Sunday, October 5, 2008

(சட்டப்படி) கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா...?

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது.

சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு எதிர்பாலினர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகவே திருமணம் விளங்குகிறது.


திருமணம் என்பது இருவேறு மனம் மற்றும் உடல்களில் சங்கமமாக மட்டும் அல்லாமல் இருவேறு சமூகங்களின் பிணைப்பாகவும் மாறுகிறது. மேலும் இந்த நிகழ்வு புதிய உயிர்களை, உறவுகளை, உடைமைகளை தோற்றுவித்தல் போன்ற வேறுபல நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. எனவே திருமணம் என்ற நிகழ்வை சட்டரீதியாக புரிந்து கொள்வது அவசியம்.

திருமணத்தின் முக்கிய நிர்பந்தமாக மணம் செய்துகொள்ளும் இருவரின் வயது, மணவுறவுக்கான உடல்நிலை, மநிலை, மநிலை ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன.


திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியுரிமை, சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது.


இந்த திருமணப்பதிவு, மதப்பழக்க-வழக்கங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.


மதநம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப்பதிவு சிறப்பு திருமணச் சட்டம் (Special Marriages Act) என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.


சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த சிறப்புத் திருமண சட்டத்தின் நோக்கம். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சட்டங்கள் மதம் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. குறிப்பாக (பழைய) இந்துச் சட்டம் சாதிகள் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. எனவே சாதிகளையும், மதத்தினையும் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த சட்டத்தின்கீழ்தான் திருமணம் செய்ய முடியும்.

திருமணம் செய்வதற்கான நிபந்தனைகள்/தகுதிகள்:


  1. திருமணம் ஆகாத ஆண்/பெண்களும், கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள். திருமணம் செய்யவிருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உயிருடன் வாழும் வாழ்க்கைத்துணைவர் இருக்கக்கூடாது.

  1. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இரண்டு பேரும் மண வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான மனநிலையோடு இருக்க வேண்டும். உரிய மூளை வளர்ச்சி அடையாதோரும், மனநிலை குன்றியவர்களும் திருமணம் செய்ய முடியாது.

  1. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் திருமண வாழ்வுக்குத் தேவையான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். மகப்பேறுக்கான தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதற்கான தகுதி பெறாதவர்கள் திருமணம் செய்ய இயலாது.

  1. திருமணம் செய்யவிருக்கும் மணமகனுக்கு குறைந்தது 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும்.

  1. திருமணம் செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் தடுக்கப்பட்ட உறவுமுறையினராக இருக்கக்கூடாது. எனினும், அவ்வாறான உறவுமுறை திருமணம் அவர்களின் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டால் சட்டமும் அங்கீகரித்ததாகவே கொள்ளப்படும்.

திருமண அறிவிப்பு:


திருமணம் செய்வதற்கான உரிய தகுதிகளை கொண்ட மணமக்கள், அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறித்து அவர்களில் எவரேனும் ஒருவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள திருமணப் பதிவு அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.


அதனைப் பெற்றுக் கொண்ட திருமண அதிகாரி, திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களின் தகுதிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதில் திருப்தி அடைந்தால், அவர்களின் திருமண அறிவிப்பை உரிய பதிவேட்டில் எழுதுவார். மேலும் அந்த அறிவிப்பின் நகல் ஒன்று அந்த அலுவலகத்தில் அனைவரின் பார்வையிலும் இடம் ஒன்றிலும் வைக்கப்படும்.


இந்த திருமணத்திற்கு சட்டரீதியான மறுப்பு கொண்டுள்ள எவரும், இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களில் மறுப்பை தெரிவிக்கலாம். அந்த மறுப்பு ஏற்கப்படாத நிலையிலும், மறுப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையிலும், அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குப்பின் அந்த திருமணம் பதிவு செய்யப்படும். தவறான காரணங்களுக்காக எவரேனும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அது விசாரணையில் தெரியவந்தால், அந்த மறுப்பை தெரிவித்தவருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வகையில் அபராதம் விதித்து, அந்த தொகையை முழுமையாகவோ மணமக்களுக்கு திருமண அன்பளிப்பாக அளிக்க உத்தரவிடப்படும்.

திருமண நிகழ்வு:


திருமண அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்தபின் எந்த ஒரு நாளிலும் திருமணம் நடைபெறலாம். அன்றைய தினத்தில் மணமக்கள் விரும்பும் முறையில் திருமணத்தை நடத்திக்கொண்டு, திருமண பதிவு அலுவலகத்தில் அதற்காக வைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட வேண்டும். இரு தரப்பிலும் சாட்சியங்கள் கையொப்பம் இட்டதும், திருமணப்பதிவாளர் அந்த திருமணத்தை அங்கீகரித்து கையொப்பம் இடுவார். இதையடுத்து அந்த திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.


