Monday, March 17, 2008

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 2

ஓர் குற்றவியல் வழக்கின் அடித்தளமே அக்குற்ற நிகழ்வைக் குறித்து அளிக்கப்படும் புகார்தான். வன்கொடுமை நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். குற்றம் என்பது, “சட்டம் தடை செய்துள்ள செயலைச் செய்வதோ அல்லது சட்டம் செய்ய வலியுறுத்தும் செயலைச் செய்யாமலிருப்பதோ ஆகும்.'” வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, பிரிவு 3(1)இல் பதினைந்து விதமான வன்கொடுமைகள் குற்றங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.


இவற்றிற்கு 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிற சட்டங்களில் ஏற்கனவே குற்றம் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் ஏழுவிதமான குற்றச் செயல்கள் பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக செய்யப்படுமேயானால், அவை பிரிவு 3(2)இல் வன்கொடுமைகளாகக் கருதப்படும். இவற்றிற்கு, வன்கொடுமையின் தீவிரத்தன்மைக்கேற்ப அபராதம் தவிர, 7 ஆண்டுகள் வாழ்நாள் சிறை முதல் மரண தண்டனை வரை தண்டனையாக வரையறுக்கப்பட்டுள்ளன. இவை சட்டம் தடை செய்துள்ள குற்றங்களைச் செய்வதால் வன்கொடுமை எனக் கருதப்பட வேண்டியவை.


பொது ஊழியர் யார்?


இச்சட்டப்படி ஒரு பொது ஊழியர் கடை நிலை அரசு ஊழியர் முதல் குடியரசுத் தலைவர் வரையிலான அனைத்து அரசு அலுவலர்களையும் அனைத்துச் சட்டங்களும் இவ்வாறே குறிப்பிடுகின்றன. தன் கடமையை இச்சட்டம் வரையறுத்துள்ளவாறு செய்யாமலிருப்பாரேயானால், அதுவும் வன்கொடுமைக் குற்றம் என்று பிரிவு 4 கூறுகிறது.


பயன்படுத்தப்படாத சட்டப்பிரிவு :


இச்சட்டம் 1989இல் இயற்றப்பட்டிருந்தாலும் கூட, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வழிமுறை சுட்டும் விதிகள் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995இல்தான் வகுக்கப்பட்டது. எனவே, இச்சட்டமே 1995க்குப் பின்னரே நடைமுறைப்படுத்தப்பட்டது எனலாம். எனினும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையினரும், 1995-விதிகளின் படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு தீருதவிகள் (Reliefs) வழங்க வேண்டிய வருவாய்த்துறையினரும் பிரிவு 4இல் கூறியுள்ளவாறு இச்சட்டம் வரையறுத்துள்ள கடமையைப் பெரும்பாலான நிகழ்வுகளில் நிறைவேற்றுவதில்லை. தேசிய அளவிலேயே இதுதான் உண்மை நிலை என்ற போதும், இப்பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை.


தமிழகத்தைப் பொருத்தவரையில், 1995 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இப்பிரிவின் கீழ் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது வியப்பளிக்கும் உண்மை (வன்கொடுமைப் புகார்கள் அதிக அளவிலுள்ள தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பெற்ற ஆய்வு முடிவுகள் ‘வன்கொடுமைகளும் சட்ட அமலாக்கமும்’ எம்.ஏ.பிரிட்டோ, டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மய்யம், மதுரை, பக். 57 மற்றும் 192). இதே ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, ‘இச்சட்டப்பிரிவு நடைமுøறயில் ஓர் அழகு சாதனமே’ என்ற நீதிபதி புண்ணையா ஆணையத்தின் அறிக்கை வாசகமொன்று சுருக்கமாக விளக்குகிறது.


புகார்கள் சந்திக்கும் தடைகள்:


ஒரு வன்கொடுமைப் புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்படும்போது, அதைப் பதிவு செய்யாமலிருக்க காவல் நிலையத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் முயற்சிகளும் பலவகை:

(1) புகார் தரும் பாதிக்கப்பட்டோரை பலமுறை காவல் நிலையத்திற்கு வரச்சொல்லியும் காத்திருக்கச் செய்தும் அலைக்கழித்தல், உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று இல்லாத சட்ட நுணுக்கத்தைக் காரணம் காட்டி தாமதப்படுத்துதல்.


(2) வன்கொடுமை இழைத்தோர் ஆதிக்க சாதியினராகவும், பொருளாதார ரீதியில் வளமிக்கவர்களாகவும் இருப்பதாலும், பல நேரங்களில் அரசியல் பின்னணி கொண்டவர்களாகவும் உள்ளதால், அவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டோரை புகாரை திரும்பப் பெறச் சொல்லியும், ‘சமரசம்’ செய்து கொள்ளச் சொல்லியும் ‘அன்புடன் அறிவுறுத்துதல்’.


