Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Thursday, September 27, 2012

பொ. ரத்தினம் : மதராசி வக்கீல்


களத்தில் இறங்கி மக்களுடன் இணைந்து செயல்படும் ஒரு சமூகப் போராளியின் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் ஒருபோதும் 'நான்’ என்பது துருத்திக்கொண்டு நிற்காது. எந்தச் சூழலிலும் அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவது இல்லை. 68 வயதாகும் வழக்கறிஞர் பொ.ரத்தினம் அப்படி ஓர் அற்புதம்!

மணிக்கணக்காகப் பேசினாலும் உரையாட லில் ஓர் இடத்தில்கூட 'நான்’ என்று ஒரு தடவைகூட உச்சரிக்க மாட்டார். திருமணம்கூடச் செய்துகொள்ளாமல் கடந்த 45 ஆண்டுகளாக ரத்தினம் ஆற்றி வரும் களப் பணிகள்... ஆர்வம் உள்ள எல்லோருக்கும் அரிச்சுவடி. மேலவளவு படுகொலை, அத்தியூர் விஜயா, மனித மலத்தை வாயில் திணித்த திண்ணியம் வன்கொடுமை... இப்படி ஒடுக்குமுறைகள் நிகழும் இடங்களில் இவரைக் காணலாம். நைந்த செருப்பு, ஒரு பழைய சூட்கேஸ்... இவைதான் ரத்தினத்தின் உடைமைகள். இவற்றோடு நீதிக்கான நீண்ட பயணத்தை நிகழ்த்தும் மனிதர்.
''விருத்தாசலத்தில் முருகேசன் என்ற தலித் பையன், கண்ணகி என்ற வன்னியர் பெண்ணைக் காதலிக்கிறார். வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் ரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து, அந்தப் பெண்ணைத் தன் உறவினர் வீட்டில் தங்கவைக்கிறார். பெண்ணைக் காணவில்லை என்றதும் தேடுகின்றனர். முருகேசன் மீது சந்தேகம் வந்து, அடித்துச் சித்ரவதை செய்கிறார் கள். அவர் வலியைப் பொறுத்துக்கொண்டு, 'எனக்குத் தெரியாது’ என்கிறார். உடனே, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தோண்டிவைத்திருந்த 300 அடி ஆழக் குழிக்குள் முருகேசனைக் கயிற்றில் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடுகின்றனர். உயிர் பயத்தில் உண்மையைச் சொல்கிறார். உடனே, உறவினர்கள் சென்று கண்ணகியை அழைத்து வருகிறார்கள். அந்த இடைவெளியில் ஊரில் விறகுகள் அடுக்கி எரிப்பதற்கு மயானம் தயார் செய்யப்படுகிறது. பெண்ணை அழைத்து வந்தது முருகேசனின் சித்தப்பா. அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, மற்றவர்கள் சேர்ந்து முருகேசனுக்கும் கண்ணகிக்கும் வாயில் விஷத்தை ஊற்றுகின்றனர். அவர்கள் குடிக்காமல் துப்பவே, காதில் விஷத்தை ஊற்றி இருவரையும் கொல்கிறார்கள். கண்ணகியை மட்டும் வன்னியர் சுடுகாட்டில் எரித்துவிட்டு, முருகேசனை வேறு ஓர் இடத்தில்வைத்து எரிக்கிறார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த கூட்டம் கலைந்து செல்கிறது. எதுவுமே நடக்காததுபோல அடுத்த நாளில் இருந்து இயல்பு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள்.

இது ஏதோ கற்காலத்தில் நடந்தது அல்ல. சில வருடங்களுக்கு முன்பு நம் தமிழ்நாட்டில் நடந்தது தான். முருகேசனும் கண்ணகியும் செய்த தவறு என்ன? காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் அவ்வளவு பெரிய குற்றமா? முருகேசன் இன்ஜினீயரிங் படித்தவர். கண்ணகி பி.காம். படித்தவர். ஒரு கிராமப்புற தலித் குடும்பத்துப் பையன் இன்ஜினீயரிங் வரை படிப்பது அத்தனை சாதாரண காரியம் அல்ல. கடைசியில் சாதி வெறி முருகேசனைக் காவு வாங்கிவிட்டது. படித்துவிட்டால் சாதி இழிவு நீங்கிவிடும் என்று சொல்வது எத்தனை அபத்தமானது?'' - ரத்தினத்தின் குரலில் கோபம் தெறிக்கிறது.

