Saturday, June 28, 2008

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 5

வன்கொடுமை நிகழ்வுகள் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றவுடன் புலன் விசாரணை அதிகாரியான துணைக் காவல் கண்காணிப்பாளர், தனக்குப் பதில் தனக்குக் கீழே பணிபுரியும் அதிகாரியைக் கொண்டு புலன் விசாரணை மேற்கொள்வது பல நேர்வுகளில் நடைபெறுகின்றன. கிராமப்புறம் சார்ந்த இடங்களில் இதுபோன்ற சட்டமீறல்கள் நடைபெறுவதாகப் பதிவுகள் உள்ளன. இதைத் தவிர்க்க வேண்டுமெனில், குறிப்பிட்ட நாட்களுக்குள் புலன்விசாரணை அதிகாரி சம்பவ இடத்தைப் பார்வையிடவில்லை என்ற தகவலை மேலதிகாரியான காவல் துறை கண்காணிப்பாளர், அதற்கும் மேலுள்ள அதிகாரியான மண்டலக் காவல் இயக்குநர் ஆகியோருக்கு மனு அளித்து, புலன் விசாரணையை உடனடியாக மேற்கொள்ள ஆணையிடச் சொல்லி கேட்கலாம். அதேபோல, துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கும் குறைந்த அளவிலான பதவி வகிக்கும் அதிகாரி செய்யும் புலன் விசாரணை வழக்கின் விசாரணையின் போது சிக்கல்கள் ஏற்படுமாதலால், இக்குறைபாட்டையும் உயர் காவல் அதிகாரிகளுக்கு மனு அளித்து தீர்வு நடவடிக்கைகள் கோரலாம்.

புலன் விசாரணை அதிகாரிகளின் தலித் விரோதப் போக்கின் வெளிப்பாடாக, வன்கொடுமை நிகழ்வின் முக்கிய சாட்சிகளை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யாமல் விடுவது, வன்கொடுமையாளர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகும். இதுபோன்ற சூழலில், குறிப்பிட்ட முக்கிய கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலத்தை ஓர் ஆணையுறுதி ஆணை (affidavit form) வடிவில் தொடர்புடைய சாட்சியே தயாரித்து தக்கவாறு நோட்டரி வழக்குரைஞரிடம் மேலொப்பம் (attestation) பெற்று புலன்விசாரணை அதிகாரிக்கு அனுப்பலாம். இதன் மூலம் புலன் விசாரணை அதிகாரி, குறிப்பிட்ட சாட்சியின் சாட்சியத்தை ஒதுக்கித் தள்ளுவதிலிருந்து தவிர்க்கலாம். அதன் நகலை மேலதிகாரிகளுக்கு அனுப்புவதும் கூட பயன் தரும்.

சில வகை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படாத போது புகார்தாரரையோ, அவரது சுற்றத்தினரையோ மிரட்டி மேல்நடவடிக்கை தொடரக் கூடாது என இடையூறு செய்ய வாய்ப்பு அதிகம். சாதி மேலாதிக்கம், நிலவுடைமை, பணபலம், அரசியல் செல்வாக்கு போன்றவையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும். இவற்றைத் தவிர்க்கவே கைது நடவடிக்கை அவசியம். ஆனால், கொடிய வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை புலன் விசாரணை அதிகாரி கைது செய்யாமல் விடுவதும், அவர்கள் உயர் நீதிமன்றத்தில் சாதகமான ஆணை பெறவும் வழிவகை செய்யப்படுகிறது. வன்கொடுமை நிகழ்ந்த குறிப்பிட்ட நியாயமான காலகட்டத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லையெனில், உயர் காவல் அதிகாரிகளுக்கு மனு அளித்து முறையிடலாம். கடமை தவறியதற்காக தொடர்புடைய புலன் விசாரணை அதிகாரி மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளச் சொல்லி கேட்கலாம்.

அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையெனில், தக்க ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை (ரிட்) மனு தாக்கல் செய்து நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரலாம். வன்கொடுமையின் தீவிரத்தைப் பொறுத்து, வன்கொடுமையாளரை புலன் விசாரணை அதிகாரி கைது செய்யாமல் விடுவது வழக்கை கடுமையாக பாதிக்கும் அம்சம் என்பதால், புலன் விசாரணை அதிகாரியின் உள்நோக்கம் கேள்விக்குரியதாகிவிடும். அந்நிலையில், புலன் விசாரணை சரியான திசையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், வழக்கை வலுப்படுத்த புலன் விசாரணையை வேறொரு அதிகாரிக்கோ, அமைப்புக்கோ மாற்றம் செய்து உத்தரவிடக் கோரி உயர்நீதி மன்றத்தை அணுகலாம். பல வழக்குகளில் இதுபோல் புலன் விசாரணை அதிகாரி / அமைப்பு மாற்றல் உத்தரவிடப்பட்டுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து இருபதாண்டுகள் நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இச்சட்டத்தைப் பயன்படுத்தப்படக் கூடாது எனப் பல்வேறு தரப்பினரும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களில் காவல் துறையினர் முதலிடம் வகிக்கின்றனர். இதற்கான காரணம் சாதியம் என்பது வெளிப்படையானதே. இதன் தொடர்ச்சியாகவே, வன்கொடுமைப் புகார் வரப்பெறும் சமயத்திலிருந்து அவர்கள் முட்டுக்கட்டை போடத் தொடங்கிவிடுகின்றனர். மீறி பதிவு செய்யப்படும் வழக்குகளையும் எவ்விதத்திலாவது வீணடிக்கும் மனப்பான்மை பரவிக்கிடக்கிறது. அவற்றில் ஒன்றுதான், வன்கொடுமைப்புகாரைப் பொய் என்று புலன் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வதாகும்.

இத்தகைய சூழலில், காவல் துறையும் நீதித்துறையும் முதல் தகவல் அளித்த நபருக்கு அறிவிப்பு அனுப்பி, புலன் விசாரணையின் முடிவை ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று காரணம் கேட்க வேண்டும். அவ்வாறு வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர் நீதித்துறை நடுவரிடம் ஆட்சேபனை மனு (Protest petition) அளித்து, வழக்கின் புலன் விசாரணை எவ்விதத்தில் முறைப்படி மேற்கொள்ளப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டி மறுபுலன் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரலாம். புலன் விசாரணை முடித்தபின் வன்கொடுமைச் சட்டப்பிரிவுகள் ஈர்க்கப்படவில்லை எனவும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் மட்டுமே ஈர்க்கப்படுவதாகவும் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. அது போன்ற சூழலில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவும் மனு செய்யலாம்.

