Sunday, July 31, 2016

தமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்

தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துகளை பதிவு செய்கிறார். 



தற்சமயம் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, ஆர்.கே.ஆனந்தின் தீர்ப்பின் வெளிச்சத்தில் பரிசீலிப்போம். உயர் பதவிகளில் உள்ளவர்களும், இருந்தவர்களும், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்களும் கடும் குற்றம் புரிந்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; இது என் கருத்து. ஆனால், செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்கள் தண்டிக்கப்படுகின்றனரா? : சாட்சியை விலை கொடுத்து வாங்கிய ஆர்.கே.ஆனந்த் கடந்த, 1999 ஜன., 1ம் தேதி, டில்லியில் பெரும் செல்வந்தரின் மகன் சஞ்சீவ் நந்தா என்பவர், பி.எம்.டபிள்யூ., காரை கவனக்குறைவாகவும், அதி வேகமாகவும் ஓட்டி விபத்தை நிகழ்த்தினார். அதில், ஆறு பேர் உயிர் இழந்தனர்; ஆறு பேரில், மூவர் காவல்துறையினர். விபத்தை நிகழ்த்திய பின் நிற்காமல் சென்றுவிட்டார். அவர் காரை ஓட்டியபோது, மதுவும் அருந்தி இருந்தார் என்பது காவல்துறையின் வழக்கு. குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. குற்றவியல் நீதிமன்றத்தில், சஞ்சீவ் நந்தாவின் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த்; அரசு தரப்பு வழக்கறிஞர் ஐ.யு.கான். இந்த நிலையில், வழக்கின் நேரடி சாட்சியான சுனில் குல்கர்னியுடன் மேற்சொன்ன ஆர்.கே.ஆனந்த் மற்றும் ஐ.யு.கான் சந்தித்து, சாட்சியை பெரும் தொகை கொடுத்து வாங்குவது என்ற நிகழ்ச்சியை, 'என்டிடிவி' சேனல், 2007 மே, 30ம் தேதி ஒளிபரப்பியது. இது டில்லியில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. அந்த சேனல் இப்படி ஒரு முறைகேட்டை ஒளிபரப்பாமல் இருந்திருந்தால், இது வெளி உலகத்தின் மற்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கே வந்திருக்காது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : இந்த நிலையில், டில்லி உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் மற்றும், இருவர் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. உயர் நீதிமன்றத்தின், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. இதை எதிர் கொண்ட ஆர்.கே.ஆனந்த், பல இடைக்கால மனுக்களை தாக்கல் செய்தார்; அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த விபரங்களுக்குள் நான் செல்லவில்லை.

அவர் எழுப்பிய, ஒரு முதல் நிலை எழு வினா பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவர், 'என்டிடிவி -தான் குற்றவியல் விசாரணையில் தலையிடும் வகையில் ஒளிபரப்பு செய்தது; எனவே, அதன் மீது தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்' என்று ஆட்சேபனையை எழுப்பினார்; அந்த ஆட்சேபனையை நீதிமன்றம் நிராகரித்தது.

ஆர்.கே.ஆனந்திற்கு வழங்கப்பட்ட தண்டனை : அவர் சாட்சியை விலை பேசிய தன் மூலம், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட்டு நீதிமன்ற மாட்சிமையை குலைத்து அவமதிப்பு செய்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதாக, 2008 ஆக., 21ல், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது; அவருக்கு கீழ்கண்ட தண்டனைகளை விதித்தது.

1) டில்லி உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும், நான்கு மாதங்களுக்கு அவர் வழக்கறிஞர் தொழில் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அவர் மற்ற வழக்கறிஞர் வேலைகளை, - ஆலோசனை, அறிவுரை, விளக்கவுரை, கருத்துகளாகச் செய்யலாம்.
2) மூத்த வழக்கறிஞர் பதவி பறிக்கப்பட்டது.
3) 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் ஆர்.கே. ஆனந்தின் மேல்முறையீடு : இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை, 2009 ஜூலை, 29ல் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்று கூறி, 'அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது?' என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அறிவிப்பு அனுப்பியது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்ய, 'அமீக்கஸ் க்யூரி'யாக, இரு வழக்கறிஞர்களை நியமித்தது. அவர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியம் மற்றும் நாகேஸ்வர ராவ். அதன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: உயர் நீதிமன்றத்தின், இருவர் அமர்வின் மூத்த நீதிபதி, தன் வழக்கை விசாரிக்கக்கூடாது என்றும், வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். அமர்வுக்கு தலைமை தாங்கிய அந்த நீதிபதியின் மேல் கடும் குற்றச்சாட்டுகளை கூறினார். அவரது மனு, நீதிபதியை மிரட்டுவதாக இருந்தது. அந்த மனு, தலைமை தாங்கிய மூத்த நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

நீதிபதியின் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், மற்றொரு நீதிபதி மனுவின் மீது எந்த உத்தரவும் போடவில்லை. ஆனால், அமர்வில் எந்த பங்கும் வகிக்க மறுத்து விட்டார். இதை பயன்படுத்தி, மேற்சொன்ன உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஆர்.கே.ஆனந்த் மனு போட்டார். தலைமை நீதிபதி, அமர்வின் இளைய நீதிபதியை மாற்றி மற்றொரு இளைய நீதிபதியை கொண்ட அமர்வை ஏற்படுத்தினார். 'பழைய அமர்வே மறுபரிசீலனை மனுவை விசாரிக்க வேண்டும்' என்று ஆர்.கே.ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
புதிய அமர்வு, மறுபரிசீலனை மனுவை, தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை, அமர்வின் சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைய நீதிபதி, உத்தரவு எழுதினார். அதற்குப்பின் அந்த வழக்கின் முக்கிய உத்தரவுகள் அனைத்தையும் இளைய நீதிபதியே எழுதினார்.

இறுதியில் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை 29ல் தள்ளுபடி செய்கையில், ஆர்.கே.ஆனந்திற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவு என்றும், அதிக தண்டனை ஏன் அளிக்கக்கூடாது என்பதற்கும், நான்கு மாதங்களுக்கும் மேலாக, நீண்ட காலத்திற்கு வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்க கோரியது.

ஆர்.கே.ஆனந்திற்கு அதிக தண்டனை அளிக்கப்பட்டதா? : கடந்த, 2010 ஜன., 13ல் அவர், உச்ச நீதிமன்றத்தில் அவரது விளக்கத்தை அளித்தார். அதில், அவர் மன்னிப்பு கோரியும், நடவடிக்கையை கைவிடுமாறும் கோரினார். அந்த விளக்கத்தை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அவர் செய்த தவறுக்கு அவர் வருந்தியதாக தெரியவில்லை என்றது. இதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியவுடன், 2011 மே 4ல், கூடுதல் ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றம், 2009 ஜூலை, 29ல் தீர்ப்பில் கூறிய அனைத்தையும் ஒப்புக்கொள்வதாகவும், முந்தைய விளக்கத்தில் கூறிய ஆட்சேபகரமான பகுதியை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.

பின், 2012 செப்., 24ல் மேலும், ஒரு ஆணை உறுதியுரை தாக்கல் செய்தார். அதில், அவர் இந்திய பார் கவுன்சிலுக்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை அளிக்க ஒப்புக் கொள்வதாகவும், ஒரு ஆண்டுக்கு டில்லி இலவச சட்ட மையத்தில் ஏழைகளுக்காக வழக்கு நடத்த ஒப்புக் கொள்வதாகவும், 'இந்த ஓராண்டில், வழக்கறிஞர் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டேன்' என்றும் கூறி இருந்தார். அவர் செய்த கடும் குற்றத்திற்கு சிறை தண்டனை தான் சரியாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை பதிவு செய்தாலும், அதிக தண்டனை வழங்கவில்லை.

அவருக்கு, 69 வயது ஆவதாக வும், அவர், 2007 முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வருவதாகவும், அவரது மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாகவும், 21 லட்சம் ரூபாய் பார் கவுன்சிலுக்கு நன்கொடை அளிப்பதையும், ஓர் ஆண்டு இலவச சட்ட உதவி மைய வழக்குகளை நடத்த ஒப்புக் கொள்வதையும் அதிக தண்டனை வழங்காத தற்கு காரணங்களாக அடுக்கியது. இறுதியில், 2012 நவ., 2012ல் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு கூறியது.