தமிழ்நாட்டு தலித்துகள் மீதான மிக மோசமான அடக்குமுறைக்குச் சான்றாக இருக்கும் சம்பவம் மேலவளவு முருகேசன் படுகொலை. தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட மேலவளவு ஊராட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதும் வெற்றிபெற்றதும்தான் முருகேசன் செய்த ஒரே தவறு. விளைவு... உள்ளூர் ஆதிக்கச் சாதி வெறியர்களால் முருகேசனும் இன்னும் ஐந்து தலித்துகளும் பட்டப்பகலில் பேருந்தை வழி மறித்து வெட்டிக் கொல்லப்பட்டார்கள். வெட்டி எடுக்கப்பட்ட முருகேச னின் தலையை ஒரு கிலோ மீட்டர் தள்ளி வீசினார்கள். மொத்த இந்தியாவையும் அதிரவைத்த இந்தப் படுகொலையில் தலித் மக்களுக்காகக் களம் இறங்கி உச்ச நீதிமன்றம் வரையிலும் சட்டப் போராட்டம் நடத்தி 17 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தவர் ரத்தினம். தற்போது மதுரையில் இருந்து செயல்படும் இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம் என்ற கிராமம்.

''என் அப்பா ஒரு சிறு விவசாயி. திருச்சி தேசியக் கல்லூரியில் பி.காம். படித்தேன். பாடப் புத்தகம் தவிர மற்ற புத்தகங்கள் படிக்கப் படிக்க... மக்களுக்காக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. வீட்டில் என்னை எம்.பி.பி.எஸ். படிக்கவைக்க ஆசைப்பட்டார்கள். எனக்குச் சட்டம் படிக்க ஆசை. 'இரண்டையும் படித்துவிட்டு மக்களுக்காக உழைப்போம்’ என்ற எண்ணத்தில் சென்னைக்கு சட்டம் படிக்கப் போனேன். அங்கு சமூக அக்கறையுடன் செயல்படும் பல தோழர்கள், அமைப்புகளின் தொடர்பு கிடைத்தது. நிறையப் பேசுவோம், எழுதுவோம். 'புது நிலவு’ என ஒரு பத்திரிகை நடத்தினோம். பாக்கெட் சைஸில் 'சுட்டி’ என்ற பத்திரிகை நடத்தி, அது 22 ஆயிரம் பிரதிகள் விற்றது.

சட்டக் கல்லூரியில் தமிழில் பாடத்திட்டம் கொண்டுவரச் சொல்லி சட்டமன்றத்தில் போய்ப் போராடினோம். உடனே, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, 'தமிழில் பாடம் நடத்தப்படும். ஆனால், தேர்வுகள் ஆங்கிலத்தில் நடக்கும்’ என்றார். எவ்வளவு சூழ்ச்சி பாருங்கள்?! மறுபடியும் அதற்குப் போராடி தமிழிலேயே தேர்வும் எழுதலாம் என அறிவிக்கவைத்தோம்.

குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தப்படுவதற்கு எதிராக வேலைகள் பார்த்தோம். இப்போது வள்ளுவர் கோட்டம் இருக்கும் இடம் ஒரு குடிசைப் பகுதிதான்.

கல்லூரி முடிந்ததும் வீட்டில் திருமணப் பேச்சு நடத்தினார்கள். 'நான் சொத்து சேர்க்கும் வக்கீல் கிடையாது. நான் இப்படித்தான் இருப்பேன். யாராவது சம்மதித்தால் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன்.