இதுபோன்ற வழக்கொன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மதுரை மேலவளவு கிராமத்திற்கு அருகிலுள்ள ஊர் சென்னகரம்பட்டி. பல ஆண்டுகளாக கோயில் நிலத்தை ஆதிக்க சாதியினரான அம்பலத்தார் குத்தகைக்கு எடுத்து வருகின்றனர். பல போராட்டங்களுக்குப் பிறகு தலித்துகள் கோயில் நிலத்தை குத்தகை எடுத்துவிட கோபமுற்ற அம்பலத்தார், தலித்துகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட வட்டாட்சியர் தலைமையிலான அமைதிக்குழு கூட்டம் 5.7.1992 அன்று நடைபெறுகிறது. தலித்துகள் அமைதிக்குழு கூட்டத்திற்கு வந்து காத்திருக்க, அம்பலத்தார் எவரும் வரவில்லை. காத்திருந்த தலித்துகளை வீட்டிற்கு செல்லச் சொல்ல, அவர்கள் மேலூரிலிருந்து ஊர் திரும்ப பேருந்தில் ஏறுகின்றனர். பேருந்தை வழிமறித்த அம்பலத்தாரின் ஆயுதக் கும்பல், இரு தலித்துகளை பேருந்துக்குள் வைத்து படுகொலை செய்கின்றனர். முதல் நாள் நடந்த தாக்குதலுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மேலூர் காவல் நிலையத்தினர், படுகொலை தொடர்பான புகார் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்கின்றனர்.

வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் சாதி பாகுபாடே என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அம்மனுவை விசாரணை நீதிமன்றம் காலதாமதம் என்ற காரணத்திற்காக தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் சீராய்வு மனுவில் (Ctrl RC 768/2000 நாள் 17.4.2002) தீர்ப்பு வழங்கிய நீதிபதி கற்பக விநாயகம், பாதிக்கப்பட்டோர் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கை மறுபுலன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த பொருள் விளக்கத் தீர்ப்புகளில் இத்தீர்ப்பு முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது.

காவல்படுத்துதலும் பிணை மறுக்கச் செய்தலும்:


இனியன் கொலை வழக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன். குடவாசல் ராசேந்திரன் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது குற்ற நடவடிக்கைகளில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பெரும்பான்மையானவை. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருவாரூர் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தர்மையன் என்னும் தலித், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பொன் சுந்தரம் என்பவரால் சாதி வெறியுடன் இழிவுபடுத்தப்படுகிறார். இதைத் தட்டிக் கேட்ட மற்ற தலித் மக்கள், கள்ளர் சமூகத்தினரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள். இது தொடர்பான தலித் மக்களின் புகார் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. இது தொடர்பாக கள்ளர் சமூகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தலித் மக்கள் சாலை மறியல் போராட்டம் ஒன்றை இனியன் ஒருங்கிணைப்பில் மேற்கொள்கின்றனர்.

அப்போது குடவாசல் ராசேந்திரன் தலைமையில் கள்ளர் சமூகத்தினர் 75 பேர் கடும் தாக்குதல் தொடுக்க, 15 தலித் பெண்களும் 25 தலித் ஆண்களும் மோசமாக காயமடைகின்றனர். அதைத் தொடர்ந்து இனியன் மீது குடவாசல் ராசேந்திரன் கடுமையான முன் விரோதத்துடன் இருக்கிறார். குடவாசல் ராசேந்திரனால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக இனியன், தமிழக அரசின் உள் துறைச் செயலர் உட்பட பலருக்கு மனுச் செய்கிறார். இந்நிலையில் 18.1.2006 அன்று குடவாசல் நகர கடைவீதியில் இனியன் தன் மனைவி அமுதாவுடன் காலை 11 மணியளவில் சென்று கொண்டிருக்கும்போது, குடவாசல் ராசேந்திரன், அவரது மகன்கள் அரசன்கோவன், தென்கோவன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட ஒரு கும்பலால் ‘ஒரு பறையன் என்னை எதிர்க்கப்போயிற்றா' என்று கூறிக் கொண்டு, கொலைவெறியுடன் இனியன் கொடூரமான முறையில் சரமாரியாக அரிவாளால் உடல் முழுக்க வெட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

சம்பவம் நடைபெற்ற அரை மணிக்குள்ளாகவே அருகிலுள்ள காவல் நிலையத்தில் சம்பவத்தை நேரில் கண்ணுற்ற சாட்சியான அவரது மனைவி அமுதா, சம்பவம் குறித்து புகார் தருகிறார். கொலை குறித்த சட்டப்பிரிவுடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழும் புகார் பதிவு செய்யப்படுகிறது. அப்புகாரில் தான் நேரடியாகக் கண்ட சம்பவத்தைக் குறிப்பிட்டதுடன் கொலை வெறிச் செயலில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களுடன் விவரத்தைத் தருகிறார். இருப்பினும் அக்குறிப்பிட்ட நபர்கள் சாதி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலம் பொருந்தியவர்களாகவும் இருந்த காரணத்தால், அப்பெயர் குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மாறாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்ட நபர்களில் இருந்தவர்கள் தவிர, மற்றவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்தது காவல் துறை ஆனால், உண்மைக் குற்றவாளிகளுக்கெதிராக ஒரு துரும்பும் அசையவில்லை.

உயர் நீதிமன்றத் தலையீடும் உத்தரவும்

இச்சூழலில் இவ்வழக்கின் புலன்விசாரணை, சட்டமுறைப்படி நடைபெறவில்லை; காவல் துறை குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்று கூறி அமுதா சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அம்மனுவின் மீதான விசாரணையின்போதும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்குச் சாதகமாகவே செயல்பட்டது காவல் துறை. சம்பவம் குறித்து 27 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பான்மையினர் முதல் தகவல் அறிக்கையில், பெயர் சுட்டப்பட்ட குற்றவாளிகள் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதாகவும், ஒரு சிலர் மட்டுமே அவர்கள் கொலையில் ஈடுபட்டதாகச் சொன்னதாகக் கூறி, காவல் துறை முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றது.

எனினும் குற்றச்செயலைக் கண்ணுற்ற சாட்சி குற்றச்செயலை புரிந்தவர்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் அவர்களில் ஒருவரைக்கூட கைது செய்யாமல் அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் காவல் துறை செயல்பட்டது மிகப்பெரும் தவறு. எனவே, இப்படிப்பட்ட காவல் துறையினர் இவ்வழக்கை மேற்கொண்டு புலனாய்வு செய்ய அனுமதிப்பது நியாயத்திற்கு உகந்ததல்ல என்று கூறி இவ்வழக்கின் புலன் விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் 21.3.2006 அன்று உத்தரவிட்டது. இவ்வகையில், ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பது புலனாகும்.