ஆர்.கே.ஆனந்திற்கு, 21 லட்சம் ரூபாய் நன்கொடை என்பது, ஒரு பொருட்டே அல்ல. அவர், 21 கோடி ரூபாய் கொடுத்தால் சிறை தண்டனையில் இருந்து விடுபடலாம் என்றால், அதையும் கொடுக்கும் வசதி படைத்தவர். ஆனால், சாதாரண வழக்கறிஞர்கள் என்ன செய்வது? இப்படி, ஒரு பெரும் தொகையை நன்கொடையாக கொடுத்து, தண்டனையில் இருந்து சுலபமாக தப்பிக்க இயலுமா? விசாரணைக்குப் பின் தண்டனை என்பதற்கு மாறாக, விசாரணையை நிலுவையில் வைத்தே பல மாதங்கள் தமிழக வழக்கறிஞர்களை தொழிலில் இருந்து நீக்கம் செய்யலாமா? ஆறு மாதங்களுக்கும் மேலாக, ஒன்பது மாதங்கள் வரையில் கூட வழக்கறிஞர் தொழிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தமிழக வழக்கறிஞர்கள் செய்த தவறுகள், ஆர்.கே.ஆனந்த் செய்த தவறுகளை விட கூடுதலானதா? ஆர்.கே.ஆனந்த் வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சட்டப் பிரிவு - 34ன் கீழ் விதி ஏதும் செய்யவில்லை. எனவே, ஆர்.கே.ஆனந்த் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனையாக, 'சஸ்பென்ஷன்' அல்லது வழக்கறிஞர் பதிவில் இருந்து நீக்கம் என்ற தண்டனையை அளிக்க முடியாது என்று வாதிடப்பட்டது.

அந்த வாதத்தை, உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் உதவி செய்ய நியமித்த, இரு மூத்த வழக்கறிஞர்களும் ஆதரித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் இதற்கு முன் வழங்கிய தீர்ப்பில், 'சஸ்பென்ஷன் மற்றும் பதிவில் இருந்து நீக்கம் என்பதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனையாக அளிக்க முடியாது' என்று கூறி இருப்பதை, தீர்ப்பின் பத்தி - 138ல், கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளது. இந்த சூழலில், உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்களையும் வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை உண்டாக்கச் சொன்னது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழக்கறிஞர் சட்டம் பிரிவு - 34ன் கீழ் விதிகளை வகுத்துள்ளது. அதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் நபரை, அவர் நீதிமன்றத்தில் வழக்காடுவதில் இருந்து விலக்கி வைக்க வகை செய்துள்ளது. எனவே, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய புதிய விதிகள் தேவையற்றவை. இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை உண்டாக்குவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கைத் தான் சுட்டிக் காட்டுகிறது. ஏற்கனவே உரிய விதிகள் இருப்பதால் இந்த புதிய சர்ச்சைக்குரிய விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது என் கருத்து. பார் கவுன்சிலும், ஒழுங்கு நடவடிக்கையை ஒட்டி நடைபெறும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, சஸ்பென்ஷனோ அல்லது பதிவு நீக்கமோ செய்யலாமே ஒழிய, விசாரணை நிலுவையில் இருக்கும்போது செய்ய முடியாது.

இதை, இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மன்னன் குமார் மிஸ்ராவே, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆணை உறுதி உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், நான் ஓய்வு பெற்றபோது ஆற்றிய உரையில், 'பார் கவுன்சில் சஸ்பென்ஷனை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்' என்றேன்.

மேலும், ஆர்.கே.ஆனந்த் வழக்கில், உச்ச நீதிமன்றம், 'நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, பார்கவுன்சில் சஸ்பென்ஷன் செய்ய இயலும்' என்றது. இத்தீர்ப்பின் பத்தி - 138ல் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், பத்தி - 136ல், நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் (இப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி) வாதத்தை உச்ச நீதிமன்றம் கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளது.எனவே, பார் கவுன்சிலுக்கு விசாரணையை நிலுவையில் வைத்து சஸ்பென்ஷன் செய்யும் அதிகாரம் இல்லை. 'பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வன்முறை செய்த வழக்கறிஞர்களை விசாரணை இல்லாமல் சஸ்பென்ஷன் செய்ய மாட்டேன்' என்று கூறும் மன்னன் குமார் மிஸ்ரா, தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மேல் மட்டும் சீறி பாய்வதேன்? சமீபத்தில், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும், கோல்கட்டாவிலும் வழக்கறிஞர்கள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்திய போது, அவர் இன்று வரை மவுனமாக இருப்பது ஏன்; தமிழகத்தில் மட்டும் வேறுபட்ட நிலைப்பாட்டை அவர் கொள்வதற்கு காரணம் என்ன?

கடுமையான குற்றம் இழைத்த, ஆர்.கே.ஆனந்திற்கு சிறை தண்டனை இல்லை. அவர் மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்தார். ஆனால் தமிழகத்தில் வழக்கறிஞர்கள் நிலை என்ன? உயர் நீதிமன்றத்தின், முதலாவது அமர்வு முன், தமிழில் வாதாட வகை செய்ய வேண்டும் என்று அமைதியான முறையில் பதாகையை துாக்கிப் பிடித்தாலும், நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடுவதாக தான் கொள்ள வேண்டும். ஆனால், அந்த அமர்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏதும் தொடரவில்லை. ஆனால் அவர்கள், ஒரு மாதம் சிறையில் இருந்தனர். அவர்களை, ஏழு மாதம் சஸ்பென்ஷனில் வைத்தது பார் கவுன்சில்; அதையே தண்டனையாகவும் அளித்தது. அதேபோல, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்த நீதிமன்றத்தில் விசாரணையை பார்க்க செல்ல அனுமதிக்க வேண்டும் என்றதற்காக, பல வழக்கறிஞர்களை பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்தது. அவர்களில் சிலரின் சஸ்பென்ஷன், ஒன்பது மாதங்களுக்கு மேலாகி யும், இன்னும் தொடர்கிறது. சி.ஐ.எஸ்.எப்., சம்பந்தப்பட்ட வழக்கிலும், பல வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலால் விசாரணை இன்றி, பல மாதங்கள் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த இறுதி பகுதியை வெளியிடும் நேரத்தில், 105 தமிழக வழக்கறிஞர் தலைவர்களை, இந்திய பார் கவுன்சில் சஸ்பென்ஷன் செய்துள்ளதாக, ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதை, மன்னன் குமார் மிஸ்ரா உறுதி செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது. மன்னன் குமார் மிஸ்ரா தமிழக வழக்கறிஞர்களை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏனோ? இதற்கு பின்புலமாக யார் இருக்கின்றனர் என்பதை தமிழக வழக்கறிஞர்கள் அறிவர்.

உயர் நீதிமன்றம் புதிய விதிகளை உடனே திரும்ப பெறவேண்டும்; பார் கவுன்சில் அனைத்து சஸ்பென்ஷன்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும். இதுவே நிரந்தர அமைதிக்கான தீர்வாக இருக்கும்.

வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் யார்? 

உச்சநீதிமன்றம், ஆர்.கே.ஆனந்த் வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி, இன்று தமிழகத்தில் வழக்கறிஞர் மத்தியில் பேசப்படுகிறது. எனவே, அத்தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பது அவசியம்; காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் வழக்கறிஞர்களின் தற்காலிக பணி நீக்கத்தையும், உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள புதிய விதிகளையும், அத்தீர்ப்பின் அடிப்படையில் பரிசீலிக்கலாம். மேற்சொன்ன தீர்ப்பைப் பற்றி பரிசீலிப்பதற்கு முன், யார் இந்த ஆர்.கே.ஆனந்த் என்ற சிறு விபரத்தை தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும்.

ஆர்.கே.ஆனந்த், டில்லியில் மிக பிரபலமான மூத்த வழக்கறிஞர். மூன்று, இந்திய பிரதமர்கள் அவருக்கு கட்சிக்காரர்கள். அவர்களின் வழக்குகளை நடத்தி வெற்றி பெற்றவர்.

இந்திரா, பிரதமராக இருந்த போது, அவரது மகன் சஞ்சய், 1980-ல், விமான விபத்தில் இறந்தார். அவர் மனைவி மேனகா, நீதிமன்றம் மூலமாக, சஞ்சயின் உயிலின் அடிப்படையில் சொத்து உரிமை கோரினார். அதை எதிர்த்து, இந்திராவுக்காக, டில்லி உயர்நீதிமன்றம் வரை வெற்றிகரமாக வழக்காடியவர் வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த். இந்திராவுக்கு உயில் எழுதிய வழக்கறிஞரும் அவரே. இந்திரா, 1984ல் பிரதமராக இருந்தபோது கொல்லப்பட்டார்; ராஜிவ் பிரதமர் ஆனார். அந்த உயிலின் அடிப்படையில் ராஜிவுக்காக வழக்கு நடத்தியவரும் ஆர்.கே.ஆனந்த் தான்.