(3) அவ்வாறான ‘அறிவுறுத்தலுக்கு’ அடிபணியாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி பிடிவாதம் பிடிப்பவர்களை வன்கொடுமை இழைத்தோருக்கு எதிராகக் குற்றம் இழைத்ததாகப் பொய் வழக்குப் போடுவதாக மிரட்டுதல்.


(4) பாதிக்கப்பட்டவர்கள் அப்படியும் ஒத்துழைக்காமல் போகும் நிகழ்வுகளில், வன்கொடுமை இழைத்தவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய்ப் புகார் பெற்று அப்புகாரை முதல் வழக்காகவும், பாதிக்கப்பட்டோர் அளிக்கும் உண்மைப் புகாரை இரண்டாவதாகவும் பதிவு செய்து, வன்கொடுமை வழக்கை வலுவிழக்கச் செய்தல்.


(5) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் சட்ட நடைமுறையின்படி அதை உரிய நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் தாமதித்தல்.


(6) இத்தாமதத்தைப் பயன்படுத்தி புகாரின் உண்மைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க வாய்ப்பளித்து வன்கொடுமை இழைத்தோருக்குச் சாதகமாகச் செய்தல்.


(7) காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் முதல் தகவல் அறிக்கையின் நகலைத் தாமதமாக அனுப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமைச் சட்டவிதிகளின்படி தீருதவி கிடைப்பதைத் தாமதித்தல் என்பன, இம்மாதிரியான முயற்சிகளுள் முதன்மையானவை. இத்தனைத் தடைகளையும் மீறி முதல் தகவல் அறிக்கை பதிக்கச் செய்வது நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தின் முதல் படியே!


புகாரின் உள்ளடக்கம்:


ஒரு புகார் இத்தடைகளை எல்லாம் மீறி பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு விசாரணை நடைபெற்று வன்கொடுமையாளர் சட்டப்படியான தண்டனை பெற ஏதுவான வகையில் சரியான தகவல்களுடன் தரப்பட வேண்டியது கட்டாயம். எனவே ஒரு வன்கொடுமைப் புகார் என்னென்ன தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


குற்றங்களின் வகைகள்:


குற்றங்கள் அனைத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 2 (இ)ன்படி இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, பிடியாணை வேண்டாக் குற்றங்கள் (Cognizable offences) மற்றும் பிடியாணை வேண்டும் குற்றங்கள் (Non- Cognizable offences) என்பன. பிடியாணை வேண்டாக் குற்றங்கள் என்பவை, குற்றம் செய்ததாகக் கருதப்படும் நபர் ஒருவரை நீதித்துறை நடுவர் வழங்கும் பிடியாணை இல்லாமலேயே கைது செய்யக்கூடிய குற்றங்களாகும். பிடியாணை வேண்டும் குற்றங்கள் என்பன நீதித்துறை நடுவர் பிடியாணை வழங்கியதன் அடிப்படையிலேயே, குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் நபரொருவரைக் கைது செய்யக்கூடிய குற்றங்களாகும்.


இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள குற்றங்களில் பிடியாணை வேண்டா / வேண்டும் குற்றங்கள் எவையெவை எனக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் முதலாம் பின்னிணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் குறிப்பிடப்படாத, மற்ற சட்டங்களில் கூறப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரையிலான தண்டனை அல்லது அபராதம் மட்டுமே விதிக்கத்தக்கவை. ‘பிடியாணை வேண்டும் குற்றங்கள்’ என்றும், மற்றவை ‘பிடியாணை வேண்டாக் குற்றங்கள்’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


எளிமையாகக் கூறவேண்டுமெனில், கொலை, கொலை முயற்சி, கொள்ளையடித்தல், பாலியல் வன்கொடுமை போன்ற தீவிரத்தன்மை அதிகமாக உள்ள குற்றங்கள் பிடியாணை வேண்டாக் குற்றங்கள் என்றும், சட்டவிரோதமாகக்கூடுதல், வாய்ச்சண்டை, சிறுகாயம் விளைவித்தல் போன்ற தீவிரத்தன்மை குறைவாக உள்ள குற்றங்கள் பிடியாணை வேண்டும் குற்றங்கள் எனலாம்.


