Thursday, August 14, 2008

ரூ. 23 கோடியும், 26 நீதிபதிகளும்....!

ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் கடைசி நம்பிக்கையாகச் சொல்லப்படுவது, நீதித்துறையே! ஆனால், நீதித்துறையின் வரலாற்றைப் பார்த்தோமானால், அதிலும் மேற்சொன்ன நம்பிக்கையை குலைக்குமளவிற்கு செயல்பாடுகள் நடந்து வந்துள்ளன. செய்தி ஊடகங்கள் செய்தித்தாள், தொலைக்காட்சி, வலைத்தளம் எனப் பெருகியுள்ள இப்போதைய நிலையில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இத்தகைய ஊடகங்களில் கவனிக்கத்தக்க அளவில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன.
.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நீதிபதி (திரு.V.ராமசாமி) மீது, அவருடைய ஊழல் காரணமாக பதவியிருந்து நீக்க பாராளுமன்றத்தில் பதவியிழக்கச் செய்யும் நடவடிக்கை (IMPEACHMENT PROCEEDINGS) 1990ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் நீதிபதிகள் விசாரணைச் சட்டப்படி (THE JUDGES INQUIRY ACT 1968) 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மக்களவைத் தலைவரிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்தபின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையும் அக்குறிப்பிட்ட நீதிபதி ஊழலில் ஈடுபட்டார் என்பதை உறுதிசெய்த பின்னரே பதவியிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும், அப்போது வீசிய அரசியல் சார்புக்காற்று காரணமாக இந்த நடவடிக்கை முடக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.
.
இதுபோல் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பல்வேறு வகையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நீதிபதிகள் மீது சொல்லப்படுவதும், அவற்றுள் பெரும்பான்மை உண்மையாக இருந்து விடுவதும் அனைவரும் அறிந்ததே.
.
குறிப்பாக, நீதித்துறையில் மலிந்து வரும் ஊழல் (கையூட்டு) அல்லது நீதி சார்ந்த ஆதாயம் மட்டுமே ஊழல் என்று பொதுப்புத்தியில் பதிந்துள்ளது. ஆனால் தனக்கு வேண்டியவர்களுக்கு (NEPOTISM) வழங்கப்படும் உத்தரவு, தீர்ப்பு போன்றைவையும் ஊழல் சார்ந்தவையே அண்மைக்காலங்களில் கவனத்தையும், சமூகத்தில் பெருங்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
.
இருபதாண்டுகளுக்கு முன், மத்திய சட்ட அமைச்சராகவும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுமாக இருந்த திரு பி.சிவசங்கர் நீதித்துறையின் செயல்பாடுகள் கவலையளிப்பவையாக உள்ளதெனவும், உயர்நீதித் துறையிலும்கூட (higher judiciary) மலிந்துவரும் விரும்பத்தகாத போக்கையும் சுட்டிக்காட்டினார்.
.
பத்தாண்டுகளுக்குமுன் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.பி.பரூச்சா, நாட்டிலுள்ள நீதிபதிகளில் 20 விழுக்காட்டினர் ஊழல்வாதிகளாக இருக்கும் அதிர்ச்சிச் செய்தியை வெளிப்படுத்தினார். இதன்படி பார்த்தால், நீதிபதிகளில் ஐவரில் ஒருவர் ஊழல்வாதி என்றாகிறது. இந்தப் புள்ளிவிவரம் புதுப்பிக்கப்படுமானால் விகிதம் தலைகீழாக மாறியிலிருந்தாலும் வியப்பதற்கில்லை.
.
2007, ஜனவரியில் பதவியேற்குமுன் “தி இந்து” பத்திரிகைக்கு 03-01-07 அன்று அளித்த பேட்டியில் தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதித்துறையில் ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டுகள் மட்டுமே உள்ளன (அவை நிரூபிக்கப்படவில்லை) என்று நெத்தியடியாகச் சொன்னார்.
.
திரு. ஜே.எஸ்.வர்மா, இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்தபோது 1997ம் ஆண்டில் உயர்நீதித் துறையினர் ஊழல் புகார்களுக்கு இடம்கொடா வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்று நீதிபதிகளுக்கான நடத்தை நன்னெறிகள் (Code of Conduct for Judges) வகுக்கப்பட்டது. அதன் ஓர் அம்சம் - நீதிபதிகள் தங்கள் சொத்துக்கணக்கை தலைமை நீதிபதியிடம் அளிக்க வேண்டும் என்பது. இவ்வாறு அளிக்கப்படும் விபரங்களும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதிகளை சொத்துக்கணக்கு காட்டச் சொல்வது நீதிபதிகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றும், நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்த விபரங்களைப் பெற தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்றும் திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதும் கூட இதன் அடிப்படையில்தான் என்று கூறலாம்.
.
இப்படியெல்லாம் கருத்து தெரிவித்த திரு கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், உயர்நிதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் பத்துபேர், மாவட்ட நீதிபதிகள் பத்துபேர், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் இருவர் என 26-நீதிபதிகள் ரூ.23 கோடியை சுருட்டிய ஊழல் வழக்கு, தன்னிடமே விசாரணைக்கு வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
.
இவ்வழக்கின் முழுவிபரம் நம்மிடம் தற்போது இல்லை, எனினும், இவ்வழக்கு விசாரணை குறித்து செய்தித்தாள்களில் வெளியான விபரங்களின் அடிப்படையில் வழக்கின் பின்னணி தரப்படுகிறது. மேலும் விபரங்கள் பின்னர் தரப்படும்.
.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிபதிகள் 26 பேரும், மற்ற உயர்பதவி வகிக்கும் அலுவலர்களும் நான்காம் நிலை அரசு ஊழியர்களின் சேமநல நிதியிலிருந்து ரூ.23 கோடி அளவிலான பணத்தை பொய்யான பெயர் விபரங்கள் அளித்து கையாடல் செய்தது அப்பகுதி நீதித்துறையினரிடையே பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது “காசியாபாத் நீதிபதிகள் ஊழல்” என்று பரவலாக அறியப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிடவேண்டுமென்று கோரி நஹர்சிங் யாதவ் என்ற வழக்குரைஞர், “அதிவக்த கல்யாண்” என்ற அறக்கட்டளையின் தலைவர் மற்றும் காசியாபாத் வழக்குரைஞர் சங்கம் ஆகியோர் மனுதாரர்களாக இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
.