அதன் பிறகு, தருமபுரி பகுதியில் வால்டர் தேவாரத்தின் மோசமான மனித உரிமை மீறல் களுக்கு எதிராக வேலை பார்த்தோம். பல வழக்குகள், போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் என மாநிலம் முழுவதும் சுற்றித் திரிந்தேன். பிறகு, நண்பர்கள் அழைப்பின் பெயரில் குஜராத் துக்குச் சென்றேன். அங்கு, பரோடாவுக்கும் சூரத்துக்கும் நடுவே ப்ரூச் மாவட்டத்தில் ஒரு மலைக் கிராமத்தில் பழங்குடி மக்களிடையே
வேலை பார்த்தோம். காவல் துறையும் வனத் துறையும் சேர்ந்துகொண்டு பழங்குடி மக்கள் மீது விருப்பம்போல பொய் வழக்குகளைப் போடுவார்கள். ஒருமுறை, புதிதாகத் திருமணம் முடித்திருந்த ஒரு பழங்குடிப் பெண்ணைக் காவல் துறையினரும் வனத் துறையினரும் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிவிட்டார்கள். 

அடிமைகளைப் போல ஒடுக்கப்பட்டுஇருந்த பழங்குடி மக்களுக்கு, இதற்கு எதிராகப் போராடி நியாயம் பெறலாம் என்று நம்பிக்கை தந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தோம். அந்த வழக்கு குஜராத்திலும் டெல்லியிலும் பெரிய அளவுக்குப் பேசப்பட்டது. என்னை 'மதராசி வக்கீல்’ என்று சொன்னார்கள். ஐந்து போலீஸ்காரர்களுக்கு 10 வருடங்கள் தண்டனை வாங்கிக்கொடுத்தோம். நான்கு வருடங்கள் குஜராத்தில் இருந்துவிட்டு மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டேன்!'' நினைவுகள் அழைத்துச் செல்லும் திசையில், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பேசிக்கொண்டே போகிறார் ரத்தினம்.
''
நம் நாட்டின் சாதிய அமைப்பு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு இருக்கிறது. எல்லா சாதிக்காரர்களும் தனக்கும் கீழே ஒரு சாதி இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகச் சாதி ஒழிந்தால்தான் அந்த இழிவு போகுமே தவிர, தனக்கு மேலே இருக்கும் சாதி ஆதிக்கத்தை மட்டும் தனியே ஒழிக்க முடியாது. இப்போது உள்ள ஒடுக்கப்பட்டோர் கட்சிகள் எல்லாமே, தலித் மக்களை வைத்து அரசியல் செய்து பிழைக்கின்றன. உண்மையில் அந்தக் கட்சிகள் சாதி இருப்பதை விரும்புகின்றன. சாதி ஒழிந்துவிட்டால், அவர்களால் பிழைக்க முடியாது. தலித்துகளின் வாயில் மனித மலத்தைத் திணித்த திண்ணியம் வழக்கில் குறைந்தபட்சத் தண்டனையோடு குற்றவாளிகள் வெளியே வந்துவிட்டனர். அதற்கு எதிரான மேல் முறையீடு செய்ய தலித் அமைப்புகளே முட்டுக்கட்டை போட்டுவிட்டன. இத்தகைய பிழைப்பு வாதக் கட்சிகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இந்த அரசியல் கிரிமினல்களை ஒழித்துக்கட்டி, மக்களின் மீது உண்மையான கரிசனம் உள்ள புதிய அரசியல் இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னலமற்ற அமைப்புக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்'' என்கிற ரத்தினம், மாநிலம் முழுவதும் உள்ள சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து 'சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்’ என்ற பெயரில் செயல்படுகிறார். 'புத்தர் பாசறை’, 'சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு’ போன்றவை யும் இவர் உருவாக்கியவையே.

ரத்தினத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் புகழ் பெற்றவை. நீதிமன்றங்களையும் நீதிபதிகளை யும் வழக்கு நடக்கும்போதே நேருக்கு நேர் விமர்சிப்பார். ஆனாலும் இதுவரை 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு’ இவர் மீது பாய்ந்தது இல்லை.