பிணை குற்றங்கள்:


அனைத்துக் குற்றங்களையும் பிணையில் விடக்கூடிய குற்றம் (Bailable offences), என குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 2(ச்)இல் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளைப் பொருத்தவரையில் எவையெவை பிணையில் விடக்கூடியவை, பிணையில் விடக்கூடாதவை என்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் முதலாம் பின்னிணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டவை தவிர, மற்ற சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச் செயல்கள் 3 ஆண்டுகள் வரை தண்டனைக்குரியவையும் அபராதம் மட்டுமே விதிக்கக்கூடியவையும் ‘பிணையில் விடக்கூடிய குற்றங்கள்’ என்றும் அதற்கு மேல் தண்டனைக்குரியவையும், 3 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தாலும் சிறப்புச் சட்டம் ஒரு குற்றத்தைக் குறிப்பாக ‘பிணையில் விடக்கூடாத குற்றமாகக்’ கருதலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகின்றது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்பவை அக் குற்றத்தைப் புரிந்ததாகக் கருதப்படுபவர்களுக்கும் பிணையை உரிமையாக அளிக்கிறது. பிணையில் விடக்கூடாத குற்றங்களைப் பொருத்தவரையில் அந் நபரை பிணையில் விடலாமா, கூடாதா என்பதை தீர்மானிப்பது நீதித்துறையின் விருப்புரிமை (Discretion) ஆகும்.


எதிர்பார்ப்பு பிணை கிடையாது:


வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, பிரிவு 3(1)இல் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பதினைந்து வன்கொடுமைகளுக்கு ஆறு மாதங்கள் முதல் அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை என்றிருப்பதால், வன்கொடுமைக் குற்றங்கள் பிடியாணை வேண்டாக் குற்றங்கள் என்பது தெளிவு. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைப் பிரிவுகளுக்கு எதிர்பார்ப்பு பிணை (Anticipatory Bail) வழங்கக்கூடாது என இச்சட்டத்தின் பிரிவு 18 தடை செய்துள்ளதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டக் குற்றங்கள் பிணையில் விடக்கூடாத குற்றங்களாகவே இச்சட்டத்தால் கருதப்படுகிறது.


புகாரில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள்:


ஒரு வன்கொடுமைப் புகார் கீழ்க்கண்ட அடிப்படைச் செய்திகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:

1) வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் நபர், பட்டியல் சாதியினராகவோ அல்லது பழங்குடியினராகவோ இருப்பது. அதே சமயம் வன்கொடுமை இழைப்பவர் அல்லது இழைப்பவர்களில் ஒருவரேனும் பட்டியல் சாதியினராகவோ அல்லது பட்டியல் பழங்குடியினராகவோ இல்லாமல், வேறு சாதியினராக இருப்பது.


2) சம்பவம் நடைபெற்ற நாள், நேரம், இடம், பங்கு பெற்ற நபர்கள்.


3) வன்கொடுமைச் செயலின் தெளிவான முழுமையான விபரம்.


4) வன்கொடுமையாளர் ஒருவருக்கு மேற்பட்டிருந்தால், ஒவ்வொரு நபரும் அக்குறிப்பிட்ட வன்கொடுமை நிகழ்வில் இழைத்த குறிப்பான குற்றச் செய்கை.


5) வன்கொடுமை நிகழ்த்தப்பெறக் காரணம் அல்லது பின்னணி.


6) வன்கொடுமைக்குச் சாட்சியாக இருந்த நபர்களின் பெயர், மற்ற விபரங்கள்.


7) ஒருவேளை புகார் காலதாமதமாக அளிக்கப்படுமேயானால், அதற்கான காரணம். ஒரு புகாரில் குற்ற நிகழ்வு குறித்த மேற்கூறிய தகவல்களே போதுமானவை.


குறிப்பிட்ட வன்கொடுமை எந்தெந்த சட்டப்பிரிவுகளின்படி குற்றமாகக் கருதப்படவேண்டும் என்பதைப் புகாரில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. முதல் தகவல் அறிக்கை என்பது அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு கலைக் களஞ்சியமாக இருக்க வேண்டியதில்லை (An FIR need not be an encyclopedia) என்று உச்ச, உயர்நீதி மன்றங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளன. சம்பவம் குறித்து அனைத்து விபரங்களும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு, புலனாய்வு அதிகாரி வழக்கைப் புலன் விசாரணை செய்யும் போது சாட்சிகளின் வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டு ஆதாரமாகக் கொள்ளப்படும். மேலும், ஒரு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச் செய்கைகள் எந்தெந்த சட்டத்தின் எந்தெந்தப் பிரிவுகளின்படி குற்றம் என்பதை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்ய வேண்டியது காவல் அதிகாரியின் கடமையே.


யார் புகார் கொடுக்கலாம்?


ஒரு புகார் காவல் நிலையத்தில் நேரடியாகக் கொடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் உடல் ரீதியாக காயம் போன்ற பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்தால், உயிருக்கு உடனடியாக ஆபத்து ஏற்படாத நிகழ்வுகளில், அவரை காவல் நிலையம் மூலம் உரிய குறிப்பாணை (Memo) பெற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். காயம் உயிருக்கு உடனடியான ஆபத்தை விளைவிக்குமெனில், முதலில் அந்நபரை நேரடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம். இவ்வாறான சூழலில், மருத்துவமனையிலிருந்து பெறப்படும் தகவலின்படி (Intimation) காவல் துறை புகாரினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் தவிர, அச்சம்பவம் குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் தந்து அதை முதல் தகவல் அறிக்கையாகப் (FIR) பதிவு செய்யலாம்.