காவல்படுத்துதலின் வகைகள்

ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்படும் நபர் காவல் துறையினரால் சட்டப்படி காவலுக்குட்படுத்தப்படும் போது, அந்நபர் நீதித்துறை நடுவர் முன்பு அவர் அவ்வாறு கைது செய்யப்பட 24 மணி நேரத்திற்குள் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். இது, காவல் துறையினரின் அரசமைப்புச் சட்டக் கடமையாகும்.அப்போது நீதித்துறை நடுவர், அந்நபரை நீதிமன்றக் காவலுக்குட்படுத்துவார். புலன் விசாரணை அதிகாரி தனது புலன் விசாரணை தேவைப்படின், அந்நபரை காவல் துறைக் காவலுக்கு உட்படுத்த வேண்டுமெனில், அதற்குரிய காரணத்தை மனுசெய்து நீதித்துறை நடுவரிடம் உத்தரவு பெறலாம்.

இவ்வாறு நீதிமன்றக் காவலில் உள்ள நபர் நீதி மன்றத்தை அணுகி தன்னைப் பிணையில் விடுவிக்கக் கோரி மனு செய்யலாம். குற்றம் சாட்டப்படும் நபர் மீதான குற்றம் அரசுத் தரப்பில் அய்யந்திரிபுற நிரூபிக்கப்படும் வரையில், அந்நபர் குற்றமற்றவராகக் கருதப்படுவேண்டும் என்று சட்டம் கருதுவதால், குற்றம் சாட்டப்படும் நபருக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு பிணை வழங்க வேண்டும் என்பது விதியாகவும், குற்றத்தின் தன்மை கொடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவரின் முன் குற்ற வரலாற்றைக் கவனத்தில் கொண்டும் பிணை மறுக்கப்படுவது விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் என்பது, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்டக் கோட்பாடாகும்.

எதிர்பார்ப்புப் பிணையும் தடையும்

இந்நாட்டுக் காவல் துறையினரின் செயல்பாடு குறித்து உள்ள நியாயமான நம்பிக்கையின்மை சட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதால், எதிர்பார்ப்புப் பிணை என்ற ஒரு தீர்வழியை சட்டம் வழங்கியுள்ளது. இது பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நபருக்குரிய சட்ட உரிமையாகும்.

ஆனால் வன்கொடுமை வழக்குகளைப் பொருத்தவரையில், இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றங்களும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்களாதலால் (வன்கொடுமைக் குற்றங்கள் அனைத்தும் ஆறு மாதங்கள் முதல் அய்ந்து ஆண்டுகள் வரையிலான தண்டனைக்குரியவை என்பதால், இதில் எதிர்பார்ப்புப் பிணை என்ற ஒரு தீர்வழி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 18இன்படி சந்தேகத்திற்கிடமளிக்காதவகையில் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இச்சட்டப்பிரிவு அளித்துள்ள பாதுகாப்பை பலவீனப்படுத்தும் விதத்தில் உயர் நீதிமன்றங்களில் எதிர்பார்ப்புப் பிணையைவிட பல மடங்கு சாதகமான உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. இது, முழுக்க முழுக்க சட்டவிரோதமானதாகும். இச்சட்டவிரோத உத்தரவுகள் குறித்த விரிவான ஒரு கட்டுரை ‘தலித் முரசு' 2007 இதழில் (‘வன்கொடுமை வழக்குகள் சந்திக்கும் வன்கொடுமை') வெளிவந்துள்ளது.

காவல் படுத்துதலின் அவசியம்

ஒரு வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை புலன்விசாரணை அதிகாரி உடனடியாகக் கைது செய்ய வேண்டிய மிக மிக அவசியமானதாகும். ஆனால், பெரும்பான்மையான வன்கொடுமை வழக்குகளில் கைது என்ற ஒரு அத்தியாவசிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளன. சாதியம் இதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. அதேபோல் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அரசியல் மற்றும் பொருளாதார பலம் காரணமாகவும் கைது நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக, வன்கொடுமையாளர்களுக்கு அனைத்து விதத்திலும் சட்டத்தை மீறி ஒத்துழைப்பு அளிப்பதே நடைபெறுகிறது.

காவல் துறையின் மெத்தனம்

குற்றம் சாட்டப்பட்டவர் பிணை அல்லது எதிர்பார்ப்புப் பிணை மனு தாக்கல் செய்யும்போது, காவல் துறையினர் குறிப்பிட்ட வன்கொடுமை தொடர்பான குறிப்பான விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து அல்லது எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து, அம்மனுவை ஆட்சேபணை செய்வதற்குப் பதிலாக, இந்நிலையிலும் ஒத்துழைப்பு தரப்படுவது குற்றம் சாட்டப்பட்டவர் பிணை அல்லது எதிர்பார்ப்புப் பிணை மிக எளிதில் பெற ஏதுவாகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வது அவசியமா, கைது செய்யலாமா, கூடாதா என்பது அக்குற்றத்தைப் புலன்விசாரணை செய்யும் அதிகாரியின் உளத் தேர்விற்குட்பட்டதாகும். அதில், நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு சூழ்நிலைகளில் கூறியுள்ளது.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, புலன்விசாரணை அதிகாரிகள் வன்கொடுமையாளர்களைக் கைது செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இச்சூழல் வன்கொடுமையினால் பாதிக்கப்படுவோரை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. எனவே, வன்கொடுமையினால் பாதிக்கப்படுவோர் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யக்கோரி எந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாத அவலநிலை உள்ளது.

காவல்படுத்தச் செய்தல்

எனினும் பாதிக்கப்பட்டோரும், அவர்களுக்கு துணை நிற்போரும் சோர்ந்துவிட வேண்டியதில்லை. காவல் துறை உயர் அதிகாரிகளையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாவட்ட ஆட்சியர் போன்ற வருவாய்த் துறை அதிகாரிகளையும் எழுத்துப்பூர்வமான முறையில் அணுகி, காவல் துறையைச் சேர்ந்த புலன்விசாரணை அதிகாரிக்கு அழுத்தம் தருவதன் மூலமே வன்கொடுமையாளர்களைக் கைது செய்ய வைக்க முடியும். இது தனிநபர் நடவடிக்கையாக இல்லாமல், ஒரு கூட்டு நடவடிக்கையாகச் செய்தல் வேண்டும். இதனைத் தொடர்ந்து அப்போதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட வன்கொடுமை தொடர்பான செய்திகளைத் திரட்டி ஒரு தெளிவான துண்டறிக்கையோ, சிறுவெளியீடோ வெளிக்கொணர்ந்து காவல் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியோரின் அலட்சிய மனப்போக்கை வெளிப்படுத்தும் விதமாக பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதன் மூலம் போதிய அழுத்தம் தர முடியும். இதன்மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்து சிறை செய்ய வைக்க இயலும்.

