கும் வழங்கப்பட வேண்டும்.

8.    கைது செய்யப்படும் நபரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலமோ, மருத்துவர்கள் குழு மூலமோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில மருத்துவ இயக்குனர்கள் அமைக்க வேண்டும்.

9.    கைது சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைது குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்படவேண்டும்.

10. கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும்போது, முழு விசாரணையின்போது முடியாது என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

11.          நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைகளிலும், அந்தந்த அலுவலகங்களின் அதிகார வரம்புக்குள் வரும் காவல்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் குறித்த தகவல்கள் 12 மணி நேரத்திற்குள் பெறப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மாநில மொழிகளில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர். 



ஆனால் நடைமுறையில் நாட்டில் உள்ள எந்த காவல்நிலையத்திலாவது இந்த உச்சநீதிமன்ற உத்தரவு எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து தெளிவான சட்டம் இல்லாத நிலையில் அந்த அம்சம் குறித்த நீதிமன்ற தீர்ப்பே சட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சட்டமாகும். ஆனால் இந்த சட்டத்தை மதிப்பதில் எந்த மாநில அரசும் குறைந்த அளவு அக்கறைகூட காட்டவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மேற்கூறப்பட்டவாறு டி.கே.பாசு வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்மொழியில் எழுதி வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ காலக்கெடு எதுவும் விதிக்காமல் பயனற்ற தீர்ப்பு ஒன்றை வழங்கியது.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதிலோ, மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதிலோ சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உள்ள ஆர்வத்திற்கு இந்த வழக்கு உதாரணமாகும்.

இதற்கிடையில் கைது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மிக விரிவான விவாதங்களை நடத்தியது. நாடு முழுதும் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட்ட கைது சம்பவங்கள் குறித்தும், அதில் இருந்த சட்டமீறல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக 2005ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ என்று உட்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. இதன்படி

(1)  ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி கைது செய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பரிடம், கைது குறித்தும் – கைது செய்யப்பட்டவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்க வேண்டும்.

(2)  மேற்குறிப்பிட்ட (நண்பருக்கோ, உறவினருக்கோ தகவல் தெரிவிக்கும்) உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன், கைது செய்த காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

(3)  கைது சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவித்தது குறித்து காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

(4)  கைது செய்யப்பட்ட நபரை குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தும்போது, கைது செய்யப்பட்ட நபரின் மேற்கூறப்பட்ட உரிமைகள் குறித்து அவருக்கு எடுத்துக்கூறப்பட்டதா என்பதை, தொடர்புடைய குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும்.

மேற்கூறியவாறு காவல்துறையினரோ, குற்றவியல் நடுவரோ செயல்பட்டால் கைது செய்யப்படும் நபரின் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் கைது செய்யப்படுபவரின் உரிமைகள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் உயர்நீதிமன்றமே ஆர்வம் காட்டாத நிலையில், உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் செயல்படும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், கைது செய்யப்படுபவரின் உரிமைகளை பாதுகாக்குமா என்பது கேள்விக்குறியே!

எனினும் மனித உரிமை என்பதே அதை பயன்படுத்தும் விழிப்புணர்வுடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் முழுமை அடையும். எனவே கைது செய்யப்படுவோரின் உரிமைகள் குறித்த முழுமையான விழிப்புணர்வும், இதை வலியுறுத்தும் செயல்பாடுகளுமே நீதிமன்றத்தையும் சட்டத்தின்பாதையில் செலுத்தும்.
கைது செய்யப்படும் நபர்களின் உரிமைகள் இது மட்டுமல்ல. சட்டரீதியாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் இன்னும் ஏராளமான உரிமைகள் (கருத்தளவில்  மட்டுமே) உள்ளன.

அவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...

Tuesday, April 10, 2012

கைது – ஏன்? எதற்கு? எப்படி?


குற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்பவங்களை தொலைகாட்சியிலும், கற்பனையான கைது சம்பவங்களை திரைப்படங்களிலும் பார்க்கும் பலருக்கு கைது குறித்த ஒரு குழப்பமான புரிதலே இருக்கும்.

நடைமுறையில் ஒரு குற்றம் குறித்து காவல்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தவுடன், அந்த குற்றச்செயலில் பிணையில் விடத்தகாத குற்றத்தை ஒருவர் செய்திருப்பார் என்று நம்புவதற்கு உரிய முகாந்திரம் கிடைத்தவுடன் உடனே நடைபெறும் சம்பவம் “கைதுதான்.


குற்றம் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதற்காகவும், குற்றப்புலனாய்வும் – குற்றவிசாரணையும் நேர்மையாகவும் நடுநிலையாகவும் இடையூறு இன்றி நடப்பதற்காகவும், குற்றம் செய்திருப்பதாக நம்பப்படும் நபரை தடுத்து நிறுத்தி காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே “கைது ஆகும்.

