Wednesday, December 14, 2011

வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்ற (முன்மாதிரி) தீர்ப்பு



மாண்பமை உச்ச நீதிமன்றம், புது டில்லி

நீதிபதிகள்: மார்கண்டேய கட்ஜு & கியான் சுதா மிஸ்ரா 

மேற்கோள்: 2011 -1- L.W. (Crl) 677 : (2011) 3 MLJ (Crl) 551(SC) தீர்ப்பு நாள்: 19.04.2011

ஆறுமுகம் சேர்வை & அஜித் குமார்                                                 ........ மேல்முறையீட்டாளர்கள்
 எதிர்
தமிழ்நாடு அரசு                                                                                              ......... எதிர் மனுதாரர்

தீர்ப்புரை 

“ஒவ்வொரு அணுவிலும் ஒரு பகுதி இருளே; ஒரு யுகத்தின் கோப்பையை ஏந்துபவனே, இது குற்றங்களின் காலம்”. – - ஃபிராக் கோரக்புரி 


“அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்; மனிதர்கள் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க விழைவது போன்றவைகளை உள்ளடக்கிய, விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையான உண்மைகளாகக் கொள்கிறோம். - அமெரிக்க சுதந்திர பிரகடனம், 1776

1.தாமஸ் ஜெஃபர்சன் என்பார் எழுதிய நினைவில் கொள்ளத்தக்க மேற்கண்ட வரிகள், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும், இன்றளவும் வரலாற்றில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினர், தங்களின் சொந்த நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை இன்றளவும் தாழ்வாகக் கருதும் நிலையே நீடிக்கிறது. மேற்கண்ட மனநிலையானது இந்த நவீன யுகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நாட்டின் வளர்ச்சியில் மந்த நிலையை ஏற்படுத்தும் காரணங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.

2.அனுமதி அளிக்கப்பட்டது.

3.மதுரை 4ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் பகரப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, குற்றவியல் மேல்முறையீடு (எண்.536&537/2001) செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 25.01.2008அன்று அத்தீர்ப்பை உறுதி செய்து அளித்த தீர்ப்புக்கு எதிராக, இந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

4. கடந்த, 01.07.1999அன்று, கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, மாடுகட்டும் முறை குறித்து, முதல் சாட்சி பன்னீர்செல்வம் மற்றும் இரண்டாம் சாட்சி மகாமணி ஆகிய இருவருக்கும் மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டாளரான ஆறுமுகம் சேர்வை, முதல் சாட்சியை, “நீ பள்ளப்பயல், செத்த மாட்டுக்கறியைத் தின்பவன்” என்று திட்டி அவமதிப்பு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 1, 7 மற்றும் 9 ஆகியோர், முதல் சாட்சியின் இடது தோளில் கம்பால் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள். அப்போது இரண்டாம் சாட்சியான, மகாமணி இப்பிரச்சனையில் குறுக்கீடு செய்தபோது அவரையும் கம்பால் தாக்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக அவருக்குத் தலையில் முறிவும், கொடுங்காயமும் ஏற்பட்டுள்ளது.

5. காயமுற்ற நேரடி சாட்சிகளான மேற்கண்ட இருவரையும் தவிர, அந்த நிகழ்வில் மேலும் மூன்று நேரடி சாட்சிகளும் இருக்கின்றார்கள். காயமுற்றவர்களை மருத்துவர் பரிசோதனை செய்திருக்கிறார். மகாமணியின் தலையில் ஏற்பட்ட முறிவு, குற்றவாளிகளின் கொலை செய்யும் நோக்கத்தை உணர்த்துகிறது.

6. அரசு தரப்பின் வழக்கை இரண்டு நீதிமன்றங்களும் நம்புகின்றன. நிகழ்வு தொடர்பாக சாட்சிகளின் விவரிப்புகளை நாங்கள் மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்தபோதும், நிகழ்வை நம்பாமலிருக்க ஒரு காரணமும் தென்படவில்லை.