''ஏனெனில் உண்மை என் பக்கம் இருக்கிறது. என்னை 'ஒன் மேன் ஆர்மி’ என்பார்கள். நான் ஜூனியர்கள் வைத்துக்கொள்வது இல்லை. கூட்டத்தைத் திரட்டுவது இல்லை. உண்மையை மட்டுமே சொல்கிறேன். அச்சம் இல்லாமல் சொல்கிறேன். எதற்கு அஞ்ச வேண்டும்? 'தலித்துகள் எல்லாம் ஃப்ராடுகள்’ என்று ஓப்பன் கோர்ட்டில் ஒரு நீதிபதி சொல்கிறார். அவருக்கே அச்சம் இல்லை. நாம் எதற்குப் பயப்பட வேண்டும்? நீதிபதிகள் எல்லோரும் மக்கள் ஊழியர்கள்தான். நமது வரிப் பணத்தில்தான் அனைவரும் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், நீதிமன்றங்கள்பற்றிய மிகையான பெருமிதமும் அச்சமும் மக்களுக்கு இருக்கிறது. நீதிபதி கிருஷ்ணய்யர் ஓய்வுபெறும்போது, 'நான் நிறையத் தவறுகள் செய்துவிட்டேன்போல் இருக்கிறது. நீதிமன்றத்தின் மீது மக்களுக்குப் பெரிய நம்பிக்கையை உருவாக்கிவிட்டேன்’ என்று வருத்தப்பட்டுச் சொன்னார். மக்களின் நம்பிக்கை ஒரு பக்கம் இருக்க... 90 சதவிகித வழக்கறிஞர்களே இன்னமும் 'மை லார்டு’ என்றுதான் சொல்கிறார்கள். நீதிபதிகள் அதை விரும்பவில்லை என்றாலும் வக்கீல்கள் கைவிட மறுக்கிறார்கள். நாம் இவை அனைத்தையும் கடந்துதான் பாதிக்கப்படும் மக்களுக்கான நீதியைப் பெற வேண்டி இருக்கிறது!''

-பாரதி தம்பி
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நன்றி: ஆனந்தவிகடன், 03 அக்டோபர் 2012


Friday, August 3, 2012

காவல் நிலையத்தின் கதை!


ந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம்... அங்குள்ள காவல் நிலையம். தமிழகத்தில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் துறை டாஸ்மாக் என்றால், அரசின் பணியாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் துறைகளில் முதலிடம் பிடிப்பது தமிழகக் காவல் துறை. ஆம்... நம்புங்கள்... பத்திரப் பதிவுத் துறை, விற்பனை வரித் துறைகளைவிட காவல் துறையில் 'மேல்’ வருமானம் அதிகம். தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தின் பணிகள் என்ன, அதன் அதிகார எல்லை என்ன, வரம்பு மீறும் எல்லைகள் எவை... வாருங்கள் காவல் நிலையத்துக்கு ஒரு விசிட் அடிப்போம்.

 தமிழகத்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள், சுமார் 250 ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒரு லட்சம் காவலர்கள்... பிரமாண்ட ஆலமரமாகக் கிளை பரப்பி இருக்கும் காவல் துறையில் கட்டப் பஞ்சாயத்தும் லஞ்சமும்கூடப் பிரமாண்டம்தான். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்?

