Monday, June 14, 2010

கொள்ளை போகும் இயற்கை வளங்கள் - துணை நிற்கும் சட்டங்கள்

உலகில் வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள், மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள் இத்தகைய உயிரினங்களின் இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து உள்ளனர். ‘பாட்டி வைத்தியம்’ என்று அழைக்கப்படு்ம் இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் இருப்பதில்லை, சொல் வடிவம் மூலமாக ஆண்டாண்டு காலம் நாம் இவற்றை பயன்படுத்தி வருகிறோம். உலகெங்கும் மக்கள் இப்படி மூலிகைகள், மற்றும் உயிரினங்களின் மருத்துவ மற்றும் பிற பயன்பாடுகளை அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய அறிவை பாரம்பரிய அறிவாண்மை (Traditional Knowledge) என்று வகைப்படுத்துகின்றனர். இதுபோன்ற அறிவை நம்மக்கள் ‘நவீன அறிவியலுக்கு’ ஏற்ப ஆவணப்படுத்தி வைப்பதில்லை, இவை பெரும்பாலும் மக்களின் பொது சொத்தாக இருக்கின்றது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பொது பயன்பாட்டில் உள்ள இத்தகைய இயற்கை வளங்களை காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் தனியார் / நிறுவனங்கள் உடைமைகளாக மாற்றப்படும் கொடூரம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் வேம்பு, வேப்பிலை போன்றவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்பட்டதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். ஆண்டு தோறும் நம் நாட்டைச் சேர்ந்த சுமார் 2000 பாரம்பரிய இயற்கை வளங்களுக்கு மேற்கு நாடுகளில் காப்புரிமை கொடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் காப்புரிமை போன்ற சட்டங்கள் மூலம் கொள்ளை போவதை தடுப்பதற்கும், இயற்கை வளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்ச்சிகாக பயண்படுத்துகின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளடங்கிய பல்லுயிர்பரவலுக்கான ஒப்பந்தம் (Convention For Biodiversity) ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

பல்உயிரின ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயற்கை வளங்களையும் மூதாதையர்களின் பாரம்பரிய அறிவாண்மையும் பாதுகாத்திட, பல்லுயிர்ப்பரவல் சட்ட த்தை (Biological Diversity Act,2002) இந்தியா இயற்றியது.

பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்

இந்த சட்டம் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் வாரியம் ஆகிய கமிட்டிகளை நியமித்துள்ளது. இந்த கமிட்டிகளுக்கு நம் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் நகராட்சியும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களை அமைக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது. தத்தமது எல்லையி்ல் பல்லுயிர் பாதுகாப்பு நிலையான பயன்பாடு மற்றும் வாழ்விடங்களை பராமரித்தல், நில இனங்கள், நாட்டுப்புற வகைகள் பயிரிடு இனங்கள், வளர்ப்புக்காக பயன்படுத்தப்படு்ம் விலங்குகளும், கால்நடை இனங்களும், மற்றும் நுண்ணுயிர்களை பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர்ப்பரவல் தொடர்பான அறிவாண்மையை பதிவு செய்தல் போன்றவை இத்தகைய குழுக்களின் நோக்கமாகவும் செயல்பாடுகளாகவும் இருக்க வேண்டு்ம் என்றும் இச்சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் இக்குழுவின் முக்கிய பணியாக இச்சட்டம் கூறுவது, உள்ளுர் மக்களிடம் கலந்துபேசி மக்களுடைய பல்லுயிர்ப்பரவல் பதிவேடு தயாரிப்பதே ஆகும். இந்த பதிவேடு உள்ளுர் உயிரியியல் ஆதாரம், மருத்துவ பயன் அல்லது இதர பயன்கள் அல்லது பாரம்பரிய அறிவாண்மை ஆகிய விவரங்களை உள்ளடங்கியதாக இருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

இச்சட்டப்படி தேசிய மற்றும் மாநில பல்லுயிர்ப்பரவல் ஆணையம், பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்களின் எல்லைக்குள் அமைந்துள்ள இயற்கை வளம் மற்றும் அது தொடர்பான பயன்பாடு குறித்து யாதொரு முடிவு எடுக்கும்போது அவற்றை கலந்தாலோசிக்க வேண்டும் .

இயற்கை வளங்களும் காப்புரிமையும்

இந்த சட்டம் நம்நாட்டு இயற்கை வளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) வழங்குவதை முழுவதுமாக, குறிப்பாக காப்புரிமையை தடைசெய்கிறது. காரணம் காப்புரிமை என்பது தனியாருக்கு வழங்கப்படும் ஏகபோக உரிமையாகும். காப்புரிமை பெற்ற ஒருவர்/நிறுவனம் தாம் காப்புரிமை சட்டப்படி பதிவு செய்த பொருளை மற்றொரு நபர் உற்பத்தி/விற்பனை செய்வதை 20 ஆண்டுகளுக்கு தடுக்கும் உரிமையை பெறுகிறார்.