வன்கொடுமையின் தீவிரம் மற்றும் பாதிப்பின் தன்மையைப் பொருத்து இந்நடவடிக்கையை வலியுறுத்திப் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றையும் சமூகச் செயல்பாட்டாளர்கள் நடத்தலாம்.

பிணையை எதிர்த்தல்

அடுத்தகட்டமாக, வன்கொடுமையாளர்கள் நீதிமன்றத்தை அணுகி பிணை மனு தாக்கல் செய்யும்போது, பாதிக்கப்பட்டவர் சார்பாக தகுதி வாய்ந்த வழக்குரைஞரை நியமித்து அப்பிணை மனுவில் ஓர் இடையீட்டு மனு தாக்கல் செய்து வன்கொடுமையாளரின் பிணை மனுவை ஆட்சேபணை செய்ய வேண்டும். எந்தளவிற்கு ஆட்சேபணை வழக்குத் தகுதியின் அடிப்படையில் செய்யப்படுகிறதோ, அந்தளவிற்கு வன்கொடுமையாளரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் வன்கொடுமை நிகழ்வுகள் மீண்டும் நிகழ்த்தப்படாத வண்ணம் தவிர்க்க முடியும்.

காயங்கள் தொடரும்


-சு. சத்தியச்சந்திரன்


நன்றி:

மே, 2008

Wednesday, June 18, 2008

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 4

அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு (மார்ச் 2008 முதல் வாரத்தில்) தொடர்பாக வெளியான ஒரு செய்தி, பலரது புருவங்களை உயர்த்தியது. செய்தியின் சாரம் இதுதான் : திருநெல்வேலி மாவட்டம் முனீர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலவாசல் கிராமத்தில், 28 வயது பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவரது கணவரைக் கொன்று அருகிலுள்ள குளத்தில் வீசிவிட்டு, வாழைத் தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோது நால்வரில் ஒருவர் இறக்க, மற்றொரு நபர் அப்போது 15 வயதே நிரம்பியவராக இருந்ததால், இளஞ்சிறார் நீதிமன்றத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். மற்ற இருவர் மீதும் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றத்திற்காகவும் (பிரிவு 376 இந்திய தண்டனைச் சட்டத்தின் படி) வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நபர் தலித்தாக இருந்ததால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (2) (v) இன்படியும் 17.04.2007 அன்று விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது.
.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(2)(v) என்பது, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நபர் பட்டியல் சாதியையோ, பழங்குடி இனத்தையோ சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அவருக்கெதிராக பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கத்தக்க இந்திய தண்டனைச் சட்டக் குற்றம் புரிந்தால், அவ்வன்கொடுமையாளருக்கு வாழ்நாள் தண்டனை வழங்க வழிவகுக்கிறது. இத்தண்டனையை எதிர்த்து மேற்படி இரு குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேல் முறையீட்டில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அவர்களிருவரையும் விடுதலை செய்து வழங்கிய தீர்ப்புதான் அது.
.
குற்றவாளிகளை விடுவிக்க உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கும் காரணம், பாதிக்கப்பட்ட பெண் தலித் என்ற செய்தியை, குற்றமிழைத்தவர்கள் அறிந்திருந்தனர் என்பதற்கான சாட்சியம் ஏதும் இல்லை என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழான குற்றச்சாட்டிலிருந்து முதலில் விடுவிக்கப்பட்ட அக்குற்றவாளிகள், அவர்களின் வயது 23-க்கு கீழ் உள்ளதால் தமிழ் நாடு இளங்குற்றவாளிகள் சட்டப்பிரிவுகளின்படி தண்டனைக்குட்படுத்தப்பட முடியாது என்பதால் விடுவிக்கப்பட்டதாகவும் இத்தீர்ப்பு கூறுகிறது.
.
இதுபோன்ற தீர்ப்புகள் அரிதானவை அல்ல; வழக்கமான ஒன்றுதான். இத்தீர்ப்புக்குள் காணப்படும் சட்ட விவாதங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், புலன்விசாரணை அதிகாரியின் தவறு காரணமாகவே இதுபோன்ற தீர்ப்புகள் வெளிவர வாய்ப்பாகின்றன. எனவே, புலன்விசாரணை என்பது வழக்கை நிலைநிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி என்பதும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்..ஒரு குற்ற நிகழ்வு குறித்த தகவல் கிடைத்தவுடன் காவல்துறை அது குறித்த முதல் தகவல் அறிக்கையை எவ்வித காலதாமதமுமின்றி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன், அவ்வழக்கைப் புலன் விசாரணை செய்யும் அதிகாரி தனது பணியை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைவது, அங்குள்ள சாட்சியங்களைக் கைப்பற்றுவது, குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் நபர்களைக் கைது செய்வது, சாட்சிகளை விசாரித்து வாக்குமூலங்கள் பதிவு செய்வது போன்றவை புலன்விசாரணை அதிகாரி செய்ய வேண்டிய முக்கியக் கடமைகள்.
.
இவ்வாறு புலன்விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று செயல்பட்டார் என்பதற்கான ஆவணங்கள் சிலவற்றை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆவணங்கள் மூலமே குற்ற நிகழ்வு நடைபெற்ற விதம் இன்னது என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். இதைப் பொருத்தே ஒரு குற்ற நிகழ்வு உண்மையிலேயே நடைபெற்றதா என்பதை உறுதி செய்து அதில் பங்கேற்ற குற்றமிழைத்த நபர்களை நீதிமன்றம் தண்டிக்க முடியும்.
.
புலன் விசாரணை அதிகாரி தயாரிக்க வேண்டிய ஆவணங்களும், அவற்றின் முக்கியத்துவமும் :
.
சம்பவ இடத்தின் வரைபடம் :
.
குற்ற நிகழ்விடம் அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள புவியியல் பின்னணியைத் தெரிவிக்கும் ஆவணம் இது. பார்வை மகஜரில் விவரிக்கப்படும் சம்பவ இடம் குறித்த அனைத்துக் குறிப்புகளும் அவற்றிற்கும் கூடுதலான விவரங்களும் இவ்வரைபடத்தில் இருக்கும். சம்பவ இடம் அமைந்திருக்கும் திசை, அமைப்பு, சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள், சம்பவம் நிகழ்ந்த விதத்தை விளக்கும் வகையில் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சாட்சிகள் சம்பவத்தைக் கண்ணுற்றிருக்கக் கூடும் என்று நீதிமன்றம் ஏற்குமளவிற்கு அமைதல் வேண்டும்.
.
இதற்கு சம்பவ இடத்தின் வரைபடத்தில் குறிப்பிடப்படும் புவியியல் குறிப்புகளில் அவற்றின் நீளம், அகலம், தூரம் ஆகியவை குறிப்பிடப்படுதல் மிக அவசியம். பார்வை மகஜரும் வரைபடமும் ஒன்றையொன்று ஒத்திருத்தல் மிக மிக அவசியம். இவ்விரு ஆவணங்களுக்கிடையே முரண்பாடு ஏற்படுமானால், சம்பவம் நடைபெற்றதை நிரூபித்தல் மிகக் கடினமாகிவிடும் (‘மகஜர்' என்ற உருதுச் சொல்லை ‘குறிப்பு' எனத் தமிழ்ப்படுத்தலாம். எனினும் குற்றவியல் வழக்குகளில் இன்றளவும் மகஜர் என்றே குறிப்பிடப்பட்டும் வழங்கப்பட்டும் வருவதால், புரிதல் முரண்பாடு ஏற்படாமலிருக்க இங்கும் அவ்வாறே குறிப்பிடப்படுகிறது).
.
பார்வை மகஜர் : இது குற்ற நிகழ்விடம் எங்கு அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் வரைபடம் குறித்த விளக்க ஆவணமாகும். குற்ற நிகழ்விடம் குறித்த துல்லியமான தகவல்கள் இதில் பதிவு செய்யப்பட வேண்டும். சாட்சிகளின் வாக்குமூலங்களுக்கும் சம்பவ இடத்தின் விபரங்களுக்குமிடையே முரண்பாடு இருக்குமேயானால், குற்றம் நடந்ததாக நீதிமன்றம் நம்பும் வாய்ப்பு குறைந்து குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படுவார்.
.
ஒரு குற்ற நிகழ்வு இரவு நேரத்தில் நடைபெற்றதாக இருக்கும் போது, அந்த நிகழ்வைக் கண்ணுற்ற சாட்சிகள் அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தான் குற்றம் புரிந்தனர் என்று கூறும்போது, அந்நிகழ்வை குறிப்பிட்ட சாட்சி பார்த்திருக்க முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள அந்நேரத்தில் சம்பவ இடத்தில் வெளிச்சம் இருந்ததா? அது குற்றம் இழைத்தவர்களை அடையாளம் காணுமளவிற்கு வாய்ப்பிருக்குமா? என்பது போன்றவற்றை நீதிமன்றம் கணக்கிலெடுக்க வேண்டும்.
.
இதற்கு சம்பவ இடத்தில் வெளிச்சம் இருந்தது என்பதை நிலைநிறுத்த, அங்கிருக்கக்கூடிய மின்விளக்கு இருந்த இடம் பார்வை மகஜர் எனப்படும் இந்த ஆவணத்தில் தெளிவாகவும் தவறாமலும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், சம்பவ இடத்தில் இரவு நேரத்தில் குற்றமிழைத்தவர்களை அடையாளம் காண சாட்சிகளுக்கு வாய்ப்பில்லை என நீதிமன்றம் கருதி விடுவிக்கக்கூடும். இரவில் நிகழ்ந்த பெரும்பாலான கொலை வழக்குகளில் இந்த ஒரு சிறு பிழை விடுபடுதல் காரணமாகவே குற்றமிழைத்தவர்களை நீதிமன்றங்கள் விடுதலை செய்துள்ளன என்பதை கவனத்தில் கொண்டால், பார்வை மகஜரின் முக்கியத்துவத்தை உணரலாம். புலன்விசாரணை அதிகாரி பார்வை மகஜரை இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தயாரித்ததாக அவர்களின் கையொப்பம் பெற வேண்டுமாதலால், அச்சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்போது தெளிவாக சாட்சியம் அளிக்க வேண்டும்.
.
கைப்பற்றுதல் மகஜர் : ஒரு குற்ற நிகழ்வு நடைபெற்றதாகத் தகவல் கிடைத்தவுடன் புலன் விசாரணை அதிகாரி குற்றநிகழ்விடம் நோக்கி உடனடியாக விரைந்தடைய வேண்டும் என்று சட்டம் கூறுவதன் காரணம், சம்பவ இடத்தில் சம்பவம் நடைபெற்ற விதம் குறித்து குறிப்புணர்த்தக் கிடைக்கக் கூடிய ஆதாரங்கள்தான். தடயம் எனப்படுவது குற்ற நிகழ்விடத்தில் குற்ற நிகழ்வின் தொடர்புடைய சான்றுப் பொருளாகும். ஒரு தற்கொலைச் சம்பவத்தில் தூக்கு மாட்டிக் கொண்ட கயிறோ, துணியோ, விஷபாட்டிலோ ஒரு முக்கிய சான்றுப் பொருள். ஒரு கொலை நிகழ்வில் கொலைக்குப் பயன்படுத்திய பொருள் அருவாள், கம்பு போன்ற எதுவும் கூட சான்றுப் பொருள்தான்.
.
அதேபோல், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் உடை போன்ற உடைமைகளும் கூட சான்றுப் பொருளாகலாம். இவற்றை உடனடியாகக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்து நடைபெற்ற சம்பவத்துடன் அச்சான்றுப் பொருளின் தொடர்பை உறுதி செய்து நீதிமன்றத்தில் அளிக்க வேண்டியது, புலன் விசாரணை அதிகாரியின் முக்கிய கடமையாகும். இதில் கவனக்குறைவு ஏதும் ஏற்படுமானால், அதுவும் வழக்கை நிரூபிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். கைப்பற்றுதல் மகஜரும் இரு சாட்சிகள் முன்னிலையில் புலன் விசாரணை அதிகாரியால் சான்றுப் பொருள் கைப்பற்றப்படும் இடத்திலேயே தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்படுதல் வேண்டும். சாட்சிக் கையொப்பமிடுவோர் நீதிமன்றத்தில் சாட்சியத்தின் போதுகவனக்குறைவாக இருந்தாலும், வழக்கின் உறுதி குலைந்து விடும்.
.
புகைப்படங்கள் : தற்கொலை, கொலை சந்தேக மரணம் போன்ற குற்ற நிகழ்வுகளில் இறந்தவர் காணப்படும் நிலை சம்பவம் குறித்த மிக முக்கிய சான்றாகும். எனவே, இது போன்ற நிகழ்வுகளில் சம்பவ இடத்தைப் புகைப்படம் எடுத்தல் என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இறந்தவரின் உடலில் சம்பவத்தின் போது ஏற்பட்ட காயங்கள், அவற்றின் தன்மை குறித்து நீதிமன்றம் மதிப்பிட முடியும். இறந்தவரின் சடலக் கூறாய்வின்போது சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி சடலத்தின் மீது காணப்படும் காயங்கள் மற்றும் அவற்றின் தன்மை குறித்து தனது அறிக்கையில் குறிப்பிடுவார். எனவே, இத்தகைய புகைப்படங்களும் வழக்கில் சான்றாவணமாகக் கொள்ளப்படும்.
.
பஞ்சநாமா : அதேபோல, தற்கொலை, கொலை, சந்தேக மரணம் போன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட நபர் இறந்ததற்கான காரணம் இதுதான் என்று கண்ணியமிக்க நபர்களிடம் பெறப்படும் கருத்து அடங்கிய விபரங்கள்தான், பஞ்சநாமா எனப்படுவதாகும். இது சம்பவ இடத்திலிருந்து சடலத்தை அகற்றுவதற்கு முன்பு புலன்விசாரணை அதிகாரி தயாரிக்க வேண்டிய மிக முக்கியமான ஆவணமாகும். இந்த ஆவணதில் மேற்கூறிய 5 நபர்களும் கையொப்பமிட வேண்டும். அவர்களின் சாட்சியத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும்.
.
கைது மகஜர் : குற்ற சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்படும் நபரை சம்பவ இடத்திலோ, அல்லது வேறு எங்குமோ காவலுக்குட்படுத்தும் போது புலன் விசாரணை அதிகாரி தயாரிக்க வேண்டிய மற்றுமொரு ஆவணம் கைது மகஜராகும். இதுவும் இரு சாட்சிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட வேண்டும். கைது செய்யப்படும் நாள், நேரம், இடம், கைது செய்யப்படுபவரின் அடையாளம், தொடர்புடைய வழக்கு / குற்ற எண் போன்ற விபரங்கள் இதில் கண்டிருக்க வேண்டும். மகஜரில் குறிப்பிட்டுள்ள நாள், நேரம், இடம் போன்றவை தவறானவை என குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு நிரூபித்தால், மொத்த வழக்கையே அது பாதிக்கும்.
.
ஒப்புதல் வாக்குமூலம் : குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் நபர் எவ்விதத் தூண்டுதலும், அச்சுறுத்தலுமின்றி தானாகவே முன் வைத்த குற்றத்தை தான் புரிந்ததாக ஒப்புக் கொண்டு வழங்கும் வாக்குமூலமே ஒப்புதல் வாக்குமூலம். காவல் துறையினரிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை இந்திய சாட்சியம் சட்டம் சான்றுப் பொருட்கள் கைப்பற்றிய பொருண்மை குறித்த விஷயங்கள் தவிர ஏற்பதில்லை. ஒப்புதல் வாக்குமூலம் நீதித்துறை நடவர் முன்னிலையில் பெறப்பட்டால் மட்டுமே ஏற்கத்தக்கதாகிறது.
.
சாட்சிகளின் வாக்குமூலங்கள் : ஒரு குற்ற நிகழ்வின் கண்ணுற்ற சாட்சியங்களையும் மற்றவர்களையும் புலன் விசாரணை அதிகாரி விசாரித்து பெறும் வாக்குமூலங்களே இவை. இத்தகைய வாக்குமூலங்கள் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கு அனுப்பப்படவேண்டும். இதன் மூலம் வாக்கு மூலங்களில் இடைச் செருகல்கள், அடித்தல் திருத்தங்கள் போன்றவை மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு எனினும், புலன் விசாரணை அதிகாரி பெரும்பாலான வழக்குகளில் இதை கடைப்பிடிப்பதில்லை. இதனால் பல வழக்குகள் வலுவிழந்து குற்றமிழைத்தவர்கள் விடுவிக்கப்பட்ட நேர்வுகளும் பல உண்டு. சாட்சிகளின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் கூறப்படும்போது தான் அது சாட்சியம் என்ற தகுதியைப் பெறுகிறது. அதனடிப்படையில்தான் வழக்கு தீர்மானிக்கப்படும்.
.
இவ்வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய புலன்விசாரணை முறைப்படி நடைபெறாதபோது, அந்நிலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக அமைகிறது. சாதாரண குற்றவியல் வழக்குகளைவிட வன்கொடுமை வழக்குகளில் இப்புலன்விசாரணை முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனில், அது வன்கொடுமையாளர்களுக்குச் சாதகமாக முடிவதுடன் தொடர் வன்கொடுமைகள் புரிய ஊக்குவிப்பதாகவும் அமைகிறது. எனவே, வன்கொடுமை வழக்குகளில் புலன்விசாரணை அதிகாரி செய்யக்கூடிய குளறுபடிகள், அவற்றைக் களையும் முறைகள் ஆகியவற்றைப்பார்ப்போம்.
.