7. குற்றவாளி பிற்படுத்தப்பட்ட “சேர்வை” ஜாதியைச் சேர்ந்தவர். புகார்தாரர்களோ பட்டியலின “பள்ளன்” ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

8. “பள்ளன்” என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இதே வார்த்தை, ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. (வட இந்தியாவில் “சமார்” என்ற வார்த்தை குறிப்பிட்ட ஒரு ஜாதியைக் குறிக்கும் அதேவேளையில், ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் அதே வார்த்தை பயன்படுத்தப்படுவதைப்போல). பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் ஒருவரை “பள்ளன்” என்று சொல்வது, எங்களது கருத்துப்படி, பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமாகும். தமிழ்நாட்டில், “பள்ளப்பயல்” என்று ஒருவரைச் சொல்வது இன்னும் கூடுதலாக அவமதிப்பு செய்வதாகும்; அது மேலும் பெரிய குற்றமாகும்.

9. அதேபோல, தமிழ்நாட்டில் “பறையன்” என்றொரு ஜாதி உள்ளது. ஆனால் அதே “பறையன்” என்ற வார்த்தை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. “பறப்பறையன்” என்ற வார்த்தை மேலும் பெரிய அவமதிப்பாகும்.

10. பள்ளன், பள்ளப்பயல், பறையன், பறப்பறையன் போன்ற வார்த்தைகளை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் பயன்படுத்துவது, எங்களது கருத்துப்படி மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது. மேலும் பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். (50ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும்) தற்போது, “நிக்கர்” அல்லது “நீக்ரோ” என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை அழைப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அது போலவே, நவீன யுகத்தில் இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

11. இந்த வழக்கைப் பொருத்த வரையில், பன்னீர்செல்வத்தை அவமதிப்பு செய்யும் நோக்கத்தில் “பள்ளப்பயல்” என்ற வார்த்தை, முதல் குற்றவாளியால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே, இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் தெளிவான குற்றமாகும்.

12. இந்த நவீன யுகத்தில், எவரது உணர்வுகளும் நோகடிக்கப்படக்கூடாது. குறிப்பாக, பல வேற்றுமைகளை உடைய இந்தியா போன்ற நாட்டில், ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி போன்றவைகளால் எவரொருவரது உணர்வுகளும் அவமதிப்பு செய்யப்பட்டு விடாதவாறு, நாம் கண்டிப்பாக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் நமது நாட்டை ஒற்றுமையுடையதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்க முடியும்.

13. ஸ்வரன்சிங் மற்றும் பலர் -எதிர்- அரசு ((2008) 12 SCR 132) என்ற தீர்ப்பில் (பத்தி 21 முதல் 24 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
"21.பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்களாலும், உயர்ஜாதி என்று அழைக்கப்படும் மக்களாலும் அவமதிப்பு, கீழ்தரமாக நடத்துதல் மற்றும் கேலி செய்யும் நோக்கத்தில், தற்காலத்தில், ‘சமார்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நிகழ்காலத்தில் 'சமார்’ என்று ஒருவரை அழைப்பது கீழ்த்தரமான வார்த்தை மற்றும் கடுமையான குற்றமுமாகும். மேலும் இன்று ‘சமார்’ என்று சாதரணமாக அழைப்பது, ஒரு ஜாதியைக் குறித்து குறிப்பிட அல்ல, மாறாக திட்டமிட்டு ஒருவரின் மாண்புக்கு இழிவு ஏற்படுத்தவும், அவமதிப்பு செய்யவுமே.

22. பிரிவு 3 (1) (x) க்கு சட்ட பொருள் விளக்கம் தரும்போது, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதற்கான நோக்கத்தை பார்க்கவேண்டும். பட்டியலின பிரிவினரின் மாண்புக்கும், மனிததன்மைக்கும் இழுக்கு ஏற்படுத்துவதையும், அவர்களைத் தொந்தரவு செய்வதிலிருந்து தடை செய்வதற்காகவுமே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது, இச்சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் 3 (1) (x) பிரிவிற்கு பொருள் விளக்கம் கொள்ளும் போது, 'சமார்' என்ற வார்த்தையின் மூலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதை விட பயன்பாட்டினால் அந்த வார்த்தை பெற்றுள்ள பரவலான அர்த்தத்தை பார்க்க வேண்டியதுள்ளது. அந்த வார்த்தையின் மூலப்பொருளை கண்டறிய முயல்வோமானால், அது இந்த சட்டத்தின் முக்கியமான குறிக்கோளை அடையவிடாது.