புகாரில் குறிப்பிடவேண்டிய அம்சங்கள்:


இச்சட்டப்பிரிவு 3(1)(இ)–ன் கீழ் நிகழ்ந்த வன்கொடுமை தொடர்பான ஒரு புகாரில் குறிப்பிடப்பட வேண்டிய குறைந்தபட்ச செய்திகளைப் பார்ப்போம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(து) கூறுவதாவது :“பட்டியல் சாதியினராகவோ, பழங்குடியினராகவோ இல்லாத எவரொருவரும், பட்டியல் சாதியினரையோ, பழங்குடியினரையோ சார்ந்த ஒருவரைப் பொதுமக்கள் பார்க்குமாறு உள்ள ஏதேனும் ஓரிடத்தில் அவரைத் தம் மதிப்பை இழக்கும்படி தாழ்வுபடுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமானப்படுத்தினால் அல்லது மிரட்டி அச்சுறுத்துவாரேயானால், அவர் ஆறு மாதத்திற்குக் குறையாத ஆனால், அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கலாகும் ஒரு கால அளவுக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவதற்குரியவராவார்''.


இதன்படி இச்சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றச்செயல் குறித்தான புகாரில் தெரிவிக்கப்படவேண்டிய முக்கியத் தகவல்கள்:

1) பொதுமக்கள் பார்வையில் படும்படியான இடம்

2) பட்டியல் அல்லது பட்டியல் பழங்குடியினரல்லாத நபர்கள்

3) பட்டியல் சாதி அல்லது பட்டியல் பழங்குடியினர்

4) வேண்டுமென்றே அவமதித்தல்/ கேவலப்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல். இவை தவிர சம்பவம் நடைபெற்ற நாள், நேரம், இடம் மற்றும் உள்நோக்கம் ஆகியவையும் குறிப்பிடப்பட வேண்டும்.


சாதிப்பெயரைச் சொல்லாமல் இழிவு படுத்தலாமா?


தமிழகத்தில் தலித்துகளுக்கெதிரான எந்தக் குற்றம் இழைக்கப்பட்டாலும், காவல் துறையினர் அவ்வன்கொடுமைக்குரிய சட்டப்பிரிவிற்குப் பதிலாக இச்சட்டப்பிரிவையே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் பார்வையில் சாதிப் பெயரைச் சொல்லி எந்த ஒரு பட்டியல் சாதியினரையோ, பட்டியல் பழங்குடியினரையோ இழிவுபடுத்துவது இச்சட்டப்பிரிவின் படி வன்கொடுமைக் குற்றமென்றால் கூட, சாதிப்பெயரை நேரடியாகச் சொல்லாமல், சாதியை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பொதுமக்கள் பார்வையில் இழிவுபடுத்துவது கூட, இப்பிரிவின் படி குற்றமேயாகும்.


புகார் தரும் முறைகள்:


முன்னரே கூறியபடி, வன்கொடுமைக் குற்றங்கள் அனைத்தும் பிடியாணை வேண்டாக் குற்றங்கள் என்பதால், வன்கொடுமை நிகழ்வு குறித்த புகார் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 154(1)இன் படி உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய தாமதிக்கப்பட்டாலோ அல்லது மறுக்கப்பட்டாலோ, புகாரைப் பதிவு செய்ய மறுத்த / தாமதித்த காவல்நிலையத்தின் உயர் அதிகாரியான மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு / மாநகரங்களில் காவல் துறை ஆணையாளருக்கு அப்புகார் நேரிலோ (அ) பதிவு அஞ்சலிலோ வழங்கப்பட வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 154(2) கூறுகிறது.


அவர் அப்புகாரை தானே விசாரிக்கலாம் அல்லது உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் பணிக்கலாம். அப்படியும் புகார் பதிவு செய்தல் மறுக்கப்படுமேயானால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளை விசாரிக்கும் குற்றவியல் நடுவரிடம் தனிப்புகார் கொடுத்து, புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு156 (3)இன்படி ஆணை பெறலாம். இம்முயற்சியும் பலனளிக்கவில்லையெனில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 482இன்படி உயர்நீதிமன்றத்தை அணுகி தக்க ஆணை பெறலாம்.


