Tuesday, January 31, 2012

முதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி


காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். புகாரைத் தொடர்ந்து நடக்கும் செயல்பாடுகளை தற்போது பார்ப்போம்.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல்நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். 

ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். 

பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் ஆகும். 

பிணை என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. 

மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும். 

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க்க்கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது. அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். 

இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும். 

ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. 

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 

அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும். 

எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும். 

முதல் தகவல் அறிக்கை

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக்காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும். 

குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம். 

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம். 

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும். 

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். 

குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும். 

ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல்நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு. 

இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்யலாம்.....?
(அடுத்த பதிவில் பார்க்கலாம்)

Monday, January 2, 2012

தற்கொலை - சட்டத்தின் பார்வையில்...

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விஷம் அருந்துதல் அல்லது உடலுக்கு தீ வைத்தல் அல்லது தூக்கில் தொங்குதல் அல்லது உயரமான இடத்திலிருந்து குதித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களது உயிரை மாய்த்துக்கொள்வதாகவும், 1980லிருந்த தற்கொலை விகிதத்தை விட 2006இல் பதிவான தற்கொலை விகிதம் 67% அதிகமாகும் என்றும், அதிகப்படியான தற்கொலைகள் ஆண்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்வதாகவும், அதே போல 2006ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 41% சுய தொழில் செய்பவர்கள், 21.2% இல்லத்தரசிகள், 11.5% பணியில் இருப்பவர்கள், 7.5% வேலையற்றோர், 5% மாணாக்கர்கள், 0.9% பணியிலிருந்து ஒய்வுபெற்றோர், 12.8% இதர பிரிவினர்கள் என்றும், மேலும் 2006இல் இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் 2.5 விழுக்காடு தமிழ்நாட்டில் நிகழ்ந்தவைகள் ஆகும் என்றும் “தேசிய குற்ற பதிவுகள் கழகம்” (National Crime Record Bureau) தனது அறிக்கையில் கூறுகிறது. 
 
தற்கொலைக்கான காரணங்கள்:

மன அழுத்தம், மன சிதைவு, உளவியல் நோய்கள், சமூக கலாச்சார அழுத்தங்கள், காதல் தோல்வி, வறுமை, கடன், அளவுகடந்த பேரச்சம், ஈடு செய்யமுடியாத இழப்பு, தாங்கிக்கொள்ள முடியாத வலி, பெருந்துயரம், கடுமையான சித்திரவதைகள், மது மற்றும் போதைக்கு அடிமையாதல், பிடித்தமானவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு குற்ற மனப்பான்மையை உண்டாக்கவும், தேர்வில் தோல்வி, நம்பிக்கையற்ற நிச்சயமற்ற தன்மையை உணர்தல், வாழத் தகுதியற்றவர் என்ற நிலையை உருவாக்குதல், பொது பிரச்சனைகளில் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடலுக்குத் தீவைத்தல், தான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைமைக்காக, நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக, வகுப்பறை வன்முறை, ஒதுக்கி வைத்தல் மற்றும் குற்ற உணர்ச்சி என்பது போன்ற பல்வேறு காரணங்களில் ஏதாவது ஒன்றிற்காக பொதுவாக தற்கொலைகள் நிகழ்கின்றன. 


மதங்களும் தற்கொலைகளும்:

அகித்தொப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம் பண்ணினார்கள்.” என்று புனித வேதாகமத்தின், 2 சாமுவேல் அதிகாரம் 17, வசனம் 23லும், “அப்பொழுது அவன் (யூதாஸ்) அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்து விட்டு, புறப்பட்டுபோய், நான்று கொண்டு செத்தான்” என்று மத்தேயு அதிகாரம் 27, வசனம் 5ல் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் கிறித்தவம், இந்து, இசுலாம், சீக்கியம், யூதம் மற்றும் புத்த மதம் உள்ளிட்ட அனைத்து மதங்களுமே தற்கொலைகளை கண்டிக்கின்றன.

வரலாற்றில் தற்கொலைகள்:

சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய, வீரமங்கை வேலு நாச்சியாரிடம் பணிப்பெண்ணாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த குயிலி என்பவரும், அதை ஒட்டிய காலகட்டத்தில், நெல்லைச் சீமையில் கட்டபொம்மனிடம் தளபதியாகயிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் என்பவரும், நாட்டின் விடுதலைப்போரில் தற்கொலை செய்துகொண்டதாக தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மன்னர் சேதுபதி இறந்தபோது அவரது தகனத்தின் போது, அவரது மனைவிகள் 56 பேரும் அந்த நெருப்பில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது வரலாறு. ஈழ மக்கள் தங்களின் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து தற்கொலைப் படையை உருவாக்கினார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம்,1860:

பிரிவு:305. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின் தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்: 

“18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த அல்லது, வெறி பிடித்த அல்லது, அறிவிலி  அல்லது குடி போதையிலிருக்கும் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலை செய்துகொள்ளப்படுவதற்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டணையோ அல்லது பத்து ஆண்டுகள்வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராததிற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.   