காப்புரிமையை தடை செய்யும் அதே நேரத்தில் (உள்நாட்டு/வெளிநாட்டு) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்காக பல்லுயிர்ப்பரவல் சட்டத்தின்ப்படி அமைந்துள்ள கமிட்டியின் கீழ் பாதுகாக்கப்படும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுமதியோடு ஆராய்ச்சி செய்யும் உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது. இந்த சலுகை, ஆராய்ச்சி என்ற பெயரில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு உதவக்கூடும். இந்த சட்டம் நம்முடைய இயற்கை வளங்களின் மரபணுக்களை (Gene) ஆராய்ச்சிக்காக வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்வதை தடை செய்யவில்லை. இவ்வாறு ஆராய்ந்து அதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புகளுக்கு(!?) காப்புரிமை வழங்குவதையும் இச்சட்டம் தடை செய்யவில்லை.

ஆக அனுமதி பெற்று ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற மூடியும். இதன் மூலம் பெறப்படும் லாபத்தில் குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் (Benefit Sharing) என்று பல்லுயிர்ப்பரவல் சட்டம் கூறுகிறது. அதாவது பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழுக்கள் தமது எல்லைக்குள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வணிக நோக்கங்களுக்காக இயற்கை வளங்களை சேகரிக்கும் அல்லது அணுகும் யாதொரு நபரிடத்திலிருந்து/நிறுவனத்திடம் கட்டணமாக ஒரு தொகையை வசூல் செய்யலாம் என்பது இதன் பொருள்.

மறைமுகமாக நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு இச்சட்டம் உதவுவதோடு மட்டும் அல்லாமல், இதுபோன்ற ஆராய்ச்சியின் பயனாக இத்தகைய இயற்கை வளங்களை பாதுகாத்து வந்த மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்ளை மிகச்சிறிய இழப்பீட்டுத்தொகை மூலம் நிவர்த்தி செய்துவிடலாம் எனவும் இச்சட்டம் கூறுகிறது. இச்சட்டம் இயற்கை கொள்ளையை (Bio Piracy) சட்டப்பூர்வமாக முறைப்படுத்துகின்றது என்று இயற்கை ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவா கூறியதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

. கூடுதலாக இந்த சட்டத்தின் கீழ் The Protection, Conservation and Effective Management Of Traditional Knowledge Relating To Biological Diversity Rules, 2009 என்கிற சட்ட வரைவு நிலுவையி்ல் உள்ளது. இந்த சட்ட விதி மேற்கூறிய வகையில் ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி கட்டணத் தொகை வசூல் செய்வதிற்கு தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் மற்றும் இதர கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் தருகிறது.

சட்டத்தின் செயலற்ற நிலை

மாநில அரசுக்கு கிராம பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகளோடு கலந்தாலோசித்து, பல்லுயிர்ப்பரவல் முக்கியத்துவம் உடைய இடங்களை பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடங்களாக (Biodiversity Heritage Sites) அறிவிக்க இச்சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்படும் இடங்கள் சிறப்பு சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டம் கூறுகிறது. 2008 ஆண்டு நிலவரப்படி கேரளாவை தவிர வேறு தமிழ்நாடு உட்பட எந்த ஒரு மாநிலமும் இந்த பிரிவின்படி பல்லுயிர்ப்பரவல் பாரம்பரிய இடமாக தங்கள் மாநிலங்களில் எந்த இடத்தையும் இன்னும் கண்டறியவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் எந்த உள்ளாட்சி அமைப்பும் பல்லுயிர்ப்பரவல் நிர்வாகக் குழவை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. கிராம பஞ்சாயத்து அளவில் இந்த சட்டம் செயல்படுத்தப்படும் போது மட்டுமே நம் பாரம்பரிய இயற்கை வளங்கள் பாதுக்காப்படும். கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்கிற ஒரு சிறிய கிராம பஞ்சாயத்துதான் “கோக்” என்கிற மிக பெரிய பன்னாட்டு நிறுவனம் தங்களுடைய நீர் வளத்தை சுரண்டவிடாமல் துரத்தியது என்பதை நாம் மறக்க கூடாது.

-மு.வெற்றிச் செல்வன்
(Vetri @Lawyer.Com)

4 comments:

easyjobs said...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=3867

பனித்துளி சங்கர் said...

இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான பதிவு . மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி

தஞ்சை தேவா said...

வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும் உங்கள் தளத்தில் அதிகம் உள்ளது .உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள்

தஞ்சை தேவா said...

எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகின்ற சந்தேகம் ...அதற்கான பதில் உங்களிடமிருந்து கிடைக்க பெறுமா ?
பள்ளி கல்லூரி மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்வி சான்றிதழ் தொலைந்து போனால் அதனை மீண்டும் பெற எங்கு விண்ணபிக்க வேண்டும் ?அதன் வழிமுறைகள் என்னென்ன ? தபாலி பெற வைப்பு இருக்கின்றதா ? இணையத்தளம் மூலமாக விண்ணபித்து பெற முடியுமா ?
தங்களின் மேலான ஆலோசனை பதிர்க்காக காத்திருக்கிறேன் ...
நன்றி .

தஞ்சை தேவா
http://thanjaideva.blogspot.in
Email:sollusaga@gmail.com

Post a Comment

உங்கள் கருத்துகளே எங்களை மேலும் செயல்படத் தூண்டும்.

ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.

அனானி மற்றும் ஆங்கில மறுமொழிகள் நீக்கப்படலாம்!