புகாரை வீணடிப்பதைத் தவிர்த்தல்:


பாதிக்கப்பட்டோரின் புகார் உள்ளது உள்ளபடியே பதிவு செய்யப்படவேண்டும். அதில் நீட்டல், குறைத்தல், திருத்துதல் செய்ய காவல் துறையினருக்கு அனுமதி இல்லை. ஆனால், நடைமுறையில் இவ்விதி பெரும்பாலும் மீறப்படுகிறது. இந்நிலையைத் தவிர்க்க வேண்டுமெனில், நேரில் காவல் துறையினரிடம் அளிக்கப்படும் புகாரின் நகல்களைப் பதிவு அஞ்சலில் அதே காவல் நிலையத்திற்கும், உயரதிகாரிகளான காவல் துறை கண்காணிப்பாளர், துணைக் கண்காணிப்பாளர் போன்றோருக்கும் அனுப்பி வைப்பது நல்லது, வாய்ப்புள்ளவர்கள் அதே புகாரை தந்தியாகவோ, தொலைநகல் (Telefax) மூலமாகவோ அனுப்பலாம். புகார் நகலை மின்னஞ்சல் வழியாகவும் (Online) உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.


வருவாய்த்துறையினருக்கு மனு அளித்தல்:


வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிகளின்படி, பாதிக்கப்பட்டோர் தீருதவி பெற உரிமை உள்ளதால், புகாரின் நகலை இவ்வாறே வருவாய்த்துறை உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் (RTO), வட்டாட்சியர் போன்றோருக்கும் அனுப்பலாம். பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் குடியிருப்புகள் தாக்கப்படுவது, சூரையாடப்படுவது, தீக்கிரையாக்கப்படுவது போன்ற பெரிய அளவிலான வன்கொடுமை நிகழ்வுகளில் உடனடி தீருதவி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பெற இவை பெரிதும் உதவும். அதேபோல், வன்கொடுமை நிகழ்வுகளைப் பதிவு செய்யாமல் அதை மூடிமறைத்து சமரச முயற்சி என்ற பெயரில் காவல் துறை, உள்ளூர் தாதாக்கள், செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகள் போன்றோர் பாதிக்கப்பட்டோரை நிர்பந்திப்பதையும் மாவட்ட ஆட்சியர் போன்றோருக்கு புகார் நகல் அனுப்பப்படும் நேர்வுகளில் பெரும்பாலும் தவிர்த்து விட முடியும்.


ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்துதல்:


அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பெருமளவில் வந்துவிட்ட இன்றைய சூழலில், மிகக் கொடூரமான வன்கொடுமைகள் குறித்து ஊடகங்களுக்குத் தகவல் தந்து வெளியிடச் செய்வதன் மூலம் வன்கொடுமை நிகழ்வுகள் பதிவு செய்யப்படுவதையும் இத்தகைய ‘சமரச’ முயற்சிகளை முறியடிக்கவும் முடியும். அப்போதுதான் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த உத்தியை திண்ணியம் வன்கொடுமை வழக்கில் வழக்குரைஞர் ரத்தினமும், கண்ணகி முருகேசன் படுகொலை வழக்கில் தோழர் தொல். திருமாவளவனும் கையாண்டுள்ளனர்.


-காயங்கள் தொடரும்



-சு. சத்தியச்சந்திரன்



நன்றி:

பிப்ரவரி, 2008

என்னை உண்மை கண்டறியும் என்னை சோதனைக்கு உட்படுத்துங்கள்! -ஆர்.பி.சிறீகுமார்

ஆர்.பி. சிறீகுமார், குஜராத் இனப்படுகொலைகள் நிகழ்ந்த போது, காக்கி உடையணிந்து உண்மையை உரத்து அறிவித்த அம்மாநில உளவுப் பிரிவின் தலைவர். குஜராத் உள்துறை செயலர், அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியா மற்றும் பலரும் மிரட்டியும் எதற்கும் அஞ்சாதவர். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகார வர்க்கம், எவ்வாறு தங்கள் சொந்த நலன்களுக்காக முஸ்லிம் எதிர்ப்பு கதையாடல்களை கட்டவிழ்த்துவிட்டது என்பதை அவர் ‘தெகல்கா’ ஆங்கில இதழில் ஹரிந்தர் பவேஜாவுக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார்.


நீங்கள் குஜராத் காவல் துறையின் அங்கமாக இருக்கிறீர்கள். மோடியால் நேரடியாக பாதிக்கப்படுகிறீர்கள். அங்கே நீதி எந்த அளவுக்கு மோசமாகப் போனது, சார்புடன் செயல்பட்டது?