பிரிவு:306. தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்: 

“ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அத்தகைய தற்கொலை செய்து கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக்கிற எவரொருவரும்  பத்து ஆண்டுகள் வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச் சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”.

பிரிவு:309. தற்கொலை செய்துகொள்ள முயற்சி: 

“தற்கொலை செய்துகொள்ள முயல்கிற மற்றும் அத்தகைய குற்றம் செய்ய ஏதாவது ஒரு செயலைச் செய்கிற எவரொருவரும், ஓர் ஆண்டு வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்க்கு மெய்காவல் தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து  தண்டிக்கப்படுதல் வேண்டும்”.


இந்திய அரசியல் சாசனம்,1950:

சரத்து:21. “சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும், ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது”.

இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கை:

1971ம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட இந்திய சட்ட ஆணையத்தின் 42ஆவது அறிக்கையானது,   “தன்னளவில் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர்தான் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவருக்கு அளிக்கப்பட வேண்டியது ஆற்றுப்படுத்துதலே தவிர தண்டனை அல்ல. அப்படியாக தண்டனை அளிப்பதென்பது ஒருவருக்கு இருமுறை தண்டனை அளிப்பது போன்றதாகும். எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309 நீக்கப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்துள்ளது. 


தற்கொலை தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகள்:

1986ஆம் ஆண்டு, ‘தற்கொலை செய்துகொள்வதும் அடிப்படை உரிமையே’ என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, முதன்முறையாக ஒரு விசித்திரமான வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 

மும்பை நகர காவல்படையைச் சேர்ந்த காவலரும், மனநலம் பாதிக்கப்பட்டவருமான  ‘மாருதி ஸ்ரீபதி துபால்’ என்பவர், தனது வாழ்வாதாரத் தேவைக்காக ஒரு கடை வைத்துக்கொள்ளக் கோரியிருந்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏற்பட்ட மன அழுத்ததின் விளைவாக,  மாநகராட்சி அலுவலக அறைக்குள் தனக்குத்தானே நெருப்பு வைத்து தீக்குளிக்க முயன்றார். இதனால் அவர் மீது, தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்ற குற்றத்தின்படி வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.

அவரது தர்ப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், ‘தற்கொலை செய்து கொள்வதற்கான விருப்பமானது இயற்கையானதல்ல, ஆனால்  அதேவேளையில்  அது சாதாரணமானதோ, பொதுவானதோ அல்ல. மேலும் நோய், வாழ்வில் தாங்கிக் கொள்ளமுடியாத நிலைகள், கொடுமைகள், அவமானமான சூழல்கள் மற்றும் புத்தி சுவாதீனமில்லா நிலை போன்ற பல்வேறு நிலைகளில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணம் கொள்கிறார். எனவே இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள, உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக்கொள்வதற்கான உரிமையும் உள்ளடங்கும் என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்றும் அறிவித்தது.

ஆனால் 1987ஆம் ஆண்டு, இதற்கு முற்றிலும் புறம்பாக ஆந்திரபிரதேச உயர் நீதிமன்றமானது, ‘சென்னா ஜெகதீஸ்வர்’ என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தற்கொலை செய்துகொள்வது உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ளவதற்கு தண்டனை வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல என்றும் தீர்ப்பிட்டது.
    
தற்கொலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்:

மேற்கண்ட தீர்ப்பினை 1994ஆம் ஆண்டில் பி.ரத்தினம் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச  நீதிமன்றமும் உறுதி செய்தது.