-காயங்கள் தொடரும்

-சு. சத்தியச்சந்திரன்


நன்றி :


ஏப்ரல் 2008

Monday, June 16, 2008

"மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்" - கருத்தரங்கம் : ஊடகங்களின் பார்வையில்...

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த செய்தி:




மரபணு மாற்று விவசாயம்: இயற்கைக்கு விரோதமான போக்கு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல - ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு
.
சென்னை, ஜூன். 16-
.
மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார்.

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்' என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
.
உணவே மருந்து
.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர், உணவு கொடுக்கும்போது அவரது குணம் சாப்பிடுபவருக்கும் வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் உணவுக்கும், மனித உறவுகளுக்கும் அப்படியொரு முக்கியத்துவம் இருந்தது.
.
``மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்-ஊறுபாடு இல்லை உயிர்க்கு'' என்ற திருக்குறளில், உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின், அவரது உயிருக்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறளும் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல இந்த திருக்குறள் அமைந்துள்ளது.
.
நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல
.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டே எல்லா விஞ்ஞானமும் உள்ளது. மனித உடலில் இந்த ஐம்பூதங்களும் உள்ளன. தசை, நரம்பு நிலமாகவும், பசி நெருப்பாகவும் இருக்கிறது. உடலில் நீர் ஓடுகிறது. மனிதன் இறக்கும்போது நிலத்தில் புதைக்கின்றனர். எரித்து சாம்பலை கரைக்க வேண்டுமானால் அதற்கு நெருப்பும், நீரும் தேவைப்படுகிறது. எல்லாமே மறுசுழற்சி முறையில்தான் அமைந்துள்ளன. எனவே, மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.
.
மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
.
இவ்வாறு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.
.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகம் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:-
.
உணவுத் தட்டுப்பாடு
.
உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேஷன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக் குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030-ம் ஆண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
.
நம் நாட்டில், 1980-ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 டன் (5 ஆயிரம் கிலோ) நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களும் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளும் வருவதில்லை.
.
சமுதாய விவாதம்
.
எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.
.
இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.
இந்த கருத்தரங்கில் பூவலகின் நண்பர்கம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கு.சிவராமன், டெக்கான் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் பி.வி.சதீஷ், கிரேன் அமைப்பின் மண்டல திட்ட அதிகாரி ஷாலினி புட்டானி, வக்கீல் எம்.வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் வரவேற்றார். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையத்தின் பிரதிநிதி வக்கீல் பி.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
.