ஃபர்ஸ்ட் இன்கம் ரிப்போர்ட்!
முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர்... போலீஸாரைப் பொறுத்தவரை பொன் முட்டையிடும் வாத்து. காவல் நிலைய நடைமுறைகளில் முதல் நடைமுறையே எஃப்.ஐ.ஆர். பதிவுதான். அதில் இருந்தே தொடங்குகிறது வசூல் வேட்டை. காவல் நிலையத்தில் ஒருவர் அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் அல்லது நிலைய எழுத்தர் உடனடியாக ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்க வேண்டும். புகாரின் தன்மையைப் பொறுத்து அன்றைய தினமே எஃப்.ஐ.ஆர். பதியப்பட வேண்டும்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? புகாரைப் பெற்றுக்கொண்டு உடனே புகாரில் சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்பை அழைக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். புகார்தாரர், எதிர்த் தரப்பு... இவர்களில் யாரிடம் அதிக பேரம் நடக்கிறதோ, அவர்களுக்குச் சாதகமான வகையில் புகார் பதிவு செய்யப்படும் அல்லது பதிவுசெய்யப்படா மலேயே போகும். ஒருவேளை போலீஸ் வற்புறுத்தியும் புகார்தாரர் புகாரை வாபஸ் வாங்க மறுத்தால், அதற்கெல்லாம் அசரவே மாட்டார்கள். எதிர்த் தரப்பிடம் ஒரு புகாரை வாங்கி, ஒரிஜினல் புகார் கொடுத்தவர் மீதே வழக்குப் பாய்ச்சி அதிரவைப்பார்கள். 'ஏன்தான் காவல் நிலையத்துக்குச் சென்றோமோ’ என்று விரக்தியில் நொந்தேபோவார் புகார்தாரர்.  இந்த எஃப்.ஐ.ஆரை எப்படியும் வளைக்கலாம். அது நிலையத் தின் அனுபவசாலிக்குக் கைவந்த கலை. உதாரணமாக, ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் வழக்குக்கு செக்ஷன் 506 (2) என்று பதிவுசெய்தால் ஜாமீன் கிடைக்காது. அதையே வெறும் மிரட்டல் என்று செக்ஷன் 506 (1)ல் பதிவுசெய்தால் ஸ்டேஷனில் இருந்து கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம். இப்படி ஒரு எண்ணை மாற்றி எழுதினாலே, வழக்கின் மொத்த ஜாதகத்தையே மாற்றிவிடலாம்.
கைதுக்கும் காசு!
பதிந்த எஃப்.ஐ.ஆர். மீது குற்றம்சாட்டப் பட்டவரைக் கைதுசெய்யவும் கைது செய்யாமல் இருக்கவும் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்க வேண்டும். புகார்தாரர், குற்றம்சாட்டப்பட்டவர் இருதரப்பில் யாரிடம் அதிக பேரம் படிகிறதோ, அவருக்குச் சாதகமாக நடவடிக்கை பாயும். குற்றம்சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்தால், அதை ஆட்சேபிக்காமல் இருக்கவும் பணம் வேண்டும்.

ரெக்கவரி ரீல்!
மேற்கண்ட வகை வருமானம் எல்லாம் சட்டம் - ஒழுங்கு போலீஸாருக்கு மட்டும்தான். இவர்களுக்கு அன்றாட வருமானம் என்றால், குற்றப் பிரிவு போலீஸாருக்கு இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறைதான் வருமானம். ஆனால், செம லம்ப் வருமானம். திருடு போன சொத்துகளை மோப்பம் பிடித்து, துப்புத் துலக்கி மீட்கும் கடமைஆற்றும் போலீஸாருக்கு ஒவ்வொரு வழக்கும் புதையல் வேட்டைதான். 100 பவுன் திருடு போய்விட்டதாகப் புகார் அளித்தால், உடனே எஃப்.ஐ.ஆர். போட மாட்டார்கள். ஆனால், உடனடியாக வியர்க்க விறுவிறுக்க தேடுதல் வேட்டை நடத்துவார்கள். எந்தத் திருடன், எந்த ஏரியாவில், எந்த ஸ்டைலில் தேட்டை போடுவான் என்பதெல்லாம் ஸ்டேஷன் காவலர்களுக்கு அத்துப்படி. திருடனை அமுக்கிப் பிடித்து, 'சிறப்பு விசாரணை’ மூலம் நகையை எங்கே பணமாக்கினான் என்று ஆதியோடு அந்தமாக உண்மையைக் கறந்துவிடுவார்கள். அண்ணா நகர், அமைந்தகரை தொடங்கி ஆம்பூர் வரை தான் கைவரிசை காட்டிய இடங்களை அவன் பட்டியல் இடுவான். அப்போது போலீஸ் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏரியா காவல் நிலையத்திலும் அவன் மீது தனித்தனி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து, ஒவ்வொரு எஃப்.ஐ.ஆருக்கும் இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். அந்தந்த நிலைய விசாரணை அதிகாரி, அவரது எல்லையில் திருடுபோன சொத்துகளை மீட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.
ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? திருடன் நகையை விற்ற நபர்களிடம் அதட்டி மிரட்டி தங்கத்தை மீட்பார்கள். இப்படி 10 வழக்குகளுக்கான மொத்த திருட்டுச் சொத்தையும் ஒன்றுதிரட்டினால், 200 பவுனுக்குக் குறையாமல் கிடைக்கும். பிறகு, புகார்தாரரைக் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசுவார்கள்.
''அந்தப் பய எல்லாத்தையும் வித்து சாப்புட்டுட்டான். உங்களப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. அதுவும் அடுத்த மாசம் பொண்ணுக்குக் கல்யாணம்கிறீங்க... நாங்க வேணா ஒண்ணு செய்யறோம். வேற கேஸ்ல கொஞ்சம் நகை சிக்கி இருக்கு. அது முப்பது பவுன் தேறும். நீங்க ஒரு அமவுன்ட் கொடுத்தா, அதை எடுத்து உங்களுக்குச் சரிக்கட்டிடலாம்'' என்பார்கள். ஆட்களின் வசதியைப் பொறுத்து, லட்சங்களையோ ஆயிரங்களையோ பெற்றுக் கொண்டு... கட்டக் கடைசியாகத்தான் எஃப்.ஐ.ஆர். பதிவார்கள். 100 பவுனுக்கு 30 பவுன் திருடுபோனதாகப் பதிவுசெய்து... அதையும் வெற்றிகரமாக மீட்டுக் கொடுத்ததாக பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுப்பார்கள். லாபம், 170 பவுன் ப்ளஸ் சில லட்சங்கள்! நாம் இதை நம்ப முடியாமல் பழுத்த அனுபவம் உள்ள சில கிரிமினல் லாயர்களிடம் விசாரித்தபோது, 'இது அனைத்தும் 100 சதவிகிதம் உண்மைதான்!’ என்றுஆமோதித்தார்கள். அட... ஆண்டவா!