தற்கொலை செய்து கொள்வது உரிமை என்றும், உரிமை இல்லை என்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகளினால் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து இறுதியாக, 1996ஆம் ஆண்டு, ‘கியான் கவுர்’ என்பார் தொடர்ந்த வழக்கில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலதிற்கெதிராக தொடரப்பட்டிருந்த 6 வழக்குகளை ஒன்றாக இணைத்து, “தற்கொலை செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்றும், இந்திய அரசியல் சாசனத்தின் சரத்து 21ல் வகுத்துரைக்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற பதத்திற்குள், தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதற்கான உரிமை உள்ளடங்காது என்றும், தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தல் என்பது தண்டனைக்குரிய தனிக்குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ள,  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு.309ஆனது  இந்திய அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது அல்ல” என்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஆயம் விரிவாக விவாதித்து, தீர்ப்பிட்டது. இதே தீர்ப்பினை கடந்த 2011 மார்ச் மாதத்தில், கருணைக் கொலை தொடர்பான, பரவலாகப் பேசப்பட்ட ‘அருணா ராமசந்திரா ஷன்பக்’ என்ற வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தற்கொலையைத் தவிர்க்க சில வழிகள்:

வறுமை மற்றும் பெரும்கடன் சுமைகளின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாட்டில் பெருகிகொண்டே வருகிறது. இதில் மத்திய மாநில அரசுகள், உடனடியாக தலையீடு செய்து, தொடரும் இந்த அவலநிலைகளைப் போக்கிடும் வகையிலான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டோர் தனிமையை தவிர்த்தல் வேண்டும். பிடித்தமானவர்கள், நண்பர்கள் போன்றவர்களுடன் அதிகமாக பகிர்ந்துகொள்ளுதல், பிரச்சனைகளின் போது தனக்குப்பிடித்தமான பொம்மைகள் அல்லது கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு பேசிக்கொள்வது போன்ற வழிகளில் கவனத்தை தனக்குத்தானே மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். 

தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் உள்ளவர்களிடம், எந்த காரணத்தை கொண்டும் அவர்களை மற்றவர்களுடன் ஒப்பிடுதலை தவிர்த்தல் மற்றும் அவர்களுக்கு அறிவுறைகள் வழங்குதல், அவர்களுடன் விவாதங்களில் ஈடுபடுதல் போன்றவைகள் தவிர்க்கப்படல் வேண்டும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்வது மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரமான தீர்வு அல்ல என்ற திடமான கருத்தை கல்வி, பாட திட்டங்கள், விளம்பரங்கள், குறும்படங்கள், பயிற்சிகள் என்பது போன்ற பல்வேறு வழிகளில் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து உறுதிபடுத்துதல். போராட்டமே வாழ்க்கை என்பதைப் புரியவைத்தல், ஆற்றுப்படுத்துதல் மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். 

ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது. நாட்டின் ஒட்டுமொத்த சொத்தையும் விற்றாலும் அதன் மூலமாக ஒரே ஒரு மனித உயிரைக்கூட உருவாக்கம் செய்யவோ, விலைக்கு வாங்கவோ முடியாது என்பது பட்டவர்த்தமான உண்மை. எனவே, மத்திய மாநில அரசுகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. நூறு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாட்டில் பகிர்வுக்கும், ஆற்றுப்படுத்துவதற்கும் சரியான துணையில்லை என்ற காரணத்தால் நிகழும் தற்கொலைகளை என்ன சொல்லி நியாயபடுத்தப்போகிறோம். ஒருவருக்கு வேறு எதைக் கொடுப்பதைவிடவும், ஏதோ ஒரு வகையில் அவரது வாழ்வின் மீதான பிடிப்பையும், நம்பிக்கையையும் கொடுப்பதே மிகச்சிறந்த ஈகையாகும். இது போன்றவைகளின்  வாயிலாக நிகழவிருக்கும் தற்கொலைகளைத் தவிர்ப்போம்.  


-இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Sunday, January 1, 2012

பரமக்குடி படுகொலைகளும், சி.பி.ஐ. விசாரணையும்

கடந்த 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் நாள், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய பட்டியலினத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன் என்பார் ஆதிக்கச் சாதி இந்துக்களால் தனது 33ம் வயதில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சமூக நீதிக்காகப் போராடியதன் காரணமாக படுகொலை செய்யப்பட்டதால், அவர் பட்டியலின மக்களால் ‘தியாகி’யாக கருதப்பட்டதோடு, அவரது  ஒவ்வொரு நினைவுநாளின் போதும் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பட்டியலின மக்கள் போன்றோர் பெருந்திரளாக ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக அணிவகுத்து, அவருக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்தார்கள். அவ்வப்போதைய ஆளும் திராவிட அரசுகளின், ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவான செயல்பாடுகளும், பட்டியலின மக்களுக்கு எதிரான திட்டமிட்ட கண்டுகொள்ளாமையையும், அடக்குமுறைகளையும் மீறி ஆண்டுக்கு ஆண்டு இப்படியாகத் திரளும் மக்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைக் கடந்தும், கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அரசியல் கட்சிகளைக் கடந்து, பட்டியலின மக்களின் தன்னெழுச்சியான ஒன்றிணைதலைக் கண்ட ஆதிக்க ஜாதியினருக்கு இது எரிச்சலூட்ட ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 10.09.2011 அன்று, கமுதி வட்டம் பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிகுமார் என்ற பட்டியலின மாணவர் ஆதிக்க ஜாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியின் தலைவரான பெ. ஜான் பாண்டியன் அந்த ஊருக்கு செல்லவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு மவட்ட ஆட்சித் தலைவரால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
   