அடுத்து, முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், மூன்று ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டபோது, அவருக்கு விசாரணை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு நடத்தி வெற்றி பெற்று தந்தவரும், ஆர்.கே.ஆனந்த் தான். இந்திரா கொல்லப்பட்டதை அடுத்து, சீக்கியர்கள் மேல் நடந்த வன்முறை தாக்குதல் பற்றி அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா விசாரணை கமிஷன் முன், மத்திய அரசுக்காக ஆஜரான வழக்கறிஞரும் இவரே. மேற்சொன்ன விபரங்கள், ஆர்.கே.ஆனந்த் பிரபல மூத்த வழக்கறிஞராக இருந்தவர் என்பதை தெளிவாக்கும்.

பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் தலைவர் மேலும், அவர் டில்லி பார் கவுன்சில் உறுப்பினராக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். இருமுறை, அதன் தலைவராகவும் இருந்தார்.

அரசியல் செல்வாக்கு அவர் மிகுந்த அரசியல் செல்வாக்கும் உடையவர். 2000 மார்ச் மாதம், ராஜ்யசபாவிற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தேர்ந்துஎடுக்கப்பட்டார்.

கடந்த 2004-, லோக்சபா தேர்தலில், டில்லி தெற்கு தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட்டு தோற்றார். மீண்டும், 2014- தேர்தலில் பாரிதாபாத் லோக்சபா தொகுதியில், இந்திய தேசிய லோக்தளத்தின் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். கடந்த ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலிலும் காங்., ஆதரவுடன் அரியானா மாநிலத்தில் போட்டியிட்டார். காங்., கலக சட்டசபை உறுப்பினர்கள், அவருக்கு ஓட்டு போடாததால் தோற்றுப் போனார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து, ஆர்.கே.ஆனந்த் பேரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. அவர் அதை மறுத்து வழக்காடினார். அவர் கடுமையான குற்றம் புரிந்தார் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தது; அவருக்கு தண்டனையும் அளித்தது. அதை எதிர்த்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறைவானது என்றும், அதிக தண்டனையை ஏன் வழங்கக்கூடாது என்று காரணம் காட்டுமாறு அறிவிப்பு அளித்தது. ஆனால், அதிக தண்டனை அளிக்கப்படவில்லை.அவர் செய்த கடும் குற்றம் என்ன, அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன, உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்த தீர்ப்பு என்ன, அவர் அவமதிப்பு வழக்கிலும், மேல்முறையீட்டு வழக்கிலும் நடந்துகொண்ட முறை என்ன போன்ற விபரங்களை பிரதான செய்தியில் படிக்கவும்.


அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற நீதிபதி
இ - மெயில்: hariparanthaman@gmail.com

தினமலர் நாளிதழில் 27-07-2016 அன்று வெளியான கட்டுரை

Sunday, July 24, 2016

"ஓங்கி ஒலித்த சமூக நீதிக்கான குரல்"

"நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால், பகவத்கீதையையும், மகாபாரதத்தையும்  முதலாம் வகுப்பு பாடத்தில் சேர்த்து விடுவேன்" என்று கடந்த 2015 ஜனவரி மாதம், குஜராத்தில் நடந்த உலகளாவிய கருத்தரங்கில் பேசினார் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி அணில் ஆர். தவே. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படையில் இயங்கிகொண்டிருக்கும் நாட்டில் அது சாத்தியமல்ல என்று தைரியமாகப் பேசிய ஒரே நீதிபதி ஹரி பரந்தாமன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு அல்ல என்பது நீதித்துறையோடு பரிச்சயம் உள்ளவர்களுக்கு எளிதில் விளங்கும்.

நீதிபதி ஹரி பரந்தாமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்து கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, சமூக நீதி சார்ந்த அவரது பல்வேறு தீர்ப்புகளில், எட்டு தீர்ப்புகளை மட்டும் தொகுத்து, "People's Judge D.Hariparanthaman's Judgments on Social Justice" என்ற புத்தகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ளது மதுரையிலுள்ள சோகோ அறக்கட்டளை.


சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்து வழங்கியவைகளில் ஐந்தும், மதுரை கிளையில் வைத்து  வழங்கியவைகளில் மூன்று தீர்ப்புகளும், அவர் நீதிபதியாக பொறுப்பேற்கும் போதும்,  பணி ஓய்வின்போதும் ஆற்றிய உரைகளும் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எட்டு தீர்ப்புகளும் எட்டு விதமானவை. அவைகளுக்குள் இருக்கும் ஒரே தொடர்பு அவைகள் அனைத்தும் சமூக நீதி  அடிப்படையில் வழங்கப்பட்டவை என்பது மட்டுமே.

பிற்படுத்தப்பட்ட நாடார் சாதியைச் சேர்ந்த விசாலாட்சி இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார். தனது பெயரை ஆரிஃபா என மாற்றிக்கொள்கிறார். அதன்பிறகு அரசு பணிக்கு விண்ணப்பிக்கிறார். மதம் மாறிவிட்டதால் அவர் முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக கருதப்படுவார் என்று அதிகாரிகள் கூறியதால், அவருக்கு பணியில் சேர வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அது தொடர்பான வழக்கில், பிற்படுத்தப்பட்ட ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகும் அவர் பிற்படுத்தப்பட்டவராகவே தொடர்வார் என்று தீர்ப்பளிக்கிறார்.

மாட்டுக்கறிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம். டாக்டர் அம்பேத்கர் அவர்களது 125வது பிறந்த நாளை மையப்படுத்தி, சென்னை பெரியார் திடலில், 2015 ஏப்ரல் மாதம் 14ம் நாளில், திராவிடர் கழகம், "தானாக மனமுவந்து தாலியை அகற்றும் விழா" நடத்தத் திட்டமிட்டு, அதனைத்தொடர்ந்து மாட்டுக்கறி விருந்தும் ஏற்பாடு செய்தது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இவ்வழக்கில், முன்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை சுட்டிக் காட்டி, தனியார் இடத்தில் நடத்தப்படும் நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுக்க முடியாது என்று தீர்ப்பளிக்கிறார்.

ஓய்வூதியம் வழங்கிட, 01.04.2003க்கு முன்பு தினக்கூலியாக பணியாற்றிய காலத்தில் பாதியை, பணிநிரந்தரம் செய்யப்பட்ட காலத்துடன் சேர்த்து கணக்கிட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42 விழுக்காடு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதால் பட்டியலின மாணவர் மாறன் என்பவருக்கு சென்னை, திருவிதாங்கூர்  வங்கியால் கல்விக் கடன் உதவித்தொகை மறுக்கப்படுகிறது. குறைந்தபட்ச மதிப்பெண் குறித்து எங்கும் சொல்லப்படவில்லை. ஆகவே, தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என்று கூறி அவருக்கு கல்விக் கடன் உதவி வழங்கிட உத்தரவிடுகிறார்.

க்ளோரிபாய் என்பவர், சாலை விபத்தில் இறந்து போன தனது திருமணமான மகளை இழந்தமைக்காக  இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கில், திருமணம் செய்து கொடுத்த பிறகும் ஒரு பெண்ணின் பெற்றோர் அவரது இறப்புக்காக இழப்பீடு பெற முடியும் என்று உத்தரவு இட்டுள்ளார்.

திருமணமான கோவிந்தம்மாள் தனது தந்தையின் மறைவிற்கு பிறகு, கருணை அடிப்படையில் பணி கோருகிறார். திருமணம் ஆகிவிட்டது என்று கூறி அவருக்கு பணி மறுக்கப்படுகிறது. திருமணமான பெண்ணும் கருணை அடிப்படையில் பணி கோரலாம் என்றும் அதற்குத் தடையாக இருந்த அரசாணையில் மாற்றம் கொண்டுவரவும் தீர்ப்பிட்டுள்ளார்.

தான் பணிபுரியும் பாரத ஸ்டேட் வங்கியில் டாக்டர் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதால் பணிநீக்கம் செய்யப்படுகிறார் கடைநிலை ஊழியரான கௌரிசங்கர். அவரது பணிநீக்க உத்தரவினை ரத்து செய்து இரு நீதிபதிகள் அடங்கிய ஆயத்தில் உத்தரவிடுகிறார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த சுதா என்பவது சகோதரர் முத்துகுமார் பட்டியலினம் சாராத நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அது தொடர்பான வழக்கில், பட்டியலின மக்களை, பட்டியலினம் சாராதவர்கள் கொலை செய்யும் பட்சத்தில், சட்டத்தில்  வரையறுத்துள்ள படி பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என தீர்ப்பிட்டுள்ளார்.

இதுபோன்று அரசியலமைப்பு சாசனத்தின் படியான சிறுபான்மையினர் உரிமை, பெண்ணுரிமை, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமையை தொடர்ந்து உறுதிபடுத்தியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் அவர்களை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனது தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி, அவரது கருத்துகளை பரவலாக்க வழிவகுத்துள்ளார்..