ஏன் இந்தக் கொள்ளை?
காவல் நிலையங்களில் ஏன் இந்த அடாவடி வசூல்? இதில் ஒரு சின்ன உண்மை என்ன வென்றால், தங்கள் சுயலாபத் துக்கு மட்டுமே காவலர்கள் இப்படி வசூல் வேட்டை நடத்துவது இல்லை. காவல் நிலையத்தின் நிர்வாகச் செலவினங்களைச் சமாளிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்று நேர்மையாகச் செயல்படும் பல காவலர்களே சொல்கிறார்கள்.  

விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், ஸ்டேஷனில் இருக்கும்வரை அவருக்கு உணவு, காபி, டீ முதலிய அத்தனையும் அந்தந்த காவல் நிலையத்தின் பொறுப்புதான். இப்படி விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபரின் மூன்று வேளை உணவுச் செலவுக்கென அரசு வழங்கும் தொகை 10 ரூபாய் மட்டுமே.
குற்றவாளியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுதல், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற போக்குவரத்துச் செலவுக்கு அரசு பஸ் கட்டணம் மட்டுமே அரசின் அளவுகோல்.

விழிபிதுங்கும் கூட்ட நெரிசலில் நகரப் பேருந்துகளில் அக்யூஸ்டை அழைத்துச் செல்ல முடியுமா? ஆட்டோ தான் ஒரே வழி. கடைநிலைக் காவலர்கள் தங்கள் கைக்காசு மூலம்தான் அதைச் சமாளிக்க வேண்டும்.

இதைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், உயர் அதிகாரிகள் இழுத்துவிடும் செலவுதான் பலரை மூச்சு முட்ட வைக்கும். உயர் அதிகாரி துப்பு துலக்கவோ... மோப்பம் பிடிக்கவோ ஏரியாவுக்கு வந்தால், அந்த ஊரின் நட்சத்திர ஹோட்டல் அறை, அவரது போக்குவரத்துக்கு ஏ.சி. கார், சாப்பாடு, சரக்கு முதல் 'மேற்படி’ச் செலவு வரை அனைத்துமே அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்புதான்.