அம்மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து நீதித்துறை மீது படிந்துள்ள இந்தக் கறையை போக்க வேண்டுமெனில் இந்த ஊழல் தொடர்பான விசாரணை சி.பி.ஐ-யால் விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே வழக்கின் ஒரே முக்கிய கோரிக்கை. வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் உயர்நீதித்துறையில் இருப்பதால், சி.பி.ஐ மூலமான விசாரணையே சரியானதாக இருக்கும் என்பது அம்மனுதாரர்களின் கோரிக்கை.
.
இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி திரு பி.சதாசிவம் மற்றும் நீதிபதி திரு கே.எம்.பஞ்சால் ஆகியோர் அடங்கிய ஆயத்தின்முன் முதன்முதலில் 07.07.2008 அன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் தனித்தன்மை கருதி தலைமை நீதிபதியின் தனியறையில் (Chambers) அடுத்த கட்ட விசாரணையை நடத்த உத்திரவிடப்பட்டது. 14.07.2008 அன்று நடைபெற்ற தனியறை விசாரணையின் போது மத்திய அரசின் வழக்குரைஞர் (Solicitor General of India) இவ்வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடத்தினால் அது நீதித்துறைக்கு வலு சேர்க்கும் என்று அவர் விடு்த்த வேண்டுகோளை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். தனியறை விசாரணையின்போதே தங்களையும் வழக்கில் ஒரு தரப்பினராகக் சேர்த்துக் கொள்ள வழக்குரைஞர் திரு பிரசாந்த் பூஷண் வழியாக TRANSPARENCY INTERNATIONAL என்ற அமைப்பு மனுச் செய்தது.
.
இந்த வழக்கின் புலனாய்வை சி.பி.ஐக்கு மாற்றக் கோரியுள்ள நிலையில் உச்சநீதிமன்ற ஆயம், குற்றச்சாட்டிற்கு ஆளான நீதிபதிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கமான முறையில் நேரடியாக சந்தித்து விசாரிப்பதை விரும்பவில்லை. அதற்கு பதிலாக, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளிடம் புலன்விசாரணை மேற்கொள்வதற்காக சி.பிஐ அதிகாரிகள் கேட்க விரும்பும் கேள்விகளை எழுத்து மூலமாக வழங்கி, அந்நீதிபதிகள் எழுத்து மூலம் வழங்கும் பதில்களின் அடிப்படையிலேயே விசாரணை தொடர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
.
இவ்வழக்கில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு, கடைநிலை ஊழியர்களின் சேமநல நிதியை பொய்யான பெயர்களைக் குறிப்பிட்டு ரூ.23 கோடி அளவில் இந்த நீதிபதிகள் கையாடல் செய்துள்ளார்கள் என்பதாகும். இந்தச் செய்தி வெளிவரக்காரணமே, இந்த வலைப்பின்னலின் சங்கிலிகளில் ஒருவராக செயல்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், இந்தக் குற்ற முறையை தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியதுதான். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் 82 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகளிடம் எழுத்துமூலமான கேள்விகள் அளித்து பதில்களை பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமைப்பதிவாளர், காசியாபாத் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதினார்.
.
இந்த சலுகை அடிப்படையிலான நடைமுறைக்கு 17.07.2008 அன்று நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் திரு பிரசாந்த் பூஷண் கடும் ஆட்சேபணை தெரிவித்தார். அதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஏற்க மறுத்ததுடன், தன்னுடைய நிர்வாக ரீதியான உத்திரவை கேள்விக்குட்படுத்தினால், இவ்வழக்கை விசாரணை செய்யும் ஆயத்தில் தான் பங்கேற்க முடியாது என்று தனது கருத்தை கோபத்தின் உச்சத்தில், உறுதிபட தெரிவித்தார். வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
.
ஒரு குற்றவியல் வழக்கின் புலன் விசாரணை என்பது அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை நேரடியாக விசாரணை செய்து குற்றத்தின் பின்புலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் திரட்டி, அதில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான். இதைத் தான் சட்டம் வலியுறுத்துகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களாகக்கூட முதல் தகவல் அறிக்கையில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் காட்டப்படவில்லை என்பதும், அவர்களிடம்கூட புலன்விசாரணை செய்ய மறைமுகத்தடை என்பதும் மிகவும் வருந்தத்தக்க சூழ்நிலையாகும். இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதிக்கோட்பாட்டை மீறுவதாகவே மக்கள் உணர்வர்.
.
“நீதி வழங்கப்படுவது என்பதும், வழங்கப்படுவது நீதிதான் என்பதும் வெளிப்படையாகத் தெரிய வேண்டியது அவசியம்” என்கிறது சட்டச்சொற்றொடர் (JUSTICE SHOULD NOT ONLY BE DONE BUT ALSO SEEM TO BE DONE). ஆனால், நீதிபதிகள் விஷயத்தில் மட்டும் இச்சொற்றொடர் பலநேரங்களில் பொருந்துவதாக இருப்பதில்லை.
.
கடந்த 2003ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மைசூரி்ல் நீதிபதிகள் சிலர் தங்கள் தகுதிக்குக் குறைவான விரும்பத்தகாத செயல்களில் ஈடுப்பட்டார்கள் என்று வெளியான செய்திகள் தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்கள் மீது கர்நாடக உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக (SUO-MOTU) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் காரணமானது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில் இக்குற்றச்சாட்டை விசாரித்த நீதிபதிகள் குழுவின் அறிக்கை நகலை வழங்கக் கேட்டு மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் தாக்கல் செய்த மனு, விசாரணை அறிக்கை இரகசியமானது என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
.
“வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பதற்கேற்ப நீதித்துறையின் தனித்தன்மையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டே நீதித்துறையின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படையற்ற தன்மையை பின்பற்றுவதும் ஊக்குவிப்பதுமாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலை சிறிதளவேனும் மாற வேண்டும் இல்லையெனில், Howsoever high you may be; the law is above you என்பது பொய்யாகி விடும் அபாயமுள்ளது.