பொதுவாக அவ்வப்போது வெளிவரும் சிறுகதை, கவிதை, கட்டுரை, பின்னர் தொகுக்கப்பட்டு ஒரு தொகுப்பாக வெளிவரும் போது அது புதிய உணர்வுகளை தரும். அப்போது அதன் மொத்த பரிணாமத்தையும் ஒருசேர உணர முடியும்.  நான் வழக்குரைஞராக இருப்பதால் இதில் இடம்பெற்றுள்ள தீர்ப்புகளை முன்னரே அறிந்திருந்த போதிலும், இப்படி மொத்தமாக ஒரே தொகுப்பாக பார்க்கும் போது இந்த தீர்ப்புகளின் வீச்சு அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.

விதிவிலக்கான சூழல்கள் தவிர்த்து, பொதுவாக மனுதாரர்களுக்காக வழக்குரைஞர்கள் தாக்கல் செய்து தன் முன்பாக வரும் வழக்குகளை மட்டுமே ஒரு நீதிபதி விசாரித்து அது குறித்து தீர்ப்பு கூற முடியும். வழக்கறிஞர்களுக்கு, தாங்கள் முன்னெடுக்கும் வழக்குகளைத் தேர்வு செய்வதில் உள்ள வாய்ப்பு, அவ்வளவாக நீதிபதிகளுக்கு இருப்பதில்லை. இருப்பினும், தன் முன் வந்த வழக்கின் பிரமாண பத்திரத்திற்குள் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், தன்னளவில் விரிவாக விவரித்து தீர்ப்பிட்டுள்ளார். அவைகள் அனைத்தும் சமூக நீதி பார்வையில் அமைந்துள்ளது என்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பான கருத்துகளை வெளிப்படுத்திய அணில் ஆர் தவே மற்றும் இட ஒதுக்கீட்டை ஊழலுக்கு இணையாக ஒப்பிட்ட நீதிபதிகள் இருக்கும் இதே நாட்டில் தான், இவரால் இப்படிப்பட்ட தீர்ப்புகளை தைரியமாக தர முடிகிறது.

மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்து, ஆசிரியர் ஆவதை விருப்பமாகக் கொண்டு பின்பு நண்பர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞராகி, அதன் பின்பு உயர் நீதிமன்ற நீதிபதியானதை தனது பதவி ஏற்ப்பு நிகழ்வின்போது பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார். பணி ஓய்வு பெறும்போது, அநியாயமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்களுக்காக குரல் கொடுத்துள்ளார். இப்படியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஓங்கி ஒலித்துள்ளது இவரது குரல்.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு வேட்டி கட்டிச் சென்று, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேட்டி கட்டி செல்லலாம் என  சட்டம் வருவதற்குக் காரணமாக இருந்தவர்.  உயர் நீதித்துறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் என வெளிப்படையாக பல்வேறு கருத்தரங்குகளில், நீதிபதியாக பொறுப்பில் இருக்கும் பொழுதே, பேசி வந்தவர். காந்தி பிறந்த நாளில், கோட்சேவிற்கு சிலை அமைக்க வேண்டுமென்ற இந்து மகா சபையின் கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர். மதுவிலக்கிற்கு ஆதரவாகவும், மாட்டுகறி உண்பதற்கான தடைக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். இப்படியாக, தீர்ப்புகளில் மட்டுமல்லாது தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது வாழ்விலும் வாழ்ந்து காட்டுகிறார்.

இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தீர்ப்பிற்கும் முன்பாக,  தமிழில் சிறிய முன்னுரை வழங்கியதை, முழுமையாக்கி முழுவதுமாகவோ அல்லது தீர்ப்புகளின் சாராம்சத்தை மட்டுமாகவோ தொகுத்து தமிழில் வெளியிட்டிருந்தால் ஆங்கில மொழியில் புலமை இல்லாத சாமானியர்களையும் இந்த தீர்ப்புகள் சென்றடைய வாய்ப்பு கிட்டியிருக்கும்.  


வெளியீடு: 
சோகோ அறக்கட்டளை, 143, 
ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், 
மதுரை-  625020.
தொடர்புக்கு: 0452- 2580636

விலை: ரூ. 250.00  சலுகை விலை: ரூ. 125.00 மட்டுமே
-இராபர்ட் சந்திர குமார். 

Thursday, April 30, 2015

குஜராத்தில் டாடா முந்த்ரா மின் உற்பத்தி நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு – இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு.

இந்தியாவிலுள்ள டாடா நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டம் முந்த்ரா துறைமுகப் பகுதியில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. டாடா முந்த்ரா திட்டம் என்று அழைக்கப்படும் கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (Coastal Gujarath Power Limited) என்ற இந்த நிறுவனத்திற்கு  உலக வங்கியின் மற்றொரு அமைப்பான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (Internatinal Finance Corporatin) 450 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) கடனாக வழங்கியுள்ளது.

உலக வங்கி பல்வேறு அரசு அமைப்புகளுக்கு கடன் கொடுப்பது அனைவரும் அறிந்ததே. உலக வங்கியின் மற்றொரு முகமான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வளரும் நாடுகளில் உள்ள தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது.

1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் தற்போது 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தனியார் பெருந்தொழில் கழகங்களுக்கு கடனுதவி அளிப்பதன்மூலமாக 2030ம் ஆண்டில் உலகில் வறுமையை ஒழிக்க இந்த இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உறுதி பூண்டுள்ளதாக தெரிகிறது. மேலும் சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதில்லை என்பது இந்த நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.

இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் கடன் பெற்றுள்ள டாடா முந்த்ரா திட்டம் தொடங்கப்பட்டுள்ள நாவினல் கிராம பஞ்சாயத்தில் சுமார் 800 வீடுகள் உள்ளன. சுமார் 3000 பேர் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்த்தல், மீன் பிடிப்பு, உப்பு சேகரித்தல் ஆகியவை இப்பகுதி மக்களின் தொழில்களாகும்.

கடந்த 2012ம் ஆண்டில் உற்பத்தியை துவக்கியபோதே கணிசமானோர் அவர்கள் காலம்காலமாக வசிக்கும் பகுதிகளிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டனர். தற்போது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் அப்பகுதியின் சுற்றுச்சூழலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர்.

இந்த மின் உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 12-13 மில்லியன் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இந்த நிலக்கரி இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கிட்டங்கிகளில் சேகரிக்கப்பட்டு பின் மின் உற்பத்தி மையத்திற்கு கன்வேயர் பெல்ட்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு நிலக்கரியை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சரியாக மூடப்படாத கன்வேயர் பெல்ட்கள் மூலம் கொண்டுவருவதாலும், மின் உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரியின் சாம்பலாலும் காற்று, நிலம், நீர் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீடுகள், விளை நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கரித்துகள்களும், சாம்பல் துகள்களும் நிரம்பி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி வாழ் மக்களின் முக்கிய தொழில்களான விவசாயமும், மீன்பிடிப்பும் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். மேலும் அப்பகுதி வாழ் மக்கள் ஆஸ்துமா, தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. அண்மைக் காலமாக இறப்பு வீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மின் உற்பத்தி மையத்தில் குளிர்விப்பானாக பயன்படும் கடல்நீரை, அவ்வாறு பயன்படுத்தியபின்னர் ஒரு விநாடிக்கு சுமார் 6175 கன அடி நீரை கொதிநிலையில் கடலில் கலக்கும்போது கடலில் வசிக்கும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இதனாலும் அப்பகுதி மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் கடல்நீர் நாவினல் கிராமத்தின் நிலத்தடி நீர்வளத்தை அழித்துவிட்டதாகவும், தற்போது குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பது இந்த மின் திட்டம் அமைவதற்கு முன்பே டாடா நிறுவனத்திற்கும், இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை வழங்கிய அனைத்து அரசுத்துறைகளுக்கும் நன்கு தெரியும். அதேபோல இந்த திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கும் இந்தப் பிரசினைகள் நன்கு தெரியும். கடந்த 2007ம் ஆண்டுமுதலே நிதிநிறுவனத்தின் அதிகாரிகள் இந்தப்பகுதியில் பலமுறை ஆய்வு செய்து சமூகப்பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிக்கை அளித்துள்ளனர்.

டாடா முந்த்ரா அனல் மின் திட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உரிய முறையில் கையாண்டு அப்பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காமல் பாதுகாப்பு அளிப்பதாக டாடா நிறுவனம் உறுதி அளித்ததன் பேரில்தான் இந்த கடன் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் டாடா நிறுவனம் மேற்கொள்ளவில்லை. கடன் வழங்கிய இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இதை கண்டுகொள்ளவில்லை.