காவல் நிலைய ஜீப்புக்கு அரசு மாதம் ஒன்றுக்கு 160 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்கிறது. இதை அந்தந்தப் பகுதியில் இருக்கும் அரசு பெட்ரோல் பங்க்குகளில் நிரப்பிக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த நிலையத் தின் உயர் அதிகாரிகள் தனது சொந்த வாகனத்துக்கு ஸ்டேஷன் ஜீப்பின் பதிவு எண்ணைக் கொடுத்து எரிபொருள் நிரப்பிக்கொள்வார். அப்படியெனில் ஸ்டேஷன் ஜீப்புக்கு? ஏரியா பெட்ரோல் பங்க்கில் மாமூலுக்குப் பதில் டீசல். இதுவும் இன்ன பிறவுமாக அனுதினமும் குவியும் செலவுகளைச் சமாளிக்கவே காவலர் கள் இப்படி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வசூல் மேளா நடத்துவதாக நியாயம் கற்பிக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் சொல்லும் கணக்குகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அந்தச் செலவுகளெல்லாம் போலீஸார் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவிகிதம்கூட இல்லை.

பட்டையைக் கிளப்பும் வசூல் பேட்டை.  
சென்னையின் பரபரப்பான இடத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தின் நாள் ஒன்றின் 'மேல்’ வருமானமே இரண்டு, மூன்று லட்சங்களைத் தொடும். மற்ற நகரங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு லட்சத்துக்குக் குறையாது. தமிழகம் முழுக்க அப்படி வசூலில் பட்டை கிளப்பும் சில பேட்டைகள் இங்கே...
வணிக நிறுவனங்கள் மற்றும் 'அண்டர்கிரவுண்ட் பஜார்’கள் காரணமாக சென்னையில் பூ மணக்கும் ஸ்டேஷனும் யானையே கவிழ்ந்த ஸ்டேஷனும் வருமானத்தில் நம்பர் ஒன்.

காஞ்சிபுரத்தில் 'கூடு வா’ என்று அழைக்கும் நிலையத்தின் கட்டுப்பாட்டில் வெளிநாட்டு கார் நிறுவனங்களும் ரியல் எஸ்டேட் தொழிலும் களைகட்டுவதால், அடிபிடி வருமானம். மதுரை யில் 'இந்த’க் காவல் நிலையத்துக்கு மட்டும் 'திடீர் திடீர்’ என யோகம் அடிக்கும். ஸ்டார் ஹோட்டல்கள், மது பார்கள், பேருந்து நிலையம் ஆகியவையே காரணம். நெல்லையில் காற்றாலை தொழில் கொடிக் கட்டிப் பறக்கும் 'மான்’ காவல் நிலையத்தில் கொட்டுது பணம். சேலத்தில் 'பள்ளத்து’ ஸ்டேஷன், பெரிய மாரியம்மன் லிமிட்டில் இருக்கும் இன்னொரு ஸ்டேஷனுக்கு வசூலில் செம டஃப் கொடுக் கிறது. கோவையில் ரெண்டு எழுத்து மேட்டில் உள்ள ஸ்டேஷன் காவலர்களின் பாக்கெட்டில் ஐந்நூறுக்குக் குறைந்து கரன்ஸியைப் பார்க்க முடியாது. திருப்பூரில் வடக்கு பார்த்த திசைக்குத்தான் மவுசு அதிகம்.  
காவல் நிலையங்களைப் பொறுத்தவரை யார், எவராக இருந்தாலும் காசேதான் கடவுளடா!  

காக்கியும் சில கையூட்டு உண்மைகளும்!
 தமிழக அரசியல் களத்தையே மிகச் சமீபத்தில் உலுக்கிய கொலை வழக்கு அது. இப்போது வழக்கு விசாரணை இன்னொரு பிரிவு போலீஸாரிடம் சென்றுவிட்டது. ஒருவேளை சி.பி.ஐ-க்கு வழக்கு செல்வதாக இருந்தால், தடயம், துப்பு, சாட்சி என எதையும் விட்டுவைக்கக் கூடாது என்று மேலிடத்தில் இருந்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.

 தென் மாவட்டத்தின் அதிமுக்கிய கனிம நிறுவன உரிமையாளரின் மகன் மீது மூன்று கிடுக்கிப்பிடி வழக்குகளைப் பாய்ச்சத் தயாரானது போலீஸ். நேர்மையான அதிகாரி ஒருவர் அந்தப் பணிகளை முன்னெடுத்துச் செய்த போதுதான் தடாலடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ஊரை விட்டுக் கிளம்பிய மறுநாளே, அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிட்டார்கள். இதற்குக் கனிம அதிபர் செலவு செய்தது ஒன்றேகால் கோடி!