மறுநாள், தியாகி இம்மானுவேல் சேகரனது 54ஆவது நினைவு நாளான 11.09.2011 அன்று அதிகாலை முதலே, பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களும் வழக்கம்போல வேறுபாதையில் மாற்றிவிடப்பட்டது. காலைமுதலே அவரது நினைவிடத்தில் மக்கள் திரள ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் ஜான் பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். அந்த செய்தி பரமக்குடியில் திரண்டிருந்த மக்களுக்கு எட்டிய உடனே, அவரை விடுதலை செய்யக்கோரி சிலர் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபடுகிறார்கள். சுமார் 200பேர் அளவில் அங்கு திரள்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, காவல் துறையினரின் காட்டு தர்பாரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 6பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 33பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது.

மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் அவர்களை வெளிஉலகுக்கு கொண்டுவரக்கோரி, வழக்கறிஞர் இரஜினிகாந்த் மற்றும் விஜேந்திரன் ஆகியோரால் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்படுகிறார்.       

அந்த வாரமே, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள், பரமக்குடியில் படுகாயம் அடைந்த 33பேருடைய உடல்நிலை குறித்து, மதுரை மற்றும், இராமநாதபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்ததில், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுவில் கோரியபடியே அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டது. அவர்களும் பார்வையிட்டு கூட்டு அறிக்கையும் தாக்கல் செய்தார்கள். அந்த கள ஆய்வு அறிக்கையின் படி, படுகாயமடைந்தவர்களில் மூன்று பேரின் உடல்நிலை மிகவும் கவலைகிடமானதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அரசின் செலவில் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டுமென வழக்கறிஞர்களால் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையில் மாநில அரசானது, மேற்கண்ட நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கணேசன், பன்னீர்செல்வம், ஜெயபால், தீர்ப்புக்கனி, முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 6பேரது குடும்பத்தினருக்கும் தலா ஒரு இலட்சம் ருபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு செய்தது.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் முருகன், புகழேந்தி, திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), சாமுவேல்ராஜ் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), செல்வம், மள்ளர் நாடு நல சங்கம், வையவன், டாக்டர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சட்ட பாதுகாப்பு மையம், சத்திய மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி) மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் குருவிஜயன் (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகிய பதினோறு மனுதாரர்கள் இந்த வழக்கை மத்திய குற்ற புலனாய்வுக்கு மாற்ற கோருதல், நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகளை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும், என்பது போன்ற பல்வேறு பரிகாரங்களைக் கோரி பொதுநல வழக்குகளை சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்தார்கள். நிகழ்விடம் மதுரை உயர்நீதிமன்ற விசாரணை எல்கைக்குள் வருவதால் அனைத்து வழக்குகளும் மதுரைக்கு மாற்றப்பட்டது.

எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல:

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த ஒவ்வொரு தருணத்திலும், சமூக நலனில் அக்கறை கொண்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்களும், பாதிக்கப்பட்ட மக்களும், பல்வேறு அமைப்புகளிச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் பெருந்திரளாக நீதிமன்றத்தில் திரண்டார்கள். இழப்பீடு தொகையை முன்னிலும் அதிகமாக அறிவித்து அதனை ஏற்றுக் கொண்டு வழக்கினை தள்ளுபடி செய்யக்கோரி காவல்துறையின் வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதை தொடர்ந்து, “எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல” என்பது போன்ற பல்வேறு சுவரொட்டிகளும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது விசாரணை உள்ளிட்ட வழிகளிலும் சமூக நீதியில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளால் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. குறிப்பாக, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், பரமக்குடியில் காவல்துறையினரின் கோர தாண்டவத்தை கண்டித்து சிறப்பு கூட்டம் நடத்தியதோடு, மத்திய குற்றப் புலனாய்வுத் துரையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் ஏற்றியது. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் குழுக்கள் பரமக்குடிக்குச் சென்று கள ஆய்வு செய்தார்கள். 

பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 23.12.2011 அன்று நீதிபதிகள் கே. என். பாட்சா மற்றும் எம். வேணுகோபால் ஆகியோருக்கு முன்பாக வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள். பொ.இரத்தினம், சங்கரசுப்பு, இராதாகிருஷ்ணன், என்.ஜி.ஆர்.பிரசாத், பிரபுராஜதுரை மற்றும் ரஜினி ஆகியோரும், அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர். நவநீத கிருஷ்ணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர். சுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் வாதம்செய்தார்கள்.

விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கா?:

வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டக்கல்லூரி மாணவர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் கட்சியை சார்ந்த உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் போன்றோரைத் தவிர நிகழ்வில் பாதிக்கப்பட்ட எவரும் வழக்கு தொடரவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கத்தக்க வகையிலான தகுதிபெற்ற வழக்கு அல்ல என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டோர் சார்பாக 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் ஏற்கனவே கவல்துறைக்கும், அரசுக்கும் அனுப்பப்பட்டு அதற்கான சான்றுகளும் இங்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு பொது நல வழக்கு. எனவே, வழக்குக்கு தொடர்பே இல்லாத, சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள குடிமக்கள் எவரும் வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களின் சார்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக்கொண்டு, காவல்துறை தரப்பு வாதத்தை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கே என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ஒரு நபர் விசாரணை ஆணையம்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது, ‘விசாரணை ஆணையங்கள் சட்டம்’, 1952 ன் படி, பரமக்குடி நிகழ்வு தொடர்பாக விசாரணை செய்து, இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை தர வேண்டுமென்ற உத்தரவுடன்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி. சம்பத் அவர்களின் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை கடந்த 13.09.2011 அன்று அமைத்துள்ளது. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்ட பிறகு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, இந்த வழக்கை தமிழக காவல்துறை மிகச்சிறப்பாகவே விசாரித்து வருவதால் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டிய தேவையில்லை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். அதற்கு, ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது கள ஆய்வு செய்யும் ஒரு அமைப்பு மட்டுமே. அந்த ஆணையமானது தனது கருத்தை அறிக்கை வடிவில் தயாரித்து சில பரிந்துரைகளுடன் சமர்பிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். எனவே ஆணையத்தின் அறிக்கை வரும்வரையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்தீர்ப்பு நெறிகளைச் சுட்டிக்காட்டி வாதம் செய்தார்கள். மேலும் மாநில அரசின் காட்டுப்பாடில் இயங்கும் ஆணையத்தின் விசாரணையை பாதிக்கப்பட்ட மக்கள் நம்பத்தயாரில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் விசாரணை ஆணையம் வந்தபோது வாயில் கருப்புதுணி கட்டி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்ததுடன், அந்த ஆணையத்தையும் புறக்கணித்துள்ளார்கள். எனவே, அரசு தரப்பினரின் இந்த வாதமும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வு:

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நீதிமன்றமானது, ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட சாராரின்மீது எந்தவித நியாயமான தேவையும் இல்லாமல் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது ஒரு சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வாகும் என்று கூறியது.

பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை:

குடிமக்களுக்கு வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணையை உத்தரவாதப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மேலும், குடிமக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யவேண்டிய வகையில், முழுமையான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் வழங்க வேண்டியது அத்தியாவசியமானது. உள்ளூர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் எழுந்திருக்கும் சூழலில், அவ்வழக்கில் அதே காவல் அதிகாரிகளே விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கும் சூழலில் விசாரணை குறித்த ஐயப்பாடு எழுவது இயல்பானதே.

விசாரணையானது நியாயமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும். அதேவேளையில் அந்த விசாரணை, பாதிக்கப்பட்டோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் வகையிலும் அமைய வேண்டும். 

மத்திய குற்றப் புலனாய்வுத் துறை:

வலுவான மற்றும் அழுத்தமான காரணங்கள் உள்ளதால், இந்த வழக்கில் வெளிப்படையான, நடுநிலையான விசாரணை தேவை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் இந்த தீர்ப்பின் நகல் கிடைத்ததிலிருந்து, பத்து நாட்களுக்குள் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும். ஏதாவதொரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் அந்த விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். வெளிப்படையான, வீரியமான விசாரணைக்காக, மாநில அரசு தனது பூரண ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் நல்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படியாக பல்வேறு தரப்பினர்களின் தொடர் போராட்டத்தினால், ஊர் கூடி தேர் இழுத்ததின் காரணமாக கிடைத்த ஒரு இடைக்கால வெற்றியே இந்த தீர்ப்பாகும். இதே முனைப்புடன் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகளை முன்னெடுத்தலில் தான் அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி நாம் பயணிக்க முடியும்.

-இ.இ.இராபர்ட் சந்திரகுமார்