மேலும் இந்தோனேஷியாவிலிருந்து மிகக்குறைவான சாம்பலை வெளியிடும் உயர்தர நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் மலிவான விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்று டாடா நிறுவனம் கூறி வந்தது. ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரிக்கான விலையை இந்தோனேஷியா அரசு அதிகரித்துள்ளது. எனவே அதிகளவில் சாம்பலை வெளியிடும் தரக்குறைவான நிலக்கரியை டாடா நிறுவனம் பயன்படுத்துகிறது.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் (Earth Rights International) என்ற சுற்றுச்சூழல் அமைப்பு இப்பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதுமையான சட்ட முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியின் உள்ளாட்சி நிர்வாகமான நவினல் பஞ்சாயத்து மற்றும் மீனவர்கள் தொழிற்சங்கமான மச்சிமார் அதிகார் சங்கார்ஷ் சங்காதன் ஆகியவற்றின் உதவியுடன் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சார்பாக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள்தான் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.



இந்த நிதிநிறுவனம் கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளை முறையாக பின்பற்றி இருந்தால், முந்த்ரா பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இந்த திட்டத்திற்கு கடன் அளித்ததன் மூலம் இத்திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு, அறிவுரை கூறுவதற்கு, அந்த அறிவுரைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு நிதி நிறுவனத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களை நிதிநிறுவனம் உரியமுறையில் பயன்படுத்தி இருந்தால் அப்பகுதி மக்களுக்கு இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே நெறிமுறைகளை உரியமுறையில் கடைபிடிக்காமல் டாடா நிறுவனத்திற்கு கடனுதவி வழங்கியதன் மூலம் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்த இன்டர்நேஷனல் ஃபைனானஸ் கார்ப்பரேஷன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 75,000 அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. இத்துடன் இப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கான மருத்துவ உதவிக்கான செலவுத்தொகையை இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஏற்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. மேலும் டாடா முந்த்ரா மின் உற்பத்தி நிலையம் தொடர்ந்து இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. 

உலக வங்கியும், அதன் சார்பு நிறுவனங்களும் அதன் மீது வழக்கு தொடர முடியாவண்ணம் தற்காப்பு ஏற்பாடுகளுடனே வழக்கமாக செயல்படும். ஆனால் இந்த வழக்கு நியாயமான காரணங்களுக்காக, முறையாக தொடுக்கப்பட்டுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த வழக்கு காரணமாக சர்வதேச நிதி நிறுவனங்கள் இனி புதிய கடன்களை வழங்கும்போது பொறுப்புணர்ந்து செயல்படும் வாய்ப்பிருப்பதாகவும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும்விட சுற்றுச்சூழல் சட்டவியலில் சீரழிப்பவரே சீரமைக்க வேண்டும் (Polluter Pays Principle) என்ற கோட்பாட்டில் இந்த வழக்கு புதியதோர் பரிணாமத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும் சுற்றுச்சூழல் சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் நமக்கு இந்திய சுற்றுச்சூழல் சட்டவியலும், இந்திய நீதிமன்றங்களும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு அளிக்க தகுதி அற்ற நிலையில் மிகவும் பின்தங்கி இருக்கின்றன என்ற சுடும் உண்மையை சுட்டிக்காட்டும் நிகழ்வாகவே இந்த வழக்கு தோன்றுகிறது.

பின் குறிப்பு: இந்த வழக்கு மனுவை படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பை சொடுக்கவும்

 -    பி. சுந்தரராஜன்
(E-Mail: gmail@LawyerSundar.com)

Sunday, October 5, 2014

உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமையுமா?

 “நீதிமன்ற பணியானது மருத்துவ பணிகளைப் போல அத்தியாவசிய பணியாகும். எனவே, மருத்துவமனைகளைப் போல நீதிமன்றமும் ஆண்டு முழுவதும், 365 நாட்களும் இயங்க வேண்டும்” என கடந்த மே மாதத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆ.எம். லோதா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், நீதிமன்றங்களில் வழக்குகள் தீர்க்கப்படாமல், பெருமளவில் தேங்கி கிடக்கிறது, எனவே, விடுமுறைகள் தொடர்பாக கருத்து கேட்டு, நாட்டின் அனைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர் குழுமங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக நீதித்துறையிலும், ஊடகங்களிலும் இது பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலத்தின் வழக்குரைஞர் குழுமங்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன், இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் கூறியுள்ளன. தலைமை நீதிபதியின் இந்த கருத்துக்கு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக தமிழ்நாட்டின் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டன. 

ஆண்டு முழுவதும் வேலை நாளாக அறிவித்தால் வழக்குகள் தேக்கம் ஏற்படாது என்றும், நீதிமன்ற விடுமுறைகள் மட்டுமே, வழக்குகள் தேக்கத்திற்கு காரணம் என்றும் கருதினால் அது ஒரு தவறான கருத்தாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு பல்வேறு அடிப்படையான காரணங்கள் உள்ளன. அதில் பிரதானமானது, இன்றளவிலும் உச்சநீதிமன்றத்தின் கிளைகள் அமைக்கப்படாததும், பல்வேறு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாததுமே ஆகும்.  

“இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று, இந்திய உச்சநீதிமன்றத்தை டில்லியிலோ, அல்லது வேறு பகுதியிலோ அல்லது பகுதிகளிலோ அவ்வப்போது அமைக்கலாம்” என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 130 கூறுகிறது.   
சுதந்திரமடைந்த போது  இந்திய மக்கள் தொகை சுமார் 30 கோடி. தற்போதைய மக்கள் தொகை 130 கோடி. எதிர்காலத்தில் மக்கள் தொகை மேலும் உயரும். கல்வி, அறிவியல் வளர்ச்சி உள்ளிட்டவைகளின் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து தங்களின் உரிமைகளை நிலைநாட்டிட நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாக தாக்கல் செய்யப்படும். அந்த சமயத்தில், வழக்கிடைதாரர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில்தான், நாட்டின் பல பகுதிகளில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைப்பது தொடர்பான இந்த பிரிவு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல் முறையீடு வழக்குகளில், வட மாநிலங்களான டில்லியிலிருந்து 12%,  பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து 8.9%,  உத்திரகாண்டிலிருந்து 7%,  இமாச்சல பிரதேசத்திலிருந்து 4.3%ம் தாக்கல் செய்யப்படுகிறது.. ஆனால் தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து 2.5%,  ஆந்திர பிரதேசத்திலிருந்து 2.8%,  தமிழ்நாட்டிலிருந்து 1.1%ம்  மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட்ட வேண்டும் என்பது வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்களின் நெடுநாளைய கோரிக்கையாகும்.

இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு 67 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், துவக்கத்தில் உருவாக்கியபடி, டில்லியில் மட்டுமே உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. நியாயமான தேவைகளும், தவிர்க்கவும், தட்டிக் கழிக்கவும் முடியா பல்வேறு காரணங்களும்   தொடர்ந்தாலும் டில்லி தவிர்த்து நாட்டின் வேறு எந்த பகுதியிலும் இன்று வரையிலும் இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படவில்லை.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலகிலுள்ள அனைத்தும் மக்களை தேடி வந்து கொண்டிருக்கிறது அல்லது மக்களுக்கு அருகாமையிலேயே கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விதிவிலக்காக, இங்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதிக்காக, குடிமக்கள் பல ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது. வழக்கு கட்டணம் மட்டுமின்றி, போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு, பயண காலம் என பெரும் பொருட்செலவை சந்திக்க வேண்டியதுள்ளது.  இதன் காரணமாக வழக்கிடைதாரருக்கு, தனது அடிப்படை உரிமையை நிலைநிறுத்த, மிகுந்த பொருட்செலவும், கால விரயமும் ஆகிறது.

இப்படியாக, பணம் மற்றும் பொருளாதார வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் எனும் மோசமான நிலைதான் இங்கு நிலவுகிறது. இதன் காரணமாகவே, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், தென் இந்தியாவிலிருந்து தாக்கல் செய்யபடும் வழக்குகளின் எண்ணிக்கையானது சொற்ப அளவாக உள்ளது. உச்சநீதிமன்ற கிளைகள் அமைக்கப்பட்டால் இந்த நிலையில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.