 தமிழக முதல்வரே கடுமையாக அர்ச்சித்த அந்தத் தென் மாவட்டப் புள்ளி, தற்போது மதுரை டு தொண்டி வரையிலான 80 கோடி மதிப்பு சாலை ஒப்பந்தப் பணிகளைக் கைப்பற்றியுள்ளார். இதற்காக போலீஸ் மற்றும் ஆளும் கட்சியினருக்கு மட்டும் அவர் வாரி இறைத்தது திட்ட மதிப்புத் தொகையில் 10 சதவிகிதமாம்.

 இன்றைய தேதியில் அந்தச் சாமியார் தமிழக போலீஸாருக்குப் பணம் காய்க்கும் மரம். கடந்த மாதம் சாமியாரின் தென் மாவட்ட ஆசிரமம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சாமியாரின் சிஷ்யர்கள் வீசிய செருப்பு பெண் போலீஸார் மீது விழுந்தது. அதற்காக சாமியார் மீது வழக்கு போடாமல் இருக்க கைமாற்றப்பட்ட தொகை 17 லட்சமாம். அதற்கு முன் மிக நெருக்கடியான நேரத்தில் சாமியார் வெளிமாநிலத்தில் இருந்து தென் மாவட்டம் வந்தார். அப்போது அவரது லைனுக்கு வந்த தென் மாவட்ட போலீஸார், 'வெளிமாநில போலீஸார் உங்களைக் கைதுசெய்ய அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள். அவர்களைத் திசை திருப்பி அனுப்பலாமா அல்லதுஉங்களை பேக் செய்து அவர்களிடம் அனுப்பலமா?’ என்று கேட்டு இருக்கிறார்கள். வெலவெலத்துப் போன சாமி, உடனடியாக தனது காரில் இருந்த பெட்டியில் இருந்து 10 லட்சத்தை 'ஹாட் கேஷாக’க் கொடுத்து அனுப்பினாராம். பிறகு, தலைமறைவாகப் பயணித்துத் தன் இருப்பிடம் சேர்ந் ததும்தான் அவருக்குத் தெரிந்ததாம், வெளி மாநில போலீஸ் யாரும் தன்னைக் கைது செய்ய வரவில்லை என்று. உலகத்துக்கே உட்டாலக்கடி வித்தை காட்டியவருக்கே டேக்கா கொடுத்தது அந்த 'ரணகள பூமி’யைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும்.


விலையும் மிக அதிகமே!
காவலர்கள் அனைவருமே ஊழல் புரிவது இல்லை. ஆனால், காவல் பணியை தங்கள் உயிர் மூச்சாக நினைத்துச் செயல்படுபவர்கள் சுமார் 30 சதவிகிதத்தினர் மட்டுமே. அதுவும் இன்றைய சூழலில் நேர்மை என்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே, அதுவும் ஓரளவுதான் சாத்தியம். ஒரு ஆய்வாளர் தன் அளவில் மட்டுமே நேர்மையாக இருக்க முடியும். மற்றபடி தனது காவல் நிலைய எல்லைக்குள் போலீஸார் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், அந்தப் பணம்தான் ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்கும் என்கிற யதார்த்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கும்.  

போலீஸாருக்கு டூட்டி நேரம் எல்லாம் எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் வேலை நேரம்தான். காவல் நிலைய ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களுக்குள் வேலை நேரத்தைப் பிரித்துக்கொண்டு தூக்கம், சாப்பாடு மற்றும் குடும்பத்துக்கு மிகச் சொற்ப நேரத்தை ஒதுக்கிக்கொள்வார் கள். காக்கிச் சட்டையின் கம்பீரத்துக்கும் அங்கீகாரத்துக்கும்... அதற்கு மேல் கிடைக்கும் வருமானத்துக்கும் இவர்கள் கொடுக்கும் விலையும் மிக அதிகமே.


-டி.எல்.சஞ்சீவிகுமார்
ஓவியங்கள் : பாலமுருகன்

நன்றி: ஆனந்தவிகடன், 01-08-12