23. இது சமத்துவத்திற்க்கும், மக்களாட்சிக்குமான காலமாகும். எவருடைய உணர்வுகளும் காயப்படுத்தப்படக் கூடாது. மேலும் எந்த மனிதனும், சமூகமும் அவமதிப்பு செய்யப்படவோ அல்லது கீழ்த்தரமாக பார்க்கப்படவோ கூடாது. அரசியல் சாசனத்தின்ஆன்மா என்பதுடன்,அதன் அடிப்படை அம்சங்களின் பாகமும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, எங்களது கருத்துப்படி, ஒருவர், “சமார்” இனத்தை சேர்ந்தவராகவே இருந்தாலும், ஒருவரை அடையாளப்படுத்தும் போது, 'சமார்' என்ற வார்த்தையை உயர் ஜாதியினரும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அந்த வார்த்தையை உபயோகிக்கும்போது ஒருவருடைய உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன. மதம், ஜாதி, இனம், மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகளை உடைய குழுவினர் இருக்கும் நம் போன்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், குழுக்களும் கண்டிப்பாக மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மேலும், எவரொருவரும் தாழ்வாகப் பார்க்கப்படக்கூடாது. நமது நாட்டை ஒற்றுமையுள்ள நாடாக வைத்திட இது ஒன்றே வழியாகும்.

24. எங்களது கருத்துப்படி, பொது இடத்தில், பொது மக்கள் முன்னிலையில் வைத்து ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நபரை அவமதிப்பு மற்றும் கீழ்த்தரமாக நடத்தும் நோக்கத்துடன், 'சமார்' என்று அழைப்பது, நிச்சயமாய் பிரிவு 3 (1) (x) ன் கீழ் குற்றமாகும். அப்படியாக, கீழ்த்தரமாக அல்லது அவமதிக்கும் நோக்கத்தில்தான் ‘சமார்' என்று ஒருவர் அழைக்கப்பட்டார் என்பது, அது உபயோகிக்கப்பட்ட சூழலைச் சார்ந்தது."

14. மேலும் நாங்கள், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் ஆட்சேபணைக்குரிய இரட்டை குவளை முறை குறித்தும் குறிப்பிட விரும்புகிறோம். இந்த முறைப்படி, அனேக தேநீர் கடைகளிலும், உணவகங்களிலும் பட்டியலின மக்களுக்கும், பிற மக்களுக்கும் தேநீர் அல்லது பிற பானங்கள் வழங்கும்போது, தனித்தனி குவளைகள் பயன்படுத்தப்படுகிறது. எங்களது கருத்துப்படி, இது கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். மேலும், இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். ஆகவே இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டிப்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், குற்றம் புரிந்தது உறுதிபடுத்தப்படும்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும். மேலும், தங்களது அதிகார வரம்புகளுக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் குறித்த செய்திகள் தெரிந்தும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

15. லதா சிங் –எதிர்- உத்திரபிரதேச மாநில அரசு ((2006)5 scc 475) என்ற தீர்ப்பில் (பத்தி 14 முதல் 18 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

"14. இந்த வழக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. தற்போது மட்டுமின்றி நிகழ்வு தொடர்புடைய காலத்திலும், மனுதாரர் வயது வந்தவர் என்பதில் எவ்வித குழப்பமுமில்லை. ஆகவே அந்த பெண், தான் விரும்பும் எவருடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் அல்லது தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு, இந்து திருமண சட்டத்திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ, எவ்விதமான தடைகளுமில்லை. ஆகவே மனுதாரரோ, அவரது கணவரோ, கணவரின் உறவினர்களோ என்ன குற்றம் செய்தார்கள் என்று எங்களால் கண்ணுற முடியவில்லை.

15. எங்களது கருத்துப்படி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான இந்த வழக்கின் குற்றவாளிகள் எவ்விதமான குற்றமும் செய்யவில்லை. மனுதாரர், வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதால், அவரது சகோதரர்கள் உணர்ச்சிவசப்பட்டதைத் தொடர்ந்து, தொடரப்பட்டஇவ்வழக்கு நிகழ்வுகளில் நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரமானது தவறாகக் கையாளப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல மனுதாரரின் சகோதரர்கள் புரிந்த சட்டத்திற்குப் புறம்பான அடாவடி செயல்களுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், அதற்கு நேரெதிராக மனுதாரரின் கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் தவறாக நடவடிக்கை எடுத்துள்ளதை இங்கே நாங்கள் வருத்தத்துடன் கவனத்தில் கொள்கிறோம்.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்களுக்கெதிராக வன்முறைகளும், மிரட்டல்களும், தொந்தரவுகளும் செய்யப்படுவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் எங்களது கவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே அது தொடர்பான சில பொதுவான அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டியது அத்தியாவசியமானதென்று நாங்கள் உணர்கிறோம். தற்போது நமது நாடு அதன் வரலாற்றில் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது. எனவே, இந்த நீதிமன்றமானது இது போன்றதொரு பொது பிரச்சனையில் இனியும் மௌனம் சாதிக்க முடியாது.