ஒவ்வொரு உயர்நீதிமன்றமும், தனது அதிகார வரம்பிற்குற்பட்ட பகுதிகளில்  தேவைகேற்ப ஒன்றோ அல்லது அதற்கு கூடுதலான கிளைகளையோ உருவாக்கிக் கொள்ளலாம் என இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் கூறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, மகராஷ்டிரம், கொல்கத்தா, கர்நாடகம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில், அங்கு எழுந்த தேவைகளின் காரணமாக உயர்நீதிமன்ற  கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளை சார்ந்த குடிமக்கள் அதற்கு முன்பாக நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பாக சந்தித்து வந்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் மத்தியில் அமைந்துள்ள 14 மாவட்டங்களுக்காக  கடந்த 2004ம் ஆண்டில், உருவாக்கப்பட்ட, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், தற்போது ஆண்டுக்கு சராசரியாக, நீதிப்பேராணை மனுக்கள் மட்டும் 20,000க்கும் அதிகமாக தாக்கல் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே உயர்நீதிமன்றம் இருந்தபோது, இந்த 14 மாவட்டங்களிலிருந்து இவ்வளவு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போது தாக்கல் செய்யப்படும் வழக்குகளைக் காட்டிலும் தற்போது அதிகமாக தாக்கல் செய்யப்பட்டாலும் சராசரியாக இவ்வளவு வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் மதுரை கிளை வந்த பிறகு, வழக்கிடைதாரர்களுக்கு, போக்குவரத்து செலவு, பயண நேரம் போன்றவை வெகுவாகக் குறைந்துள்ளது. தங்கும் செலவு அறவே இல்லாமல் போய்விட்டது. நெருக்கடியான சென்னையில் ஒரு சிறிய அளவு நெருக்கடி இது போன்ற வழக்கிடைதாரர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்களால் குறைந்துள்ளது. இந்த சான்றானது, உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்பட்டால் அப்படியே பொருந்தும்.

27 மே 1949 அன்று, அரசியல் சாசன உருவாக்கத்தின் போது நடந்த ஒரு விவாதத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “டில்லி தவிர்த்த பிற இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளையை உருவாக்கலாம் என, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையான டாக்டர். அம்பேத்கர் பதில் கூறியுள்ளார்.

கடந்த 1998ம் ஆண்டில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தோர் பகுதியை சேர்ந்த  எஸ்.பி. ஆனந்த் மற்றும் வழக்கறிஞர். எம்.எல். பாப்னா ஆகியோர் இந்தோர் உயர்நீதிமன்ற கிளையில், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையினை இந்தோர் பகுதியில் அமைத்திடக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட கோரி வழக்கு தாக்கல் செய்தார்கள். அந்த வழக்கினை ஏற்றுக்கொண்ட  நீதிமன்றம், இந்தோரில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கவும், அதற்கான ஒப்புதலையும், நிதியையும் நடுவணரசு வழங்கிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக நடுவணரசு மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி அந்த உத்தரவை, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் தள்ளுபடி செய்தது.

ஆனால், கடந்த பிப்ருவரி மாதம் புதுச்சேரியைச் சேர்ந்த  வழக்கறிஞர் வசந்த குமார் என்பவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையினை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு பதில் அளிக்க நடுவணரசுக்கு அறிவிப்பு அனுப்பட்டுள்ளது.

எனவே, இதுநாள் வரையிலும் பயன்படுத்தப்படாத, அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 130க்கு உயிர் கொடுக்கும் விதமாக, இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்பெற்று, சுமார் ஆறு மாநிலங்களுக்கு ஒரு கிளை என்ற அடிப்படையில்,  நாட்டின் வடக்கு (டில்லி), கிழக்கு (கொல்கத்தா), மேற்கு (மகராஷ்டிரம்), தெற்கு (தமிழ்நாடு) மற்றும் மத்திய பகுதி (மத்தியபிரதேசம்) களில், உச்சநீதிமன்ற கிளைகள் அமையும் விதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31, தற்போது அதில் காலியிடம் 5 ஆகும். மொத்தமுள்ள 24  உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 906, கடந்த 01.04.14ம் தேதி நிலவரப்படி, அதில் காலியிடம் 257 ஆகும். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 14 காலியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.  நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட நீதின்றங்களில் நீதிபதிகளின் காலியிடம் 3300. நீண்ட காலமாக நிரப்பப்படாமலுள்ள இந்த காலி இடங்களை நிரப்பினாலேயே நிலுவையிலுள்ள பெரும்பாலான வழக்குகள் தீர்வு செய்யப்பட்டுவிடும். காலியிடங்கள் தொடர்ந்து நீடிப்பதால் பணியுள்ள நீதிபதிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, இயல்பான பணிகளிலும் தொய்வு ஏற்படுகிறது.


ஆகவே, சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் விரைவில் உச்சநீதிமன்ற கிளை அமைத்தல், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில்  காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நீதிபதிகளை நியமித்தல், இனி காலியாகும் இடங்களுக்கு முன்கூட்டியே நீதிபதிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை பெருமளவில் முடிவுக்கு கொண்டு வரலாம். 


-ஐ. இராபர்ட் சந்திரகுமார்

Friday, June 13, 2014

ஒரு கழிப்பறையின் கதை!

பொதுச்சுகாதாரத்தை பேணுவதில் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஏழை நாடுகளின் குடிமக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை செய்து தருவதில் ஐக்கிய நாடுகள் அவை ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவிலோ பாதுகாப்பான கழிப்பறை இல்லாததால் தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக செய்திகள் கூறுகின்றன.
  
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு கழிவறையின் கதையை பார்ப்போம்.


அதற்கு முன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் குறித்து ஒரு சிறு அறிமுகம். சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. இதில் சாமானிய வழக்கறிஞர்களுக்கானது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (Madras High Court Advocates Association). சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரியும் யாரும் இந்த சங்கத்தில் உறுப்பினராகலாம்.

இதே உயர்நீதிமன்றத்தில் உள்ள மற்றொரு வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோஸியேஷன். சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த சங்கம் மிகவும் முக்கியமான சங்கமாகும். இந்த சங்கத்தில் உறுப்பினராவது அவ்வளவு எளிதல்ல. இந்த சங்கத்தில் சுமார் 1000 உறுப்பினர்களே உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சாமானியர்கள் யாரும் இந்த சங்கத்தில் உறுப்பினராவது குறித்து யோசித்துக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கடினமான விதிமுறைகள் இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தனது 150வது ஆண்டுவிழாவை கொண்டாடியது. இந்த 150 வருட காலத்தில், பெரும்பாலான காலம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தது. அப்போது சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு எதிராகத்தான் இந்த நீதிமன்றம் செயல்பட்டிருக்க வேண்டும். இதையும் சேர்த்துத்தான் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டாடியது. இதே மனோபாவத்துடன்தான் மெட்ராஸ் அசோஸியேஷனும் தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடியது.


மெட்ராஸ் பார் அசோஷியனின் உறுப்பினர்களுக்கும் சமூக உணர்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தமது தொழிலை மட்டுமே பார்ப்பவர்களாகவே இவர்கள் இருப்பார்கள். மக்களுக்கு எதிராக போர் தொடுக்கும் அரசு அமைப்புகளுக்கும், அதற்கு பின் புலமாக இருக்கும் வர்த்தக்கழகங்களுக்கும் தேவையான சட்ட உதவிகளை இந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் உறுப்பினர்களே செய்வார்கள். சமூகநீதியில் இடஒதுக்கீடின் முக்கியத்துவம் போன்ற பல அம்சங்களுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்களாகவே இந்த சங்கத்தின் உறுப்பினர்களும், அவர்களுடைய ஜூனியர்களும்கூட இருப்பார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாகும் பலர்  இந்த சங்கத்தின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள். இதோடு வேறு மாநிலங்களிலிருந்து வரும் நீதிபதிகளும் இந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் விசேஷ கவனிப்புக்கு ஆளாக்கப்படுவார்கள். உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்வுக்கு அறிவியல் ரீதியான வழிமுறையே இல்லாதநிலையில், மர்மமான வழியில் நீதிபதி பதவி பெறுபவர்கள், நீதிபதிகளை உருவாக்கும் ஒரு சங்கத்திற்கு நன்றிக்கடன் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.

இந்த சங்கத்தின் அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்தான் உள்ளது. ஆனாலும் இந்த சங்கத்தின் ஆளுகைக்குள் இருக்கும் இடங்கள் அனைத்தும் ஆலயங்களின் கருவறை போன்றது. இந்தியாவின் பிற இடங்களுக்கு பொருந்தும் சட்டங்கள், இந்த இடத்திற்கு பொருந்தாது.

இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்காக தனியார் கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதை இந்த சங்கத்தில் உறுப்பினராக தகுதி இல்லாத வழக்கறிஞர்கள் பயன்படுத்த முடியாது. இத்தகைய பெருமை வாய்ந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷன் அலுவகத்தின் பின்புறத்தில், அதாவது உயர்நீதிமன்றத்தின் 6வது நீதிமன்ற அறையின் அருகில் ஒரு கழிப்பறை உள்ளது. இது கழிப்பறை என்பதற்கான எந்த அடையாளமோ, அறிவிப்போ இருக்காது. நீதிமன்ற அலுவலகம் போன்ற அமைப்புள்ள இந்த கழிப்பறையை மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் பெண் உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

இந்த கழிப்பறையை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லோகநாயகி என்பவர் முயற்சித்தபோது அங்கிருந்த உதவியாளர், “இந்த கழிப்பறை மெட்ராஸ் பார் அசோஸியேஷனுக்கு சொந்தமானது. எனவே அதன் உறுப்பினர்கள் மட்டுமே இந்த கழிவறையை பயன்படுத்தமுடியும்” என்று கூறி வழக்கறிஞர் லோகநாயகிக்கு அனுமதி மறுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் லோகநாயகி, உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புகார் செய்துள்ளார். எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட அந்தப் புகாரில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகவும், அரசியல் சட்டக் கோட்பாடுகளை காப்பாற்ற வேண்டிய நீதிமன்றத்தின் வளாகத்திலேயே நடைபெறும் இந்த சமூக அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப்புகாரில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடியது! ஆம், அந்த கழிவறை பூட்டப்பட்டது.

சட்டம் படித்த ஒரு பெண் வழக்கறிஞருக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை அகற்ற வழக்கறிஞர் மு. ராதாகிருஷ்ணன் முன் வந்தார். உடனடியாக ஒரு பொதுநல வழக்கு (W.P. No. 15144/2014) பதிவு செய்யப்பட்டு, பல முயற்சிகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (13-06-2014) அன்று சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கும் நீதியரசர் அக்னிஹோத்ரி எடுத்த எடுப்பிலேயே மிகுந்த கோபத்துடன், “இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்யப் போகிறேன், மேலும் அபராதமும் விதிக்கப்போகிறேன்!” என்றார். இதற்கு சளைக்காத வழக்கறிஞர் மு. ராதாகிருஷ்ணன், முதலில் தனது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க அனுமதிக்குமாறு வேண்டி, தன் வாதத்தை தொடங்கினார். இடையில் குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் போக்கும், தீர்வும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீதித்துறையிலும், வழக்கறிஞர் தொழிலும் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு உதாரணமாகவே இந்த சம்பவத்தை பார்க்கலாம்.

நீதித்துறையில் உள்ளவர்களுக்கு சமூகம் குறித்தும், சமூக சமத்துவம் குறித்தும் குறிப்பாக அரசியல் சட்டம் குறித்தும் உள்ள அறிவை, அக்கறையை, பார்வையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

இந்தச் செய்தி ஊடகங்களிலும்கூட இருட்டடிப்பு செய்யப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்பதை...!






Tuesday, May 13, 2014

மூன்றாம் பாலினம்

நிறம், இனம், பால், பிறப்பு, மொழி போன்றவைகளை முன்னரே தீர்மானித்து எவரும் இப்புவியில் பிறப்பதில்லை. அதுபோலவே, தான் ஒரு திருநங்கையாகப் பிறக்க வேண்டும் என எவரும் விரும்பி, பிறப்பதில்லை. எப்படி பெண், ஆண் பிறப்போ அதுபோலத்தான் திருநங்கைபிறப்பும். அதற்கு எவரும் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது. ஆனால் இங்கே, தன் சக ஆண் பெண்ணைப் போல எந்த உரிமையையும் திருநங்கைகளால் அனுபவிக்க இயலாத துர்பாக்கிய நிலையே நீடித்து வருகிறது.


மொழி, இனம், நிறம், பிறப்பு, பால், சமயம், சாதி, போன்றவைகளின் அடிப்படையில் எவ்வித பாகுபடுத்தலும் கூடாதுஎன தனிச்சரத்தை இந்திய அரசியலைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது கடந்த 64 ஆண்டுகள் பூர்த்தியான பிறகும் இன்றளவும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதற்கு நம் கண்முன்னர் நிற்கும் காட்சியே, சமூகத்தில் திருநங்கைகள் குறித்த ஒதுக்கலாகும்.

சமூகத்தில் ஒரு பெண் கேலிக்குள்ளாக்கப்படும் போது சிலரேனும் உடனே தட்டிக் கேட்கும் நிலை காணப்படும் சூழலில் திருநங்கைகள் பொது இடங்களில் வைத்து பாலியல் சீண்டல்களுக்கே உள்ளாக்கப்பட்டாலும் எவரும் அதை பொருட்படுத்துவதில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. அதேபோல, விலங்குகளுக்குக் கூட இங்கே அளித்து வரும் காப்பீட்டுத் திட்டங்கள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுதற்கு எண்ணற்றத் தடைகள் உள்ளன.

ஆனால், திருநங்கைகள் தற்போது மெல்ல மெல்ல, ஊடகம், திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த துவங்கிவிட்டனர். இருப்பினும் அவர்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்பது திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். 

இந்நிலையில், தேசிய சட்டப் பணிகள் மையம் மற்றும் உரிமை ஆர்வலர் லக்‌ஷ்மி நாராயண் திரிபாதி மற்றும் திருநங்கைகள் சிலர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், “நாங்கள் இரு பாலினத்திலும் சேராததால் எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை மறுக்கப்படுகிறது. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசின் அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. காவல்துறையினரால்   காரணமில்லாமல் துன்புறுத்தப்படுகிறோம். எனவே, அரசியல் சட்டப்படி எங்களுக்கும் வாழ உரிமை உண்டு என்பதால், எங்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்க வேண்டும்என்று கோரியிருந்தனர். 

அந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய குழுமம் கடந்த ஏப்பிரல் மாதம்   ம் நாள், “அரசியல் சட்டப்படி வாழும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும், உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது. இந்தியாவில், பழங்காலம் தொட்டே இரு பாலினத்திலும் சேராதவர்கள் இருந்து வந்துள்ளனர். அவர்கள் ஹிஜ்ரா, அரவாணி, திருநங்கைபோன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் முந்தைய காலங்களில் திருநங்கைகள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால் தற்போது அவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதுடன், பல்வேறு இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.  ஒருவர் மருத்துவ ரீதியாக தன் பாலினத்தை மாற்றிக் கொண்டால், மாற்றப்பட்ட பாலினத்தில் இருக்கும் உரிமை அவருக்கு உண்டு. அவ்விதம் மாறியவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். எனவே, ‘மூன்றாம் பாலினம்என்ற பிரிவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறோம்.

திருநங்கைகளை சமூகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதி, உரிய சலுகைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு இதர பிற்படுத்தபட்டோர் பிரிவில் சேர்த்து உரிய இட ஒதுக்கீடு போன்றவைகளையும், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்பட அனைத்துச் சலுகைகளையும் நடுவணரசும், மாநில அரசுகளும்  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளை கவனிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நடுவணரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவானது  அவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்க வேண்டும். அவற்றை நடுவணரசும், மாநில அரசுகளும் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும். மேலும், மருத்துவரீதியாக அவர்களை பாலின சோதனைக்கு உட்படுத்துவது சட்ட விரோதம் என்றும், தன்பாலின சேர்க்கையாளர்கள், இருபாலின சேர்க்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு  தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென ஒரு ஆணோ, பெண்ணோ திருநங்கையாக உருமாற்றம் அடைந்து விடுவதில்லை. உடல்ரீதியாக ஆணாக, பெண்ணாக இருந்துகொண்டு மனரீதியாக, உணர்வுரீதியாக எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்பவர்களே திருநங்கைகள். தங்கள் பருவவயதை அடையும்போது இதர ஆண், பெண்ணிடமிருந்து தான் வேறுபட்டுள்ளோம் என்றும், எதிர்பாலினத்திற்குரிய உணர்ச்சிகளைக் கொண்டுள்ளோம் என்றும் உணர்கிறார்கள். ஆணின்/பெண்ணின் உடலில் சிறைபடுத்தப்பட்டு பெண்ணாக/ஆணாக உணர்பவர்கள் திருநங்கைகள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் திருநங்கைகள் சிலரும், பிறரும் இது திருநங்கை என்பதற்கான சரியான விளக்கமல்ல என்று கூறுகின்றனர். திருநங்கைகள் பெரும்பாலும் ஆணாகவே பிறப்பதன் காரணமாக அவர்களுக்கு இயற்கையாகவே கருப்பை கிடையாது. அதன் காரணமாய் அவர்களால் மறு உற்பத்தி செய்ய இயலாமல் போகிறது.