ஆனால் பல நேரங்களில் புகாரில் எதிரியாக குறிப்பிடப்படும் நபரை கைது செய்யாமல், அவரை தப்பிக்க விடுவதோ – அவரிடம் வேறொரு புகாரை எழுதி வாங்கிக்கொண்டு முதல் புகார்தாரரை கைது செய்வதோ இந்தியாவின் காவல் நிலையங்களில் மிகவும் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள்தான்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டிவர்கள் மிகவும் கவுரமாக நாட்டில் உலவுவதும், குற்றமற்ற பலர் பொய்யான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவதும் இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மனித உரிமைகளில் குறைவான புரிதலைக் கொண்ட பல்வேறு நாடுகளிலும் மிக பரவலாக நடந்து வருகிறது.

இதை தீர்க்கதரிசனத்துடன் கணித்திருந்த இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கர், இந்திய அரசியல் சட்டத்திலேயே கைதுகள் குறித்தும் எழுதியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி வழங்கப்படவேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல் நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது.

ஒரு நாட்டின் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்போரின் பணிகளையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் பணிகளையும் வரையறை செய்யும் அரசியல் அமைப்புச் சட்டத்தில், தனி நபரின் கைதுக்கு எதிரான பாதுகாப்புகள் குறித்த மேற்கண்ட செய்திகளை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற சாதாரண அம்சங்களும் இடம் பெற்றுள்ளது ஒரு சுவையான அம்சமாகும். இந்திய காவல்துறையின் இன்றைய அவல நிலையை அண்ணல் அம்பேத்கர் அன்றே உணர்ந்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன், குடிமகனின் உரிமைகள் குறித்த அம்சங்களை அரசியல் அமைப்பில் இணைத்தது, அவர் இந்திய மக்கள் மீது கொண்ட கரினத்தையும், காவலர்கள் மீது கொண்ட தொலைநோக்குப் பார்வையையும் குறிக்கிறது.

எனவே ஒரு குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட நபரோ, குற்றச்செயலை செய்துவிட்டு கைதை எதிர்பார்த்திருக்கும் நபரோ – யாராக இருந்தாலும் கைது சம்பவத்தின் சட்டக்கூறுகள் குறித்து குறைந்த பட்ச புரிதலையாவது பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் சட்டவிரோத கைதுகளை குறைப்பதுடன், சட்டரீதியாக கைது செய்யப்பட வேண்டியவர்கள் தப்பிப்பதையும் தவிர்க்க முடியும்,

சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்:

இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும் என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு காட்டுகின்றனர்.

எந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை.

சட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வசதி மிக்கவர்கள், உயர்நீதிமன்றத்தை அணுகும்போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் கிடைக்கின்றன. இதற்கான வழிவகைகளை அறிந்து கொள்ளும் முன் சட்டரீதியான கைது குறித்து புரிந்து கொள்வோம்.

கைது நடைமுறைகள்:

கைது நடவடிக்கைக்கான நடைமுறைகளை குற்றவியல் நடைமுறைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம். (அதாவது தப்பியோட முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)

கு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால் சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும்.

பெண்களை கைது செய்யும்போது பெண் அதிகாரிகளைக் கொண்டே கைது செய்ய வேண்டும். எனினும் பெண் காவல்துறை அதிகாரி இல்லாத நிலையில், அவசியம் என்றால் ஆண் அதிகாரியும் கைது செய்யலாம்.

பொதுவாக ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு குறிப்பிட்ட நபரை கைது செய்ய முனைந்தால் அவருடைய உத்தரவுக்கு பணிந்து கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதத்தில் சரண் அடைவதையே சட்டம் வலியுறுத்துகிறது. ஒரு நபரை கைது செய்யும் காவல்துறை அதிகாரியோ அல்லது அதற்கான அதிகாரம் பெற்ற நபரோ, கைது செய்யப்படும் நபரின் பாதுகாப்பிற்கும், பிற அம்சங்களுக்கும் பொறுப்பேற்கிறார். மேலும் கைது சம்பவம் நடந்த உடன் அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதேபோல கைது செய்யப்படும் நபருக்கும் சட்டரீதியான பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.

கைது நடவடிக்கை சட்டரீதியாக இருப்பதை உறுதி செய்யவும், சட்ட விரோத கைது சம்பவங்களை தடுப்பதற்காகவும் பல்வேறு சட்டப்பாதுகாப்புகளை சட்டங்களும், உச்சநீதிமன்றமும்  ஏற்படுத்தியுள்ளன. அவை குறித்து அடுத்து பார்க்கலாம்.