இந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்யாமல் மதம் சார்ந்த வேறு முறைகளில் திருமணம் செய்துகொண்டோரும், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தங்கள் திருமணத்தைப்பதிவு செய்யலாம்.


-பி. சுந்தரராஜன்

(sundararajan@lawyer.com)

29 comments:

Anonymous said...

அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் இது போன்ற சட்ட விடயங்களை அதிகம் எழுதவும். நன்றி.

Anonymous said...

//கோட்டீஸ்வரன்-அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் இது போன்ற சட்ட விடயங்களை அதிகம் எழுதவும். நன்றி.//
வழிமொழிகிறேன்!நன்றி.

உண்மைத்தமிழன் said...

நல்லது. அனைத்தும் அறிந்தோம்.. தயார் நிலையில் உள்ளோம். பதிவேட்டில் எழுத யாரேனும் உள்ளனரா.. இருந்தால் சொல்லுங்கள் வக்கீல் ஸார்..

டிஸ்கி - மூன்றாவது புகைப்படத்தில் ஒன்றுமே தெரியவில்லை.. பின்பு எதற்கு அப்படியொரு புகைப்படம்..

மக்கள் சட்டம் said...

நன்றி, கோட்டீஸ்வரன் மற்றும் அனானி.

நண்பர் உண்மைத்தமிழன் அவர்களுக்கு,

பதிவேட்டில் எழுதுவதற்கான ஆளை நேரடியாக நீங்களே தேர்ந்தெடுங்கள். பலரும் அதில் சறுக்கி விடுகிறார்கள். அது குறித்த பதிவுகளுக்கு முன்னோட்டமாகத்தான் இந்த பதிவு மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது புகைப்படத்தில் உள்ளவர்களின் வயது அடைவதற்குள் மூன்றாம் புகைப்படம் குறித்து அறிந்து கொள்ள வாழ்த்துகள்.

-சுந்தரராஜன்

Anonymous said...

//பதிவேட்டில் எழுதுவதற்கான ஆளை நேரடியாக நீங்களே தேர்ந்தெடுங்கள். பலரும் அதில் சறுக்கி விடுகிறார்கள். அது குறித்த பதிவுகளுக்கு முன்னோட்டமாகத்தான் இந்த பதிவு மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. //

விரைவில் ஆரம்பியுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

படித்துவி்ட்டு, வேலைக்கு (குறிப்பாக மென்பொருள் துறையில்) செல்லும் பெண்கள் திருமண வாழ்வை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

பணம் ஈட்டும் வழியை கற்றுத்தரும் கல்வி, அவர்களுக்கு வாழ்க்கையை கற்றுத்தரவில்லை என்று தோன்றுகிறது.

தங்கள் முயற்சி பலருக்கும் வழி காட்டட்டும்.

உண்மைத்தமிழன் said...

//ஐந்தாவது புகைப்படத்தில் உள்ளவர்களின் வயது அடைவதற்குள் மூன்றாம் புகைப்படம் குறித்து அறிந்து கொள்ள வாழ்த்துகள்.//

இது பாராட்டா அல்லது நெஞ்சுக்கு நிம்மதியா..

Anonymous said...

அன்பு நண்பருக்கு,

நான் ஒரு கைம்பெண்னை திருமணம் செய்ய இருக்கிறேன். அவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. அதன் பிறப்பு சான்றிதழில் அதன் தந்தையின் பெயர் உள்ளது.

அந்தக் குழந்தையின் தந்தை பெயராக எனது பெயரை பதிவு செய்ய முடியுமா?

அந்தக் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது என்ன விதமான பிரசினைகள் வரும்? அதை எப்படி கையாள்வது?

தயவு செய்து பதில் அளிக்கவும். நன்றி.

மக்கள் சட்டம் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//ஐந்தாவது புகைப்படத்தில் உள்ளவர்களின் வயது அடைவதற்குள் மூன்றாம் புகைப்படம் குறித்து அறிந்து கொள்ள வாழ்த்துகள்.//

இது பாராட்டா அல்லது நெஞ்சுக்கு நிம்மதியா..//

அண்ணா இது பாராட்டு அல்ல. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்தான். ஐந்தாவது புகைப்படத்தில் உள்ளவர்களின் வயதை அடையும்வரை வாலிபத்தை இழக்காமல் இருப்பதற்கு வாழ்த்துகள்.

-சுந்தரராஜன்

மக்கள் சட்டம் said...