17. நமது நாட்டுக்கு ஜாதிய முறையானது பெரிய சாபமாகும். எனவே, எவ்வளவு விரைவாக இது ஒழிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது. சரியாகச் சொல்லப்போனால், நமது நாட்டிற்கு எதிராகவுள்ள சவால்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் ஜாதிய முறையானது நாட்டை பிளவுபடுத்துகிறது. ஆகவே, ஜாதி மறுப்புத் திருமணமானது, நாட்டின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் இதன் விளைவாகவே ஜாதிய முறைகள் ஒழிக்கப்படும். ஆனபோதிலும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிரட்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுவது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருத்தமளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எங்களது கருத்துப்படி, இதுபோன்ற வன்முறைகளோ, மிரட்டல்களோ அல்லது துன்புறுத்தல்களோ முற்றிலுமாக சட்டத்திற்குப் புறம்பானவைகள் என்பதால் அவைகளைப் புரிந்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இது ஒரு சுதந்திரமான மக்களாட்சி நாடு என்பதால், உரிய வயதை அடைந்துவிட்ட ஒருவர், தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தங்களது மகன் அல்லது மகளுடனான சமூக உறவுகளை வேண்டுமானால் அதிகபட்சமாக அவர்களது பெற்றோர்கள் துண்டித்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களை மிரட்டவோ, துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடவோ முடியாது. எனவே, நாடு முழுவதும் உரிய வயதையடைந்த ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் அல்லது அந்த தம்பதிகள் இருவரும் மிரட்டப்படுதல் அல்லது அவர்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுதல் குறித்து கண்காணிக்க வேண்டுமென்று காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளை அறிவுறுத்துகிறோம். அப்படியாக வன்முறை, மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யும் நபரையோ அல்லது எவரது அறிவுறுத்தலின் பேரில் செய்யப்படுகிறதோ, அவர்கள்மீது குற்றவியல் நடைமுறைகளை எடுப்பதை இலக்காகக்கொண்டு செயல்படுவதுடன், அது போன்ற நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

 18. தங்களது சொந்த விருப்பத்தில், ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை, கௌரவக் கொலைகள் செய்வதாக நாங்கள் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். அது போன்ற கொலைகளில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, அப்படிப்பட்டவர்கள் செய்யும் அதுபோன்ற கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானப்படத்தக்க, கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும்”.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கௌரவக் கொலைகள் அல்லது இதர வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், நிறுவனமாக்கப்பப்பட்ட வழியில் ஊக்கப்படுத்திவரும், தனி மனிதர்களுடைய வாழ்வில் தலையீடு செய்யும் “காப் பஞ்சாயத்துகள்” (தமிழ்நாட்டில் கட்டப் பஞ்சாயத்துகள் என அறியப்படுகின்றன) தொடர்பாக சமீப காலங்களாக கேள்விப்படுகிறோம். எங்களது கருத்துப்படி, இது முழுவதுமாக சட்டப்புறம்பானதும், வேறோடு களைந்தெறியப்பட வேண்டியதுமாகும். மேலே சொல்லப்பட்ட லதா சிங் வழக்கில் கூறப்பட்டுள்ளது போல், கௌரவக் கொலைகளிலும் இதர வன்கொடுமைகளிலும் கௌரவமானதாக ஏதும் இல்லை. மேலும், அவை காட்டுமிராண்டித்தனமான மற்றும் அவமானமான கொலைகளேயன்றி வேறேதுமில்லை. சகமனிதர்களின் தனிமனித வாழ்வில் வன்கொடுமைகளை நிகழ்த்தும் முரட்டுத்தனமான, நிலபிரபுத்துவ சிந்தனைகளைக் கொண்ட நபர்கள், கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே காட்டுமிராண்டித்தனமான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளுடன்கூடிய மனநிலை உடையோரை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும். மேலும் தங்களது கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் இது போன்ற செயல்கள், முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான கட்டப் பஞ்சாயத்துகளுக்குச் சமமாகும்.

