Tuesday, January 31, 2012

முதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி


காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். புகாரைத் தொடர்ந்து நடக்கும் செயல்பாடுகளை தற்போது பார்ப்போம்.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரை படித்துப் பார்க்கும் காவல்நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ்வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார். 

ஏனெனில் அனைத்து வகை குற்றங்களிலும் அவர் உடனடியாகவும், நேரடியாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதிகாரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். 

பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்றங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் ஆகும். 

பிணை என்பது கைது செய்யப்பட்ட நபரை வெளியில் விடுவதற்கான பெறப்படும் உத்தரவாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பையும் வலியையும் ஏற்படுத்திய நபரை – நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்கவும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலைத்துவிடாமல் இருப்பதற்காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட்டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவருக்கு பிணையில் விடுவிப்பது வழக்கமான நடைமுறையே. இவ்வாறு பிணையில் விடுவிக்கும் செயலை செய்வதில் சில நடைமுறைகள் உள்ளன. 

மிகச்சிறிய குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரியே பிணையில் விடுவிக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும். 

காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப்பாக வழங்கப் பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க்க்கூடிய குற்றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாகவும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படுவது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்டரீதியாக இதை அங்கீகரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவதே நல்லது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விடமுடியாத குற்றங்களை செய்வோரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியும். இவ்வாறு கைது செய்வதற்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் கைது ஆணை (வாரண்ட்) தேவையில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல்துறை அதிகாரியே பிணையில் விடத்தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது. அத்தகையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும். 

இந்த அம்சங்களை பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வருவது, காவல்துறை அதிகாரியின் முக்கியமான கடமையாகும். 

ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. அந்த நடவடிக்கை எம்மாதிரியானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது. 

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிணையில் விடமுடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்டரீதியாக விசாரணை, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். 

அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய்ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல் நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டுமே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய முடியும். 

எனவே, புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும். 

முதல் தகவல் அறிக்கை

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல் தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப்பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக்கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய்மொழித் தகவலாக இருந்தால் அதை எழுத்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப்படித்துக்காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும். 

குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. குற்ற நிகழ்வு குறித்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம். 

ஒரு குற்ற வழக்கின் அடிப்படையே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம். 

ஒரு முதல் தகவல் அறிக்கை படிவத்தில், மாவட்டம், காவல் நிலையம், ஆண்டு, முதல் தகவல் அறிக்கையின் எண், நாள், குற்றவியல் சட்டப்பிரிவுகள், குற்றம் நடந்த நாள் மற்றும் நேரம், குற்றம் குறித்து தகவல் கிடைத்த நாள் மற்றும் நேரம், தகவல் எவ்வாறு கிடைத்தது, குற்றம் நடந்த இடம் மற்றும் முகவரி, தகவல் தருபவரின் பெயர் மற்றும் முகவரி, குற்றத்தில் தொடர்புடையவர்களின் விவரம், குற்றச் செயலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்படும். 

பின்னர் குறிப்பிட்ட புகாரின் உள்ளடக்கத்தை அப்படியே பதிவு செய்து, குறிப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப்பட்டது என்பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார். 

குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும். 

ஆனால் நடைமுறையில் மிகத்தீவிரமான கொலை, கொள்ளை, கலவரம் போன்ற குற்றநிகழ்வுகளைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் வரும் புகார்களை ஏற்க காவல்நிலைய அதிகாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், குற்றம் நடந்த இடம் தங்கள் காவல் நிலையத்தின் ஆளுகைக்குள் வரவில்லை என்றும், எனவே குற்றம் நடந்த இடத்திற்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் புகாரை அளிக்குமாறு கூறி பொதுமக்கள் அலைக்கழிப்படுவதாகவும் பொதுவான புகார்கள் காவல்துறை மீது உண்டு. 

இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்யலாம்.....?
(அடுத்த பதிவில் பார்க்கலாம்)

4 comments:

Anonymous said...

//காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். புகாரைத் தொடர்ந்து நடக்கும் செயல்பாடுகளை தற்போது பார்ப்போம்.//

கடந்த அத்தியாயம் டிசம்பர் 2010ல் வெளியாகியுள்ளது. இந்த அத்தியாயம் ஜனவரி 2012ல்.
அடுத்த அத்தியாயம் பி்ப்ரவரி 2014ல் வருமா...? #டவுட்டு

திண்டுக்கல் தனபாலன் said...

தெரியாத தகவல்கள் ! நன்றி சார் !

mani said...

very very useful for peoples.........

Unknown said...

very very useful for me

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!