நன்றி: தினத்தந்தி
.
மரபணு மாற்றத்துக்கு எதிர்ப்பு: இயற்கைக்கு மாறாக போவது நல்லதல்ல
.
சென்னை, ஜூன் 16: இயற்கைக்கு மாறாக போவது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று மரபணு மாற்றத்திற்கு எதிரான கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.
மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சென்னையில் நேற்று "மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்: என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் மோகன கிருஷ்ணன் வரவேற்றார். டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி செயலாளர் சத்தீஷ், வெற்றிச்செல்வன், க்ரெய்ன் பிராந்திய திட்ட அலுவலர் ஷாலினி புட்டானி ஆகியோர் பேசினர்.
.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவானவன் மனிதன். இறுதியில் பஞ்சபூதத்திடமே சென்று சேர்கிறோம். இதற்கு எதிராக இருப்பதுதான் மரபணு மாற்றம். இயற்கைக்கு மாறாக போவது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது இல்லை. உலகநாடுகள் மாநாட்டுத் தீர்மானத்தின்படி, எந்தவித அறிவியல் கண்டுபிடிப்பும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உறுதிசெய்யப்படும் வரை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.
.
தமிழக இயற்கை உழவர் இயக்கத் தலைவர் நம்மாழ்வார் பேசியது:
உலகில் உணவுத் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 88 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. உணவு உற்பத்தியை மேலும் 50 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே 2030ல் உலகின் உணவுப் பொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பசுமைப் புரட்சி என்ற பெயரால் மேலைநாட்டு தொழில்நுட்பம் இந்தியாவில் புகுந்ததால் இந்தியாவில் விவசாயம் பாழ்பட்டுள்ளது. 1980ல் ஒரு ஏக்கரில் 5 டன் உற்பத்தி இருந்தது. ஆனால் அது தற்போது 800 கிலோவாக குறைந்துள்ளது. உரமும், பூச்சிக் கொல்லி மருந்தும் நம் உடலை நஞ்சாக மாற்றிவருகின்றன.
.
எந்த அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை சமுதாயத்தில் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். மரபணு மாற்றத்தால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளை இழந்துள்ளோம். நிலம், விவசாயி, மக்கள் என அனைத்துத் தரப்பையும் பாதிக்கும் மரபணு மாற்றத்தால் கிடைக்கும் எதையும் ஏற்கக் கூடாது. இவ்வாறு நம்மாழ்வார் பேசினார்.
.
மனித உரிமை சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த பி. சுந்தரராஜன் நன்றி கூறினார்.
.
நன்றி: தினகரன்

"கம்பெனி' ஆதிக்கம் ஒழியவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி
.

சென்னை, ஜூன் 15 : இந்தியாவில் இன்னும் கம்பெனி ஆதிக்கம் ஒழியவில்லை. சுதந்திரத்துக்கு முன் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின் மரபணு மாற்று தொழில்நுட்பக் கம்பெனிகள் ஆதிக்கம் உள்ளது. இது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.


மனித உரிமை சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்" கருத்தரங்கில் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:
.
நகரில் உள்ளவர்களிடம் அரிசி என்றால், அது எந்த டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கிறது என்பார்கள். என் குழந்தைகளிடம் நெல் எங்கு விளைகிறது என்றால், முருகன் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் என்கிறார்கள். அந்த அளவுக்கு உணவு முறைகள் மாறிவிட்டன.
.
இந்தியர்களின் வாழ்க்கை முறை "உணவே மருந்து, மருந்தே உணவு" என இருந்தது. உணவைக் கடவுளாக போற்றினார்கள். உடல் மட்டும் உணவால் அமைந்தது அல்ல. எண்ணங்களும் உணவால் உருவாகின்றன.
.
திருவள்ளுவர் உழவு பற்றி அதிகாரம் வகுத்தார். பயிருக்கு அதிகாரம் கொடுத்தார். ஆனால் உணவு என்பதற்கு அதிகாரம் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக மருந்து என அதிகாரம் கொடுத்தார்.
.
மரபணு மாற்றம் பற்றி இப்போது பேசுகிறோம். ஆனால் அன்றைக்கே வள்ளுவர் கூறிவிட்டார். மாறுபாடு இல்லாத உண்டி, ஊறுபாடு இல்லை உயிருக்கு என்றார். மாறுபாடு இல்லாத உண்டி என்றால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவு, மரபணு மாற்று இல்லாத உணவு எனப் பொருள்படும்.
.
உலகம் தோன்றியற்கு சுழற்சி முறைதான் அடிப்படை உண்மை. எந்தப் பொருளை எடுத்தாலும் அவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களுக்குள்தான் வருகிறது. இதில் நமது உடலுக்கும் தொடர்பு உள்ளது. பஞ்ச பூதங்கள் சேர்க்கையால் உருவான உடலை இறந்த பின்னர் நிலத்தில் புதைக்கிறோம் அல்லது நெருப்பில் எரித்து சாம்பலைத் தண்ணீரில் கரைக்கிறோம்.
.
இந்த சுழற்சி முறைக்கு எதிரானதுதான் மரபணு முறை. இதனுடைய போக்கு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல. மரபணு மாற்று முறையில் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் பற்றி குறிப்பிட்டார்கள். 1948க்கு முன் கிழக்கிந்திய கம்பெனி ஆதிக்கம் இருந்தது. இப்போது வேறு கம்பெனிகளின் ஆதிக்கம் வந்துள்ளது. கம்பெனி ஆதிக்கம் என்பது பழகிவிட்ட ஒன்றாகிவிட்டது என்றார் நீதிபதி ராமசுப்பிரமணியன்.
.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன், தமிழக இயற்கை உழவர் இயக்க தலைவர் கோ.நம்மாழ்வார், கு.சிவராமன், பி.பி.சதீஷ்வெற்றிச்செல்வன், ஷாலினி புட்டானி, பி.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
.
"மரபணு மாற்றம்: 200 வகை பறவை இனம் அழிவு"
.
சென்னை, ஜூன் 15 : மரபணு மாற்ற முறையால் 200 வகையான பூச்சி தின்னும் பறவை இனங்கள் அழிந்து விட்டன என தமிழக இயற்கை உழவர் இயக்கத் தலைவர் கோ.நம்மாழ்வார் கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கருத்தரங்கில் நம்மாழ்வார் பேசியதாவது: உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு பெரிய பிரச்னையாக உள்ளது. 300 கோடி பேருக்கு உண வுக்கு உத்தரவாதம் இல்லை. 88 கோடி பேர் பட்டினி கிடக்கிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடி அதிகரிக்கும்.
33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. தற்போதைய உணவு உற்பத்தியில் மேலும் 50 சதவீதம் அதிகரித்தால்தான் 2030ல் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என ஆய்வு கூறுகிறது.
.
"பசுமைப் புரட்சி' என்ற பெயரால் மேலை நாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் புகுத்துவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தின் வளம் கெட்டு விட்டது. 5 ஆயிரம் ஆண்டுகளாக இருந்த நில வளம் 60 ஆண்டுகளில் கெட்டு விட்டது.
.
அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு. இதுதான் வாழ்க்கை தத்துவமாக இருந்தது. நெல்லின் அடிப்பகுதியை நிலத்துக்கும், நடுப்பகுதியான வைக் கோல் மாட்டுக்கும், நெல்மணிகளை வீட்டுக்கும் கொண்டு சென்றோம். இதைப் பின்பற்ற தவறியதால் உற்பத்தி அளவு குறைந்து விட்டது. உணவுப் பழக்க வழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
.
உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் உணவை நஞ்சாக்கி வருகின்றன. சில கம்பெனிகளின் சுய லாபத்துக்காக உணவை நஞ்சாக்கும் போக்கைத் தடுக்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வேண்டும்.
.
மரபணு மாற்றத்தால் 200 வகையான பூச்சி தின்னும் பறவைகள் இனத்தை இழந்துள்ளோம். நிலம், விவசா யிகள், மக்கள் என அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் மரபணு மாற்றத்தின் மூலம் கிடைக்கும் எதையும் ஏற்கக் கூடாது என்றார் நம்மாழ்வார்.
.
நன்றி: தினமணி
.