-சு. சத்தியச்சந்திரன்
(advsschandran@gmail.com)

6 comments:

Unknown said...

இதில் வீராசாமி வழக்கில் தரப்பட்ட
தீர்ப்பு முக்கியமானது.இதுவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உங்களால் ஏன் செய்தித்தாள்களில் வெளியான முழு விபரங்களைக் கூட
ஆதாரமாகக் கொண்டு எழுத முடியவில்லை.நீதிபதி அகர்வால்
கூறியது என்ன என்பதையெல்லாம்
எழுதாமல் பழைய கதையைக்
கூறுகிறீர்களே?
அன்று ராமசாமிக்கு ஆதரவாக இருந்தது- கருணாநிதி,வீரமணி
கும்பல்தானே.சொன்ன காரணம்-
அவர் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
என்பதுதானே.இப்படி சாதியை முன்னிறுத்தியது யார்? ஏன்? அதுதான் சமூக நீதியா -இதையெல்லாம் எழுதுவீர்களா?.

சுந்தரவடிவேல் said...

//தனக்கு வேண்டியவர்களுக்கு (NEPOTISM) வழங்கப்படும் உத்தரவு, தீர்ப்பு போன்றைவையும் ஊழல் சார்ந்தவையே///

தேவையான பதிவு.

Anonymous said...

Justice Krishna Iyer has right ly said that the judges are also public servants and are answerable. As in the news today, the US and Canadian Supreme Courts have a Judicial Council functioning for the past 40 years, before which any citizen can file complaint against the judge !