பெரும்பாலான திருநங்கைகள் ஆணாகப்பிறந்து பெண்ணாக உணர்பவர்களே. குடும்ப உறுப்பினர்களால் கண்டறியப்பட்டு, திருநங்கையாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது தாங்கள் எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்வதை அறிந்தவுடன் வீட்டில் சொல்ல பயந்து வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதன்காரணமாக திருநங்கைகள் அனைவராலும் தான் பிறந்த குடும்பத்துடனும், உள்ளூரிலும் வாழ இயலாமல் வெளியூருக்குச் சென்று வாழ வேண்டிய நிர்பந்தச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். புனே, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுர், கோழிக்கோடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து வசித்து வருகின்றனர்.

 பொதுத்தளங்களில் தொழில் மறுப்பு, உழைப்பு மறுப்பு காரணமாக பிச்சையெடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடல், உணவுவிடுதிகள், திருமண நிகழ்வுகளில் நடனமாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருவதனுடன் அதன் மூலமான வருவாயினைக் கொண்டு ஆணாக தொடர்ந்து வாழ்ந்திட விருப்பமில்லாமல் தாயம்மாஎனும் சடங்கின் வாயிலாகவும், அங்கீகாரம் இல்லாத பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவும் பெண்ணாக மாறி தங்கள் விருப்பம் போல வாழத் துவங்குகின்றனர். திருநங்கைகள் பலர் ஒன்றிணைந்து ஜமாத்என்ற பெயரில் பெரும் குழுவாக நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆண், பெண்ணாக உருமாற்றம் அடைவது இந்தியப் புராணங்களில் தொடர்ந்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாகும். நாரதர் ஒரு குளத்தில் குளித்துவிட்டு கரையேறும் போது பெண்ணாக மாறினார் என்றும், கானகத்தில் உள்ள ஒரு விருட்சக மரத்தின் நிழலில் உறங்கி எழுந்த இளவரசன் பெண்ணாக மாறிவிட்டான் என்றும், மகாபாரதக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டது ஐயப்பன் கதையிலும் இடம்பெற்றுள்ளது. அர்ச்சுனன் கிருஷ்ணருடன் ஒரு முறையாவது பாலுறவு கொள்ளவேண்டும் எனும் நோக்கில் 'அர்ச்சுனி' என்ற பெயரில் உருமாற்றம் கொண்டான் என்கிறது பத்மபுராணம். பீஷ்மரை யுத்தத்தில் கொள்ளும் 'சிகண்டி' என்பவர் ஒரு திருநங்கைதான். அதுபோலவே வனவாசத்தில் அர்ச்சுனன் 'பிருகன்னளை' என்ற பெயரில் திருநங்கையாக வாழ்ந்ததாகவே கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பகுதியில் ஆட்சிபுரிந்த கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான அலாவுதீன் கில்ஜி (1296–1316)-ன் ஆட்சிக்காலத்தில் டில்லியில் முக்கியப்பதவிகள் வகித்த அனைவரும் திருநங்கைகளே. கில்ஜியின் அந்தப்புரத்துப் பெண்களாக இருந்தவர்களில் பெரும்பாலனோர் திருநங்கைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். அடிமையாக இருந்து பின்னர் அலாவுதின் கில்ஜியால் 1000 தினார் விலைக்கு வாங்கப்பட்டு பின்னாளில் அவரது படைத்தளபதியான மாலிக்கபூர், அடிமைவம்சத்தை நிறுவிய பால்பனின் ஆட்சியில் முதல்வராகப் பொறுப்பு வகித்த இமாதுதீன் ரேயான், கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான குதுப்தீன் முபாரக்கின் பிரியத்திற்குரிய அடிமையும், ஆட்சியில் முக்கிய பொறுப்பும் வகித்த குஷ்ருகான், சுல்தான் பெரோஸ் துக்ளக்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சுல்த்தான் முகமது ஆட்சியில் முக்கியப்பொறுப்பு வகித்த கருப்பினத்தைச் சேர்ந்த க்வாஜா ஜெகான் மாலிக் சர்வார் என்பவரும் திருநங்கையே என்பதும் வரலாற்றின் வாயிலாக அறியவருகிறது.

 பாலியல் சிறுபான்மையினரான திருநங்கைகள் குறித்து கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் 'அன்னகர்' என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இசுலாம் சமூகத்தில் பிறந்து பின்னர் வரலாற்றில் வெற்றியாளர்களாய் திகழ்ந்த மாலிக்காபூர், குஸ்ருகான், ஜலாவுதீன்கான் போன்றோர் திருநங்கைகளே. முகலாயர் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் (1526-1665) அந்தப்புர காவலர்களாக திருநங்கைகளே நியமிக்கப்பட்டுள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'சீவகசிந்தாமணி'யிலும் வாத்ஸ்யான‌ரின் 'காமசூத்திரத்திலும்' திருநங்கைகள் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

புராணக்கதையான மகாபாரதத்தில் யுத்தம் துவங்கியபோது பாண்டவர்கள் தங்களின் வெற்றிக்காக ஒரு சுத்தவீரனை பலி கொடுக்க வேண்டி அர்ச்சுனனுக்கும், நாகவம்சத்தைச் சேர்ந்த உலுபி என்ற பெண்ணுக்கும் பிறந்த திருநங்கையைத் தேர்வு செய்தபோது அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்பாக இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட விரும்பியபோது, அவர் திருநங்கை என்பதால் அவருக்கு எவரும் பெண் கொடுக்க முன்வராத சூழலில் கிருஷ்ணர் பெண் உருவம் எடுத்து அவரை மணக்கிறார். மறுநாள் திருநங்கை களப்பலி கொடுக்கப்பட்டதும் பெண் உருவிலிருந்த கிருஷ்ணர் தாலி அறுக்கிறார் என்ற புராணக் கதையின் நிகழ்வுதான் அரவாணத் திருவிழாவின் மையமாகும்.

பாலின உணர்ச்சியானது ஆணிலிருந்து பெண்ணுக்கு எவ்வாறு வேறுபடுகிறதோ அதே போலவே திருநங்கைகளுடைய பாலின உணர்ச்சி வேறுபட்டது. இதன் காரணமாக திருநங்கைகள் ஆண்/பெண்ணைவிட குறைவானவர்கள் என்று எவரும் கருதி விடமுடியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 திருநங்கைகளுடனான மற்றும் திருநங்கைகளுக்கு இடையேயான புணர்ச்சியானது இயற்கைக்கு முரணான புணர்ச்சியாக, தண்டனைக்குரிய குற்றமாகவும் காண்கிறது. இதற்கு முரணாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பு பிறகு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பினை   சீராய்வு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட மனு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு பிறந்து, பெண்கள் பள்ளியில் படித்த நங்கை என்பவர் பெண்கள் பிரிவில் காவல்துறையில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு 2011 ஆம் ஆண்டு காவலர் பணி வழங்கப்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், அவர் பெண்ணல்ல, திருநங்கை என்று கூறி பணியிலிருந்து நீக்கியுள்ளனர். இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நங்கை வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தனர். பாலினம் பற்றி குறிப்பிடும் போது அவர் தன்னை பெண் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பிறப்பு சான்றிதழிலும் பெண் என்றே கூறப்பட்டுள்ளது. எனவே, அவரை  மீண்டும் வேலையில் தொடர அனுமதிக்குமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து மூன்று தினங்களுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் 18 ம் நாள் இத்தீர்ப்பு பகரப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக இனி இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாது என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

துரதிருஷ்டவசமாக திருநங்கைகள் அவர்களது உரிமைகளை பெறுவதற்கான சட்டங்கள் நமது நாட்டில் இன்னும் இயற்றப்படாமல் உள்ளன. நேபாளம், பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, திருநங்கைகள் பாதுகாக்கப்படுகின்றனர். பன்னாட்டு அமைப்புகளில் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது. ஆகையால் சர்வதேச நாடுகளில் திருநங்கைகளுக்கு அளிக்கப்படும் உரிமைகள் இந்தியாவிலும் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.


திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்ட, சமூக ரீதியாக அங்கீகரித்தல், அயல்நாடுகளில் பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கு வாய்ப்புகள் உள்ளதுபோல இங்கும் வாய்ப்புகள், தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படல், பெயர், மதம் மாற்றுவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் இருப்பது போல பாலினம் மாற்றுவதற்கும் சட்ட அங்கீகாரம் அளித்தல் என்பது போன்ற திருநங்கைகள் மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளுக்கு அடிப்படையான தனி சட்டத்தினை நடுவணரசும், மாநில அரசுகளும் விரைவில் இயற்றி அது தொடர்பான பணிகளை   முன்னெடுத்தலின் மூலமாக மட்டுமே, திருநங்கைகள் வாழ்வு மேம்படும்.

-இ. இ. இராபர்ட் சந்திரகுமார்