மரபணு மாற்று விவசாயம் நல்லதல்ல: நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் பேச்சு

.
சென்னை, ஜூன் 16-

.

மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் பேசினார்.

.

மனித உரிமை மற்றும் சுற்றுச் சூழல் நீதிக்கான வழக்கறிஞர்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

.

அப்போது அவர் கூறியதாவது:

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

.

உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின்,அவரது உயிர்க்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறள் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல் இந்த திருக்குறள் அமைந்துள்ளது.

.

மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.

.

மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

.

இவ்வாறு நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் கூறினார்.

.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:

.

உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேசன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழி மறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக்குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030ம் ஆண்டில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

.

நம் நாட்டில் 1980ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம் நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்கள் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்றுப் பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகள் வருவதில்லை.சமுதாய விவாதம்எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடை முறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

.

இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.

நன்றி: தீக்கதிர்
.
"மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும் என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கு நடந்தது. அதி்ல் பேசுகிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அதை வீடியோவில் பதிவு செய்கிறார் ஒரு பெண்"



நன்றி: தமிழ்முரசு

.

இந்த கருத்தரங்கில் தமிழ் வலைபதிவர்கள் சார்பில் தோழி லிவிங்ஸ்மைல் வித்யா கலந்து கொண்டார். அவருக்கு எங்கள் நன்றி.

.

-மக்கள் சட்டம் குழு

Thursday, June 12, 2008

“மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்” -கருத்தரங்கம்

நாம் உட்கொள்ளும் இயற்கையான உணவுகளில் இப்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன?

நாட்டுத்தக்காளி என்ற வகையே காணாமல்போய் பெங்களூர் தக்காளி என்ற பெயரில் “பளபளா” தக்காளி மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. இதில் என்ன பிரசினை?

நாட்டுவாழை, பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற பாரம்பரிய வாழை இனங்கள் குறைந்துபோய் பெங்களூர் வாழை என்ற பெயரில் “பளபளா” வாழை மட்டுமே கிடைக்கிறது. என்ன காரணம்? இந்த தக்காளியோ, வாழையோ தோல் கருப்பதும், அழுகுவதும் நம் கண்களில் படுவதில்லையே! என்ன மர்மம்?

ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா, நீல்கிரிஸ் போன்ற நவீன அங்காடிகளில் பார்வைக்கு கவர்ச்சியாக விற்பனை செய்யப்படும் காய்கனிகள் எங்கிருந்து வருகின்றன? அவை எவ்வாறு விளைவிக்கப்படுகின்றன?

பாட்டிலிலும், டப்பாவிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் ஜாம் வகைகளும், பழரச பானங்களும் பாதுகாப்பானவைதானா?

பருத்தி, கத்தரிக்காய், காலிஃபிளவர், சோயா மொச்சை, கடுகு, கோதுமை, அரிசி என்று பல்வேறு உணவுப்பொருட்களிலும் Bt என்ற புதிய வகை அறிமுகமாவதாக செய்திகள் வருகின்றன. இது நல்லதா? இல்லையா?

இவை தாவரங்களில், அதை உட்கொள்ளும் விலங்குகளுக்கு, மனிதர்களுக்கு என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

மனிதர்களும், விலங்குகளும் உட்கொள்ளும் உணவுகளில் இத்தகைய மரபணு மாற்றங்கள் செய்வதைப்பற்றி பன்னாட்டு மற்றும் இந்தியச் சட்டம் என்ன சொல்கிறது? அந்த சட்டங்களை இயற்றுவது யார்? இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எந்த அளவுக்கு பங்கு உள்ளது?

இந்த சட்டங்களை செயல்படுத்துவதும் அதை கண்காணிப்பதும் யார்? மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு? இழப்பீடுகளுக்கு வழி உண்டா?

இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண இதோ ஒரு வாய்ப்பு....

இடம்: YMCA அரங்கம், (உயர்நீதிமன்றம் எதிரில்) NSC போஸ் சாலை, சென்னை.

நாள்: 15-06-2008 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

(இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சென்னை பதிவர் சந்திப்புக்கு செல்லலாம்)

சட்டம் குறித்த இந்த கருத்தரங்கம் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அல்ல. சட்டம் குறித்தும், சமூகம் குறித்தும் ஆர்வம் கொண்ட அனைவரும் வரலாம்.

தமிழறிந்த பேச்சாளர்கள் அனைவரும் தமிழிலேயே பேசுவர்.

அனைவரும் வருக!