இன்றும் அங்கு நீதி மிகுந்த சார்புடன் தான் இயங்குகிறது. அது, அதிகார மட்டத்திலிருந்தே அவ்வாறு உள்ளது. குற்றவியல் நீதித்துறையின் தொடக்க புள்ளியான நிலைய அதிகாரியிலிருந்தே அது சீரழிந்துள்ளது. நீங்கள் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யும் போதே தோல்வி தொடங்குகிறது. இதனை நான் பல அறிக்கைகளின் வாயிலாக அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளேன். முதல் அறிக்கையை ஏப்ரல் 24, 2002இல் அளித்தேன். இதனை நானாவதி ஷா கமிஷனுக்கு அளித்த எனது மனுவிலும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் சென்று முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய முற்படும் போதே அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் பார்வைகளைப் பதிவு செய்யாமல், அதிகாரிகள் நீங்கள் விட்டு விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என விஷயங்களை திரிக்கத் தொடங்குகிறார்கள். அடுத்ததாக சம்பவத்தின் மூர்க்கத்தை திரிக்கிறார்கள். 2002இல் கலவரத்தை வழிநடத்திய இந்துத்துவ தலைவர்களின் பெயர்களை பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட முற்படும்போது, அவர்கள் காவல் துறையினரால் மிரட்டப்பட்டார்கள். முதலில் காவல் துறை இந்த திரிபு வேலையை தொடங்குகிறது. அரசு வழக்கறிஞர்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இந்த அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் இந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்தவர்கள். வி.எச்.பி.யின் பொறுப்பாளர்கள் தான் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களின் பெயர்களை அப்போதைய மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது பெரும் வெட்கக்கேடு. 25 - 35 வயதுக்கு உட்பட்ட அய்.ஏ..எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் தான் இந்த வி.எச்.பி. பொறுப்பாளர்களைப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். குஜராத் அரசின் சட்டத்துறை இப்படிப்பட்ட நபர்களை தேர்வு செய்துள்ளது.

நாளை ஒருவேளை சட்ட அமைச்சர் அசோக் பட்டை பார்த்து யாராவது கேள்வி எழுப்பினால், அவர் நேரடியாக, தெளிவாக பதிலளிப்பார். மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பெயர்களைப் பரிந்துரை செய்யும் பொழுது எங்களால் என்ன செய்ய முடியும்? இந்திய சட்டத்துறை வரலாற்றில் முதன் முறையாக, உச்சநீதிமன்றம் தலையிட்டு சட்ட நடைமுறையின் குளறுபடிகளின் காரணமாக 2000 வழக்குகளை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் அரசாங்கத்தின் தாள லயத்திற்கு ஏற்ப நடனமாடுகிறார்கள் என்பதை எப்படி விளக்குகிறீர்கள்? அவர்கள் கடமை உணர்வின் நிலை என்ன?

இது பதிலளிக்க முடியாத ஒரு பெரிய கேள்வி. பிப்ரவரி 27, 2002 அன்று மாலை (சபர்மதி ரயில் எரிப்பு கோத்ராவில் நிகழ்ந்த அன்று) மோடி ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் டி.ஜி.பி.யும் அகமதாபாத் காவல் துறை ஆணையரும் பங்கேற்றனர். அங்கு மோடி இவ்வாறு கூறினார், “இந்துக்களின் கோபம் மூன்று நாட்களுக்கு தணியட்டும்.” கமிஷனுக்கு அளித்த எனது மூன்றாவது மனுவில் இதனை குறிப்பிட்டுள்ளேன். குறுக்கு விசாரணையின் போது நானாவதி கமிஷனுக்கு நான் தகவல்கள் அளிப்பதை அவர்கள் தடுத்தார்கள். தொடக்கத்திலிருந்தே நான் ஒட்டுமொத்த சம்பவங்களின் பதிவேட்டை பராமரித்து வந்தேன். அந்தப் பதிவேட்டின் எழுத்துகளை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி, அவை எழுதப்பட்ட தேதியை கண்டுபிடிக்குமாறு நானே கேட்டுக் கொண்டேன்.

என்னையும் உண்மை கண்டறியும் சோதனைகளுக்கு உட்படுத்துமாறு (Narco Analysis & Brain Mapping Test) அவர்களிடம் சவால் விடுத்தேன். கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது தான் இது போன்ற சோதனைகள் நிகழ்த்தப்படும். இங்கே நாம் ஓர் இனப்படுகொலையைப் பற்றி பேசுகிறோம். 2000 பேர் அழித்தொழிக்கப்பட்ட ஒரு மாபெரும் இனப்படுகொலை. ஏன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது இத்தகைய உண்மை அறியும் சோதனைகள் நிகழ்த்தப்படவில்லை? எனது பதிவேட்டில் இடம் பெறுகிறவர்கள், மோடி மற்றும் இந்த ‘களங்க நடவடிக்கை’யில் வாக்குமூலம் அளித்தவர்கள் என இவர்கள் அனைவரும் தங்களை இந்த சோதனைக்கு உட்படுத்த ஏன் முன்வரக்கூடாது? ஆனால் ஒரு எம்.பி.யோ அல்லது ஒரு மக்கள் தலைவரோ கூட இதனைக் கோரவில்லை.