S A Perumal said...
//பதிவேட்டில் எழுதுவதற்கான ஆளை நேரடியாக நீங்களே தேர்ந்தெடுங்கள். பலரும் அதில் சறுக்கி விடுகிறார்கள். அது குறித்த பதிவுகளுக்கு முன்னோட்டமாகத்தான் இந்த பதிவு மங்களகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. //

விரைவில் ஆரம்பியுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

படித்துவி்ட்டு, வேலைக்கு (குறிப்பாக மென்பொருள் துறையில்) செல்லும் பெண்கள் திருமண வாழ்வை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

பணம் ஈட்டும் வழியை கற்றுத்தரும் கல்வி, அவர்களுக்கு வாழ்க்கையை கற்றுத்தரவில்லை என்று தோன்றுகிறது.

தங்கள் முயற்சி பலருக்கும் வழி காட்டட்டும்.


...நன்றி ஐயா. முயற்சி செய்கிறோம். தங்கள் வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி....

-சுந்தரராஜன்

மக்கள் சட்டம் said...

//Anonymous said...
அன்பு நண்பருக்கு,

நான் ஒரு கைம்பெண்னை திருமணம் செய்ய இருக்கிறேன். அவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. அதன் பிறப்பு சான்றிதழில் அதன் தந்தையின் பெயர் உள்ளது.

அந்தக் குழந்தையின் தந்தை பெயராக எனது பெயரை பதிவு செய்ய முடியுமா?

அந்தக் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது என்ன விதமான பிரசினைகள் வரும்? அதை எப்படி கையாள்வது?

தயவு செய்து பதில் அளிக்கவும். நன்றி.//

கையில் குழந்தையுடன் இருக்கும் கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க விரும்பும் தோழருக்கு பாராட்டும், வாழ்த்துகளும்.

குழந்தையின் பிறப்பு சான்றிதழில் உங்கள் பெயரை தந்தை பெயராக சேர்க்க முடியாது. அது தேவையுமல்ல.

பள்ளியில் சேர்க்கும்போது குழந்தையின் காப்பாளராக தாங்கள் செய்ல்படுவீர்கள்.

எந்த பிரசினைக்கும் வாய்ப்பில்லை.

மீண்டும் வாழ்த்துகள்.

-சுந்தரராஜன்

உண்மைத்தமிழன் said...

//அண்ணா இது பாராட்டு அல்ல. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்தான்.//

என்ன அண்ணாவா.. வக்கீல் ஸார்.. இது கொஞ்சமும் சரியில்லை. நான் உங்களுக்கு தம்பிதான். வாய்ப்புக் கிடைத்தால் போதுமே..

//ஐந்தாவது புகைப்படத்தில் உள்ளவர்களின் வயதை அடையும்வரை, வாலிபத்தை இழக்காமல் இருப்பதற்கு வாழ்த்துகள்.//

இதுக்கும் ஒரு வாழ்த்தா..

முருகா.. உன் கொடுமைக்கு அளவேயில்லையா..

-சுந்தரராஜன்

Anonymous said...

அறிவுச்சொத்துரிமை போன்ற முக்கிய விஷயங்களை எளிய நடையில் எழுதும் நீங்கள் சாமானியர்களான எங்களுக்குத் தேவையான சட்ட விஷயங்களையும் அவ்வபோது எழுதுங்கள்.

மிக நீண்ட இடைவெளிகளை தவிர்க்கவும். வாய்ப்பிருந்தால் கேள்வி-பதில் பகுதிகூட ஆரம்பிக்கலாம்.

தொடர்ந்து எழுதவும். நன்றி.

PRABHU RAJADURAI said...

திருமணம் பற்றிய மற்ற சில தகவல்களுக்கு

http://marchoflaw.blogspot.com/2006/09/blog-post_27.html

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

Anonymous said...

Anonymous said...

//கோட்டீஸ்வரன்-அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் இது போன்ற சட்ட விடயங்களை அதிகம் எழுதவும். நன்றி.//
வழிமொழிகிறேன்!நன்றி.

நாமக்கல் சிபி said...

மக்கள் சட்டம் - சிறந்த சேவை.

பாராட்டுக்களும் நன்றிகளும்!

மக்கள் சட்டம் said...

"தம்பி" உண்மைத்தமிழனுக்கு தவறுதலாக அண்ணா என்று சொல்லிவிட்டேன். சாரி! :( ... :)

பிரபு ராஜதுரை, valai, நாமக்கல் சிபி - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


-சுந்தரராஜன்

புருனோ Bruno said...

