Tuesday, July 8, 2008

சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...

மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது.
.
சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்
-என்ற திருக்குறளே பழந்தமிழர், சுற்றுச்சூழல் குறித்து கொண்டிருந்த பரந்த பார்வையை விளக்கும்.
.
சுதந்திரத்திற்கு பிந்தைய சட்டங்களே நாட்டின் இன்றைய நிலையை நிர்ணயிப்பதால், தற்போதைய சட்டங்களை குறித்து பார்ப்போம்.
.
இந்தியாவில் உள்ள சட்டங்களில் முதன்மையானது, இந்திய அரசியலமைப்புச் சட்டமே! இந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அரசுக்கும் (உறுப்பு 48A) , குடிமக்களுக்குமான (உறுப்பு 51A[g]) சுற்றுச்சூழல் குறித்த கடமைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் குறித்த அரசுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் “அரசுக்கு வழி காட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, “அரசு அமைப்புகள் தேசத்திலுள்ள காடுகளையும், காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு முயற்சி எடுக்க வேண்டும்”.
.
சுற்றுச்சூழல் குறித்த குடிமக்களுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது (A) பகுதியில், குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, “இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டு விலங்குகள் மற்ற உயிரினங்கள் உள்பட உள்ள இயற்கைச் சுற்றுச் சார்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களிடத்தில் பரிவு காட்டவும் ஆவன புரிவதை கடமையாக கொள்ள வேண்டும்”.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்து மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் சுற்றுச்சூழல் குறித்த அரசு மற்றும் குடிமக்களின் கவனம் தேவையான அளவு இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதைப் புரிந்து கொள்ள இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தன்மைகள் குறித்து சுருக்கமாக புரிந்து கொள்வது அவசியம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ள அம்சங்களில் பலவும் செயல்படும் தன்மை வாய்ந்தவை. அந்த அம்சங்கள் செயல்படாது விடப்பட்டால் அது குறித்து வழக்கு தொடரமுடியும். இந்த அம்சங்கள் அடிப்படை உரிமைகள் எனப்படுகின்றன.
.
ஆனால் அதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சில பகுதிகள் செயல்படா தன்மையுடையதாகவும் இருக்கின்றன. அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதியில் உள்ள அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களை செயல்படுத்த வலியுறுத்தி நீதிமன்றங்களை நாடமுடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 37ன் படி, அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவையாகும். சட்டங்களை இயற்றும்போது, இத்தகைய அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால் இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை, எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது.
.
இவ்வாறு நீதிமன்றங்களின் மூலம் வலியுறுத்த இயலாத பிரிவுகளின் கீழ்தான் மேலேக் கூறப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
.
எனினும் அண்மைக்காலத்தில் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் குறித்து ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, இந்திய நீதித்துறையையும் ஓரளவு நல்லவிதத்தில் பாதிக்கவே செய்துள்ளது. நீதிபதிகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், ஏ. எம். அஹமதி மற்றும் மூத்த வழக்கறிஞர் எம். சி. மேத்தா போன்றவர்களின் உழைப்பாலும், ஈடுபாட்டாலும் சுற்றுச்சூழல் குறித்த இந்திய நீதித்துறையின் பார்வை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.
.
இந்திய அரசியல் சட்டத்தின் செயல்படும் பிரிவில் அமைந்துள்ள உறுப்பு 21ல் குறிப்பிடப்பட்டுள்ள, சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உயிரையும் பறிக்கக்கூடாது என்ற சட்ட வாசகத்திற்கு மிகவிரிந்த பொருளை நீதிபதிகள் கொடுத்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்ற புரிதலில், சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது அடிப்படை உரிமை மீறலாக பொருள் கொள்ளப்பட்டு பல்வேறு முன்மாதிரி தீர்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
.
இந்த அடிப்படையில் இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் கீழ் கீழ்க்கண்ட கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
.
1. வாழ்வதற்கான உரிமை என்பது மாசுபடாத சுற்றுச்சூழலுக்கான உரிமையாக பொருள் கொள்ளப்படும். இது அனைவருக்கும் பொதுவானது.
.
2. அரசுக்கொள்கைகளை செயல்படுத்தும் அதிகாரக்குழுக்கள் சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாக செயல்படுத்தும் பொறுப்பும், கடமையும் கொண்டவை.
.
3. சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழுள்ள தமது கடமைகளை செய்யத்தவறுவதற்கு நிதி ஆதாரம் இல்லை என்றோ, தேவையான பணியாளர்கள் இல்லை என்றோ அரசு அமைப்புகள் கூறக்கூடாது.
.
4. சுற்றுச்சூழல் சட்டத்தின் ஒரு பகுதியான “மாசுபடுத்துபவரே செலுத்துதல்” (Polluter pays principle) என்ற அடிப்படையில் மாசுக்கேடுக்கு காரணமானவரே அதற்கான இழப்பீட்டை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்.
.
5. “முன்னெச்சரிக்கை குறிக்கோள்”(Precautionary principle) –படி அரசு அதிகார அமைப்பு, சுற்றுச்சூழல் மாசுகேட்டிற்கான காரணங்களை முன்கூட்டியே தவிர்க்க வேண்டும். புதிய மேம்பாட்டு பணிகளும், தொழில் அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாதது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றின் உரிமையாளர்களுக்கே உடையது.
.
6. சுற்றுச்சூழல் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் (அ) மைய மற்றும் மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் கொள்கை; (ஆ) நின்று நிலைத்து நீடிக்கக்கூடிய வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல்; மற்றும் (இ) முந்தைய தலைமுறையிடம் பெற்ற சுற்றுச்சூழலை எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் கடமை போன்ற அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
.
7. சுற்றுச்சூழல் சட்டங்களை பொருட்படுத்தாமல், வளர்ச்சி பணிகளை அல்லது தொழில் முயற்சிகளை மேற்கொள்வோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
.
8. சுற்றுச்சூழல் சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; சுற்றுச்சூழல் நோக்கங்களை முறியடிக்கும் வகையில் பயன்படுத்தக் கூடாது.
.
9. இயற்கை வளங்கள் அனைத்திற்கும், அரசே பொறுப்புரிமையர் (trustee) ஆகும். கடற்கரை, ஓடும் தண்ணீர், காற்று, காடுகள், மென்மையான நிலங்கள் ஆகிய அனைத்துக்கும் பொதுமக்களே பயனாளிகள். இந்த இயற்கை வளங்களை தனியார் உரிமையுரிமையாக மாற்றுவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது.

மேற்கூறப்பட்ட கொள்கைகள் பல்வேறு வழக்குகளின் தீ்ர்ப்புகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனினும், நடைமுறையில் பல்வேறு பிரசினைகளிலும் இந்த கொள்கைகளுக்கு எதிரான அரசு உத்தரவுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் வருவதை அனைவரும் உணர முடியும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அரசு அமைப்புகள் கொள்கை முடிவுகளை மேற்கொண்டாலும் அதை நடைமுறைப்படுத்த தேவையான சட்டங்கள் போதுமான அளவில் இல்லாமையே இந்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணமாகும். மேலும் இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு அமைப்பு சீரிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதும். அந்த சட்டங்களை செயலிழக்க செய்வதில் அரசு மற்றும் தனியார் தொழில் துறைகளும் முனைப்புடன் நிற்பதும் இந்த பிரச்சினைக்கான மிகமுக்கியமான காரணமாகும்.
(தொடரும்)
.
-சுந்தரராஜன்

2 comments:

Anonymous said...

நல்ல முயற்சி. சிறக்கட்டும் உங்கள் பணி.

Anonymous said...

ewrwetedhsxfv

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!