சோதனையை செய்யும்படி யாரிடம் கோரினீர்கள்? அதனை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளீர்களா?

கமிஷனுக்கு அளித்த மூன்றாம்/நான்காம் மனுக்களில் அது உள்ளது. அரசாங்கத்தின் நலன்களுக்கு எதிராக இத்தகு செயல்களில் ஈடுபடக்கூடாது என எனக்கு மூன்று மணி நேர அறிவுரையும் மிரட்டலும் விடுத்தார் உள்துறை செயலர். இதற்கு மேல் எத்தகைய வீழ்ச்சி உங்களுக்கு வேண்டும்? அனைத்து அரசு ஊழியர்களும் நானாவதி - ஷா கமிஷனுக்கு அனுசரணையால் ஒத்துழைக்க வேண்டும் என துணை விதிகளை அரசாங்கமே விதித்த போதும், அதனை எதிர்த்து தகவல்களை தாக்கல் செய்த ஒரே நபர் நான் தான். அதிகார வர்க்கத்திற்கும் அரசியல் தலைமைக்கும் பாலமாய் விளங்குகிற கேபினட் செயலர், இதுவரை ஒரு மனுவைக்கூட தாக்கல் செய்யவில்லை.

அவர் வெளியே வந்து ஒரு முறை சொல்லட்டும், இந்த இனப்படுகொலைக்கும் முதல்வருக்கும் தொடர்பே இல்லை என்று! அவர் அவ்வாறு செய்யமாட்டார், அவர் பயப்படுகிறார். காவல் துறையினரில் என்னைத் தவிர வேறு யாரும் இவ்வாறு அறிக்கைகளைத் தாக்கல் செய்யவில்லை. உங்கள் அதிகாரிகளை அறிக்கைகள் தாக்கல் செய்யவிடாமல் தடுக்கிறீர்கள் என்றால், இது எத்தகைய செயல், இது நமக்கு எதைத் தெரிவிக்கிறது?

கமிஷனுக்கான அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியா ‘தெகல்கா’ பதிவுகளில் உள்ளார். அவர் இப்பொழுதுதான் எழுதப்பட்ட பிரதியை வாசித்ததாக கூறுகிறார். அவர் உங்களை பலவந்தப்படுத்த முயன்றாரா?

மிகச்சரியாக சொன்னீர்கள். அவர் எனக்கு விளக்கமளித்த போது சில தருணங்களில் என்னை மிரட்டவும் செய்தார். அவர் சொன்னார், “இங்கே பாருங்கள் சிறீகுமார், நீங்கள் அரசு தரப்பு சாட்சியம். இந்த கமிஷனின் விசாரணையைப் பொருத்தவரை அப்படி ஒரு அரசு தரப்பு சாட்சியமே கிடையாது. இது கிரிமினல் வழக்கு நடைமுறை அல்ல.'” என்னைப் போல் காவல் துறையில் 34 ஆண்டுகள் பணி புரிந்த ஒருவருக்கு கிரிமினல் வழக்கின் அடிப்படை நடைமுறைகள் தெரியும் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.

எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், நான் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் மிரட்டினார். நான் கமிஷனுக்கு சென்று அறிக்கை அளித்தால் பெரும் பிரச்சனைகள் உருவெடுக்கும் என்றார்கள். நான் மிரட்டப்பட்டபோதும் கமிஷனுக்கு நான்கு அறிக்கைகள் அளித்தேன். காவல்துறை எப்படி சார்புடன் இயங்கியது மற்றும் எப்படி நிவாரண முகாம்கள் பலவந்தமாக மூடப்பட்டு, அமைதியான சூழல் திரும்பியது போல் எவ்வாறு பொய் தோற்றம் உருவாக்கப்பட்டது என்பது போன்று ஏராளமான விவரணைகளுடனான தகவல்கள் என் அறிக்கைகளில் உள்ளது.

இது, ஆகஸ்ட் 2002இல் தேர்தல் ஆணையம் லிங்டோவின் தலைமையில் குஜராத் வந்த நேரம். சூழ்நிலைமைகள் பற்றிய முற்றிலும் பொய்யாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையுடன் அரசாங்கம் தயாராக இருந்தது. அந்த நேரம் நான் ஓர் அறிக்கை தயார் செய்து, அதில் 154 தொகுதிகளில் பாதிப்பு உள்ளது என்பதை எடுத்துரைத்தேன். தலைமைச் செயலர், எவ்வாறு நான் அரசாங்கத்தின் பார்வையிலிருந்து இவ்வாறு மாற்றுக் கருத்து கொள்ள இயலும் என கேள்வி எழுப்பினார். நான் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து பெற்ற அறிக்கைகளை தொகுத்தளித்துள்ளேன் என்று தெரிவித்தேன். பின்னர் ஆகஸ்ட் 16, 2002 அன்று வெளியிடப்பட்ட ஆணையில் தேர்தல் ஆணையம் என் அறிக்கையின் மூன்று பகுதிகளை சுட்டிக்காட்டி, இது அரசாங்கம் அளித்த அறிக்கை பொய்யென நிரூபிப்பதாகக் கூறி தேர்தலை தள்ளி வைத்தது.