Bur Indian Judiciary fights shy of subjecting themselves to pubvlic scrutiny1 Whebn they can threaten aan elected govt. to dismiss, because it allegedly breaks the law, why not they get dismissed for breaking the law ? They comment even when flogged, the Govt. servants donot work; true even when lot of citizens say that some of the judges are breaking law, why not they be removed. Have they come from Heaven so that no body on earth can remove them ?They appoint themselves - nasty joke played upon democracy ! They will not come under anybody's scrutiny, including themselves - are they the Idi Amins of the republic ?

Sundararajan P said...

//i criticize periyar said...
இதில் வீராசாமி வழக்கில் தரப்பட்ட
தீர்ப்பு முக்கியமானது.இதுவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உங்களால் ஏன் செய்தித்தாள்களில் வெளியான முழு விபரங்களைக் கூட
ஆதாரமாகக் கொண்டு எழுத முடியவில்லை.நீதிபதி அகர்வால்
கூறியது என்ன என்பதையெல்லாம்
எழுதாமல் பழைய கதையைக்
கூறுகிறீர்களே?
அன்று ராமசாமிக்கு ஆதரவாக இருந்தது- கருணாநிதி,வீரமணி
கும்பல்தானே.சொன்ன காரணம்-
அவர் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்
என்பதுதானே.இப்படி சாதியை முன்னிறுத்தியது யார்? ஏன்? அதுதான் சமூக நீதியா -இதையெல்லாம் எழுதுவீர்களா?.//


முதலில் முகம் காட்ட துணிவு பெறுங்கள் தோழரே.

பிறகு உங்கள் வலைமனையில் நீங்கள் விரும்புவது அனைத்தையும் எழுதுங்கள்.

அங்கு வந்து விவாதிக்கிறோம்.

PRABHU RAJADURAI said...

ராமசாமி விவகாரத்தில் கருணாநிதி, வீரமணி என்ன கூறினார்கள் என்று தெரியாது...

ஆனால் அவரை ஆதரித்து துக்ளக் பத்திரிக்கையில் சோ தொடர்ச்சியான கட்டுரைகள் எழுதினார். மேலும் காங்கிரஸ் கட்சி தனது முழுமையான ஆதரவினை அளித்தது.

எனவே பிற்ப்படுத்தப்பட்டவர் என்பதால் தப்பித்தார் என்பது உண்மையில்லை என்றே நினைக்கிறேன்.

Unknown said...

'எனவே பிற்ப்படுத்தப்பட்டவர் என்பதால் தப்பித்தார் என்பது உண்மையில்லை என்றே நினைக்கிறேன்'

சோ அவரை ஆதரித்தார், காங்கிரசும்
ஆதரித்தது.பஞ்சாபில் சீக்கிய
தீவிரவாதம் வலுவாக இருந்த
காலத்தில் அங்கு உயர்நீதிமன்ற
நீதிபதியாகப் பணியாற்றினார்
என்பதும் அவருக்கு ஆதரவு
கிடைக்க ஒரு காரணம்.
இடதுசாரிகள், மற்றும்
இந்திரா ஜெய்சிங்,சாந்தி பூஷண்
உட்பட பல வழக்கறிஞர்கள்
அவர் மீது impeachment
தீர்மானம் கொண்டுவர
இயக்கமே நடத்தினர்.

பிற்பட்ட சாதியைச்
சேர்ந்தவர் என்பதும் அவருக்கு
ஆதரவு கிடைக்க ஒரு காரணம்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதியாக இருந்த வீராசாமியின் மருமகன் ராமசாமி.இவர் மகன்
சஞ்சய் ராமசாமி எம்.எல்.ஏ
ஆக இருந்தார்.ராஜதுரை தமிழ்நாட்டிற்ல் வழக்கறிஞர் தொழிலுக்கு புதியவர்
போலும்.தொழிலில் அனுபவம்
உள்ளவர்களிடம் இவர்கள் இருவர்
பற்றியும், 76ல் வீராசாமி வீட்டில்
சிபிஐ நடத்திய ரெய்டு குறித்தும்,
வீராசாமி எப்படி சட்டத்தின் சந்து
பொந்துகளில் ஒளிந்து, வழக்கை
இழுத்தடித்தார் என்பதையெல்லாம்
கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

சுந்தர்ராஜன் என்பவருக்கு
எப்போது வலைப்பதிவு துவங்க
வேண்டும் என்பது எனக்குத்
தெரியும்.கேட்ட கேள்விகளை
எதிர்கொள்ள முடியவில்லையென்றால்
அதை இப்படி வெளிப்படுத்தி நகைப்புள்ளாகாதீர்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!