ஏற்கனவே திருமணமானவர்கள் தங்களின் திருமணத்தை பதிய வேண்டுமென்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன

1. இந்துக்களுக்கு என்ன விதிமுறைகள்
2. இஸ்லாமியர்களுக்கு என்ன விதிமுறைகள்
3. கிருத்தவர்களுக்கு என்ன விதிமுறைகள்

விளக்க வேண்டுகிறேன்

மக்கள் சட்டம் said...

//புருனோ Bruno said...
ஏற்கனவே திருமணமானவர்கள் தங்களின் திருமணத்தை பதிய வேண்டுமென்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன

1. இந்துக்களுக்கு என்ன விதிமுறைகள்
2. இஸ்லாமியர்களுக்கு என்ன விதிமுறைகள்
3. கிருத்தவர்களுக்கு என்ன விதிமுறைகள்

விளக்க வேண்டுகிறேன்//

கேள்விக்கு நன்றி. விரைவில் தனிப்பதிவாக வழங்குகிறோம்.

மோகன் காந்தி said...

அடிப்படை சட்டங்களை அனைவரும் அறிவது அவசிம். அவற்றை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.

தமிழ். சரவணன் said...

அன்பு சட்ட வல்லுனர்களுக்கு,

தங்கள் இணைய தளத்தை படித்து மகிழ்வுற்றேன்... காந்தி செய்த தொழில் தங்களுடையது. இது போல் இணையபக்கங்களை படிக்கும்பொழுது மனிதம் மனிதநேயம் காக்கும் கூட்டம் இன்னும் இருக்கின்றது என்ற நம்பிப்கை மேலூம் துளிர்விடுகின்றது...

நான் வரதட்சணை கொடுமை என்னும் சட்டத்தால் பாதிக்கப்பட்டவன்...

தங்களுக்கு ஒய்விருந்தால் எனக்கு நடந்த கொடுமைகளை படித்துப்பார்கவும்...

http://tamizhsaran-antidowry.blogspot.com

இதுபோல் கொடுமைகள் தினமும் பல நமது நாட்டில் நடந்தெரிக்கொண்டிருக்கின்றது.... தங்களை போல் நீதிக்காவலர்கள் அப்பாவிகளை காக்கவேண்டுகின்றோம்....

தங்கள் உண்மையுள்ள,

தமிழ். சரவணன்

Hindu Marriages In India said...

மிகவும் நன்று.

தேவநேயன் - தோழமை said...

வணக்கம்
தொடர்ந்து மக்களுக்கான சட்டங்களை எழுதிவருவது மிகவும் சிறப்பு,
சட்டம் மக்களுக்கானது ...
நல் வாழ்த்துக்கள் தொரட்டும் உமது சட்ட புனித பயணம்

மகிழ்நன் said...

தோழர் திருமண அறிவிப்பு 30 நாட்கள் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படுகையில் சாதி மறுப்பு திருமணங்கள், வீட்டை மீறிய திருமணங்களுக்கு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றனவே

மக்கள் சட்டம் said...

//தோழர் திருமண அறிவிப்பு 30 நாட்கள் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படுகையில் சாதி மறுப்பு திருமணங்கள், வீட்டை மீறிய திருமணங்களுக்கு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றனவே //

உண்மைதான். ஆனாலும், சட்டம் என்பதற்கு சில தேவைகள்-விதிமுறைகள் இருக்கின்றன.

பதிவு செய்யப்படும் திருமணம் யாருடைய வாழ்க்கையையும் பாதித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இந்த விதிமுறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.

Anonymous said...

Can I claim my jewels from my husband through NHRC. But we have a very good relation over phone and abide to our duties. I am in Chennai and he is in Nagapattinam. Please suggest a good way of approach.

மக்கள் சட்டம் said...

@Anonymous

NHRC is not an institution to recover your jewels. Please go through the website of NHRC and verify it. If you have any specific queries you may send it to the following mail id: mail@makkal-sattam.org

அன்பு நிலையம் said...

எனது நண்பன் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். அவரது மனைவி இந்து மதத்தை சார்ந்தவர். அவர்களுக்கு பிறந்த மகளுக்கு முதலில் இந்து பெயரை சான்றிதழில் பதிவு செய்துவிட்டனர். தற்பொழுது அவரது மகளை பள்ளி இல் சேர்ப்பதற்காக தந்தை வழியில்தான் பெயர் இருக்கவேண்டும் என்று எனது நண்பரின் தந்தை பிரச்சனை செய்வதாலும் இஸ்லாம் பெயரை பிறப்பு சான்றிதழில் மறு பதிவு செய்ய உள்ளார். அவ்வாறு பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றுவதற்கு என்ன வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதைக் கூறி உதவும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி

ILA said...

nice

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!