எப்படி உள்துறை செயலர், தலைமைச் செயலர் போன்ற பெரிய பதவிகளில் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிபணிகிறார்கள்?

நாம் காணும் இன்றைய அதிகார வர்க்கத்தின் போக்கு மிகவும் மோசமானது. அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் அரசியல்வாதிகளை எதிர்பார்க்கும் தன்மையுடைய கொத்தடிமைகளாக மாற்றுவதன் மூலம் காரியங்களை சாதிக்கிறார்கள். உங்களுக்கு இட்லி பிடிக்கும் என்றால் நான் இட்லி அவித்து தருகிறேன், தோசை அல்ல. இப்போது நீங்கள் என்னையும், இட்லி அவித்து தர மறுக்கும் எனது நண்பரையும் எப்படி மதிப்பிடுவீர்கள்? ஏற்கனவே தங்களின் பணி உயர்வு நிமித்தமாக இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பது கச்சிதமாக நடைபெற்று வருகிறது.

இது தவிர, அதிகார வர்க்கம் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கிடையே காக்காய் பிடித்தல் நடக்கிறது. இவை எல்லாம் நேரடி பலன் தரக்கூடியவை. உங்களுக்கு வெளிநாட்டுப் பணி, நல்ல துறையில் பொறுப்பு, அதுவும் செல்வாக்கு மிகுந்த துறையில், அங்கு தான் அதிக பணம் ஈட்ட இயலும். பணி இட மாற்றம், பணி நியமனம், தற்காலிக வேலை நீக்கம், வெளிநாட்டுப் பொறுப்பு, பணி உயர்வு, பணி ஓய்வுக்குப் பின் பொறுப்பு என இதுபோன்ற வசதிகளின் மூலம் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்திற்கு அழுத்தமான சமிக்ஞைகளை வழங்குகிறார்கள்.

இதனை எவ்வாறு சீர்படுத்துவது?

அதிகார வர்க்கத்தின் மீதான எனது நம்பிக்கைகள் பொய்த்து விட்டன. மக்கள் தான் முன் வந்து இது போன்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அதிகாரிகளை அப்புறப்படுத்த வேண்டும். இங்கு நடைபெறுவது மிகவும் கொடிய கிரிமினல் செயல். இதனை ஜெர்மனியின் நாஜிக்களுடன் தான் ஒப்பிட்டாக வேண்டும். இத்தனை பெரிய கிரிமினல் நடவடிக்கையில் ஓர் அதிகாரியாவது தண்டிக்கப்பட்டாரா? இல்லை, அனைவருமே கவுரவிக்கப்பட்டுள்ளனர்! முன்னாள் தலைமைச் செயலர் ஜி.அப்பாராவ் அரசியல் பாவைகூத்து பொம்மையாகவே உருமாறிப்போனார். அவருக்கு தலைமைச் செயலரின் சம்பளத்துடனான ஆறு ஆண்டு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சம்பளம், அதிகப்படியான பலன்கள். அவர்தான் தற்போது மின் வாரியம் சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதி ஆணையர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்கூட அவரது பணி தொடரும்.


காவல் துறை சீர்த்திருத்தங்கள் உதவுமா?

காவல் துறை சீர்திருத்தங்கள் சில பயன்களைத் தரும். இருப்பினும் நாம் கோருவது எண்ணங்களின் சீர்திருத்தமே. உளவுத் துறையில் நியமிக்கப்படும் அய்.பி.எஸ். அதிகாரிகள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்பது அரசாங்க விதிமுறை. ஆனால் நான் அய்ந்து மாதங்களில் பணி மாற்றம் செய்யப்பட்டேன். முதல்வர் அவர்களின் வன்மம் நிறைந்த மதவாத உரையைப் பற்றி நான் அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்தேன். வேறு வழியின்றி அரசு அதனை சிறுபான்மையினர் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது. அந்தப் பேச்சுக்காக அல்க்யு பதம்சே (Alyque Padamse) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். எந்தப் பலனும் கிட்டவில்லை. மக்களிடமிருந்து மாற்றம் வர வேண்டும். அவர்களிடம்தான் அதிகாரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு உள்ளது.

தமிழில் : அ. முத்துக்கிருஷ்ணன்

நன்றி:


பிப்ரவரி 2008