17. ஆகவே, இது போன்ற வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும்பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

18. இந்த வழக்கில், நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் போல மேல்முறையீட்டாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் கருணைக்கு தகுதியுடையோர்கள் அல்ல. ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு இந்த இரு மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

19. இந்த தீர்ப்பின் நகல், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மூத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்/மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்குக் குறையாத அனைத்து அதிகாரிகளுக்கும், இதனை கண்டிப்பான முறையில் முறையில் அமல்படுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படவேண்டும். மேலும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பரப்புரை செய்திட வேண்டி, அனைத்து பொது மற்றும் இதர உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் இதன் நகல் அனுப்பப்படும்.

தமிழாக்கம்: இராபர்ட் சந்திரகுமார் ( robertckumar@gmail.com) & சபிதா

Monday, December 12, 2011

சென்னை உயர்நீதிமன்றம் - 150 ஆண்டுகள்... மக்கள் கருத்து என்ன?

நீதியின் உயரம்
நேர்மையின் உறுதி
சென்னை உயர் நீதிமன்றம்


அறத்தின் கவசம்
அழியாத வெளிச்சம்
சென்னை உயர் நீதிமன்றம்


மேற்கே சூரியன் தோன்றி மறையலாம்
மேல்நோக்கி மழை பொழிந்து கழியலாம்
ஆனால் -
ஒரு நாளும் நீதி பிறழாது - சென்னை
உயர் நீதிமன்றம் வழுவாது


காசு பணங்கள் கடந்து நீதியைக்
காவல் புரிவது உயர் நீதிமன்றம்
கடவுள் நம்பிக்கை இல்லாத பேர்க்கும்
கடைசி நம்பிக்கை உயர் நீதிமன்றம்


ஆளவந்தாரை லட்சுமிகாந்தனை
ஆய்ந்து சொன்னது உயர் நீதிமன்றம்
ஆளவந்தோரின் நன்மை தீமையை
அறுதி செய்வதும் உயர் நீதிமன்றம்


உண்மைகள் கூடி சத்தியம் கட்டிய
உறுதிகொண்டது உயர் நீதிமன்றம்
உலகப் போரில் குண்டு விழுந்தும்
உடைந்து போகாத உயர் நீதிமன்றம்


ஆண்டவர் ஆள்வோர் யார் சொன்னாலும்
அசைந்து கொடுக்காத உயர் நீதிமன்றம்
அறங்களாலே சமூகம் காக்கும்
அரண்கள் அமைக்கும் உயர் நீதிமன்றம்!

-கவிப்பேரரசு(!) வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றம் குறித்து எழுதிய கவிதை இது.


தமிழ்நாட்டின் நீதி நிர்வாகம் குறித்து நீதிபதிகள் மட்டுமே பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய பொதுமக்களிடம் பத்திரிகைகள் உட்பட யாரும் கருத்து கேட்டதாக தெரியவில்லை.

பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நீதிமன்றங்களை விமர்சிக்கும் உரிமை வரி செலுத்தும் பொதுமக்களுக்கே உண்டு. (இந்தியாவில் நேர்முக வரியை விட மறைமுக வரியே அதிகம் வசூலாகிறது. இந்த மறைமுக வரியை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களே அதிகம் செலுத்துகின்றனர்) சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து, அதன் அதிகார வரம்புக்குள் இயங்கும் தமிழ்நாட்டின் ஏனைய அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் டிரிப்யூனல் அமைப்புகளை குடிமக்கள் மதிப்பிட வேண்டும்.

அதற்கான களம் இது...  உங்கள் நண்பர்களிடமும் அறிமுகப்படுத்துங்கள்.

Friday, December 9, 2011

மனித உரிமைகள் - ஒரு அறிமுகம்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.

1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் "அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்" அறிமுகம் செய்யப்பட்டது.  உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.

இந்த மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் உள்ளன.


1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.

4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.

5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை

7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.

8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.

9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை

11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.

16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

21. அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை

23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.

அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.

தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.



ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் இணைய தளத்தில் இந்த பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது. 


இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.


எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.

மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும்.